Elapatra's Knowledge! | Adi Parva - Section 38 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : சாபத்தின் விளைவைத் தடுக்க முடியாது என்று எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; தேவர்களிடம் பேசிய பிரம்மனின் பேச்சைப் பாம்புகளிடம் எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; ஜரத்காருவை எதிர்நோக்கும்படி வாசுகியைத் தூண்டியது...
பிரம்மனிடம் தேவர்கள் |
சௌதி சொன்னார், "அனைத்துப் பாம்புகளின் பேச்சையும், வாசுகியின் வார்த்தைகளையும் கேட்ட ஏலாபத்திரன், அவர்களிடம் {பாம்புகளிடம்},(1) "அந்த வேள்வி தடுக்கப்படக் கூடியதல்ல. எவனிடமிருந்து இந்த அச்சம் தோன்றியிருக்கிறதோ அந்தப் பாண்டவ குலத்து மன்னன் ஜனமேஜயனும் தடுக்கப்பட முடியாதவனே.(2) ஓ மன்னா {வாசுகி}, எவன் விதியினால் பாதிக்கப்பட்டானோ, அவன் விதியிடம் மட்டுமே தஞ்சம் அடைய வேண்டும். வேறு எதுவும் அவனுக்குப் புகலிடமாக அமைய முடியாது.(3) பாம்புகளில் சிறந்தவர்களே, நமது அச்சத்தின் காரணம் விதியில் வேர் விட்டிருக்கிறது. எனவே, விதி மட்டுமே நமது புகலிடமாக இருக்க முடியும். நான் சொல்வதைக் கேட்பீராக.(4) பாம்புகளில் சிறந்தவர்களே, அந்தச் சாபம் உச்சரிக்கப்படும்போது, அச்சத்தினால் நான் நமது தாயின் {கத்ருவின்} மடியிலேயே பதுங்கியிருந்தேன். பாம்புகளில் சிறந்தவர்களே, ஓ பெரும் காந்தி மிக்கத் தலைவனே (வாசுகி), {நான் பதுங்கியிருந்த} அந்த இடத்தில், (இந்தச் சாபத்தால்) கவலை கொண்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} பேசும் வார்த்தைகள் எனக்குக் கேட்டன.(5,6)