Wednesday, May 09, 2018

அறம், பொருள், இன்பம், வீடு! - சாந்திபர்வம் பகுதி – 167

Virtue, Profit, Desire, Emancipation! | Shanti-Parva-Section-167 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 37)


பதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவை குறித்து விதுரர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள், பீமசேனன் ஆகியோர் பேசியது; வீடு குறித்து யுதிஷ்டிரன் பேசியது...


Virtue, Profit, Desire, Emancipation! | Shanti-Parva-Section-167 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதை {வாளின் வரலாற்றைச்} சொல்லிவிட்டு பீஷ்மர் அமைதியானபோது, யுதிஷ்டிரன் (அவனும் பிறரும்) தன் இல்லத்துக்குத் திரும்பினான். மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளிடமும், அவர்களோடு ஐந்தாவதாக இருந்த விதுரனிடமும்,(1) "உலகின் போக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இம்மூன்றின் முக்கியத்துவத்தில், எது முதன்மையானது, எது இரண்டாவது, எது மூன்றாவது?(2) மூன்று திரட்டுகளை (காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை) அடக்குவதற்கு, மூன்றில் (அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்) எதில் முதலில் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்?[1] நீங்கள் அனைவரும் இந்தக் கேள்விக்கு உண்மையான வார்த்தைகளில் பதிலளிப்பதே தகும்" என்று கேட்டான்.(3) குரு தலைவனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், உலகின் போக்கு, (பொருட்களின் உண்மையான இயல்பைக் குறித்த) உண்மை ஆகியவற்றுடன் கூடிய பொருள் அறிவியலையும் அறிந்தவனும், அறிவில் பெரும்பொலிவு கொண்டவனுமான விதுரன், சாத்திரங்களில் உள்ள பொருட்களை நினைவுகூர்ந்து, இந்த வார்த்தைகளை முதலில் சொன்னான்.(4)


[1] கும்பகோணம் பதிப்பில், "உலகத்தின் நிலை தர்மத்திலும், அர்த்தத்திலும், காமத்திலும் அடங்கியிருக்கிறது. அவைகளுள் எது மிகப்பெரியது? எது நடுத்தரமானது? எது எளிது? காமம், கோபம், லோபம் இம்மூன்றையும் ஜயிக்க வேண்டி எதில் மனத்தை அடக்கி வைக்க வேண்டும்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மக்களின் நடத்தை, தர்மம், அர்த்தம், காமம் என்ற அடிப்படையில் இருக்கிறது. இவற்றில் எது முக்கியமானது? எது நடுத்தரமானது? எது முக்கியமற்றது? மூன்று பிரிவுகளையும் அடக்க விரும்பும் ஒருவன் இவற்றில் எதை அடக்க வேண்டும்?" என்றிருக்கிறது.

விதுரன், "பல்வேறு சாத்திரங்களைக் கற்றல், தவம், கொடை, நம்பிக்கை, வேள்விகளைச் செய்தல், மன்னிக்கும் தன்மை, நேர்மையான மனநிலை, கருணை, வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகிய இவை அறத்தின் உடைமைகளாகும்.(5) நீ அறத்தைக் கைகொள்வாயாக. உன் இதயம் அதைவிட்டு விலகாதிருக்கட்டும். அறம், பொருள் ஆகிய இரண்டும் இவற்றிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலத்தில் {தவணையில்} சேர்க்கப்படக்கூடியவை என்று நான் நினைக்கிறேன்.(6) அறத்தின் மூலமே முனிவர்கள் (உலகத் துன்பங்கள் அனைத்தையும்) கடந்து சென்றனர். அனைத்து உலகங்களும் (நிலையாக இருப்பதற்கு) அறத்தையே சார்ந்திருக்கின்றன. அறத்தின் மூலமே தேவர்கள் தன் மேலான நிலையை அடைந்தனர். அறத்தின் மீதே பொருள் அல்லது செல்வம் நிலைத்திருக்கிறது(7) ஓ! மன்னா, அறமே தகுதியில் {புண்ணியத்தில்} முதன்மையானதாகும். பொருள் நடுநிலைமை கொண்டது என்று சொல்லப்படுகிறது. இன்பமே மூன்றிலும் கீழானது என ஞானிகளால் சொல்லப்படுகிறது.(8) இதன்காரணமாக ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்" என்றான் {விதுரன்}".(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "விதுரர் தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்ததும், பொருள் அறிவியலில் நன்கு திறம்பெற்றவனும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டின் உண்மைகளையும் அறிந்தவனுமான பிருதையின் மகன் அர்ஜுனன், (யுதிஷ்டிரனுடைய கேள்வியின் ஓட்டத்தால்) தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இந்த உலகமே செயல்களின் களமாகும். எனவே இங்கே செயலே மெச்சப்பட வேண்டும். உழவு, வணிகம், ஆநிரை வளர்த்தல், பல்வேறு வகையான கலைகள் {கைத்தொழில்கள்},(11) ஆகியன உள்ளடங்கியதே பொருள் {அர்த்தம்} என்றழைக்கப்படுகிறது. மேலும் பொருளே அத்தகைய செயல்கள் அனைத்திற்கும் எல்லையாக இருக்கிறது. பொருள், அல்லது செல்வமின்றி, அறம் மற்றும் இன்பம் (இன்பத்திற்குரி பொருட்கள்) ஆகியவற்றை வெல்லமுடியாது. இதுவே ஸ்ருதியின் அறிவிப்பாகும்.(12) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரும் கூட, பல்வேறு வகையான செல்வங்களைக் கொண்டிருந்தால், அறத்தின் உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களாகவும், நிறைவுசெய்வதற்குக் கடினமான ஆசைகளையும் நிறைவு செய்பவர்களாகவும் ஆவார்கள்.(13) ஸ்ருதி அறிவிக்கும் வகையில், அறமும், இன்பமும் செல்வத்தின் அங்கங்களாகவே இருக்கின்றன. செல்வத்தை அடைந்தால், அறத்தையும், ஆசைக்குரிய பொருட்களையும் வெல்லலாம்.(14) அனைத்து உயிரினங்களும் பிரம்மனை வழிபடுவதைப் போலவே, மேன்மையான பிறவிகளாகப் பிறந்தோரும், செல்வம்படைத்த மனிதனை வழிபடுவார்கள்.(15)

மான்தோல் உடுத்தியவர்களும், தலையில் சடாமுடி தரித்தவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், உடல் முழுவதும் புழுதி பூசப்பட்டவர்களும், புலன்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், வழுக்கைத் தலை கொண்டவர்களும், அர்ப்பணிப்புள்ள பிரம்மச்சாரிகளும், ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து வாழ்பவர்களும் கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள்.(16) மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தியவர்களும், நீண்ட தாடிகளைக் கொண்டவர்களும், பணிவுடையவர்களும், கல்விமான்களும், உள்ளடக்கம் கொண்டவர்களும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களும்கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள். முன்னோரின் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், தங்களுக்குரிய கடமைகளை நோற்பவர்களும், சொர்க்கத்தில் விருப்பமுள்ளவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.(18) நம்பிக்கையுள்ளவர்களும், நம்பிக்கையற்றவர்களும், உயர்ந்த வகை யோகத்தைக் கடுமையாகப் பயில்பவர்களும் என அனைவரும், செல்வத்தின் சிறப்புக்குச் சான்றளிக்கிறார்கள்.(19) எவன் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் இன்பத்திற்குரிய பொருட்களைக் கொடுத்துப் பேணி வளர்த்து, தண்டனைகளால் தன் எதிரிகளைப் பீடிக்கிறானோ, அவனே உண்மையில் செல்வம்படைத்தவன் என்று சொல்லப்படுகிறான். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, இதுவே என் உண்மையான கருத்தாகும்.(20) எனினும், இந்த இருவரும் (நகுலனும், சகாதேவனும்) சொல்லப் போவதையும் கேட்பீராக" என்றான் {அர்ஜுனன்}".(21)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அர்ஜுனன் நிறுத்தியதும், மாத்ரியின் மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(22)

நகுலனும் சகாதேவனும், "அமர்ந்தோ, கிடந்தோ, நின்றோ, நடந்தோ ஒருவன் மிகக் கடுமையான வழிமுறைகளில் முயற்சி செய்தாவது செல்வத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.(23) அடைவதற்கு அரிதானதும், மிகவும் ஏற்புடையதுமான செல்வம் ஈட்டப்பட்டால், அஃதை ஈட்டிய மனிதன் நிச்சயம் ஆசைக்குரிய {இன்பத்திற்குரிய} பொருட்கள் அனைத்தையும் அடைவது காணப்படுகிறது.(24) எந்தச் செல்வம் அறத்துடன் தொடர்புடையதோ, எந்த அறம் செல்வத்தோடு தொடர்புடையதோ, அவை நிச்சயம் அமுதத்தைப் போன்றவையே. இதன் காரணமாக என்கள் கருத்துகள் பின்வருமாறு இருக்கின்றன.(25)

செல்வமில்லாத மனிதனால் எந்த ஆசையையும் நிறைவு செய்து கொள்ள முடியாது; அதே போல அறமற்ற ஒருவனிடமும் செல்வமேதும் இருக்க முடியாது. எனவே, அறம் மற்றும் பொருள் ஆகியவற்றில் இருந்து விலகியிருப்பவன் உலகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாக இருப்பான்.(26) இந்தக் காரணத்திற்காக ஒருவன், அறத்தேவைகளை அலட்சியம் செய்யாமல், அர்ப்பணிப்பு நிறைந்த மனத்துடன் செல்வத்தை அடைய முனைய வேண்டும். (ஞான) மொழியை நம்புபவர்கள், தாங்கள் விரும்பிய எதையும் அடைவதில் வெல்கிறார்கள்.(27) ஒருவன் முதலில் அறம்பயில வேண்டும்; அடுத்ததாக அறத்தைத் தியாகம் செய்யாமல் செல்வத்தை அடைய வேண்டும்; பிறகு தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முனைய வேண்டும்; செல்வத்தை அடைவதில் வெற்றி அடையும் ஒருவனிடம் இதுவே தன் {ஆசையை நிறைவேற்றிக் கொள்வதே மூன்றிலும்} இறுதிச் செயலாக இருக்க வேண்டும்" என்றனர் {நகுலனும், சகாதேவனும்}".(28)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "அசுவினிகளின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்} இவ்வார்த்தைகளைப் பேசியதும் அமைதியடைந்தனர். பிறகு, பீமசேனன் பின்வருவதைச் சொல்லத் தொடங்கினான்.(29)

பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஆசையில்லாதவன் செல்வத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆசையில்லாத ஒருவன் ஒருபோதும் அறத்தை விரும்புவதில்லை. அசையற்றவனால் எந்த விருப்பத்தையும் உணரமுடியாது. இதன்காரணமாக, ஆசையே {இன்பமே} மூன்றிலும் முதன்மையானதாகும்.(30) ஆசையின் ஆதிக்கத்தின் கீழேயே முனிவர்களும், கனிகளையோ, கிழங்குகளையோ, காற்றை மட்டுமே உண்டு, தங்களைத் தவங்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.(31) வேதத்தை நன்கறிந்தவர்கள், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும், அல்லது நம்பிக்கையின் சடங்குகள் மற்றும் வேள்விச் செயல்களிலும், அல்லது கொடைகளைக் கொடுப்பதிலும், பெறுவதிலும் ஈடுபடுகிறார்கள்.(32) வணிகர்கள், உழவர்கள், ஆநிரை வளர்ப்போர், கலைஞர்கள், கைவினைஞர்கள், தணிவுச் சடங்குகளில் ஈடுபடுவோர் ஆகிய அனைவரும் ஆசையினாலேயே {காமத்தினாலேயே} செயல்படுகிறார்கள்.(33) சிலர் ஆசையால் தூண்டப்பட்டு, பெருங்கடலின் ஆழத்தில் குதிக்கிறார்கள். உண்மையில், ஆசையானது {காமமானது} பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. ஆசையின் கொள்கையானது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(34) ஆசையிலிருந்து விலகியிருப்பவன் என்று எவனும், இவ்வுலகில் இருப்பதாகவோ, இருந்ததாகவோ, இருக்கப்போவதாகவோ காணப்படவில்லை. ஓ! மன்னா, இதுவே உண்மையாகும். அறம், செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.(35)

வெண்ணையானது, தயிரின் சாரத்தை வெளிப்படுத்துவதைப் போலவே ஆசையும், பொருள் மற்றும் அறத்தின் சாரத்தை வெளிப்படுத்தும். எண்ணெய் விதைகளைவிட {பிண்ணாக்கைவிட} எண்ணெய் சிறந்ததாகும். நீர்மோரைவிட நெய் சிறந்ததாகும்.(36) மலர்களும், கனிகளும், மரத்தைவிடச் சிறந்தவையாகும். அதே போல, ஆசையே {காமமே} அறம் மற்றும் பொருளைவிடச் சிறந்ததாகும். மலர்களின் இருந்து தேன் சாறு பிரித்தெடுக்கப்படுவதைப் போலவே, ஆசையானது இவ்விரண்டில் இருந்தே பிரித்தெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆசையே அறம், பொருள் ஆகிய இரண்டின் மூலமாகும். ஆசையே இவ்விரண்டின் ஆன்மாவாகும்.(37) பிராமணர்களுக்கு ஆசையில்லாதிருந்தால், அவர்கள் பிரம்மவாதிகளுக்கு இனிப்புகளையோ, செல்வத்தையோ ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள்[2]. ஆசையில்லாமல் இருந்தால், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகைச் செயல்பாடுகளும் காணப்படாமல் போகும். இந்தக் காரங்களினால், ஆசையே முத்தொகையிலும் முதன்மையானதாகத் தெரிகிறது.(38) சிறந்த ஆடைகளை உடுத்தியிருப்பவர்களும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், இனிய மதுவினால் போதையுண்டிருப்பவர்களுமான அழகி காரிகைகளை அணுகி, அவர்களோடு நீர் விளையாடிக் கொண்டிருப்பீராக. ஓ! மன்னா, நமக்கு ஆசையே மூன்றில் முதன்மையானதாகும்.(39) இந்தக் கேள்வியை வேர்வரை சிந்தித்ததனால், நான் இந்த முடிவை அடைந்திருக்கிறேன். ஓ! தர்மனின் மகனே, இந்த முடிவை ஏற்கத் தயங்காதீர். இந்த என் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளல்ல. அறம் நிறைந்த அவற்றை, நல்லோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.(40) அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் சமமாகவே கவனிக்கப்பட வேண்டும். எந்த மனிதன் இவ்வற்றில் ஏதாவது ஒன்றில் மட்டும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவன் மேன்மையான மனிதனல்ல. இவற்றில் இரண்டில் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டவன் நடுத்தரமானவனாகச் சொல்லப்படுகிறான். மறுபுறம் மூன்றையும் கவனிப்பவனே, தன் இனத்தில் சிறந்தவனாவான்" என்றான் {பீமசேனன்}.(41)

[2] கும்பகோணம் பதிப்பில், "காமமில்லாமல் பொருளால் மட்டும் ப்ராம்மணர்கள் நல்ல அன்னத்தைப் புஜிக்கிறார்களில்லை. காமமில்லாமல் ப்ராம்மணர்களின் பொருட்டுத் தானஞ்செய்கிறதில்லை" என்றிருக்கிறது.

ஞானம் கொண்டவனும், நண்பர்களால் சூழப்பட்டவனும், சந்தனம் பூசியிருந்தவனும், சிறந்த மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவனுமான பீமன், இவ்வார்த்தைகளை அந்த வீரர்களிடம் சுருக்கமாகவும், விரிவாகவும் சொன்னதும் அமைதியடைந்தான்.(42) அப்போது, அறவோரில் முதன்மையானவனும், பெரும் கல்விமானும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவர்கள் அனைவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை முறையாக நினைவுகூர்ந்து, அந்தப் பேச்சுகள் அனைத்தும் போலி தத்துவங்களே என எண்ணி, பின்வருமாறு பேசினான்.(43)

யுதிஷ்டிரன், "சாத்திரங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் முடிவான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் அவற்றின் அதிகாரங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் பேசிய நிச்சயத்தன்மை நிறைந்த வார்த்தைகள் என்னால் கேட்கப்பட்டன.(44) இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக. எவன் தகுதியிலோ {புண்ணியத்திலோ}, பாவத்திலோ ஈடுபடவில்லையோ, எவன் பொருளையோ, அறத்தையோ, ஆசையையோ {இன்பத்தையோ} கவனிக்கவில்லையோ, எவன் அனைத்துக் களங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறானோ, எவன் தங்கத்தையும், செங்கற்களையும் ஒன்றாகக் கருதுகிறானோ, அவன், இன்பம், துன்பம் மற்றும் காரிய நிறைவுக்கான தேவை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனாகிறான்.(45) அனைத்து உயிரினங்களும் பிறப்புக்கும், இறப்புக்கும் ஆட்படுகின்றன. அனைத்தும் வீணாதல் {கிழத்தன்மை} மற்றும் மாற்றத்திற்கு {விகாரங்களுக்கு} உட்பட்டவையாக இருக்கின்றன. வாழ்வின் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகளால் மீண்டும் மீண்டும் விழிப்படையும் அனைவரும் முக்தியை {விடுதலையை / மோட்சத்தை} மெச்சுகிறார்கள். எனினும், நாம் முக்தியை அறியவில்லை.(46)

தான்தோன்றியும், தெய்வீகமானவனுமான பிரம்மன், எவன் பற்று மற்றும் பாசத்தின் கட்டுகளில் கட்டப்பட்டிருக்கிறானோ அவன் ஒருபோதும் முக்தியை அடைவதில்லை என்று சொல்லியிருக்கிறான். எனினும், கல்விமான்கள் முக்தியையே நாடுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக, ஒருவன் எதையும் ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஒருபோதும் கருதக்கூடாது.(47) இந்தப் பார்வையே சிறந்ததாகத் தெரிகிறது. இவ்வுலகில் உள்ள எவனாலும் தான் விரும்பியவாறு செயல்பட முடியாது. (மேன்மையான ஒரு சக்தியால்) எவ்வாறு செயல்படுவதற்காக நான் உண்டாக்கப்பட்டேனோ, அவ்வாறே துல்லியமாகச் செயல்படுகிறேன். விதி சமைக்கும் பெரியவன் தான் விரும்பியவாறே அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்கிறான். விதி சமைப்பவனே {பரமனே} உயர்ந்தவன். நீங்கள் அனைவரும் இஃதை அறிவீராக.(48) எவனாலும் தன் செயல்களால் அடையப்பட முடியாததை அடைய முடியாது. எது நடக்க வேண்டுமோ அதுவே நடைபெறும். இஃதை அறிவீராக. முத்தொகையிலிருந்தும் விடுபட்ட ஒருவனால் முக்தியை வெல்ல முடியும் என்பதால், முக்தியே உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதாகத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}".(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "காரணம் நிறைந்ததும், இதயத்துக்கு ஏற்புடையதுமான இந்த முதன்மையான வார்த்தைகளைக் கேட்ட பீமனும், பிறரும், மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் கரங்களைக் கூப்பி, அந்தக் குருகுல இளவரசனை {யுதிஷ்டிரனை} வணங்கினார்கள்.(50) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், இனிய எழுத்துகளாலும், அசைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்டும், இதயத்துக்கு ஏற்புடையதும், ஒவ்வாத ஒலிகளும் வார்த்தைகளும் இல்லாததுமான ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பேச்சைக் கேட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, யுதிஷ்டிரனை உயர்வாக மெச்சத் தொடங்கினான்.(51) உயர் ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, பதிலுக்கு இணங்கிய தணிக்கையாளர்களைப் புகழ்ந்தான். பிறகு மன்னன், மீண்டும் உயர் ஆன்மாகக் கொண்ட நதிகளில் முதன்மையானவளுடைய மகனிடம் {பீஷ்மரிடம்} கடமைகளைக் குறித்து விசாரிப்பதற்காகப் பேசினான்" {என்றார் வைசம்பாயனர்}.(52)

சாந்திபர்வம் பகுதி – 167ல் உள்ள சுலோகங்கள் : 52

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்