Thursday, June 20, 2013

பீமன் குடித்த ரசகுண்ட ரசம்! - ஆதிபர்வம் பகுதி 128

Bhima drank Rasakunda Nectar! | Adi Parva - Section 128 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 64)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; வியாசர் சத்தியவதியை எச்சரித்தது; சத்தியவதி தனது மருமகள்களுடன் காட்டுக்குச் சென்று, சொர்க்கத்தையடைந்தது; பாண்டவர்கள் பலத்தில் விஞ்சியிருப்பதைக் கண்டு துரியோதனன் பொறாமை கொண்டது; பீமனுக்கு விஷம் கலந்து கொடுத்து, கங்கையில் வீசியெறிந்த துரியோதனன்; நாகலோகம் அடைந்த பீமன் ரசகுண்ட ரசத்தைக் குடித்து பத்தாயிரம் யானைகளின் பலத்தை அடைந்தது...

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு பீஷ்மரும், குந்தியும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, இறந்து போன ஏகாதிபதிக்கான {பாண்டுவக்கான} சிராத்தத்தைச் செய்து பிண்டம் வழங்கினர்.(1) கௌரவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் விருந்து (உணவு) படைத்து, ரத்தினங்களையும் நிலங்களையும் வழங்கினர்.(2) தங்களது தந்தையின் இறப்பினால் உண்டான தூய்மையின்மையைப் பாண்டுவின் மைந்தர்கள் அகற்றிவிட்டமையால், அவர்களை அந்நாட்டுக் குடிமக்கள் ஹஸ்தினாபுரத்துக்கு[1] அழைத்துச் சென்றனர்.(3) ஏதோ தங்கள் பிள்ளைகளில் ஒருவர் இறந்ததைப் போலப் பிரிந்த மன்னனுக்காக அனைவரும் அழுதனர்.(4)



[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்நகரத்தின் பெயர் வாரணாசரியம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. வாரணம் என்ற பெயர் யானையைக் குறிக்கும் என்றும், இது ஹஸ்தினாபுரத்தின் மற்றுமொரு பெயர் என்றும் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யானைகள் திரியும் ஆலயம் என்ற பொருளைக் கொண்ட பெயராக இருக்கலாம். ஹஸ்தினாபுரத்திற்கு நாகபுரம் என்று மற்றுமொரு பெயரும் உண்டு giu.

அந்தச் சிராத்தம் மேற்கண்ட முறையில் முடிந்த பிறகு, மதிப்புக்குரியவரான வியாசர், குடிமக்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, ஒரு நாள், தனது தாய் சத்தியவதியிடம் சென்று,(5) "தாயே, மகிழ்ச்சியான நமது காலங்கள் முடிந்து பேரிடர்க்காலம் வந்துவிட்டது. நாளுக்கு நாள் பாவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இவ்வுலகம் முதுமையடைந்துவிட்டது {இவ்வுலகம் தன் இளமையைத் தொலைத்துவிட்டது}.(6) குற்றங்களாலும், அடக்குமுறையினாலும் கௌரவர்களின் இந்தப் பேரரசு நெடுங்காலம் நீடித்திருக்காது. இனி, நீ கானகத்திற்குச் சென்று, யோகத்தின் மூலம் உன்னை ஆழ்ந்த விழிப்புணர்வுக்கு {தியானத்திற்கு} அர்ப்பணித்துக் கொள்வாயாக. இதுமுதல் இந்தச் சமூகம் வஞ்சகங்களாலும், குற்றங்களாலும் நிரம்பியிருக்கும். நன்மைகள் நடைபெறாது.(7,8) இந்த வயதான காலத்தில் நீ உனது குலத்தின் அழிவைக் கண்ணுறாதே" என்றார்.

வியாசரின் வார்த்தைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்ட சத்தியவதி உள் அறைக்குச் சென்று, தனது மருமகளிடம்,(9) "ஓ அம்பிகா, உனது பேரப்பிள்ளைகளின் செயல்களால் நமது பாரத அரச மரபும், அதன் குடிமக்களும் அழிந்து போவார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.(10) நீ அனுமதித்தால், மகனது இழப்பால் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கௌசல்யாவுடன் {அம்பாலிகையுடன்} நான் கானகத்திற்குச் செல்கிறேன்" என்றாள்.(11)

ஓ மன்னா! இதைச் சொன்ன அந்த அரசி {சத்யவதி}, பீஷ்மரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு கானகத்திற்குச் சென்றாள்.(12)  அங்கே தனது இரு மருமகள்களுடனும் வந்து, ஆழ்ந்த சிந்தனைக்குள் ஐக்கியமாகி, ஒரு நல்ல நேரத்தில், தனது பூத உடலை விட்டு சொர்க்கத்தை அடைந்தாள்"[2].(13)

[2] 11ம் ஸ்லோகத்தில் சத்தியவதி, தான் அம்பாலிகையுடன் காட்டுக்குச் செல்லப்போவதாக அம்பிகையிடம் அனுமதி கோருகிறாள். 13ம் ஸ்லோகத்தில் இரு மருமகள்களுடனும் காட்டுக்குச் சென்றதாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 13ம் ஸ்லோகத்தில் இரு மருமகள்கள் என்ற சொற்கள் இல்லை. பிபேகத் திப்ராயின் பதிப்பில், அம்பிகையிடம் அனுமதி கோரும் சத்யவதி, விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம் என்று அம்பிகையிடம் சொல்கிறாள். அதற்கு அம்பிகையும் சம்மதிக்கிறாள். கும்பகோணம் பதிப்பில், "ஸத்தியவதி உள்ளே போய் மருமகளைப் பார்த்து, "அம்பிகையே, உன் பேரனான துரியோதனனுடைய அநீதியினால் சுற்றங்களுடன் கூடப் பரதவம்சத்தவரும் நகரத்துஜனங்களும் அழிந்துபோவார்களென்று நாம் கேட்டோம். ஆதலால், விருப்பமிருந்தால் புத்ரசோகத்தினால் வாதிக்கப்பட்டுத் துயரமுற்ற இந்த அம்பாலிகையையும் அழைத்துக் கொண்டு நாமிருவரும் வனத்திற்குப்போவோம். உனக்குச் சுகமுண்டாகும்" என்று சொன்னாள். பாரதரே, அம்பிகை, "ஆகட்டும்" என்று ஸம்மதித்தபின், ஸத்யவதி பீஷ்மரைக் கேட்டுக் கொண்டு இரண்டு மருமக்களுடன்கூடச் சிறந்த நியமமுள்ளவளாக வனம் சென்றாள். பரதச்ரேஷ்டரே! மஹாராஜரே! அப்போது அந்த ராஜஸ்திரீகள் மிக்ககடுந்தவஞ்செய்து தேகத்தைவிட்டுத் தாங்கள் விரும்பின லோகம் சென்றனர்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு பாண்டுவின் மைந்தர்கள், வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தூய்மையடையும் சடங்குகளைச் செய்து, தங்கள் தந்தையின் இல்லத்தில் இளவரசர்களின் பாணியில் வளரத்தொடங்கினர்.(14) எப்போதும் திருதராஷ்டிரனின் மகன்களுடன் விளையாடும்போது, தங்கள் பலத்தின் மிகையால் அவர்கள் தனியாகத் தெரிந்தனர்.(15) வேகத்திலும், குறித்த பொருளை அடிப்பதிலும், உணவு சம்பந்தமான பொருட்களை உண்பதிலும், புழுதியை வாரி இறைப்பதிலும் பீமசேனன், திருதராஷ்டிரனின் அனைத்து மகன்களையும் வென்றான்.(16) அந்த வாயு தேவனின் மைந்தன் {பீமன்}, அவர்களின் முடியைப் பற்றி இழுத்து அவர்களுக்குள்ளேயே சண்டையிட வைத்து, எந்நேரமும் சிரித்து மகிழ்ந்தான்.(17) அந்த நூற்றொரு பிள்ளைகளையும் ஒருவராகப் பாவித்த பெரும் சக்தி படைத்த விருகோதரன் {பீமன்}, தான் ஒருவனாகவே அவர்களை வென்றான்.(18) பாண்டவர்களில் இரண்டாமவன் {பீமன்} அவர்களை {கௌரவர்களை} முடியைப் பிடித்து இழுத்துத் தூக்கி வீசி, தரையில் இழுத்துச் சென்றான். இதனால் சிலர் தங்களது முட்டியை உடைத்துக் கொண்டனர், சிலர் தங்கள் தலைகளையும், சிலர் தங்கள் தோள்களையும் உடைத்துக் கொண்டனர்.(19)

சில சமயங்களில் அந்த இளைஞன் {பீமன்}, அவர்களில் பத்துப் பேரை ஒரு பிடியில் பற்றி, அவர்கள் இறப்பின் அருகே செல்லும் வரை நீரில் அமிழ்த்தினான்.(20) திருதராஷ்டிரனின் மகன்கள் பழங்களைப் பறிக்க மரங்களில் ஏறினால், பீமன் அந்த மரத்தைத் தனது காலால் எட்டி உதைத்துக் குலுக்கி, மரத்திலிருந்த அனைவரையும், பழங்களுடன் சேர்ந்து கீழே விழுச் செய்தான்.(21,22) குத்துச்சண்டையிலும், வேகத்திலும், நிபுணத்துவத்திலும் நிச்சயம் அந்த இளவரசர்களில் யாரும் பீமனுக்குச் சமமாக இல்லை.(23)  பீமன், குழந்தைத்தனத்தால் தனது பலத்தைக் காட்டி அவர்களை இம்சித்தானே ஒழிய விரோத மனப்பான்மையால் அல்ல.(24) பீமனுடைய வலிமையின் அற்புத வெளிப்பாடுகளைக் கண்டவனும், திருதராஷ்டிரனின் மூத்த மகனுமான பலமிக்க துரியோதனன், அவனிடம் பகைமை கொள்ளத் தொடங்கினான்.(25)

நேர்மையற்றவனான அந்தத் தீயத் துரியோதனன் தனது அறியாமையாலும், ஆவலாலும், ஒரு பாவச் செயலைச் செய்யத் திட்டமிட்டான்.(26) "ஆற்றலில் பாண்டுவின் இரண்டாவது மகனான பீமனுக்கு ஒப்பாக எந்த மனிதனும் இல்லை. சூழ்ச்சியின் மூலமே நான் அவனை அழிக்க வேண்டும்.(27) பீமன் தனியொருவனாகவே நம் நூற்றொருவரையும் போருக்கு அழைக்கும் துணிவுடனிருக்கிறான்.(28) எனவே, அவன் தோட்டத்தில் துயிலும்போது, நாம் அவனைக் கங்கையின் நீரோட்டத்தில் தூக்கி எறியவேண்டும். அதன் பிறகு அவனது மூத்த சகோதரனான யுதிஷ்டிரனையும், இளையவனான அர்ஜுனனையும் சிறையில் அடைத்து, எந்தத் தொல்லையும் இல்லாமல் நாம் தனியாளாக அரசாளலாம்" என்று மனத்தில் திட்டமிட்டுக் கொண்ட அந்தத் தீய துரியோதனன், எப்போதும் பீமனைத் தாக்கவல்ல ஒரு வாய்ப்புக்காக நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.(29,30)

ஓ பாரதா {ஜனமேஜயா}, தொலைவில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பிரமாணகோடி என்ற பெயர் கொண்ட இடத்தில், ஓர் அழகான மாளிகையை எழுப்பி, அதில் அகலமான துணிகளையும், ஆடம்பரப் பொருட்களையும் தொங்கவிட்டான். அவன் அந்த மாளிகையில், நீர் விளையாட்டை நடத்த வேண்டி, எல்லாவகை உற்சாகமூட்டும் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் நிரப்பி வைத்தான். உற்சாகமூட்டும் கொடிகள் அந்த மாளிகையின் மீது பறந்தன. அந்த மாளிகையின் பெயர் "நீர்விளையாட்டு மாளிகை" என்பதாகும்.(31-33) அங்கே சமையற்கலை நிபுணர்கள் பல்வேறு வகைகளிலான உணவுப்பொருட்களைத் தயாரித்தனர்.(34) எல்லாம் தயாரான நிலையில் அதிகாரிகள் துரியோதனனுக்குச் சொல்லியனுப்பினர். அதன்பிறகு அந்தத் தீய மனத்தையுடைய இளவரசன் {துரியோதனன்} பாண்டவர்களிடம்,(35) "வாருங்கள், நாம் பூக்கள் நிறைந்த, மரங்கள் அடர்ந்த கங்கையின் கரைக்குச் சென்று நீர் விளையாடலாம்" என்று அழைத்தான்.(36)

அதனைக் கேட்ட யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்ததால், திருதராஷ்டிரன் மைந்தர்கள், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு, பெரும் வடிவங்களிலான நாட்டு யானைகளின் மேலும், நகரத்தைப் பிரதிபலிக்கும் தேர்களின் மேலும் பயணித்து அந்த நகரத்தை விட்டகன்றனர்.  குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த இளவரசர்கள், பணியாட்களை அனுப்பிவிட்டு,(37,38) அங்கே இருந்த நந்தவனம் மற்றும் சோலைகளின் அழகை ரசித்துக் கொண்டே குகைக்குள் நுழையும் சிங்கங்கள் போல அரண்மனைக்குள் நுழைந்தனர்.(39) உள்ளே நுழைந்ததும், கட்டுமானக்கலைஞர்களின் நிபுணத்துவத்தை, அந்த மாளிகையின் அழகான சுவர்களிலும், உத்தரத்திலும் கண்டனர். அந்த மாளிகை அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. அதில் இருந்த சாளரங்களும் {ஜன்னல்களும்}, செயற்கை நீரூற்றுகளும் அருமையாக இருந்தன. அந்த மாளிகைக்கருகில் தெளிந்த நீருடன், அடர்த்தியான தாமரைகளைக் கொண்ட குளங்களும் இருந்தன.(40,41) அதன் கரைகள், சுற்றுப்புறத்தை நறுமணத்தால் நிறைக்கும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(42) கௌரவர்களும், பாண்டவர்களும் கீழே அமர்ந்து, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களை அனுபவிக்கத் தொடங்கினர்.(43) அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் உணவுக்கவளங்களைப் பரிமாரிக்கொண்டனர்.(44)

அதே வேளையில், பொல்லாதவனான துரியோதனன், பீமனைக் கொல்லும் நோக்கோடு ஒரு குறிப்பிட்ட அளவு உணவில் திறன்மிக்கக் கடும் நஞ்சை {காளகூட விஷத்தைக்} கலந்தான்[3].(45) நாவில் அமுதத்தையும், இதயத்தில் கத்தியையும் வைத்திருந்த அந்தத் தீய இளைஞன் {துரியோதனன்}, வேகமாக எழுந்து, பீமனிடம் {சகோதரனாகவும், நண்பனாகவும்} நட்பு பாராட்டிக் கொண்டே, அவனது  {பீமனின்} முடிவை அடைய முடிந்தது நற்பேறென்றெண்ணி இதயத்தில் மகிழ்ந்து நஞ்சு கலந்த உணவை அதிகமாகக் கொடுத்தான். {அதில் எந்தக் குற்றத்தையும் காணாத பீமனும் அஃதை உண்டான்}.(46-48) பிறகு திருதராஷ்டிரன் மைந்தர்களும், பாண்டு மைந்தர்களும்  உற்சாகமாக நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டனர் {ஜலக்கிரீடை செய்தனர்}.(49) விளையாட்டு முடிந்ததும், அவர்கள் அனைவரும் வெள்ளுடை தரித்துப் பல்வேறு ஆபரணங்களை அணிந்து கொண்டனர்.(50) விளையாட்டால் களைப்படைந்த அவர்கள், மாலையில், {நதிக்கரையை ஒட்டியிருந்த} அந்த நந்தவனத்தின் இன்பமாளிகையில் ஓய்வு எடுக்க நினைத்தனர்.(51)

[3] கும்பகோணம் பதிப்பில், "அவ்வாறே மிகப்பொறாமை கொண்ட துரியோதனன் கொல்ல எண்ணங்கொண்டு சகுனியின் அபிப்ராயத்தைக் கேட்டு, வலனன் என்னும் சமையற்காரனுடன் ஆலோசித்துப் பிறகு அவனைக் கொண்டு பீமஸேனனுடைய ஆஹாரத்தில் விஷத்தைப் போடுவித்தான். கொடியதும், மயிர்க்கூச்சமெடுக்கச் செய்வதுமாகிய காளகூட விஷம் சேர்க்கப்பட்டது" என்றிருக்கிறது. மேலும் துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோர் சேர்ந்து பீமனைக் கொல்வதற்குப் பல திட்டங்களைத் தீட்டியதாகவும், திருதராஷ்டிரனுக்கும், வைசியப்பெண்மணிக்கும் பிறந்தவனான யுயுத்சு பாண்டவர்களின் நன்மையிலுள்ள விருப்பத்தினால் அதைப் பாண்டவர்களுக்குச் சொன்னான் என்றும், பாண்டவர்களும் விதுரர் ஆலோசனையின்படி எதையும் வெளிக்காட்டாமல் இருந்தனர் என்றும் இருக்கிறது.

மற்ற இளைஞர்களை நீரில் விளையாடவிட்ட அந்த இரண்டாம் பாண்டவன் {பீமன்} மிகவும் களைப்படைந்தவனாக, நீரில் இருந்து எழுந்து, தரையில் வந்து படுத்துக் கொண்டான்.(52) நஞ்சின் ஆதிக்கத்தால் அவன் மிகவும் தளர்ந்திருந்தான். அங்கே வீசிய குளிர்ந்த காற்றானது, அந்தக் கடும் நஞ்சை வேகமகாக உடலெங்கும் பரவச் செய்ததால், உடனே அவன் {பீமன்} தன்னுணர்வை இழந்தான்.(53) இதைக் கண்ட துரியோதனன், கொடிகளாலான கயிறுகளைக் கொண்டு அவனைக் கட்டி நீருக்குள் அவனை வீசி எறிந்தான்.(54) இப்படி உணர்வை இழந்த அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, நாகலோகம் வரை மூழ்கிப் போனான்.(55)

கடும் விஷப்பற்களைக் கொண்ட நாகங்கள் அவனை ஆயிரக்கணக்கில் கடித்தன.(56) அந்த வாயு தேவனுடைய மைந்தனின் உடலில் கலந்திருந்த தாவர விஷமானது {காளகூடம்}, இந்தப் பாம்பு விஷத்தால்  முறிந்தது.(57)  பாம்புகளின் விஷப்பற்கள் ஊடுருவ முடியாத அளவிற்கு அவனது மார்பு கடினமானதாக இருந்ததால், அவை அந்தப் பகுதியை {மார்பை} மட்டும் விட்டுவிட்டு அவனது உடலெங்கும் கடித்திருந்தன.(58) தன்னுணர்வு மீண்ட அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, தனது கட்டுகளை அவிழ்த்தெறிந்து, பாம்புகளைப் பிடித்துத் தரையில் அழுத்தி நசுக்கினான்.

எஞ்சியிருந்தவை {பீமனின் கரங்களில் அகப்படாத பாம்புகள்} உயிருக்காகத் தப்பி ஓடி, {இந்திரனுக்கு இணையானவனான} தங்கள் மன்னன் வாசுகியிடம் சென்று,(59,60) அவனிடம், "ஓ பாம்புகளின் மன்னா! கொடிகளால் கட்டப்பட்ட மனிதன் ஒருவன் நீரில் மூழ்கி வந்தான்; ஒருவேளை அவன் நஞ்சுண்டிருக்க வேண்டும்.(61) ஏனெனில், எங்களுக்கு மத்தியில் விழுகையில் அவன் உணர்வற்றவனாக இருந்தான். ஆனால், நாங்கள் அவனைக் கடிக்கத் தொடங்கியபோது, தன்னுணர்வு மீண்ட அவன், தனது கட்டுக்களை அறுத்தெரிந்து,(62) எங்களை நசுக்கத் தொடங்கினான். மாட்சிமை பொருந்திய நீரே, அவன் யார் என்பதை விசாரிக்க வேண்டும்" என்றன.

அப்போது வாசுகி, சக்தி குறைந்த அந்த நாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த இடத்திற்குச் சென்று,(63) பீமசேனனைக் கண்டான். பாம்புகளில் ஆர்யகன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் குந்தியின் பாட்டனாவான்[4]. பாம்புகளின் தலைவன் {வாசுகி} தனது உறவினனைக் {பீமனைக்) கண்டு மகிழ்ந்து, ஆரத்தழுவிக் கொண்டான். யாவையும் கேட்டறிந்த வாசுகி, பீமனிடம் மனநிறைவு கொண்டு, ஆர்யகனிடம் பெரும் மனநிறைவுடன்,(64,65) "நாம் இவனை எவ்வாறு மனநிறைவு கொள்ளச் செய்வது? இவன் செல்வங்களையும், ரத்தினங்களையும் தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்" என்றான்.(66)

[4] குந்தியின் தந்தையான சூரன் என்பவன், ஆர்யகனின் பெண் வயிற்று பிள்ளையாவான்.

வாசுகியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஆர்யகன், "ஓ பாம்புகளின் மன்னா! மாட்சிமை பொருந்திய நீரே அவனிடம் மனநிறைவு கொண்டிருக்கும்போது, அவனுக்குச் செல்வத்தின் தேவையில்லை.(67) ரசகுண்டத்தின் (அமுத கலசங்களில் உள்ள) சாற்றை {ரசத்தைக்} குடித்து, அதன் மூலமாக அளவிலா பலத்தை அடைய அவனுக்கு அனுமதியளிப்பீராக. அந்தக் கலசங்கள் ஒவ்வொன்றிலும், ஆயிரம் யானைகளின் பலம் இருக்கிறது.(68) இந்த இளவரசன் அவனால் முடிந்த மட்டும் அதைக் குடிக்கட்டும்" என்றான்.

பாம்புகளின் மன்னனும் {வாசுகியும்} அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்.(69) அதன்பேரில் பாம்புகள் மங்கலச் சடங்குகளைச் செய்யத் தொடங்கின. பிறகு, மிகக்கவனமாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பீமசேனன், கிழக்கை நோக்கி அமர்ந்து அமுதத்தைப் பருகத் தொடங்கினான்.(70) ஒரே மூச்சில் அவன், ஒரு முழு பாத்திரத்தின் உள்ளடக்கத்தையும் குடித்து, இதே வகையில், தான் நிறைவடையும்வரையில் அடுத்தடுத்து எட்டு பாத்திரங்களைக் காலி செய்தான்.(71) அதன் பிறகு, பாம்புகள் அவனுக்காக ஆயத்தம் செய்து வைத்திருந்த சிறந்த படுக்கையில் சுகமாகப் படுத்துக் கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(72)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்