Thursday, August 13, 2015

"கர்ணனின் தானம்!" மீனம்பாக்கம் சுழற்சங்கத்தில்....

நமது முழுமஹாபாரதம் வலைத்தளத்தைக் கண்டு, அதனால் கவரப்பட்ட திரு. சேரன் சிங்காரம் அவர்கள், என்னைத் தனது சுழற்சங்கக் கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தார். அவர் மீனம்பாக்கம் சுழற்சங்கத்தின் தலைவராக இருக்கிறார். 

"கர்ணனின் தானம்" என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். "Be a gift to the world" என்பது ரோட்டரியின் இந்த வருட தீமாகும் (Theme). அதனாலேயே அவர் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சவேரா ஹோட்டலில், நேற்று (12.08.2015 அன்று) நடைபெற்ற அவர்களது சந்திப்புக் கூட்டத்தில், "கர்ணனின் தானம்" என்ற தலைப்பில் நான் பேசினேன். பேசவில்லை படித்தேன். கூட்டத்தில் எங்கள் சங்கத்தின் தலைவரான திரு.கோகுல் அவர்கள், முன்னாள் தலைவர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள், என் ஆருயிர் நண்பர்களான திரு.ஜெயவேலன் மற்றும் திரு.சீனிவாசன் ஆகியோர் பங்குபெற்றது மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்தது.

அந்தக் கூட்டத்தில் நான் பேசியது (படித்தது) பின்வருமாறு... 

**********************************************************************

நண்பர்களே வணக்கம்!

மேடைகளில் அதிகம் பேசியறியாதவன் நான். ஏதோ என்னால் முடிந்ததை நிச்சயம் பேச முடியும். திரு.சேரன் அவர்கள் என்னை இங்கே பேச அழைத்தபோது இதைத்தான் அவரிடம் சொன்னேன். அவர் உற்சாகப்படுத்தியபோது, பேசிவிடலாம் என்று தான் தோன்றியது. தலைப்பு "கர்ணனின் தானம்" என்று சொல்லியிருந்தார். எதுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். நினைப்பதை எழுதி வைத்து, அதையே மேடையில் பேசி விடலாம் என்று நினைத்தேன். அதற்காகத்தான் இந்தத் தாள் என் கையில் இருக்கிறது.

கர்ணனின் தானம் குறித்துப் பேசுவதற்கு முன்னர், "கொடை எதற்கு வழங்கப்படுகிறது?" என்பது குறித்துப் பார்ப்போம்.

சமச்சீரான பொருளாதாரத்தை நிலை நிறுத்த கொடை உதவும் என்கிறது தர்மசாஸ்திரம். செல்வத்தை சேர்ப்பதிலும் சேர்த்ததை காப்பாற்றுவதிலும் ஏற்படும் சிரமங்கள் யாவும், சேர்த்த செல்வத்தை தானமாகப் பகிர்ந்தளிப்பதால் அகன்று விடும் என்கிறது அது. தானம் என்பது, வழங்குபவனுக்கு ஆன்ம லாபத்தைத் தரும். இதில் புண்ணியமும் உண்டு. நாட்டு நன்மையும் உண்டு. பிறக்கும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. ஆக பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே உள்ள வாழ்க்கையில் தான் இந்தப் பொருட்கள் நமக்குப் பயன்படுகின்றன.

சங்கடத்தை விளைவிக்கும் உலகப் பொருட்கள் மீதான பற்றை அறுத்தெறிய மறைமுகமாக உதவுகிறது கொடை. இப்படி, வேதம் சொல்லும் கொடையின் பெருமையை பாமரருக்கும் எடுத்துச்சொல்ல கர்ணனை பயன்படுத்தியது இதிகாசம் என்று சொல்வோரும் உண்டு.

இன்றும், யாராவாது பெரிதாகத் தானம் செய்வதைக் கண்டால், நாம் உடனே "கொடைவள்ளல் கர்ணன்பா அவன்" என்போம். அப்படிக் கொடை வள்ளல் என்ற பட்டத்தை, கர்ணன் எந்தக் காலக்கட்டத்தில் இருந்து பெற்றான்? எந்தச் சூழ்நிலைகளில் இருந்து பார்ப்போம்.

அவன் வாழ்ந்த காலத்தில், தர்மதேவனே யுதிஷ்டிரன், அதாவது தர்மன் என்ற பேரில் அவதரித்திருந்தான். அவன் தன்னை அண்டியிருக்கும் அனைவருக்கும் உணவிடுவதற்காகவே அக்ஷயப் பாத்திரத்தையும் சூரியனிடம் இருந்து பெற்று வைத்திருந்தான் யுதிஷ்டிரன். யாசிப்பவர் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாத அளவுக்கு யுதிஷ்டிரன் தானங்களைச் செய்து கொண்டுதான் இருந்தான். நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு பாண்டவர்கள் காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, அவர்கள் ஐவர் மட்டும் அப்படி உலவியதாகவே நாம் நினைக்கிறோம். ஆனால் யுதிஷ்டிரனைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் அந்தணர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவிடுவதற்காகவே பாண்டவர்கள் காட்டில் வேட்டையாடினார்கள் என்றும் நாம் படிக்கிறோம். அக்ஷயப் பாத்திரமும் சூரியனிடம் அவர்களுக்காகவே பெறப்பட்டது.

இப்படி தானம் செய்வதில் பெரியவனாக யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே கர்ணன் கொடைவள்ளல் என்ற பட்டத்தைப் பெறுகிறான் என்றால் அவனுடைய "கொடை" எத்தகையதாக இருக்கும்?

மஹாபாரதத்தில் கர்ணனின் தானம் குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதற்குள் நுழையுமுன்னர், நாம் செவிவழியாகவும், நாடகம், கூத்து, சினிமா ஆகியவற்றின் மூலமும் அறிந்து வைத்துள்ளதைக் காண்போம்.

அனைவரும் கர்ணன் திரைப்படம் பார்த்திருப்போம். தற்காலச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் கர்ணன் மாபெரும் கதாநாயகனாக மதிக்கப்படுவதற்குக் காரணம் அதில் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த சிவாஜி என்றால் அது மிகையாகாது. அந்தப் படத்தில் கர்ணனைப் புகழும் வரிகளைப் பாருங்கள்.

கர்ணனைக் குறித்து ஒரு புலவர் பாடுகிறார்

மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

இன்னொரு புலவர்

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே
மூன்றாம் புலவர்

மன்னவர் பொருள்களைக் கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைத்தவன் கர்ண வீரன்
வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்
வாழ்கவே வாழ்க வாழ்க

நான்காம் புலவர்

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே

மேற்கண்ட வகையில் சினிமாவில் கர்ணனின் கொடைத்திறம் பாராட்டைப் பெறுகிறதென்றால், சங்க இலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்தில் ஒரு பாடலைப் பாருங்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் கொடைச் சிறப்பினை குமட்டூர்க் கண்ணார் பாரட்டும்போது, நெடுஞ்சேரலாதனின் கொடையையும் ஆற்றலையும் அக்குரன் ஆற்றலொடு ஓப்பிட்டுச் சொல்லும்போது எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள்.

 “போர்தலை மிகுத்த ஈரைம் பதின்மரோடு
 துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
 அக்குரன் அனைய கைவண் மையையே”3

“தலை ஏழு வள்ளல்களுல் ஒருவனாகிய அக்குரன், கர்ணன் என்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை.” என்று சொல்கிறார் டாக்டர் உ.வே. சாமிநாதையர். இது கர்ணனே என்பதற்கு நிறைய சாத்திக் கூறுகள் உண்டு

அடுத்து சில செவி வழி கதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு நாள் கர்ணன் எண்ணெய் நீராட்டுக்காகத் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துத் தன் உடலில் தடவிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்தான்.

பிக்ஷாம்தேகி அந்த இரவலன் கர்ணனிடம் இரவல் வேண்டி வந்து நின்றான்.

உடனே தனது இடக்கை பக்கமாக இருந்த தங்க கிண்ணத்தை தனது இடக் கையாலையே எடுத்து, இரவலனுக்கு அளித்துவிட்டான் கர்ணன். இரவலனும் மகிழ்வுடன் சென்றான்.

அப்போது அருகிலிருந்த நண்பர், கர்ணா, இடக் கையால் தானம் தரலாகாது என்று அறநூல் கூறுகின்றதே. நீ செய்தது அறநூலுக்கு எதிரானது அல்லவா? வலக் கையால் தானே தர்மம் செய்தல் வேண்டும் என்று கூறினார்.

அதற்குக் கர்ணன், " நண்பரே, அந்த அறநூலை நான் நன்கு படித்தவன். ஆனால், மனித மனம் நிலையானது அல்ல. நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். இடக்கை அருகே இருக்கும் தங்க கிண்ணத்தை வலக் கையால் எடுக்க சில நொடிகள் ஆகும். அதனால் தான் இடக் கையில் கொடுத்தேன்" என்றான்.

கொடை தடுமாறிப் போகலாம் மற்றும் அந்த சில நொடிகளில் மனம் மாறிட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு உயர்ந்த தங்க கிண்ணத்தை தானம் தர மனம் மறுக்கலாம். அதனால் தான் இடக் கையில் உடனே தானம் செய்தேன் என்று இடக் கையில் தானம் செய்ததற்கு காரணம் கூறினான் கர்ணன்.
**********************************************************************

அடுத்த கதையைக் கேளுங்கள்...

ஒரு நாள் துரியோதனின் அமைச்சர், துரியோதனிடம், கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தானே ஆள்கிறான். அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள் தான். ஆனால், கர்ணனின் புகழ்தான் ஓங்கி இருக்கிறது. இது சரிதானா? என்று குதர்க்கமாக கேள்வி கேட்டார்.

துரியோதனனுக்கு, அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது. உடனே அமைச்சரைப் பார்த்து, நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்லுங்கள் என்றார் துரியோதனன்.

தாங்களும் கர்ணனைப் போல் கொடை கொடுக்கத் தொடங்கி விடுங்கள். பின்னர் தங்களுக்கு "கொடை வள்ளல்' என்ற பெயர் கிடைக்கும் என்றார் அமைச்சர். துரியோதனனும் சரி, அப்படியே செய்கிறேன் என்றார்.

மறுநாள், துரியோதனனும் கொடை கொடுப்பார், என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன், கிருஷ்ணன் தள்ளாத முதியவர் வேடத்தில், துரியோதனனிடம் வந்து, "அய்யா எனக்கு ஒரு பொருள், தானமாக வேண்டும்" என்று கேட்டான்.

உடனே துரியோதனன், "என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்" என்று கூறினான். அதற்கு அந்த முதியவர், "இன்னும் ஒரு மாதம் கழித்து வந்து நான் விரும்பும் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

பின்னர், கிருஷ்ணன், வருண பகவானிடம், இன்னும் ஒரு மாதத்துக்கு அடைமழை பெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினான். ஒரு மாதத்துக்கு தொடர்ந்து அடைமழை பெய்தது. ஒரு மாதம் கழித்து துரியோதனனைச் சந்தித்த முதியவர் வேடத்தில் இருந்த கிருஷ்ணன், "கொடை வள்ளலே என் மகளின் திருமணத்துக்காக எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு துரியோதனன், "ஒரு மாதமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாங்களே விறகு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம். விறகு மட்டும் கேட்காதீர். வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேளுங்கள்" என்று சினத்துடன் கூறினான்.

இதற்கு பதிலளித்த கிருஷ்ணன், "தாங்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்னாவது?" என்று கேட்டான். அதற்கு துரியோதனன், "வாக்காவது, போக்காவது" என்று கடிந்து கொண்டான்.

முதியவர் வேடத்தில் இருந்த கிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டு, கர்ணனிடம் சென்று என் மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு கொடையாக வேண்டும் என்றார்.

உடனே கர்ணன், "நம் அரண்மனையில் நிறைய தூண்களும் உத்திரங்களும் உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை வண்டியில் ஏற்றி, அவை நனையாமல் முதியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று அரண்மனை சேவகர்களுக்கு உத்தரவிட்டார்.

விறகைப் பெற்றுக் கொண்ட முதியவர், துரியோதனன் மாளிகை வழியாகச் சென்றார். "பெரியவரே காய்ந்த விறகு கிடைத்து விட்டதா?" என்று வினவினார் அமைச்சர். அதற்கு "கொடை வள்ளல் கர்ண மகாராசா தான் கொடுத்தார்" என்று கூறினார், அந்த முதியவர்.

கொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. கொடை உள்ளமும், கூர்ந்த அறிவும் வேண்டும் என்னும் உண்மை துரியோதனனுடைய அமைச்சருக்கு புரிந்தது. கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது.

**********************************************************************

அன்று உடல் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த தர்மதேவனான யுதிஷ்டிரனே ஒருமுறை கிருஷ்ணனிடம்,  "கிருஷ்ணா நான் கூட நிறைய தானதர்மங்கள் செய்கிறேன். ஆனால் எல்லோரும் கர்ணணைத்தான் புகழ்கிறார்கள்" என்று கேட்டானாம். அதற்கு கிருஷ்ணன், :சரி தர்மரே நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் நீர் வெற்றிபெற்றால் நீர்தான் சிறந்த தர்மவான். போட்டிக்கு தயாரா?" என்றாராம், தர்மனும் ஒத்துகொள்ள போட்டி தயாராயிற்று. "போட்டி இதுதான். இரண்டு பெரிய பொக்கிஷ குவியல்கள் அதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும். அப்படி செய்த்துவிட்டால் நீர்தான் சிறந்த தர்மவான்" என்றான் கிருஷ்ணன். காலையில் போட்டி துவங்கிற்று, தர்மரும் போவோர் வருவோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கினானாம். ஆனால் பொக்கிஷம் குறையவேயில்லை.

ஆயிற்று, இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிடுவான். அப்பொழுது தர்மன் கிருஷ்ணனிடம் "கிருஷ்ணா என்னால் முடியவில்லை. ஆனால் இதே பரிட்சையை கர்ணணிடமும் நீ வைக்க வேண்டும். அவன் ஜெயித்தால் நான் ஒத்துகொள்கிறேன்" என்று கூற, கிருஷ்ணன் உடனே கர்ணணை கூப்பிட்டு, "கர்ணா இதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும்" என்று கூற, உடனே கர்ணன் இரண்டு பேரைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டானாம். அப்பொழுது கிருஷ்ணன், தர்மரைபார்த்து "இதை நீர் கூடச் செய்திருக்கலாம் ஆனால் உம்முடைய மனம் இவ்வளவு பொருளையும் இரண்டு பேருக்கு கொடுப்பதா என்று நினைத்தது. அதனால்தான் உம்மால் முடியவில்லை, ஆனால் கர்ணனுக்கு அந்த மாதிரி கிடையாது. அதனால்தான் அவன் சிறந்த தர்மவான்" என்றானாம் கிருஷ்ணன்.

**********************************************************************

இனி வேறொன்றைப் பார்ப்போம்

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கர்ணன். "தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள்" என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்தான் கிருஷ்ணன். அப்போது, "கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா!" என்று கேட்டான் கர்ணன்.

கிருஷ்ணன் உடனே, "இதோ தண்ணீர்" என்று ஊற்றுகிறான். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. "கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது" என்று கதறுகிறான் கர்ணன்.

அப்போது கிருஷ்ணன், "கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சுவை" என்றானாம்.

இதைக் கேட்ட கர்ணன் தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!! கர்ணனே செய்யாத தானமும் உண்டு என்றும், அன்னதானத்தின் சக்தியைச் சொல்வதற்காகவும் இந்தக் கதையைச் சொல்கிறார்கள்.

**********************************************************************

இதே சூழ்நிலையைக் கொண்டு வேறொரு கதையும் சொல்லப்படுகிறது.

கண்ணன் அந்தணர் வேடம் பூண்டு தேர்தட்டில் விழுந்து கிடக்கும் கர்ணனிடம் அவன் செய்த புண்ணியத்தைத் தானம் கேட்கிறான். அப்போது கர்ணன், "அந்தணரே! அம்புகளால் அடிபட்டுத் தேர்த்தட்டில் விழுந்துகிடக்கின்றேன். உடல் ஓய்ந்து போயிற்று! இந்தக் கர்ணனுடைய கரங்கள் இதுவரை கொடுக்கத்தான் நீண்டிருக்கின்றன. ஒரு போதும் வாங்கு வதற்கு நீண்டதில்லை! இன்று வாங்குவதற்கு நீள்கின்றன! உம்மிடம் ஒன்றை யாசிக்கிறேன். என்னிடம் இருக்கின்ற ஒன்றைக் கேளுங்கள்.

இல்லாததை கேட்டு விடாதீர்கள். வாழ்ந்தநாள் வரையிலும் வரையாது வழங்கிய வள்ளல் கர்ணன் போர்க்களத்தில் இல்லையென்று கைவிரித்தான் என்று இந்த வையகம் வசைபாடுமாறு செய்துவிடாதீர்கள். என்னால் இப்போது தரத்தகுந்த பெருளாகக் கேளுங்கள்" என்று கேட்கிறான் கர்ணன்.

அதற்கு கிருஷ்ணன்,” கர்ணா! நீ இதுவரை செய்த புண்ணயம் அனைத்தையும் எனக்கு வழங்குவாயாக” என்று கேட்கிறான்

கர்ணன்: “அந்தணரே! என் உயிரோ நிலை கலங்கியுள்ளது. இந்தப் பாவி, கேட்கும் பொருளையெல்லாம் தருகின்ற காலத்தில் நீர் வரவில்லை. இந்த உடலைத் தரலாம் என்றால் இது அம்பகளால் துளைக்கப்பட்டு சிதைந்து கிடக்கிறது. உயிரைத் தரலாம் என்றால் அது உள்ளே இருக்கிறதா உடலின் வெளியே இருக்கிறதா என்று தெரியவில்லை. வில்லும், அம்பும், அச்சு முறிந்த இந்தத் தேரும் அந்தணராகிய உமக்குப் பயன்படாது! நல்ல வேளையாக என்னிடம் உள்ள புண்ணியத்தைக் கேட்கின்றீர்கள். இதுவரை நான் செய்த புண்ணியத்தைத் தானே கேட்டீர்கள்? அந்தனரே! நான் செய்த புண்ணியத்தையெல்லாம் உங்களுக்குத் தருகின்றேன். மேலும், அப்படித் தருவதால் ஒரு புண்ணியம் வருமல்லவா! அதனையும் சேர்த்துத் தருகின்றேன்.

தெய்வத்திற்கு ஆச்சரியம் தான் கேட்கவந்தது செய்த புண்ணியத்தைமட்டும் ஆனால் அந்த வள்ளலோ வரப்போகும் புண்ணியத்தையுமல்லவா தறுவதாக சொல்கிறான், "கர்ணா! நீ கூறிய வண்ணம் புண்ணியத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடு,” என்கிறான். தண்ணீருக்கு எங்கே போவான் கர்ணன். தன் இதயத்தில் பாய்ந்திருந்த ஓர் அம்பினை எடுக்கிறான் அதிலிருந்து வந்த உதிரத்தை உத்தமன் உலகளந்தவனுக்கு தாரை வார்க்கிறான். கையேந்தா கடவுளும் கையேந்தி பெற்றுக்கொள்கிறது. வஞ்சகனின் கையில் வள்ளலின் குருதிபடவும் அவனும் வள்ளலாகிறான்,” உனக்கு என்ன வேண்டும் என்கிறான் கொஞ்ச நேரத்திற்கு முன் கையேந்திய கடவுள் இப்பொழுது உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறது.

சரி செவிவழிச் செய்திகள், திரைப்படம், இலக்கியச் செய்திகள் எனப் பார்த்தோம். இவையனைத்தும் உண்மையில் மகாபாரதத்தில் உள்ளனவா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும். கர்ணனின் கொடைத்திறத்தை வியாச முனிவர் சொன்னதை விட, வில்லிப்புத்தூரார் சொன்னதை விட நாட்டுப்புறத்து மக்கள் தாங்களாகவே உருவாக்கி உலவ விட்ட கதைகளே அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கர்ணன் மக்களின் மனதில் தங்கியிருக்கிறான். அதனால் தான் அவர்கள் தாங்களே அவனைக் குறித்து இப்படிக் கதைகளை உண்டாக்கிக் கொண்டார்கள் போலும்.

சரி, மகாபாரதத்தில் கர்ணன் கொடையாளி இல்லையா? என்றால், நிச்சயம் கொடையாளிதான். அவன் கொடையை நோன்பாகாவே நோற்றான். எதற்குத் தெரியுமா? அர்ஜுனனைக் கொல்வதற்கு ஒரு நோன்பாக, யார் எதைக் கேட்டாலும் கொடுப்பது என்ற நோன்பை எடுத்துக் கொள்கிறான். அன்றிலிருந்தே கர்ணன் கொடையாளியாகிறான். இதை மகாபாரதத்தில் உள்ள படியே பார்ப்போம்.

**********************************************************************

துரியோதனன், தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “துரியோதனா, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1], எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை" என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன்.  இது வனபர்வம் பகுதி 255ல் இருக்கிறது

மஹாபாரதத்தில் என்ன கொடை கொடுத்தான் கர்ணன். கர்ணன் இப்படி நோன்பு நோற்று வருவதை அறிந்த இந்திரன், அதாவது அர்ஜுனனின் தகப்பன், ஓர் அந்தணனின் உருவில் வந்து கர்ணனின் கவசத்தையும், குண்டலங்களையும் யாசிக்கிறான். வந்திருப்பது இந்திரன் என்று அறிந்தும் கர்ணன் தன் கவசத்தையும் குண்டலங்களையும் தன் உடலில் இருந்து அறுத்துக் கொடுக்கிறான். இது மகாபாரதத்தில் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

இந்திரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மகிழ்ச்சியில் நிறைந்து, தனது காரியம் நிறைவேறப்போவதைக் கண்டு வாசவனை {இந்திரனை} அணுகி, தடுக்கப்பட முடியாத கணையைப் பெற எண்ணி, இந்திரனிடம், “ஓ! வாசவா, எனது கவசத்துக்கும் காது குண்டலங்களுக்கும் ஈடாகத் தடுக்கப்பட இயலாததும், போரின் பொருட்டு அணிவகுக்கும் எதிரிக் கூட்டத்தை அழிக்கத் தகுதி வாய்ந்ததுமான கணையொன்றை எனக்குத் தருவாயாக!” என்றான் {கர்ணன்}.

வாசவன் {இந்திரன்} கர்ணனிடம், உனது காது குண்டலங்களையும், உனது உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசத்தையும் எனக்கு அளித்து, அதற்கு ஈடாகச் சில நிபந்தனைகளின் பேரில் இந்தக் கணையைப் பெற்றுக் கொள்! நான் போர்க்களத்தில் தைத்தியருடன் மோதும்போது, கலங்கடிக்கப்படாத இந்தக் கணை, எனது கைகளால் வீசப்பட்டு, எதிரிகளை நூற்றுக்கணக்கில் அழித்து, நோக்கம் நிறைவேறியதும் எனது கைக்கே திரும்பி வந்துவிடும். எனினும், உனது கையில் இந்தக் கணை, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உனது எதிரியில் பலமிக்க ஒரே ஒருவனைக் கொல்லும். அந்தச் சாதனையை அடைந்த பின்னர், அது உறுமிக்கொண்டும், சுடர்விட்டுக்கொண்டும் என்னிடம் திரும்பிவிடும்!” என்றான் {இந்திரன்}.

அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “நான் யாருக்கு அஞ்சி இருக்கிறேனோ, அந்தப் பெரும் என்னுடைய ஓர் எதிரியைக் கடும்போரில் கொல்ல நான் விரும்புகிறேன்" என்றான். அதற்கு இந்திரன், “அப்படிக் கர்ஜிக்கும் பலம் நிறைந்த எதிரியை நீ போர்க்களத்தில் கொல்வாய். ஆனால், நீ கொல்ல நினைக்கும் அவன், சிறப்பு மிக்க ஒரு நபரால் பாதுகாக்கப்படுகிறான். அந்தக் கிருஷ்ணன் அவனைப் பாதுகாத்து வருகிறான்!” என்றான். அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “அது அப்படியே இருந்தாலும், , ஒரே ஒரு சக்திவாய்ந்த எதிரியை {நிச்சயம்} அழிக்கும் அந்த ஆயுதத்தை எனக்குக் கொடுப்பாயாக! எனது பங்குக்கு நான் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் எனது மேனியில் இருந்து அறுத்து உனக்குக் கொடுப்பேன். எனினும், இதனால் காயப்படும் எனது உடல் காணச்சகியாதது ஆகாமல் நீ அருள வேண்டும்!” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, நீ உண்மையை நோற்க {சத்தியத்தைப் பேண} உள்ளதால், உனது மேனி காணச்சகியாததாகவோ, வடு உடையதாகவோ ஆகாது. ஓ! கர்ணா, நீ உனது தந்தையைப் போலவே சக்தியும் நிறமும் கொண்டிருப்பாய். கோபத்தில் பித்தேறி, உன்னிடம் வேறு ஆயுதங்கள் இருக்கும்போதோ, உனது உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாதபோதோ இந்தக் கணையை நீ ஏவினால், இது உன்மேலேயே விழும்" என்றான். கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, நீ சொல்வது போலவே, எனது உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும்போது மட்டுமே நான் இந்த வாசவி {இந்திரசக்தி} கணையை வீசுவேன்! இதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன்!” என்றான்.

பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுடர்விடும் கணையைப் பெற்றுக் கொண்ட கர்ணன், தனது இயற்கை கவசத்தை உரிக்கத் தொடங்கினான். தனது உடலை வெட்டிக் கொள்ளும் கர்ணனைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதக் கூட்டம் சிம்ம கர்ஜனை புரிந்தது. அப்படிக் கர்ணன் தனது கவசத்தை உரித்துக் கொண்டிருந்த போது முகத்தில் எந்தவித கடும் மாற்றத்தையும் {விகாரத்தையும்} காட்டிக் கொள்ளவில்லை. மனிதர்களில் வீரனான அவன் {கர்ணன்}, மீண்டும் மீண்டும் புன்னகைத்துக் கொண்டே ஆயுதம் கொண்டு தனது உடலை அறுத்துக் கொண்டிருந்த போது, தேவலோக பேரிகைகள் {#} முழங்கின; தெய்வீக மலர் மாரி பொழிந்தது. தனது சிறந்த கவசத்தைத் தனது மேனியில் இருந்து அறுத்தெடுத்த கர்ணன், இன்னும் {குருதி} சொட்டிக் கொண்டிருந்த அதை {கவசத்தை} வாசவனிடம் {இந்திரனிடம்} கொடுத்தான். தனது காதுகளில் இருந்து காதுகுண்டலங்களையும் அறுத்த அவன், அவற்றையும் இந்திரனிடம் கொடுத்தான்.

இது வனபர்வத்தில் பகுதி 308ல் வருகிறது.

இந்தக் கவசமும் குண்டலமும் கர்ணனுக்காக சூரியனிடம் குந்தி இரந்து பெற்றவையாகும். அவற்றில் அமிர்தம் இருக்கிறது என்றும், அது இருக்கும் வரை கர்ணனை யாராலும் கொல்ல முடியாது என்றும் சூரியன் சொல்கிறான். இது வனபர்வம் பகுதி 305ல் சொல்லப்பட்டுள்ளது.

அனைத்தையும் விடக் கர்ணன் செய்த பெரியதானம் எது என்றால், தான் இறப்போம் என்று உறுதியாக அறிந்தே துரியோதனனுக்காகப் போரிட்டதாகும். கவசம் இருந்திருந்தால் அவனது உயிர் போயிருக்காது. ஆனால் அர்ஜுனனைக் கொல்ல சக்தி ஆயுதமும் கிடைத்திருக்காது. அர்ஜுனனுக்காக வைத்திருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கசன் மீது ஏவச் சொல்கிறான் துரியோதனன். கர்ணன் மறுத்துப் பார்க்கிறான். துரியோதனன் கேட்காததால் அந்த ஆயுதத்தையும் இழக்கிறான். எனவே, தெரிந்தே துரியோதனனுக்காக இறந்த கர்ணன், தன் உயிரையே துரியோதனனுக்குத் தானமாக அளித்தான் என்றால் அது மிகையாகுமா? எனவே, கர்ணன் உலகிற்சிறந்த கொடையாளியே.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்