Tuesday, October 09, 2018

சுக்கிராச்சாரியார்! - சாந்திபர்வம் பகுதி – 290

Sukracharya! | Shanti-Parva-Section-290 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 117)


பதிவின் சுருக்கம் : சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(5)


[1] "வெள்ளி கோளே தவசி உசனஸ், அல்லது சுக்ரன் எனக் கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இவை அனைத்தையும் உண்மையில் நேர்ந்தபடியே கவனத்துடன் கேட்பாயாக. ஓ! பாவமற்றவனே, நான் கேள்விப்பட்டு, புரிந்து கொண்ட வகையிலேயே இக்காரியங்களைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன்.(6) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், அனைவராலும் கௌரவிக்கப்படுபவரும், பிருகு குலத்தின் வழித்தோன்றலுமான உசனஸ், போதுமான காரணத்திற்காகவே தேவர்களுக்கு ஏற்பில்லாதவற்றைச் செய்வதில் ஈடுபடலானார்[2].(7) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவரான அரசன் குபேரன், அண்டத்தின் தலைவனான இந்திரனுடைய கருவூலத்திற்குத் தலைவனாவான்[3].(8) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பெருந்தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, குபேரனின் உடலுக்குள் நுழைந்து, தமது யோக சக்தியால் அந்தக் கருவூலத் தலைவனின் விடுதலையை {சுதந்திரத்தை} இழக்கச் செய்து, அவனது செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்தார்[4].(9) தன் செல்வம் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்ட கருவூலத் தலைவன் {குபேரன்} மிகவும் மனம் வருந்தினான். கவலையால் நிறைந்து, கோபத்தால் தூண்டப்பட்ட அவன் தேவர்களில் முதன்மையான மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்றான்.(10)

[2] "முற்காலத்தில், தேவர்களால் தூண்டப்பட்ட விஷ்ணு, உசனஸின் தாயுடைய தலையைத் துண்டிக்கத் தன் சக்கராயுதத்தைப் பயன்படுத்தினான் என்று சொல்லி உரையாசிரியர் இந்த மறைகுறிப்பை விளக்குகிறார். எனவே, உசனஸ் தேவர்களுக்கு எதிராகக் கோபங்கொண்டு, அவர்களின் எதிரிகளான தானவர்களுக்கு ஆபத்தில் உதவி செய்ய விரும்பினார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "இந்த வாக்கியத்தின் அமைப்புமுறை மிகக் கடினமானதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில், "அளவிறந்த செல்வமுடையவனும், ராஜனென்று பெயருடையவனும் யக்ஷர்களுக்கும், ராக்ஷதர்களுக்கும் அதிபதியும் எப்பொழுதும் பிரபுத்தன்மையுள்ளவனும், பொக்கசத்திற்கும், உலகத்திற்கும் பிரபுவுமான குபேரனென் றொருவனிருக்கிறான்" என்றிருக்கிறது.

[4] "யோகவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தாங்கள் விரும்பினால் பிறரின் உடலுக்குள் நுழையும் தகுதியை அடைந்தவர்களாவர். உண்மையில், இங்கே சொல்லப்படுவது யாதெனில் குபேரன் செயல்பட முடியாத, அஃதாவது உள்ளே புகுந்திருக்கும் உடைமையாளரால் இயக்கப்படும் வகையில் தானியங்கி ஆனான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

குபேரன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களில் முதல்வனும், கடுமையானவனும், இனிமையானவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனுமான சிவனிடம் இந்தக் காரியத்தை எடுத்துரைத்தான்.(11) அவன், "உசனஸ், யோகத்தினால் ஆன்மத் தூய்மை அடைந்து {தம்மைத் தூய்மையாக்கிக் கொண்டு}, என் வடிவத்திற்குள் {உடலுக்குள்} நுழைந்து, என் சுதந்திரத்தை அபகரித்து, என் செல்வம் அனைத்தையும் அபகரித்துவிட்டார். யோகத்தின் மூலம் என்னுள் நுழைந்த அவர், பின்னர் அதைவிட்டு அகன்றுவிட்டார்" என்றான்.(12)

இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், உயர்ந்த யோக சக்திகளைக் கொண்டவனுமான மஹேஸ்வரன் சினத்தால் நிறைந்தான். ஓ! மன்னா, அவனது கண்கள் குருதிச் சிவப்படைந்து, (உசனஸைத் தாக்கி வீழ்த்துவதற்குத் தயாராக) தன் சூலத்துடன் காத்திருந்தான்.(13)

உண்மையில், அந்த முதன்மையான ஆயுதத்துடன் கூடிய அந்தப் பெருந்தேவன், "அவன் எங்கே? அவன் எங்கே?" என்று கேட்கத் தொடங்கினான்.

அதே வேளையில் மஹாதேவனின் நோக்கத்தை (தமது யோக சக்தியின் மூலம்) உறுதி செய்து கொண்ட உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, தொலைவிலேயே அமைதியுடன் காத்திருந்தார்.(14) உண்மையில், யோக சக்தியில் மேன்மையான உயர் ஆன்ம மஹேஸ்வரனின் கோபத்தை உறுதி செய்து கொண்ட உசனஸ், மஹேஸ்வரனிடம் செல்லலாமா, தப்பிவிடலாமா அல்லது இருந்த இடத்திலேயே இருக்கலாமா என்று சிந்திக்கத் தொடங்கினார்.(15) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஆன்மாவைக் கொண்ட உசனஸ், கடுந்தவங்களின் துணையுடன் மஹாதேவனை எண்ணிப்பார்த்து, மஹாதேவனின் சூல முனையிலேயே தம்மை நிறுத்திக் கொண்டார்.(16) வில் தரித்த ருத்திரன், தவங்களில் வெற்றியடைந்த உசனஸ், தூய ஞானத்தின் வடிவில் தம்மை மாற்றிக் கொண்டு, தன் சூல முனையில் இருப்பதை அறிந்து, அந்த ஆயுதத்தைத் தன் கரத்தால் வளைத்தான்.(17) அளவிலா சக்தி கொண்டவனும், கடுமையான கரங்களைக் கொண்டவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வாறு தன் சூலத்தை (வில்லின் வடிவத்தில்) வளைத்த நேரம் முதல், அந்த ஆயுதம் பிநாகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[5].(18) அந்த உமையின் தலைவன் {சிவன்}, இவ்வாறு தன் உள்ளங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பார்க்கவரை {உசனஸைக்} கண்டு, தன் வாயைத் திறந்தான். பிறகு அந்தத் தேவர்களின் தலைவன், பார்க்கவரைத் தன் வாய்க்குள் வீசி உடனே அவரை விழுங்கிவிட்டான்.(19) பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், பலமிக்கவரும், உயரான்மா கொண்டவருமான உசனஸ், மஹேஸ்வரனின் குடலுக்குள் நுழைந்து அங்கே திரியத் தொடங்கினார்" என்றார் {பீஷ்மர்}.(20)

[5] கும்பகோணம் பதிப்பில், "அளவற்ற பலமுடைய பாணியினாலே சூலமானது வளைக்கப்பட்டவுடன் உக்கிரமான ஆயுதத்தையுடைய பிரபுவானவர் சூலத்தைப் பார்த்து பிநாகமென்று சொன்னார்" என்றிருக்கிறது. "பிநாகம்" என்ற சொல்லுக்கான அடிக்குறிப்பில், "’பாணி’ என்கிற பெயரில் முதல் எழுத்தான பகாரத்தை இகாரம் சேர்த்தும், ’வளைத்தார்’ என்கிற அர்த்தமுடைய ‘அநாமயத்’ என்கிற பதத்தின் இரண்டாவது எழுத்தான் ’நா’ என்பதையும், ‘க’ என்கிற அதிக எழுத்தையும் சேர்த்து ’பிநாகம்’ என்பது" என்றுமிருக்கிறது.

யுதிஷ்டிரன், "ஓ! மன்னா, மேன்மையான புத்திமான்களில் முதன்மையானவனின் குடலுக்குள் திரிவதில் எவ்வாறு உசனஸால் வெல்ல முடிந்தது? அந்தப் பிராமணர் அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் குடலுக்குள் இருக்கையில், அவன் {அந்தத் தேவன்} என்ன செய்தான்?" என்று கேட்டான்[6].(21)

[6] "இந்த ஸ்லோகத்தின் இறுதி வரியில் உள்ள இறுதிப் பகுதியை உசனஸுக்குப் பொருந்துவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அதாவது, "சுக்கிராச்சாரியர் சிவனின் குடலுக்குள் இருக்கும் போது என்ன செய்து கொண்டார்" என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

பீஷ்மர், "பழங்காலத்தில், மஹாதேவன் (உசனஸை விழுங்கிய பிறகு) நீருக்குள் புகுந்து, பல கோடி வருடங்களுக்கு அங்கேயே அசைவில்லாமல் ஒரு மரக்கட்டையைப் போல (தியோன யோகத்தில் ஈடுபட்டு) இருந்தான்.(22) கடுமையான வகையைச் சார்ந்த அவனது யோகத் தவம் நிறைவடைந்ததும் அந்தப் பெரும் தடாகத்தில இருந்து அவன் எழுந்தான். அப்போது தேவர்களின் ஆதி தேவனான நித்தியமான பிரம்மன் அவனை அணுகி,(23) அவனது தவங்களின் முன்னேற்றத்தையும், அவனது நலத்தையும் குறித்து விசாரித்தான்.

காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன் {சிவன்}, "என் தவங்கள் நன்கு பயிலப்பட்டன" என்றான்.(24)

நினைத்தற்கரிய ஆன்மா கொண்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான சங்கரன், தன் குடலுக்குள் இருந்த உசனஸ், தன் தவங்களின் விளைவால் இன்னும் மேன்மையடைந்திருப்பதைக் கண்டான்.(25) அந்த முதன்மையான யோகி (உசனஸ்), தவங்களில் கிட்டிய செல்வம் மற்றும் (குபேரனிடம் இருந்து அபகரித்த) செல்வம் ஆகியவற்றால் வளம்பெற்று, பெருஞ்சக்தியுடன் மூவுலகங்களிலும் பிரகாசமாக ஒளிருந்து கொண்டிருந்தார்.(26) இதன் பிறகு, பிநாகைதாரியும், யோகத்தின் ஆன்மாவுமான மஹாதேவன் மீண்டும் தியான யோகத்தில் தன்னை ஈடுபடுத்தினான். எனினும், கவலையால் நிறைந்த உசனஸ் அந்தப் பெருந்தேவனின் குடலுக்குள் திரியத் தொடங்கினார்.(27) தப்பிச் செல்லும் வழியை அறிய விரும்பிய அந்தப் பெருந்தவசி, தாம் எங்கே இருந்தாரோ அங்கேயே இருந்து அந்தத் தேவனின் துதிகளைப் பாடத் தொடங்கினார். எனினும், வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்த ருத்திரன், அவர் வெளியே வருவதைத் தடுத்தான்.(28)

எனினும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பெருந்தவசியான உசனஸ், மஹாதேவனின் குடலுக்குள் இருந்தபடியே, அந்தத் தேவனிடம், "எனக்குக் கருணை காட்டுவாயாக" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.(29)

அவரிடம் {உசனஸிடம்} மஹாதேவன், "என் சிறுநீர்க்குழாயின் {சிசினத்தின்} வழியே வெளியேறுவாயாக" என்றான்.

பிறகு, தன் உடலில் இருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்தான்.(30) அனைத்துப் பக்கங்களிலும் அடைக்கப்பட்டு, வெளியேறக் குறிப்பிடப்பட்ட வழியை அறியாமல், மஹாதேவனின் சக்தியில் எரிந்தபடியே அந்தத் தவசி அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருந்தார்.(31) இறுதியாக வெளியேறும் வழியை கண்டடைந்து, அதன் வழியே வெளியேறினார். இந்தச் செய்தியின் விளைவால் அவர் சுக்கிரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இந்தச் செய்தியின் விளைவாலேயே அவர் (தமது திரிதல்களின் போக்கில்) ஆகாயத்தின் மைய புள்ளிய அடைய முடியாதவரானார்.(32) தன் குடலில் இருந்து வெளியேறி, சக்தியால் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவரைக் கண்ட பவன் {சிவன்}, கோபத்தால் நிறைந்து, சூலத்தைத் தன் கையில் உயர்த்திப்பிடித்தபடி நின்றான்.(33)

அப்போது உமாதேவி குறுக்கிட்டு உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கோபம் நிறைந்தவனுமான தன் கணவன் {சிவன்}, அந்தப் பிராமணனைக் கொல்லாதவாறு தடுத்தாள். இவ்வாறு உமை, நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து தன் தலைவனைத் தடுத்ததன் விளைவால், தவசியான உசனஸ் (அந்த நாள் முதல்) அந்தத் தேவியின் மகனானார்.(34)

தேவி {உமை}, "இந்தப் பிராமணன் இனியும் உம்மால் கொல்லத்தகுந்தவனல்ல. அவன் என் மகனாகிவிட்டான். ஓ! தேவா, உமது குடலுக்குள் இருந்து வெளியேறிய ஒருவனை உமது கரங்களால் கொல்வது தகாது" என்றாள்".(35)

பீஷ்மர் தொடர்ந்தார், "தன் மனைவியின் இவ்வார்த்தைகளால் தணிவடைந்த பவன் {சிவன்}, ஓ! மன்னா, புன்னகைத்தபடியே, "இவன் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்" என்ற இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(36) வரம் அளித்த மஹாதேவனையும், அவனது மனைவியான உமாதேவியையும் வணங்கியவரும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவருமான பெரும் தவசி உசனஸ், தாம் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்றார்.(37) ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்ட உயர் ஆன்ம பார்க்கவரின் கதையை உனக்குச் சொல்லிவிட்டேன்" {என்றார் பீஷ்மர்}.(38)

சாந்திபர்வம் பகுதி – 290ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்