Saturday, July 21, 2018

செழிப்பு மற்றும் வறுமைக்கான அறிகுறிகள்! - சாந்திபர்வம் பகுதி – 228

The indications of prosperity and adversity! | Shanti-Parva-Section-228 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 55)


பதிவின் சுருக்கம் : லக்ஷ்மிதேவி அசுரர்களை விட்டு விலகிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்னது; செழிப்பு மற்றும் வறுமையின் அறிகுறிகள்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் எதிர்கால மேன்மை மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான அறிகுறிகளை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நீ அருளப்பட்டிருப்பாயாக, ஒருவனுடைய எதிர்காலச் செழிப்பு மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான முற்குறிகளை அவனது மனமே குறிப்பிடும்.(2) இது தொடர்பாக ஸ்ரீக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(3) பிரம்மாவைப் போன்றே அளவிலா பிரகாசத்துடன் கூடிய சக்தியைக் கொண்டவரும், தன் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டவரும், தன் தவச் செழிப்பின் மூலம் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் உடனே காணவல்லவரும், படைப்பாளனின் உலகத்தில் வசிக்கும் தெய்வீக முனிவர்களுக்கு இணையானவருமான பெருந்தவசி நாரதர், மூவுலகங்களிலும் தன் விருப்பப்படி உலவிக் கொண்டிருந்தார்.(4,5) ஒரு நாள் அதிகாலையில் விழித்தெழுந்த அவர், தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய விரும்பி, துருவம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட கணவாயின் {துவாரத்தின்} வழியே வெளிவந்த கங்கையாற்றுக்கு அந்நோக்கத்துடனே சென்று அந்த ஓடையில் மூழ்கினார்[1].(6)

[1] "இங்கே சொல்லப்படும் சொற்கள் ‘துருவதுவாரபவாம்" Dhruvadwaabhavaam என்பதாகும். உரையாசிரியர் இங்கே அமைதியாக இருக்கிறார். ஒருவேளை இஃது இமயக் கணவாயாக இருக்க வேண்டும். வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் துருவ நட்சத்திரம் இருக்கும் பகுதி குறிப்பிடப்படுவதாகக் கருதுகிறார்கள். துருவன் என்பது படைப்பாளனான பிரம்மனின் பெயராகும். எனவே, இதில் அந்த ஆறு பிரம்மலோகத்தில் இருந்து வெளிப்படுகிறது என்ற பொருளையும் கொண்டிருக்கலாம். புராணத் தொன்மத்தின் படி, விஷ்ணுவின் பாதங்களின் பிறக்கும் அவ்வோடை, பிரம்மனின் கமண்டலத்திற்குள் நுழைந்து பிறகு, அங்கிருந்து பூமிக்குப் பாய்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஆயிரம் கண்களைக் கொண்டவனும், வஜ்ரந்தரித்தவனும், சம்பரன் மற்றும் பாகனைக் கொன்றவனுமான இந்திரன், நாரதர் இருந்த அதே கரைக்கு அந்த நேரத்தில் வந்தான்.(7) ஆன்மாக்களை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த முனிவர் மற்றும் தேவன் ஆகிய அவர்கள் இருவரும், அமைதியாகத் தங்கள் ஜபங்களைச் செய்துவிட்டு ஒன்றாக அமர்ந்தனர்.(8) அவர்கள் அந்த நேரத்தில் ஜபிப்பதிலும், பெரும் தெய்வீக முனிவர்களால் சொல்லப்பட்ட பல நல்ல மற்றும் உயர்ந்த செயல்களைக் கொண்ட சிறந்த கதைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டனர். உண்மையில், அவர்கள் இருவரும் பழைய வரலாறு குறித்த இனிய உரையாடலில் இவ்வாறு ஈடுபட்டனர்.(9) அவ்வாறு அங்கே அமர்ந்திருந்தபோது, தங்கள் முன்னிலையில் ஆயிரங்கதிர்களைப் பொழிந்து கொண்டு உதிக்கும் சூரியனை அவர்கள் கண்டனர். அந்தக் கோளை முழுமையாகக் கண்ட அவர்கள் எழுந்து நின்று அவனது புகழ்பாடினார்கள்.(10)



சரியாக அதே நேரத்தில், அந்நாளில் உதிக்கும் நட்சத்திரத்திற்கு நேரெதிர் திசையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் கூடியதும், அந்த நாளின் இரண்டாவது நட்சத்திரத்தைப் போலத் தெரிந்ததுமான ஏதோ ஓர் ஒளிப்பொருளை அவர்கள் கண்டனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஒளிப்பொருள் படிப்படியாகத் தங்களை நோக்கி வருவதையும் அவர்கள் கண்டனர்.(11) கருடன் மற்றும் சூரியனால் அலங்கரிக்கப்பட்டிருந்த விஷ்ணுவில் அந்தப் பொருள், ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விட்டபடி, மூவுலகங்களுக்கு ஒளியூட்டிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(12) அவர்கள் கண்ட பொருளானவள், அபார அழகைக் கொண்ட அப்சரஸ்கள் பலருடன் கூடிய ஸ்ரீயைத் தவிர வேறு எவருமல்ல. உண்மையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த அவள், தானே ஒரு பெரிய சூரிய வட்டிலைப் போலத் தெரிந்தாள்.(13) முழுமையான நட்சத்திரங்களைப் போலத்தெரிந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவள், முத்து மாலைகளுக்கு ஒப்பான மாலையை அணிந்திருந்தாள். இந்திரன், தாமரைகளுக்கு மத்தியில் தனது வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பத்மை என்றழைக்கப்படும் தேவியைக் கண்டான்.(14) தனது முதன்மையான தேரில் இருந்து இறங்கிய அந்த ஒப்பற்ற பெண்மணி, மூவுலகங்களின் தலைவன் மற்றும் தெய்வீக முனிவர் நாரதர் ஆகியோரை நோக்கி வரத் தொடங்கினாள்.(15) நாரதரால் பின்தொடரப்பட்ட மகவானும் {மகவத் / இந்திரனும்} அந்தப் பெண்மணியை நோக்கிச் சென்றான். அனைத்தையும் அறிந்தவனான அவன், கூப்பிய கரங்களுடன் அவளிடம் சென்று, விஞ்சமுடியாத மதிப்பு மற்றும் மனநேர்மையுடன் அவளை வழிபட்டான். துதிகள் முடிந்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான அவன், அந்த ஸ்ரீயிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(16,17)

சக்ரன் {இந்திரன் ஸ்ரீயிடம்}, "ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நீ யார்? உண்மையில் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறாய்? ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, ஓ! மங்கலமான பெண்ணே, எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்?" என்று கேட்டான்.(18)

ஸ்ரீ, "மங்கல வித்துகள் நிறைந்த மூவுலங்களில் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் தங்கள் மொத்த இதயத்தைக் கொண்டும், என்னுடன் தொடர்பை ஏற்படுதிக் கொள்ள முனைகின்றன.(19) நான் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீயும், அனைத்து உயிரினங்களின் செழிப்பின் நிமித்தமாகச் சூரியக் கதிர்களின் தீண்டலால் மலரும் தாமரையில் உதிப்பவளுமா பத்மையும் ஆவேன்.(20) ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, லக்ஷ்மி, பூதி, ஸ்ரீ என்று நான் அழைக்கப்படுகிறேன். நானே நம்பிக்கை {ஸ்ரத்தை}, நானே புத்தி {மேதை}, நானே செல்வாக்கு {ஸன்னதி}, நானே வெற்றி {விஜிதி}, நானே மாற்றமில்லாதவளுமாவேன் {ஸ்திதியுமாவேன்}.(21) நானே பொறுமை {தருதி}, நானே வெற்றி {ஸித்தி}, நானே செழிப்புமாவேன் {ஸம்பூதியுமாவேன்}. நானே ஸ்வாஹா, நானே ஸ்வதா, நானே மதிப்பு {ஸம்ஸ்துதி}, நானே விதி {நியதி}, நானே நினைவுமாவேன் {கிருதியுமாவேன்}.(22) நான் படைமுகப்பிலும், வெற்றிமிக்கக் கொடிமரங்களிலும், அறம்சார்ந்த அரசுகளிலும், அவற்றின் இல்லங்கள், நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளிலும் வசிக்கிறேன்.(23) ஓ! பலனைக் கொன்றவனே, வெற்றியடைந்த பிறகு மூச்சை விடுபவர்களும் {சுவாசிப்பவர்களும்}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான முதன்மையான மனிதர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(24) அறப்பற்றில் உறுதியுடன் இருப்பவர்கள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்கள், பிரம்மத்தில் பற்றுடையவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவர்கள், பணிவுடையவர்கள், ஈகையாளர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(25) முன்பு என் மனநிலையானது, உண்மை மற்றும் புண்ணியத்தில் கட்டப்பட்டிருந்ததன் விளைவால், அசுரர்களிடம் வசித்து வந்தேன். எனினும், அசுரர்கள் முரணியல்களை ஏற்பதைக் கண்டதால் அவர்களை விட்டு வந்திருக்கும் நான் உன்னில் வசிக்க விரும்புகிறேன்" என்றாள்.(26)

சக்ரன், "ஓ! அழகிய முகம் கொண்டவளே, அசுரர்களின் எந்த நடத்தையால் நீ அவர்களிடம் வசித்தாய்? அவர்களிடம் எதைக் கண்டதால் நீ தைத்தியர்களையும், தானவர்களையும் கைவிட்டு இங்கே வந்திருக்கிறாய்?" என்று கேட்டான்.(27)

ஸ்ரீ, "தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், பொறுமையை இழக்காதவர்கள், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையில் நடப்பதில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆகியோரிடம் நான் என்னை நிலையுறுதியுடன் இணைத்துக் கொள்வேன்.(28) சாத்திரக் கல்வி, வேதங்கள், வேதச் சடங்குகள், பித்ரு, தேவ, ஆசான், பெரியோர், விருந்தினர் வழிபாடுகள் ஆகியவற்றுக்காக ஈகையளிப்பதில் புகழ்பெற்றவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(29) முந்தைய காலத்தில் தானவர்கள் தங்கள் வசிப்பிடங்களைத் தூய்மையாக வைப்பவர்களாக, தங்கள் பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக, வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாக, தங்கள் பெரியோருக்குப் பணிவிடை செய்பவர்களாக, தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்களாக, பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பேச்சில் வாய்மை நிறைந்தவர்களாக இருந்தனர்.(30)

நம்பிக்கை நிறைந்தவர்களாக; கோபத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக; ஈகையறம் பயில்பவர்களாக; பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ளாதவர்களாக; நண்பர்கள், ஆலோசகர்கள், மனைவிகள் ஆகியோரைப் பராமரிப்பவர்களாக; ஒருபோதும் பொறாமை கொள்ளாதவர்களாக இருந்தனர்.(31) முந்தைய காலத்தில் அவர்கள் கோபத்தால் நிறைந்து ஒருபோதும் ஒருவரையொருவர் தாக்குபவர்களாக இல்லை. அவர்கள் அனைவரும் நிறைவுடையவர்களாகவும், பிற மக்களின் செழிப்பையும், செல்வாக்கையும் கண்டு துன்புறாதவர்களாகவும் இருந்தனர்.(32) அவர்கள் அனைவரும் அறப்பண்புடையவர்களாக, சிக்கனம் கொண்டவர்களாக, மதிப்பிற்குரிய நடத்தை கொண்டவர்களாக, கருணை கொண்டவர்களாக இருந்தனர். அருள், எளிய நடத்தை, நம்பிக்கையில் நிலையுறுதி ஆகியவற்றை அதிகம் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.(33) அவர்கள் தங்கள் பணியாட்கள் மற்றும் ஆலோசகர்களை நிறைவுடன் வைத்திருந்தனர், மேலும் அவர்கள் நன்றியுடையவர்களாகவும், இனிய பேச்சைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒவ்வொருவரின் நிலை {பதவி} மற்றும் மதிப்பிற்குத் தகுந்த பணிவிடைகளை அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் நாணம் கொண்டவர்களாக இருந்தனர். கடும் நோன்புகளை அவர்கள் நோற்றனர்.(34) புனிதமான ஒவ்வொரு நாளிகளும் அவர்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர். அவர்கள் தங்கள் மேனியில் நறுமணப் பொருட்களையும், மங்கலமான களிம்புகளையும் முறையாகப் பூசிக் கொள்பவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் மேனியை நன்றாக அலங்கரித்துக் கொள்பவர்களாக இருந்தனர். உபவாசங்கள், தவங்களை நோற்பவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக, வேத பாடல்களைப் பாடுபவர்களாக அவர்கள் இருந்தனர்.(35)

அவர்கள் உறங்கிக் கிடந்தபோது சூரியன் ஒருபோதும் உதித்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நிலவு உறங்கிய பிறகு {விடியற்காலையில்} உறங்கியதில்லை. அவர்கள் எப்போதும் {இரவில்} தயிர் மற்றும் சத்துமாவைத் தவிர்த்தனர்.(36) அவர்கள் ஒவ்வொரு காலையிலும் தெளிந்த நெய் மற்றும் பிற மங்கலப் பொருட்களைக் கண்டனர், புலன்களில் இருந்து விடுபட்டு வேதங்களை உரைத்து, பிராமணர்களுக்குக் கொடை அளித்து வழிபாடு செய்தனர்.(37) அவர்களது உரையாடல்கள் எப்போதும் அறம்சார்ந்தவையாக இருந்தன, அவர்கள் ஒருபோதும் கொடைகளை ஏற்றதில்லை. அவர்கள் எப்போதும் நடுஇறவிலேயே உறங்கச் சென்றனர், பகலில் ஒருபோதும் உறங்கியதில்லை.(38) துயரடைந்தோர், ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டோர், பெண்கள் ஆகியோரிடம் கருணை காட்டுவதில் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியடைந்தனர், மேலும் தங்கள் உடைமைகளை அனைத்தையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தும் இன்புற்றிருந்தனர்.(39) கலக்கமடைந்தோர், உற்சாகமிழந்தோர், கவலையடைந்தோர், அச்சமடைந்தோர், நோயால் பீடிக்கப்பட்டோர், பலவீனர், உடல் இளைத்தவர்கள், களவு கொடுத்தோர் மற்றும் துன்பத்திலிருப்போர் ஆகியோருக்கு அவர்கள் எப்போதும் ஆறுதலளித்து உறுதியடையச் செய்தனர்.(40)

அறவிதிகளைப் பின்பற்றிய அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்ததில்லை. அவர்கள் (நிறைவேற்றத்தகுந்த) அனைத்தை வகைச் செயல்களைச் செய்யும் நல்ல மனநிலையில் ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் வயதில் முதிர்ந்தோர் மற்றும் பெரியோருக்கு எப்போதும் பணிவிடை செய்பவர்களாக இருந்தனர்.(41) அவர்கள் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை முறையாக வழிபட்டு, இவர்களை நிறைவு செய்தபிறகு எஞ்சியவற்றையே ஒவ்வொரு நாளும் உண்டனர். அவர்கள் வாய்மை மற்றும் தங்களில் உறுதியான பற்றுடன் இருந்தனர்.(42) அவர்களில் எவரும் நல்ல உணவைத் தனியாக உண்ணவில்லை, பிறர் மனைவியரிடம் கலவியில் ஈடுபடவில்லை. தங்களிடம் கொண்டதைப் போலவே அவர்கள் பிற உயிரினங்களிடமும் கருணை கொண்டிருந்தனர்.(43) அவர்கள் ஒருபோதும் தங்கள் உயிர்வித்தை வெட்டவெளியிலோ, இழிந்த விலங்குகளிலோ, தவிர்க்கப்பட்ட கருவறைகளிலோ, புனிதமான நாட்களிலோ விட்டதில்லை {வெளியேற்றியதில்லை}.(44) அவர்கள் எப்போதும் கொடைகள், புத்திசாலித்தனம், எளிமை, நம்பிக்கைநிறைந்த முயற்சி, பணிவு, நட்பு, மன்னிக்கும் தன்மை ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவர்களாக இருந்தனர்.(45)

ஓ! பலமிக்கவனே {இந்திரனே}, வாய்மை, ஈகை, தவம், தூய்மை, கருணை, மென்மையான பேச்சுகள், நண்பர்களிடம் பகையில்லாமை ஆகிய இவை அனைத்தும் அவர்களிடம் இருந்தன.(46) குறைதூக்கம், எப்போதும் தாமதம் செய்தல், எரிச்சல், பொறாமை, முன்னறிதிறனின்மை, நிறைவின்மை, மனக்கவலை, பேராசை ஆகியவை ஒருபோதும் அவர்களைத் தாக்கியதில்லை.(47) இந்தப் பண்புகளுக்காகத் தானவர்கள் புகழ்பெற்றிருந்ததன் விளைவால் படைப்பின் தொடக்கமுதல், தொடர்ந்து பற்பல யுகங்களாக நான் அவர்களுடன் வசித்து வந்தேன்.(48) காலம் மாறியது, அந்த மாற்றம் தானவர்களின் பண்பிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அறமும், அறநெறியும் அவர்களைக் கைவிட்டுச் செல்வதையும், அவர்கள் காமம் மற்றும் கோபத்தின் வசப்படுவதையும் நான் கண்டேன்.(49) சாதனைகளில் தாழ்ந்தவர்களாக இருப்பினும்கூட, மேலான தகுதிகளைக் கொண்ட பெரியோரிடம் பகை வளர்க்கத் தொடங்கினர். மேலும் அறம் மற்றும் புண்ணியத்தைக் கொண்ட அந்தப் பெரியோர் சபைகளுக்கு மத்தியில் வைத்து முறையான காரியங்களைப் பேசும்போது அவர்களைக் கேலி பேசவும், அவர்களைப் பார்த்துச் சிரிக்கவும் தொடங்கினர்.(50)



வயதில் பெரியோர்கள் வரும்போது, இளையோர் வசதியாக அமர்ந்து கொண்டு, மரியாதையுடன் எழுந்திருந்து அவர்களை வணங்க மறுத்தனர்.(51) தந்தைமாரின முன்னிலையில் மகன்கள் (தந்தைக்கு மட்டுமே உரிய காரியங்களில்) ஆளுமையை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூலி பெறாதவர்களின் தொண்டுகளை ஏற்றுக் கொண்டு வெட்கமில்லாமல் அந்த உண்மையைச் சொல்பவர்களாக இருந்தனர்.(52) நீதியற்ற வகையில் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்து பெருஞ்செல்வத்தைத் திரட்டுவதில் வென்றவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்[2].(53) இரவு நேரத்தில் உரக்கக் கூச்சலிட்டு, அலறுவதிலும், கதறுவதிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களது ஹோம நெருப்புகள் மேல்நோக்கிய பிரகாசமான தழல்களை வெளியிடுவதை நிறுத்தின. மகன்கள் தந்தைமாரிடம் அதிகாரம் செலுத்த தொடங்கினர், மனைவியர் கணவர்களை அடக்கி ஆண்டனர்.(54) தாய்மார், தந்தைமார், வயதில் முதிர்ந்த பெரியோர், ஆசான்கள், விருந்தினர்கள், வழிகாட்டிகள் மேன்மையான நிலையில் இருந்து அதிகாரம் செய்வதை நிறுத்தினர். மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் வளர்ப்பதை நிறுத்தி அவர்களைக் கைவிடத் தொடங்கினர்.(55)

[2] "கே.பி.சிங்கா இந்தச் சுலோகத்தைத் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார்கள். கும்பகோணம் பதிப்பில், "விரோதிகளுக்கு அடிமைப்பட்டும் வெட்கமில்லாமல் புகழ்ந்து கொள்வார்கள். தர்மம்விட்டகன்றதும் இகழப்பட்டதுமான தொழிலால் மிக்கப் பொருள்களை அடைகிறவர்களான அந்த அஸுரர்களுக்கு அந்தப் பொருள்களில் அதிக ஆசையானது உண்டாயிற்று" என்றிருக்கிறது.

பிச்சையளிக்க ஒரு பகுதியைக் கொடாமலும், தேவர்களுக்குக் காணிக்கையளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியைக் கொடாமலும் அனைவரும் தங்களிடம் இருந்ததை மொத்தமாக உண்டனர். உண்மையில், வேள்விகளில் தங்கள் பொருட்களைத் தேவர்களுக்குக் கொடாமல், அவற்றைப் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள், மதிப்பிற்குரிய பெரியோர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வெட்கமில்லாமல் தங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டனர்.(56) அவர்களது சமையற்காரர்கள், மனம் செயல் மற்றும் சொல்லில் தூய்மையைக் கருத்தில் கொள்பவர்களாக இருக்கவில்லை. மூடப்படாமல் இருப்பவற்றையே அவர்கள் உண்டனர்.(57) அவர்களது தானியங்கள், காகங்களாலும், எலிகளாலும் பாழாகும்படி வயல்களில் திறந்த வெளியில் கிடந்தன. அவர்களது பால் திறந்தே கிடந்தது, உண்டபிறகு கை கழுவாமல் தெளிந்த நெய்யைத் தீண்டத் தொடங்கினர்[3].(58) அவர்களது மண்வெட்டி, சமையல் கத்தி, கூடைகள், பாத்திரங்கள், வெங்கலக் கிண்ணங்கள் மற்றும் பிற சமையலறை பொருட்கள் வீடுகளில் சிதறியிருக்கத் தொடங்கின.(59) அவர்களது இல்லத்தரசிகள் அவற்றைக் கவனிக்காமல் தவிர்ந்திருந்தனர். அவர்கள் வீடுகளையும், சுவர்களையும் மராமத்துச் செய்யாமல் இருந்தனர். விலங்குகளைக் கட்டி வைத்துவிட்டு அவற்றுக்கு உணவும் நீரும் கொடுக்காமல் இருந்தனர்[4].(60)

[3] "உச்சிஷ்டம் Uchcchishta என்றால் என்ன என்பதை இந்துவல்லாதவர்களிடம் விளக்குவது கடினம். உணவு உண்ணத் தீண்டும் போதும் கரம் உச்சிஷ்டம் ஆகிறது. தூய நீரால் அந்தக் கையைக் கழுவாமல் ஓர் இந்து எந்த வேலையையும் செய்ய மாட்டான். கொஞ்சம் உண்ட பிறகு எஞ்சியிருக்கும் உணவு உச்சிஷ்டம் ஆகும். இஃது இந்து சமயத்திற்கு மட்டுமே உரிய கருத்தாகும், உலகில் உள்ள வேறு எந்த இனங்களிலும் இது காணப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "இங்கே சொல்லப்படும் யவசம் Yavasa என்பது மேய்வதற்கான புல் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளைக் கருத்தில் கொள்ளாமல் அந்தத் தானவர்கள் தாங்களே உண்டு கொண்டிருந்தார்கள்.(61) அவர்கள் பாயசம், கிரிசரம், புலாலுணவு, காஷ்குளி {அப்பம்} ஆகியவற்றை (தேவர்களுக்காகவோ, விருந்தினர்களுக்காகவோ இல்லாமல்) தங்களுக்காகவே தயாரிக்கத் தொடங்கினர். வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சிகளையும் உண்ணத் தொடங்கினர்[5].(62) சூரியன் உதித்த பிறகும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இரவுகளையே பகலாக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய வீட்டில் இரவும் பகலும் சண்டைகளும், சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருந்தன.(63) அவர்களில் மதிக்கத்தகாதோர், மதிக்கத்தகுந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிப்பளிக்காமல் இருந்தனர். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழ்ந்த அவர்கள், அமைதியான வாழ்வை வாழவும், தெய்வீக தியானத்தில் இருக்கவும் காடுகளுக்குச் சென்றவர்களை மதிப்பதை நிறுத்தினர். அவர்களுக்கிடையில் வர்ணக்கலப்புச் சாதாரணமாக நடக்கத் தொடங்கியது. மேனி மற்றும் மனத்தூய்மை பராமரிப்பதை அவர்கள் நிறுத்தினர்.(64) வேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு அவர்கள் மத்தியில் எந்த மரியாதையும் இல்லாமல் இருந்தது. ரிக்குகளை அறியாத பிராமணர்கள் கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. {பிராமணர்களில்} மதிக்கத்தகுந்தோர், மதிக்கத்தகாதோர் ஆகிய இருவரும் சமமான வகையில் தாழ்வாகவே நடத்தப்பட்டனர்.(65)

[5] "பாயஸம் என்பது சர்க்கரை சேர்க்கப்பட்ட பாலில் அரிசியைக் கொதிக்க வைத்துச் செய்யப்படுவதாகும். கிரிசரம் என்பது பால், எள் மற்றும் அரிசி சேர்ந்தது. காஷ்குலி என்பது சர்க்கரை சேர்க்கப்பட்ட நீரில் அரிசி அல்லது கோதுமையைக் கொதிக்க வைத்துச் செய்யப்படும் ஒரு வகை அப்பமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பாயஸத்தையும் எள்ளன்னத்தையும் மாம்ஸத்தையும் அப்பங்களையும் முறுக்குகளையும் தமக்கு வேண்டி பாகம் செய்தார்கள். வீணான மாம்ஸங்களைப் புஜித்தார்கள்" என்றிருக்கிறது.

அவர்களது பணிப்பெண்கள் தீய நடத்தை கொண்டவர்களாகி, தங்க ஆபரணங்கள் மற்றும் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் இல்லங்களில் இருந்தார்கள், அல்லது அவர்களது கண் முன்பாகவே செல்வார்கள்.(66) அவர்களில் பெண்கள் ஆண்களாகவும், ஆண்கள் பெண்களாகவும் உடை உடுத்தி விளையாடி பெரும் இன்பத்தை அடையத் தொடங்கினர்.(67) அவர்களது மூதாதையரில் செழிப்புடன் இருந்தவர்கள் தகுந்த மனிதர்களுக்குச் செல்வக்கொடை அளித்தார்கள். அந்தக் கொடையாளிகளின் வழித்தோன்றல்கள், தாங்கள் செழிப்பான நிலையில் இருந்தாலும் கூட, தாங்கள் கொண்ட நம்பிக்கையின்மையால் {நாத்திக நிலைப்பாட்டால்}, அந்தக் கொடைகளைத் திரும்பப்பெறத் தொடங்கினர்.(68) எந்தக் காரியத்தையும் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கையில் ஒரு நண்பனிடம் இன்னொரு நண்பன் ஆலோசனை கேட்கும்போது, அக்காரியத்தை நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லையென்றாலும் அதை நிறுத்தினர்.(69) அவர்களில் சிறந்தோரில் கூட அடுத்தவர் செல்வத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்ட வணிக்கர்களும், வியாபாரிகளும் தோன்றினர். அவர்களில் சூத்திரர்கள் தவப்பயிற்சி செய்யத் தொடங்கினர்.(70)

அவர்களில் சிலர், தங்கள் நேரத்தையும், உணவையும் ஒழுங்கு படுத்திக் கொள்ள விதிகளை அமைக்காமலேயே கல்வியைத் தொடங்கினர். வேறு சிலர் பயனற்ற விதிகளை அமைத்துக் கொண்டு கல்வியைத் தொடங்கினர். சீடர்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாகத் தொண்டாற்றாதவர்களாக இருந்தனர். ஆசான்களும் தங்கள் சீடர்களை நட்புடன் கூடிய தோழர்களாக நடத்தத் தொடங்கினர்.(71) வேலையால் களைத்துப் போன தந்தைமாரும், தாய்மாரும் விழா கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். முதிர்வயது கொண்ட பெற்றோர், தங்கள் மகன்களால் அதிகாரத்தை இழந்து, உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.(72) அவர்களில் வேதங்களை அறிந்தவர்களும், ஒழுக்க ஆழத்தில் கடலுக்கு ஒப்பானவர்களுமான ஞானியர் கூட உழவு மற்றும் அத்தகைய பிற தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர். கல்லாதவர்கள் அறியாமை கொண்டோருமான மனிதர்கள் சிராத்தங்களில் உணவு படைக்கப்பட்டனர்[6].(73) ஒவ்வொரு நாள் காலையிலும், சீடர்கள், கடமைகள் குறித்து விசாரிப்பதற்கும், செய்ய வேண்டிய செயல்களை உறுதிசெய்வதற்கும், ஆணைகளை வேண்டி ஏற்பதற்கும் ஆசான்களை அணுகுவதற்குப் பதிலாக, அவர்களே ஆசான்களின் பணிவிடைகளை ஏற்றார்கள்.(74) மருமகள்கள், தங்கள் கணவர்களின் தாய்மார் மற்றும் தந்தைமாரின் முன்னிலையே தங்கள் பணியாட்களையும், பணிப்பெண்களையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்து, தங்கள் கணவர்களை அழைத்துப் பேசி அவர்களையும் கண்டித்தனர்.(75)

[6] "கல்லாத மனிதனுக்கு உணவூட்டும் செயலில் எந்தப் புண்ணியமும் கிடையாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தந்தைமார், தங்கள் மகன்களைப் பெருங்கவனத்துடன் நல்ல மனநிலையில் வைத்துக் கொண்டோ, அச்சத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தோ, துன்பம் மற்றும் துயரத்துடன் வாழ்ந்தனர்.(76) தீ, அல்லது கள்வர்கள், அல்லது மன்னனின் மூலம் செல்வத்தை இழந்தவர்களுடன் நட்பாயிருப்பவர்கள், அவர்களது இழப்பைக் கண்டு கேலியாகச் சிரிப்பதில் ஈடுபடத் தொடங்கினர்.(77) அவர்கள் நன்றிகெட்டவர்களாகவும், நாத்திகர்களாகவும், பாவிகளாகவும், ஆசான்களின் மனைவியருடன் கூட முறைகேடான கலவி புரியும் அடிமைகளாகவும் இருந்தார்கள். தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்களானார்கள். நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் மீறினார்கள். முன்பு அவர்களைத் தனித்துக் காட்டிய காந்தி இப்போது அவர்களிடம் இல்லாமல் போனது.(78) ஓ! தேவர்களின் தலைவா, இவற்றின் விளைவாலும், முந்தைய இயல்புக்கு முரணான பிற தீய ஒழுக்கங்களின் அறிகுறிகளினாலும், நான் இனியும் அவர்களுடன் வசிக்க மாட்டேன்.(79)



எனவே, நானே என் சொந்த விருப்பத்தின் பேரில் உன்னிடம் வந்துவிட்டேன். ஓ! சச்சியின் தலைவா, என்னை மதிப்புடன் ஏற்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் கௌரவிக்கப்படும் நான் பிற தேவர்கள் அனைவரிடமும் கௌரவத்தை அடைவேன்.(80) நான் எங்கு வசிக்கிறேனோ, அங்கே என்னுடன் இணைபிரியாதவர்களாக இருப்பவர்களும், என்னையே சார்ந்திருப்பவர்களுமான ஜெயாவை எட்டாவதாகக் கொண்ட மற்ற ஏழு தேவிகளும் வாழ விரும்புவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு {ஆசை}, நம்பிக்கை {ஸ்ரத்தை}, புத்தி {த்ருதி}, நிறைவு {க்ஷாந்தி}, வெற்றி {விஜிதி}, முன்னேற்றம் {ஸன்னதி}, மன்னிப்பு {க்ஷமை} ஆகியோராவர். ஓ பாகனைத் தண்டித்தவனே, அவர்களில் எட்டாவதாக இருக்கும் ஜெயா {விருத்தி} முதன்மையான இடத்தைப் பெறுவாள்.(82) அவர்கள் அனைவரும், நானும் அசுரர்களைக் கைவிட்டுவிட்டு உன் ஆட்சிப்பகுதிக்குள் வந்திருக்கிறோம். இனிமேல் நாங்கள், அறம் மற்றும் நம்பிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களான தேவர்களுக்கு மத்தியிலேயே வசிப்போம்" என்றாள் {ஸ்ரீ}". (83)

அந்தத் தேவி இவ்வாறு சொன்ன பிறகு, அவளை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக தெய்வீக முனிவர் நாரதரும், விருத்திரனைக் கொன்றவனான வாசவனும் மகிழ்ச்சிமிக்க வரவேற்பை அவளுக்கு அளித்தனர்.(84) அப்போது அக்னியின் நண்பனான வாயு தேவன், இனிய நறுமணங்களைச் சுமந்தபடி மென்மையாகச் சொர்க்கத்தில் வீசி அனைத்து உயிரினங்களுக்கு உற்சாகத்தை அளித்து, புலன்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளித்தான்.(85) (இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) தேவர்கள் அனைவரும் மகவத்தின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மியைக் காணும் எதிர்பார்ப்பில் ஒரு தூய்மையான, இனிய இடத்தில் கூடி அங்கேயே காத்திருந்தனர்.(86) அப்போது, ஆயிரம் கண்களைக் கொண்டவனான தேவர்களின் தலைவன், தன்னுடன் ஸ்ரீயையும், தனது நண்பரான பெரும் முனிவரையும் அழைத்துக் கொண்டு, பச்சை குதிரைகளால் இழுக்கப்பட்ட அற்புதத் தேரைச் செலுத்திக் கொண்டு, அனைவரின் மதிப்பையும் ஏற்றபடியே தேவர்களின் சபைக்கு வந்தான்.(87) எவருடைய ஆற்றலை தேவர்கள் அனைவரும் அறிவார்களோ அந்தப் பெரும் முனிவர் நாரதர், ஸ்ரீயின் அங்கீகாரத்துடன் வஜ்ரதாரி செய்த சைகையைக் கண்டு, அங்கே அந்தத் தேவியின் வரவை வரவேற்று, அது மிக மங்கலமானது என்பதை அறிவித்தார்.(88) சொர்க்கத்தின் ஆகாயம் தெளிவானதாகவும், பிரகாசமானதாகவும் இருந்து, சுயம்புவான பெரும்பாட்டனின் உலகத்தில் அமுதத்தைப் பொழியத் தொடங்கியது. தெய்வீகத் துந்துபிகள் எவராலும் முழக்கப்படாமலே முழங்கத் தொடங்கின. அடிவானின் புள்ளிக்ள அனைத்தும் தெளிவடைந்து காந்தியில் சுடர்விடுனவாகத் தெரிந்தன.(89)

இந்திரன் உரிய காலங்களில் தோன்றி பயிர்களின் மேல் மழையைப் பொழிந்தான். அறப்பாதையில் இருந்து எவரும் வழுவவில்லை. பூமி பல சுரங்கங்களால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் மற்றும் தங்கத்தாலும், வேத ஒலிகள் மற்றும் இன்னும் பிற இனிய ஒலிகளாலும் நிறைந்து, தேவர்களின் வெற்றியால் பெருகிக் கொண்டிருந்தது.(90) உறுதியான மனங்களைக் கொண்டவர்களும், நல்லோரால் நடக்கப்படும் மங்கலப்பாதையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும், வேதங்கள், அறச்சடங்குகள் மற்றும் அறச்செயல்களில் இன்பங்கொள்ளத் தொடங்கினர். மனிதர்கள், தேவர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் செழிப்புடன் உற்சாகம் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(91) காற்று தேவன் ஒரு மரத்தைப் பலமாகக் குலுக்கினாலும் அகாலத்தில் எந்த மலரும் விழாது எனும்போது, கனிகளைக்குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது. பசுக்கள் அனைத்தும் மனிதர்களால் கறக்கப்படும்போது இனிமைமிக்கப் பாலைக் கொடுக்கத் தொடங்கின. கடும் மொழிகளும் கொடுமொழிகளையும் எவரும் சொல்லவில்லை.(92) முன்னேற விரும்புபவர்கள், பிராமணர்களின் சபையை அணுகி, அனைத்து விருப்புங்களையும் அருள வல்ல தேவர்கள் அனைவரின் தலைமையில் உள்ள இந்திரனையும், ஸ்ரீயையும் புகழும் இந்தக் கதையைப் படித்தால், பெருஞ்செழிப்பை வெல்வார்கள்.(93) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே செழிப்பு மற்றும் வறுமைக்கான முதன்மையான அறிகுறிகளாகும். உன்னால் தூண்டப்பட்ட நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லப்பட்ட போதனைகளைக் கவனமாகச் சிந்தித்து அதன்படி உன்னை அமைத்துக் கொள்வதே உனக்குத் தகும்" என்றார் {பீஷ்மர்}.(94)

சாந்திபர்வம் பகுதி – 228ல் உள்ள சுலோகங்கள் : 94

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்