Sunday, December 27, 2015

பீஷ்மரை நோக்கி விரைந்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 071

Arjuna rushed against Bhishma! | Bhishma-Parva-Section-071 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 29)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரை எதிர்த்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்ட கௌரவப்படை அஞ்சியது; சகுனியைச் சூழ்ந்த நின்ற கலிங்கனும், ஜெயத்ரதனும்; ஒருவரோடு ஒருவர் மோதிய வீரர்களின் பெயர்கள்; கள நிலவர வர்ணிப்பு; போர்க்களத்தில் குதிரைகள் மற்றும் யானைகளுக்கு நேர்ந்த கதி...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீஷ்மருடன் போரில் ஈடுபடும் தனது சகோதரர்களையும், மற்றும் பிற மன்னர்களையும் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களை உயர்த்தியபடி கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தான். பாஞ்சஜன்யத்தின் {சங்கின்} முழக்கத்தையும், காண்டீவ வில்லின் நாணொலியையும் கேட்டும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கொடிமரத்தைக் கண்டும் எங்கள் இதயங்களில் பெரும் அச்சம் புகுந்தது.


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாங்கள் கண்ட காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரம், சிங்க வால் பொறியைத் தாங்கி வானத்தில் சுடர்விடும் மலையைப் போலத் தெரிந்தது. அழகும், தெய்வீகக் கைவண்ணமும், பல்வேறு நிறங்களும் கொண்ட அது {கொடி}, மரங்களால் தடை செய்யப்படாதவாறு உதித்தெழுந்த எரிக்கோளைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில், கைப்பிடியின் பின்புறம் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், ஆகாயத்தின் மேகத்திரள்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றைப் போல அழகாகத் தெரிந்ததுமான காண்டீவத்தைப் போர்வீரர்கள் கண்டனர்.

உமது படையின் போராளிகளைக் கொல்லும்போது, அர்ஜுனன் செய்த முழக்கங்கள் இந்திரனின் முழக்கங்களுக்கு நிகரானவையாக இருந்தன. அவனது {அர்ஜுனனின்} உள்ளங்கைகளின் தட்டல்களும் அச்சத்தை ஊட்டும் வகையில் பேரொலியாக இருந்தன. பொங்கியெழும் புயலால் உதவப்பட்ட மின்னல் பொதிந்த மேகத்திரளின் முழக்கத்தைப் போலத் தனது கணை மழையைத் இடைவிடாது பொழிந்த அர்ஜுனன், திசைக்காட்டியின் பத்து புள்ளிகளையும் {பத்து திசைகளையும்} மறைத்தான்.

பயங்கர ஆயுதங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி வேகமாக விரைந்தான். அவனது ஆயுதங்களின் விளைவால் நான்கு புலன்களையும் இழந்த எங்களால் கிழக்கையும், மேற்கையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விலங்குகள் சோர்வடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, இதயங்களும் சோர்வடைந்த உமது போர்வீரர்கள் முழுமையாகக் குழம்பிப் போய் [1], ஒருவரோடு ஒருவர் நெருங்கி, உமது மகன்கள் அனைவருடன் பீஷ்மரின் பாதுகாப்பை நாடினர். அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரே அவர்களைப் பாதுகாப்பவரானார்.

[1] திசைகளை அறியாமல் குழம்பிப் போயினர் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்து கீழே குதித்தும், குதிரைப்படை வீரர்கள் தங்கள் குதிரைகளின் முதுகில் இருந்து கீழே குதித்தும், காலாட்படை வீரர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயும் என அனைவரும் பூமியில் விழ ஆரம்பித்தனர். இடியின் முழக்கத்தை ஒத்திருந்த காண்டீவத்தின் நாணொலியைக் கேட்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் உருகிப் போவது {பதுங்குவது} போலத் தெரிந்தது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காம்போஜ இனத்தின் வேகமான பெரும் குதிரைகளைக் கொண்டவனும், பெரும் கோபமானப் படையுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான கோபர்களால் சூழப்பட்டவனும், மத்ரர்கள், சௌவீரர்கள், காந்தாரர்கள், திரிகர்த்தர்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டவனுமான கலிங்கர்களின் மன்னனும் {சுருதாயுதனும்} [2], மன்னர்கள் அனைவருடன் கூடியவனும், துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட பல்வேறு இனங்களின் பெரிய படையாலும், முக்கியமான குதிரைவீரர்கள் பதினாலாயிரம் {14000} பேரால் ஆதரிக்கப்பட்டவனுமான மன்னன் ஜெயத்ரதனும், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, (சகுனியை ஆதரிப்பதற்காக) அந்தச் சுபலனின் மகனை {சகுனியைச்} சூழ்ந்து கொண்டனர்.

[2] இம்மன்னன் சுருதாயுதன் என்று பீஷ்ம பர்வம் பகுதி 16ல் குறிப்பிடப்பட்டுள்ளான்

பிறகு, அந்தப் போரில், தனித்தனி தேர்களிலும், விலங்குகளிலும் போரிட்டவர்களான பாண்டவர்கள் [3] அனைவரும் ஒன்று சேர்ந்து, உமது துருப்புகளைப் படுகொலை செய்யத் தொடங்கினர். தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரால் மேகத் திரள் போல எழுப்பப்பட்ட புழுதி, அந்தப் போர்க்களத்தை மிகப் பயங்கரமானதாக்கியது.

[3] பம்பாய் பதிப்புகளில் இங்கே பாண்டவர்கள் என்பதற்குப் பதில் அர்ஜுனம் என்று இருப்பதாகக் கங்குலி குறிப்பிடுகிறார்.

யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வேல்கள், நாராசங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களைக் கொண்டதுமான ஒரு பெரும்படையுடன் கூடிய பீஷ்மர், கிரீடம் தரித்தவனுடன் (கிரீடியான அர்ஜுனனுடன்} போரிட்டார் [4].

[4] வேறுபதிப்புகளில் இந்தப் பத்தி முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: ஓ! பாரதரே, ஒன்று சேர்ந்திருப்பவர்களான உமது தரப்பினர் அனைவரும் தனித்தனியாகப் பகுக்கப்பட்டிருக்கின்ற தேர்களோடும், வாகனங்களோடும் அர்ஜுனனை அடித்தார்கள்.

அவந்தியின் மன்னன், காசியின் ஆட்சியாளனுடனும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பீமசேனனுடனும் போரிட்டனர்.

தன் மகன்கள் மற்றும் ஆலோசகர்கள் {அமைச்சர்களுடன்} கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மத்ரத்தின் புகழ்மிக்கத் தலைவன் சல்லியனுடன் போரிட்டான்.

விகர்ணன் சகாதேவனுடனும், சித்திரசேனன் சிகண்டியுடனும் போரிட்டனர்.

மத்ஸ்யர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுடனும் சகுனியுடனும் போரிட்டனர்; துருபதன், சேகிதானன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் தன் மகன் {அஸ்வத்தாமன்} துணையுடன் இருந்த உயர் ஆன்மத் துரோணருடன் போரிட்டனர்.

கிருபர், கிருதவர்மன் ஆகிய இருவரும் திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்தார்கள்.

போர்க்களம் முழுவதும் இப்படியே, குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றின் படைகள் விரைந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன.

வானத்தில் மேகங்கள் ஏதும் இல்லையெனினும், மின்னலின் கீற்றுகள் தெரிந்தன. திசைக்காட்டியின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} புழுதியால் மூடப்பட்டன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியொலியுடன் கூடி விழும் கடுமையான விண்கற்களும் காணப்பட்டன. கடுங்காற்று வீசியது, மேலிருந்து புழுதி மழை பொழிந்தது. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் மூடப்பட்ட சூரியன் ஆகாயத்திலிருந்து மறைந்தான். புழுதியால் மறைக்கப்பட்டவர்களும், ஆயுதங்களுடன் போரிட்டவர்களுமான போர்வீரர்கள் அனைவரும் தங்கள் புலன்களை இழந்தனர் {மதிமயக்கம் அடைந்தனர்}.

கவசங்கள் அனைத்தையும் ஊடுருவிச் செல்பவையும், வீரர்களின் கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள் உண்டாக்கிய ஒலி அங்கே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசமிக்கவையும், சிறந்த கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள், வானத்திற்கு ஒளியூட்டின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் புடைக்கப்பட்ட காளைத்தோல்களிலானவையும், பல்வேறு நிறங்களிலானவையுமான கேடயங்கள், களமெங்கும் சிதறிக் கிடந்தன. சூரியப் பிரகாசம் கொண்ட வாள்கள், பட்டாக்கத்திகள் ஆகியவற்றால் வெண்டுண்ட தலைகளும், அங்கங்களும் எல்லாப்புறங்களிலும் விழுந்து கிடந்தன.

சக்கரங்கள், அச்சுக்கட்டைகள், நீடங்கள் [5] ஆகியவை ஒடிக்கப்பட்டும், நெடிய கொடிமரங்கள் வீழ்த்தப்பட்டும், குதிரைகள் கொல்லப்பட்டும், பெரிய தேர்வீரர்கள் தரையில் வீழ்ந்தனர். பல தேர்வீரர்கள் கொல்லப்பட்டவுடன், ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், (தாங்கள் பூட்டப்பட்ட) தேர்களை இழுத்துக் கொண்டே ஓடி தரையில் விழுந்தன. களத்தின் பல இடங்களில், கணைகளால் பீடிக்கப்பட்ட அற்புதக் குதிரைகள், தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வார்களுடன் சேர்த்துத் தங்கள் நுகத்தடிகளைத் தங்களுக்குப் பின்னே இழுத்தோடின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேரோட்டிகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய பல தேர்வீரர்கள், பெரும் பலம் பொருந்திய தனி யானைகளால் நசுக்கப்பட்டிருப்பதும் அங்கே காணப்பட்டது. அந்தப் போரில், பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், தங்களை ஒத்த யானைகளின் மதநீரின் மணத்தை நுகர்ந்தபடி, மீண்டும் மீண்டும் காற்றை விட்டுவிட்டு நுகரத் தொடங்கின.

[5]. நீடம் என்பது, தேர்வீரன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தேரில் ஏற்படுத்தப்பட்ட இடமாகும். இங்கே இதையே Boxes என்ற சொல்லால் கங்குலி குறிப்பிடுகிறார்.

பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட கணைகளால்} உயிர் பறிக்கப்பட்டு, தங்கள் முதுகில் மரக்கூடுகள் மற்றும் பாகன்களோடு கீழே விழுந்து கொல்லப்பட்ட யானைகள் களம் முழுவதும் பரவிக் கிடந்தன. பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், பாகன்களால் ஏவப்பட்டவையும், முதுகில் கொடிமரங்கள், போர்வீரர்கள் ஆகிவற்றைக் கொண்டவையுமான தங்களை ஒத்த பெரும் யானைகளால் நசுக்கப்பட்டுக் களத்தில் கீழே விழுந்தன. பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஐராவதம் என்றழைக்கப்படும்) யானைகளின் இளவரசனின் துதிக்கைகளை ஒத்த தங்கள் துதிக்கைகளால், பல தேர்களின் ஏர்க்கால்களைப் முறிப்பது அங்கே காணப்பட்டது.

அம்மோதலில், ஜாலர்களான பல தேர்வீரர்கள், யானைகளால் தங்கள் தேர்கள் சிதறடிக்கப்பட்டு, தங்கள் தலை மயிரில் பிடித்து இழுக்கப்பட்டு, மரத்தின் கிளைகள் போல முறித்து வடிவமற்ற திரள்களாக {பொடிகளாக} நசுக்கப்பட்டார்கள். இன்னும் பிற பெரும் யானைகளோ, பிற தேர்களோடு பிணைக்கப்பட்ட தேர்களை இழுத்துப் போட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே அனைத்துப் புறங்களிலும் ஓடின. அப்படி அந்தத் தேர்களை இழுத்துச் சென்ற யானைகள், தடாகங்களில் வளரும் தாமரைத் தண்டுகளை இழுக்கும் தங்கள் வகையைச் சேர்ந்த பிற யானைகளைப் போலவே தெரிந்தன.

இப்படியே குதிரைப் படை வீரர்களும், காலாட்படை வீரர்களும், பெரும் தேர்வீரர்களும், கொடிமரங்களும் அந்தப் போர்க்களமெங்கும் பரவிக் கிடந்தன" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Thursday, December 24, 2015

கடும்போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 070

The fierce fight! | Bhishma-Parva-Section-070 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 28)

பதிவின் சுருக்கம் : கடுமையாகப் போரிட்ட பீஷ்மர்; அங்கங்களாலும், தலைகளாலும், விலங்குகளாலும், ஆயுதங்களாலும் நிரம்பியிருந்த போர்க்களத்தின் வர்ணனை; போர்க்களத்தில் ஓடிய குருதிப் புனல்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால், உமது மகன்களைக் காக்கும் பொருட்டுக் கடுமையாகப் போரிட்டார். கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போர், தீவிர அச்சத்தை உண்டாக்குவதாகவும், பெரிய வீரர்களை அழிப்பதாகவும் இருந்தது.


இவ்வளவு கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருந்த அந்தப் போரில் எழுந்த பேரொலி வானத்தையே தொட்டது. பெரும் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், சங்கொலிகள், பேரிகை ஒலிகள் ஆகியவற்றின் விளைவால் எழுந்த ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது. வெற்றிக்காகப் போரிட்டவர்களும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான வலிமைமிக்கப் போராளிகள், மாட்டுக் கொட்டகையில் {ஒன்றையொன்று நோக்கி} முழங்கும் காளைகளைப் போல ஒருவரை ஒருவர் நோக்கி முழங்கினர்.

அந்தப் போரில், கூர்முனைக் கணைகளால் வெட்டப்பட்டு தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்த தலைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து கல்மழை விழும் தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காது குண்டலங்கள், தலைப்பாகைகள், ஒளிரும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற தலைகள் போர்க்களத்தில் கிடந்தன. பல்லங்களால் துண்டாக்கப்பட்ட அங்கங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களாலும் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

கவசம் பூண்ட உடல்களும், ஆபரணங்கள் தரித்த கரங்களும், சிவந்த கடைக்கண்களுடன் நிலவைப் போன்றிருந்த அழகிய முகங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அனைத்து அங்கங்களும், ஒரு கணத்தில், களம் முழுவதும் பரவிக் கிடந்தன. (போர்வீரர்களால் எழுப்பப்பட்ட) புழுதி, அடத்தியான மேகம் போலவும், அழிவுக்கான பிரகாசமான கருவிகள், மின்னலின் கீற்றுகள் போலவும் தெரிந்தன. ஆயுதங்களால் உண்டான ஒலி, இடியின் முழக்கத்தைப் பிரதிபலித்தது.

குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான அந்த ஆயுதங்களின் பாதை {போர்}, அங்கே இரத்த ஆறையே ஓட வைத்தது. பயங்கரமானதும்,, கடுமையானதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், அச்சந்தருவதுமான அந்தப் போரில், வீழ்த்தப்பட இயலாத க்ஷத்திரிய வீரர்கள் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர்.

உமது படையின் யானைகளும், எதிரிகளின் யானைகளும், அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்டு, உரக்க அலறி மூர்க்கத்துடன் இங்கேயும் அங்கேயும் ஓடின. கோபமுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள், அளவற்ற ஆற்றல் படைத்தவர்களான வீரர்களுடைய விற்களின் நாணொலிகள், விரலுறைகளின் மீது நாண்கயிறுகள் தட்டும் ஒலி ஆகியவற்றில் ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இரத்தத் தடாகம் போல் காட்சியளித்த களம் முழுவதிலும், தலையில்லா உடல்கள் {முண்டங்கள்} எழுந்து நிற்கவே, மன்னர்கள், தங்கள் எதிரிகளைக் கொல்லும் முனைப்புடன் போருக்கு விரைந்து ஓடினர்.

அளவிலா சக்தி கொண்டவர்களும், கனத்த தடிகளைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளாலும், ஈட்டிகளாலும், கதாயுதங்களாலும், வளைந்த வாள்களாலும் ஒருவரை ஒருவர் கொன்றனர். அங்குசம் மூலம் தங்களை வழிநடத்தும் பாகன்களை இழந்து, கணைகளால் துளைக்கப்பட்ட யானைகளளும், குதிரையோட்டிகள் இல்லாத குதிரைகளும் எல்லாப்புறங்களிலும் மூர்க்கமாக ஓடிக்கொண்டிருந்தன. ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த பல வீரர்களும், எதிரிப் படையைச் சேர்ந்த பல வீரர்களும் கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டு எம்பிக் குதித்துக் கீழே விழுந்தனர்.

பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலில், கரங்கள் மற்றும் தலைகளின் குவியல்களும், விற்கள், கதாயுதங்கள், பரிகங்கள், கைகள், தொடைகள், கால்கள், ஆபரணங்கள், கங்கணங்கள் ஆகியவற்றின் குவியல்களும் களமெங்கும் பரவிக் கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாதவையும், பெரும் உடல்படைத்தவையுமான யானைகளின் உடல்களும், குதிரைகளின் உடல்களும், தேர்களும் களம் முழுவதும் அங்கேயும், இங்கேயும் எனப் பரவிக் கிடந்தன.

விதியால் ஏவப்பட்ட க்ஷத்திரிய வீரர்கள், கதாயுதங்கள், வாள்கள், வேல்களும் மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் ஒருவரையொருவர் கொன்றனர். பெரும் வீரம் படைத்தவர்களும், போரில் சாதனை படைத்தவர்களுமான பிறர், இரும்பாலான பரிகங்களைப் {முள் பதித்த தண்டாயுதங்களைப்} போன்ற வெறுங்கரங்களால் ஒருவருடன் மற்றவர் மோதினர். உமது படையின் மற்ற பிற துணிச்சல்மிக்க வீரர்கள், பாண்டவப் படையின் போராளிகளுடன் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மடக்கப்பட்ட கைமுட்டிகளாலும் {முஷ்டிகளாலும்}, கால்முட்டிகளாலும், அறைந்து கொண்டும், குத்திக் கொண்டும் போரில் ஈடுபட்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விழுந்த மற்றும் வீழ்ந்து கொண்டிருந்தவர்கள், வேதனையில் தரையில் புரண்டு கொண்டிருந்தவர்கள் ஆகிய வீரர்களுடன் கூடிய போர்க்களம் முழுவதையும் காணப் பயங்கரமாக இருந்தது. தேர்களை இழந்த தேர்வீரர்கள், அற்புத வாள்களைப் பிடித்துக் கொண்டு, படுகொலையை விரும்பி, ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்தனர்.

கலிங்கர்களின் பெரும்படைப்பிரிவால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், பீஷ்மரைத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாண்டவர்களை நோக்கி விரைந்தான். அதே போல, விருகோதரனை {பீமனை} ஆதரித்தவர்களும், விலங்குக் கூட்டங்களைச் சொந்தமாகக் கொண்டவர்களுமான பாண்டவப் போராளிகளும், கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மரை எதிர்த்து விரைந்தனர்.


ஆங்கிலத்தில் | In English

Wednesday, December 23, 2015

ஐந்தாம் நாள் போர்த் தொடக்கம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 069

The commence of the fifth day war! | Bhishma-Parva-Section-069 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 27)

பதிவின் சுருக்கம் : போரின் ஐந்தாம் நாள் தொடக்கத்தில் கௌரவர்கள் மகர வியூகத்தையும், பாண்டவர்கள் ஸ்யேன வியூகத்தையும் அமைத்துக் கொண்டு போரைத் துவக்கியது; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; துரோணரைத் தவிர்த்த சிகண்டி; பீஷ்மரைக் காக்க சென்ற துரியோதனன்; அவரைத் தாக்க சென்ற பாண்டவர்கள்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவு கடந்து, சூரியன் உதித்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு படைகளும் போருக்காக ஒன்றையொன்று அணுகின. ஒன்றையொன்று பார்த்த அந்தப் படைகள், கோபம் தூண்டப்பட்ட மற்றொன்றை நோக்கி அதை வீழ்த்தும் விருப்பத்துடன் ஒன்றுசேர்ந்து சென்றன. உமது தீய கொள்கையின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம் பூண்ட பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க அணிவகுத்தனர்.


பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

[1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.

[2] பருந்தின் வடிவத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு பதிப்புகளில் இந்த இடத்தில், தங்கள் புரோகிதரான தௌம்யரின் வார்த்தையினால் தான் யுதிஷ்டிரன் ஸ்யேனம் போல அந்த வியூகத்தை அணிவகுத்துப் பகைவர்களின் மனங்களை நடுநடுங்கச் செய்தான் என்று இருக்கிறது.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.

அதைத் தொடர்ந்து நடந்த போரில், (கௌரவர்களின்) அந்த மகர வியூகத்தை அதன் வாய் வழியாக ஊடுருவிச் சென்ற பீமன், பீஷ்மரை அடைந்து அவரைத் தன் கணைகளால் மறைத்தான். அப்போது, பெரும் ஆற்றலைக் கொண்ட பீஷ்மர், போருக்கு அணிவகுத்திருந்த பாண்டவர்களின் வீரர்களைத் தன் வலிமைமிக்க ஆயுதங்களால் அந்தப் பெரும்போரில் குழப்பினார்.

இப்படி (பாண்டவப் படையின்) அந்தப் போராளிகள் குழப்பப்பட்ட போது, விரைந்து வந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தின் முன்னணியில் இருந்த பீஷ்மரை ஓராயிரம் {1000} கணைகளால் துளைத்தான். அம்மோதலில் பீஷ்மரால் ஏவப்பட்ட ஆயுதங்களுக்குப் பதிலடி கொடுத்த அர்ஜுனன், உற்சாகமிக்கத் தன் தனிப்பட்ட படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட மோதலுக்குத் தயாராக இருந்தான்.

அப்போது, பெருந்தேர் வீரனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் துரியோதனன், பயங்கரமாகக் கொல்லப்படும் தன் துருப்புகளைக் கண்டு, (முந்தைய நாளில்) தன் தம்பிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்து, பரத்வாஜரின் மகனை {துரோணரை} நோக்கி விரைந்து வந்து, அவரிடம், "ஓ! ஆசானே, ஓ! பாவமற்றவரே, எப்போதும் எனது நலத்தை விரும்புபவர் நீரே. உம்மையும், பாட்டனான பீஷ்மரையும் நம்பி போரில் தேவர்களையே வெற்றி கொள்வதில் ஐயமில்லை எனும் போது, சக்தியும் ஆற்றலும் அற்ற பாண்டுவின் மகன்களை வெல்வதில் என்ன இருக்கிறது?

அருளப்பட்டிருப்பீராக, பாண்டவர்கள் கொல்லப்படும் வகையில் செயல்படுவீராக. உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், சாத்யகியின் பார்வைக்கெதிரிலேயே பாண்டவ அணிவகுப்புக்குள் ஊடுருவினார். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரைச்} சாத்யகி தடுத்தான். (அதன் பேரில்), காணப் பயங்கராமன கடுமையான நிகழ்வுகளுடன் கூடிய போர் உண்டானது. இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த வரும், பெரும் ஆற்றல் படைத்தவருமான பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பத்து {10} கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} தோள்ப்பூட்டைத் துளைத்தார்.

கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணரிடம் இருந்து சாத்யகியைக் காக்க விரும்பி (பல கணைகளால்) பரத்வாஜரின் மகனைத் {துரோணரைத்} துளைத்தான்.

துரோணர், பீஷ்மர், சல்லியன் ஆகியோரும் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் பீமசேனனைத் தங்கள் கணைகளால் மறைத்தனர். இதனால் சினம்மூண்ட அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரையும் தங்கள் கூர்முனைக் கணைகாளல் துளைத்தனர்.

பிறகு, அந்தக் கடும்போரில் பெரும் வில்லாளியான சிகண்டி, பாண்டவர்களுக்கு (இப்படி) நேர்ந்ததை நினைத்துக் கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர், துரோணர் ஆகிய அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரையும் எதிர்த்து விரைந்தான். மேகங்களின் முழக்கங்களை ஒத்த நாணொலி கொண்ட தனது வில்லை உறுதியாகப் பிடித்திருந்த அந்த வீரன் {சிகண்டி}, சூரியனையே மறைக்கும்படி தன் கணைகளால் விரைவாகத் தனது எதிராளிகளை மறைத்தான். எனினும் சிகண்டிக்கு முன் வந்த பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனது {சிகண்டியின்}, பெண்பால் தன்மையை நினைவு கூர்ந்து அவனைத் {சிகண்டியைத்} தவிர்த்தார்.

பிறகு உனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அழுத்தத்தில் இருந்து பீஷ்மரைக் காக்க விரும்பி போருக்கு விரைந்தார். எனினும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரை அணுகிய சிகண்டி, யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அவ்வீரரின் {துரோணரின்} மீது கொண்ட அச்சத்தால் அவரைத் தவிர்த்தான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படையுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, பெரும்புகழை வெல்ல விரும்பி பீஷ்மரைக் காக்கச் சென்றான். வெற்றியில் தங்கள் இதயங்களை உறுதியாக நிலைக்கச் செய்திருந்த பாண்டவர்களும் அங்கே சென்றனர். பிறகு, வெற்றியையும், புகழையும் விரும்பிய அந்த இரு படைகளின் போராளிகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், தானவர்களுக்கு இடையில் நடந்த போரைப் போன்றே, கடுமையானதாகவும், உயர்ந்த அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Monday, December 21, 2015

பகவத் கீதை - முழுவதும் - தமிழில்


கிசாரி மோகன் கங்குலியின் பகவத் கீதையை நான் மொழி பெயர்க்க ஆரம்பித்த போது, கங்குலியின் வரிகளைச் சுலோகங்களாகப் பிரித்து அறிந்து கொள்வதற்காக இஸ்கான் வெளியீடான "பகவத் கீதை - உண்மையுருவில்" தெய்வத்திரு.அ.ச.பக்திவேதாந்தசுவாமி பிரபுபாதர் அவர்களின் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். வலைத்தளங்களில் தேடிய போது, www.asitis.com பிரபுபாதரின் ஆங்கில உரைகளோடு பகவத்கீதை இருந்தது. இவை இரண்டையும் கொண்டு கங்குலியின் ஆங்கில வரிகளைச் சுலோக எண்களுடன் கூடிய விளக்கங்களாகப் பிரித்தேன். அதன்படியே அவ்விரண்டு ஆக்கங்களையும் துணையாகக் கொண்டு மொழிபெயர்ப்பையும் ஆரம்பித்தேன்.


பகவத்கீதையின் மூன்றாவது பகுதியை மொழிபெயர்த்த போது http://www.sangatham.com/bhagavad_gita/ என்ற வலைத்தளம் கிடைத்தது. அதில் கீதா பிரஸ் வெளியீட்ட, ஸ்ரீஜயதயால் கோயந்தகா அவர்களின் தத்வவிவேசனீயில் இருந்து சம்ஸ்க்ருதப் பதங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுலோகத்தின் கீழே பாரதியாரின் உரையும் இருந்தது. மூன்றாவதாக இந்தத் தளத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன். பகவத் கீதையின் 15வது பகுதியை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே தொலைத்திருந்த "தத்வவிவேசனீ" கிடைத்தது. நான்காவதாக அதையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன்.

"தத்வவிவேசனீ"யையும், பாரதியாரின் மொழிபெயர்ப்பையும் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் பிரித்து வைத்திருந்த சுலோக எண்கள் ஒரு சில முரண்பட்டன. அதுவும் முதல் அத்தியாயத்திலேயே. நான் சுலோகங்களாகப் முதல் பகுதியில் பிரித்து வைத்திருந்தது 46 சுலோகங்கள் ஆகும். ஆனால் தத்வவிவேசனீ மற்றும் பாரதியாரில் 47 சுலோகங்கள் இருந்தன. சுலோக எண்களில் தத்வவிவேசனீ, பாரதியாரின் மொழிபெயர்ப்பும் ஒன்றாக இருக்கின்றன. மற்றபடி பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் பல ஆங்கிலப் பதிப்புகளில் 46 பகுதிகளே இருக்கின்றன. எனவே, நான் ஆரம்பத்தில் செய்தது போலவே சுலோகப் பிரிப்பில் இஸ்கானின் "பகவத் கீதை - உண்மையுருவில்" புத்தகத்தையே பின்பற்றியிருக்கிறேன்.

700 சுலோகங்களைச் சொல்ல 700 நிமிடம் என்றாலும் கிட்டத்தட்ட 12 மணி நேரம், அதாவது சூரியன் இருப்பதே அவ்வளவு நேரம்தானே. அதற்குள் எப்படி இது பேசப்பட்டிருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கவுரைகள் இல்லாமல் பகவத்கீதையின் வரிகளை மட்டுமே படித்தால், மொத்த பகவத் கீதையுமே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். போரென்றால், போராளிகள் சூரியன் உதிக்கும்போதே தயாராகிவிடுவார்கள். எனவே கிருஷ்ணனும், அர்ஜுனனும் இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே பேசி முடித்திருப்பார்கள். அர்ஜுனனும் முதல் நாள் போருக்கு அன்றே தயாராகியிருப்பான்.

தமிழில், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படித்தால் 3 மணி, 51 நிமிடம், 4 விநாடி நேரம் ஆகிறது.  இதையே சம்ஸ்க்ருதத்தில் படித்தால் இதைவிடக் குறைவான நேரமே தேவைப்படும். நமது பதிப்பில், பேசும் பாத்திரத்தால் சொல்லப்படும் பெயர் ஒரு முறையும், அந்தப் பாத்திரத்தின் பிரபலமான பெயர் அடைப்புக்குறிக்குள் மற்றொரு முறையும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, "புருஷரிஷப" என்ற சம்ஸ்க்ருதச் சொல், நம் மொழிபெயர்ப்பில், "ஓ மனிதர்களில் காளையே" என்று ஒரு முறையும், அடைப்புக்குறிக்குள் {அர்ஜுனா} என்று மற்றுமொரு முறையும் சொல்லப்பட்டிருக்கும். மேலும் சில, பல விளக்கங்களும் அடைப்புக்குறிகளுக்குள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மட்டுமே கூட நேரம் இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கலாம். மொழிபெயர்ப்பைப் படித்து ஒலிக்கோப்பாகவும், காணொளிக் கோப்பாகவும் பதிவு செய்த சகோதரி தேவகி ஜெயவேலன் மற்றும் வலையேற்றிய நண்பர் ஜெயவேலன் ஆகியோரின் தன்னலம் கருதாத உழைப்பால், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட முடிந்தது. அவர்களுக்கு நன்றி என்று சொல்லி, என்னில் இருந்து அவர்களைப் பிரிக்க நான் விரும்பவில்லை.

மூலமொழியின் மொழிநடை 1600 வருடங்கள் முந்தையது என்றும், பகவத் கீதை ஓர் இடைசெருகல் என்றும். சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது குறைந்தது 6000 வருடங்களுக்காவது முந்தையது என்று நம்பப்படுகிறது. புத்தர் பகவத்கீதையைப் பற்றிப் பேசவில்லை எனவே இது புத்தருக்கும் பிந்தையது என்று சிலர் சொல்கிறார்கள். பகவத்கீதையிலோ, மகாபாரதத்திலோ புத்தர் குறித்தோ, பௌத்தம் குறித்தோ பேசப்படவில்லை. அதனால் புத்தருக்கு முந்தையது என்றும் கொள்ளலாமல்லவா? இதைச் சொல்லும்போது, நான் பகவத் கீதையை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது கேட்கப்பட்ட சில கேள்விகளையும் இங்கே நினைவுகூர வேண்டும்.

இது கொலை செய்யச் சொல்லும் நூல் தானே என்று ஒருவர் கேட்டார். அவருக்கு நான் பதில் சொல்லவில்லை. இது குழந்தைத் தனமான கேள்வி. பகவத்கீதை அருளப்படும்போது அவர்கள் நின்று கொண்டிருந்தது போர்க்களத்தில். போரில் கொல்வது நீதியாகாதா? கௌரவர்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்தது எத்தனை முறை? நீதி வெல்லவும், அநீதி அழியவுமே கிருஷ்ணன் இங்கே அவர்களைப் போரிடத் தூண்டுகிறான்.

கர்மயோகத்தின்படி க்ஷத்திரியன் என்றால் போரிட்டே ஆக வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். க்ஷத்திரியர்களே நிலத்தைக் காப்பவர்களாக இருந்தார்கள். இன்றைய இராணுவ வீரரிடம் சென்று நாம் இப்படிப் பேச முடியுமா?  பாண்டவர்கள் போரைத் தடுக்க எவ்வளவோ முயன்றார்கள். துரியோதனனே போரைத் தூண்டினான். இறுதியாகத்தான் பாண்டவர்கள் போரைக் கைக்கொண்டார்கள். நாட்டைக் காப்பதே இராணுவ வீரனின் தொழில். தன் நாட்டை இழந்தும் அதை மீட்காமல் இருந்த அர்ஜுனனையே கிருஷ்ணன் போருக்குத் தூண்டுகிறான்.

போரிடவில்லை என்றால் உனக்குப் பழி வரும் என்று கிருஷ்ணன் அர்ஜுனனை மிரட்டுகிறானே, பழிக்கு அஞ்சி செயல்பட வேண்டுமா? என்று ஒருவர் கேட்டிருந்தார். இஃது அர்ஜுனனுக்கு உற்சாகமூட்ட சொல்லப்பட்ட வார்த்தை. அர்ஜுனன் போரிடாவிட்டால் நிச்சயம் கோழை என்றே சொல்லப்பட்டிருப்பான். அதன் விளைவு என்ன ஆகியிருக்கும். அவர்களுக்கு நாடும் கிடைக்காமல், ஒன்றும் கிடைக்காமல் அழிவை அடைந்திருப்பார்கள்.

இறந்தால் சொர்க்கம், வென்றால் நாடு என்கிறானே, நாட்டைச் சாக்காகக் கொண்டு பிறரைக் கொல்லலாமா? என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்குப் பதில் கேள்விதான் கேட்க முடியும். ஒருவன் மற்றவர்கள் நாட்டையெல்லாம் திருடலாமா? அப்படி ஒருவன் தன் நாட்டைத் திருடினாலும் அதைவிட்டுக் கொடுத்துவிட்டு போய்விட வேண்டுமா? நாட்டை மீட்க வேண்டும் என்றால் கொல்ல வேண்டியிருக்கிறது வேறு வழியில்லை என்றால் கொன்றுத்தான் ஆகவேண்டும்.

கீதைக்கு விளக்கவுரை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் - ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோரும், பிற்காலத்தில் பால கங்காதர திலகர், வினோபாவே, காந்தி, அரவிந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சின்மயானந்தர் ஆகியோரும் ஆவர். இதற்குமேலும் கேள்விகளைக் கொண்டிருப்பவர்கள் மேற்கண்டவர்களின் விளக்கவுரைகளையோ, கோயந்தகரின் தத்வவிவேசனீ, பிரபுபாதரின் "பகவத்கீதை உண்மையுருவில்" ஆகியோரின் நூல்களையோ நாடினால் தெளிவு பெற முடியும். நான் இங்கே செய்திருப்பது வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு மட்டுமே. ஆனாலும், முடிந்தவரை உண்மைப் பொருள் மாறாதிருக்கப் பெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். கடினமான சில இடங்களில் அடிக்குறிப்புகளையும் இட்டிருக்கிறேன்.

குருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.

பகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் மிகச் சிறப்பான அறிவாகும் என்பதையே அஃது உணர்த்துகிறது.

பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.

பொருளடக்கம்
பகுதி
எண்
பகுதியின் தலைப்பு காணொளி சுட்டி ஒலி சுட்டி நிமிட
ங்கள்
01 அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்12.29
02 கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்23.14
03 செயலில் அறம் - கர்மயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்13.33
04 அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்13.35
05 துறவின் அறம் - சந்யாசயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.47
06 தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்14.28
07 பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.33
08 பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்மயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.49
09 சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்11.23
10 தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்13.08
11 அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்20.27
12 நம்பிக்கையறம் - பக்தி யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்07.08
13 பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்12.00
14 குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.22
15 பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்08.12
16 தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்07.41
17 மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம்10.26
18 விடுதலை-துறவின் அறம் - மோஷ சந்நியாச யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்24.49

மேற்கண்ட பொருளடக்கப் பட்டியிலிலுள்ள
பகுதியின் தலைப்பு சுட்டி: வலைப்பதிவு பக்கத்திற்கு (Post) இட்டுச் செல்லும்
காணொளி சுட்டி: காணொளி புத்தக காட்சிவிரிவுக்கு (Youtube link) இட்டுச் செல்லும்
ஒலிக்கோப்பு சுட்டி: ஒலிக்கோப்பிற்கு பதிவிறக்கத்திற்கு (Audio Download) இட்டுச் செல்லும்



பரம்பொருளைக் குறித்த துல்லியமான அடிப்படை அறிவு, உயர்ந்த உண்மை, படைப்பு, பிறப்பு, இறப்பு, செயல்களின் விளைவுகள், நித்தியமான ஆத்மா, விடுதலை {முக்தி, மோட்சம்} மனித இருப்பின் இலக்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளப் பகவத் கீதையில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எனவே நண்பர்களே, கவனத்துடன் பொறுமையாகப் படிப்பீர்களாக...

நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2015, திருவொற்றியூர்


குறிப்பு: பதிவிறக்கத்திற்காகக் கொடுக்கப்படும் பிடிஎப் மற்றும் ஏனைய மின்நூல் வகைகள் இறுதியானவை அல்ல. தவறுகள் உணரப்படும்போதும், சுட்டிக்காட்டப்படும் போதும் எனத் தேவையான போதெல்லாம் பதிவுகள் திருத்தத்திற்குள்ளாகின்றன. எனவே இறுதியான பதிவுகளைப் படிக்க மேற்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆடியோ கோப்பும், வீடியோ கோப்பும் திருத்தப்படுவதில்லை.
Bhagavad Geeta EPUB

"கிருஷ்ணனிடம் அன்பு கொள்!" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 068

'Love Krishna!" Bhishma! | Bhishma-Parva-Section-068 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : முனிவர்கள் செய்த கிருஷ்ணத்துதி; கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களான பாண்டவர்களுடன் சமாதானத்துடன் இருக்கும்படி துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர்...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {துரியோதனா}, பிரம்மனாலேயே உச்சரிக்கப்பட்ட இந்தப் பாடலை என்னிடம் கேட்பாயாக. பழங்காலத்தில், இந்தப் பாடல், மறுபிறப்பாள முனிவர்களாலும், தேவர்களாலும் பூமியில் (மனிதர்களுக்குச்) சொல்லப்பட்டதாகும். {அது பின்வருமாறு}...


"தேவர்களின் தேவன் {இந்திரன்}, சாத்யர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் தலைவன் என்றும், உரிமையாளன் {ஈஸ்வரன்} என்றும், உலகங்களைப் படைத்தவனின் இயல்பை அறிந்தவரான நாரதர் உன்னை விளக்குகிறார். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் {முன்பும், இப்போதும், எப்போதும் இருப்பவன்} என்றும், வேள்விகளின் வேள்வி என்றும், தவங்களின் தவம் என்றும் மார்க்கண்டேயர் உன்னைச் சொல்கிறார். தேவர்களின் தேவன் என்றும், உனது வடிவமே விஷ்ணுவின் புராதன {ஆதி [அ] பழங்கால} வடிவம் என்றும் ஒப்பற்ற பிருகு சொல்கிறார். சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனையும், அனைத்து உயிர்களையும் நிலைநிறுத்துபவன் வசுக்களின் வாசுதேவனே என்று துவைபாயனர் {வியாசர்} சொல்கிறார்.

பழங்காலத்தில் உயிரினங்களைப் படைக்கும் நிகழ்வின் போது, படைப்பின் தந்தை தக்ஷன் என்று முனிவர்கள் உன்னைச் சொன்னார்கள். அனைத்து உயிரினங்களையும் படைப்பவன் நீயே என்று அங்கிரஸ் சொல்கிறார். வடிவமில்லா அனைத்தும் உன் உடல் என்றும், வடிவம் படைத்தவை உன் மனம் என்றும், உனது சுவாசத்தின் விளைவே தேவர்கள் அனைவரும் என்றும் தேவலர் சொல்கிறார். ஆகாயம் உனது தலைகளால் படர்ந்திருக்கிறது, உனது கரங்களோ பூமியைத் தாங்குகின்றன. உனது வயிற்றிலே மூன்று உலகங்களும் இருக்கின்றன. தவத்தால் மேன்மையுற்ற மனிதர்கள் உன்னை இப்படியே அறிகிறார்கள்.

ஆன்மாவைத் தரிசித்து மனம் நிறைந்த முனிவர்களுடன் சத்-ன் சத்-ஆக [1] இருப்பவன் நீயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தயாள மனம் கொண்டவர்களும், போரில் புறமுதுகிடாதவர்களும், உயர்வின் எல்லையாக அறநெறியைக் கொண்டவர்களுமான அரச முனிகளின் ஒரே புகலிடமாக இருப்பவன் நீயே." {பிரம்மனின் துதி இங்கு முடிகிறது}.

[1] அனைத்துப் பொருட்களிலும் உண்மையாகவே இருப்பவன் என்று பொருள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

சனத்குமாரராலும், யோகத்துடன் கூடிய பிற தவசிகளாலும் அந்த ஒப்பற்ற பரம்பொருளான ஹரி {கிருஷ்ணன்}, இப்படியே துதிக்கப்பட்டு வழிபடப்படுகிறான். ஓ! ஐயா {துரியோதனா}, கேசவனைக் {கிருஷ்ணனைக்} குறித்த உண்மை அனைத்தும், சுருக்கமாகவும், விபரமாகவும் உனக்கு இப்போது சொல்லப்பட்டது. உனது இதயத்தில் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அன்பு கொள்வாயாக" {என்றார் பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இந்தப் புனிதக் கதையைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனையும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்தப் பாண்டுவின் மகன்களையும் {பாண்டவர்களையும்} உயர்வாகக் கருத ஆரம்பித்தான்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசிய சந்தனுவின் மகன் பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, நீ கேட்டவையும், உயர் ஆன்ம கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் நரனின் மகிமை ஆகியவற்றையும் உள்ளபடியே நீ இப்போது கேட்டாய். நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும்,  மனிதர்கள் மத்தியில் தங்கள் பிறப்பை எடுத்ததின் நோக்கத்தையும் நீ கேட்டாய். அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஏன் வெல்லப்பட முடியாதவர்களாகவும், போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த வீரர்கள் ஏன் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்குமான காரணமும் உனக்குச் சொல்லப்பட்டது.

ஒப்பற்ற பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்}, கிருஷ்ணன் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான். இதற்காகவே நான், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, "பாண்டவர்களிடம் சமாதானமேற்படட்டும்" என்று சொல்கிறேன். உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, (உன்னைச் சுற்றியுள்ள) வலிமைமிக்க உனது சகோதரர்களுடன் பூமியை நீ அனுபவிப்பாயாக. தெய்வீகமான நரனையும், நாராயணனையும் அவமதித்தால், நிச்சயம் நீ அழிவையே அடைவாய்" என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது தந்தை {பீஷ்மர்} அமைதியடைந்தார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனுக்கு {துரியோதனனுக்கு} விடைகொடுத்து அனுப்பிய அவர் {பீஷ்மர்}, தனது பாசறைக்குத் திரும்பினார். ஒப்பற்ற பாட்டனை {பீஷ்மரை} வழிபட்ட மன்னனும் {துரியோதனனும்} தனது பாசறைக்குத் திரும்பினான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த இரவை உறக்கத்தில் கழிக்கத் தன்னைத் தனது வெண்படுக்கையில் கிடத்திக் கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Sunday, December 20, 2015

"கிருஷ்ணனே பரம்பொருள்!" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 067

'Krishna is the Supreme Being!" Bhishma! | Bhishma-Parva-Section-067 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 25)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குக் கிருஷ்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பீஷ்மர்...

துரியோதனன் {பீஷ்மரிடம்}, "அனைத்து உலகங்களிலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள் {மஹாபூதஸ்வரூபி} எனச் சொல்லப்படுகிறான். ஓ! பாட்டா {பீஷ்மரே}, அவனது {கிருஷ்ணனது} தோற்றத்தையும் {ஆகமத்தையும்}, மகிமையையும் {பிரதிஷ்டையையும்} நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.


பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள். தேவர்கள் அனைவரின் தேவன் அவன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட {புண்டரீகாக்ஷனான} அவனுக்கும் மேன்மையானவன் எவனும் காணப்படவில்லை. கோவிந்தனை {கிருஷ்ணனை}, அற்புதம் நிறைந்தவன் என்றும், மிக உயர்ந்தவன் என்றும் அனைத்துமானவன் என்றும், ஆத்மத்திரள் என்றும், உயர்ந்த ஆன்மா என்றும், பரம புருஷன் என்றும் மார்க்கண்டேயர் சொல்கிறார்.

நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய மூன்றையும் படைத்தவன் அவனே. உலகங்கள் அனைத்தின் தலைவனான அந்தத் தெய்வீக உரிமையாளனே இந்தப் பூமியைப் படைத்தான். ஒப்பற்ற ஆன்மா கொண்ட அந்தப் பரம்பொருள் தன்னை நீரில் கிடத்தி {சயனம்} கொண்டான். அனைத்து வகைச் சக்திகளாலான அந்தப் பரம்பொருள் {சர்வதேவஸ்வரூபி}, அங்கே யோகத்துயில் கொண்டான்.

தன் வாயிலிருந்து நெருப்பையும், சுவாசத்தில் இருந்து காற்றையும் உண்டாக்கினான். மங்கா மகிமை கொண்ட அவன் தன் வாயிலிருந்து பேச்சையும், வேதங்களையும் உண்டாக்கினான். இப்படியே முதலில் அவன் உலகங்களையும், தேவர்களையும், பல்வேறு வகையான முனிவர்களையும் படைத்தான். பிறகு அவன் அனைத்து உயிர்களின் சிதைவையும், மரணத்தையும், பிறப்பையும், வளர்ச்சியையும் படைத்தான்.

அறமும் அவனே, அற ஆன்மாவும் அவனே. வரங்களையும், (நமது) விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவன் அவனே. செயல்படுபவனும், செயலும் அவனே. தெய்வீக உரிமையாளன் அவனே. முன்பே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் படைத்தவன் அவனே; அண்டத்தைப் படைத்தவன் அவனே. ஒப்பற்ற ஆன்மா கொண்டவன் அவனே; மங்கா மகிமை கொண்ட உரிமையாளன் அவனே.

அனைத்து உயிர்களுக்கும் முன்பு பிறந்த சங்கர்ஷணனைப் படைத்தவன் அவனே. மலைகளுடன் கூடிய உலகத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனும், அனந்தன் என்று அறியப்படுபவனுமான தெய்வீக சேஷனைப் படைத்தவன் அவனே. பரமசக்தி படைத்த அவனையே மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} தங்கள் யோகத் தியானத்தின் மூலம் அறிகிறார்கள். அவனது செவிகளின் சுரப்பில் {அழுக்காக இருக்க வேண்டும்} இருந்து {கர்ணமலத்திலிருந்து} உதித்தவனும், கடுமையானவனும் கொடுஞ்செயல்கள் புரிபவனும், மது என்ற பெயரால் அறியப்பட்டவனுமான பெரும் அசுரன், பிரம்மனை அழிக்க முயன்ற போது அந்தப் பரம்பொருளால் கொல்லப்பட்டான். ஓ! ஐயா {துரியோதனா}, அந்த மது படுகொலை செய்யப்பட்டதன் விளைவாகத் தேவர்கள், தானவர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோர், ஜனார்த்தனனை மதுசூதனன் {மதுவைக் கொன்றவன்} என்று அழைக்கிறார்கள்.

வராக அவதாரம்
பெரும் பன்றி {வராகம்} அவனே. பெரும் சிங்கம் {நரசிம்மம்} அவனே. மூன்று அடி தலைவன் {குள்ளன் -வாமனன்} அவனே. அனைத்து உயிர்களின் தாயும் தந்தையும் அவனே.

நரசிம்ம அவதாரம்
தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவனுக்கு மேலானவன் எவனும் இருந்ததில்லை, இனியும் இருக்க மாட்டான்.




வாமன அவதாரம்
ஓ! மன்னா {துரியோதனா}, தன் வாயிலிருந்து பிராமணர்களைப் படைத்தவன் அவனே; தன் இரு கைகளில் இருந்து க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளிலிருந்து,  வைசியர்களையும் படைத்தவன் அவனே. தன் கால்களில் இருந்து சூத்திரர்களைப் படைத்தவனும் அவனே.

கடமையுணர்வுடன் அவனுக்காகக் காத்திருந்து, நோன்புகள் நோற்று முழு நிலவிலும் {பௌர்ணமியிலும்}, புது நிலவிலும் {அமாவாசையிலும்} தியானிக்கும் ஒருவன், பிரம்மம் மற்றும் யோகத்தின் சாரமானவனும், வடிவம் கொண்ட உயிரினங்கள் அனைத்துக்கும் புகலிடமாக இருப்பவனுமான அந்தத் தெய்வீகக் கேசவனை நிச்சயமாக அடைவான் [1]. கேசவன், உயர்ந்த சக்தி வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும் ஆவான். ஓ! மன்னா {துரியோதனா}, முனிவர்கள் அவனை ரிஷிகேசன் (புலன்களின் தலைவன்) என்று அழைக்கிறார்கள். அவனை ஆசானாகவும், தந்தையாகவும், உரிமையாளனாகவும் அனைவரும் அறிய வேண்டும்.

[1] வேறு பதிப்பில் இந்த வரி வேறு விதமாக இருக்கிறது. அது பின்வருமாறு: தவத்தில் நிலைபெற்றவனும், ஒளியுள்ளவனும், அனைத்துயிர்களுக்கும் ஆதாரமானவனும், அமாவாசையில் பிரம்மரூபியாகவும், பௌர்ணமியில் யோகரூபியாகவும் இருக்கும் கேசவனை வழிபடுபவன் அதிக நன்மையை அடைவான்.

எவனிடம் கிருஷ்ணன் மனநிறைவு கொள்கிறானோ, அவனால் அழியாத (அருள்) உலகங்கள் வெல்லப்படுகிறது. அச்சந்தரும் இடத்தில் கேசவனின் பாதுகாப்பை நாடுபவனும், இந்த விளக்கத்தைப் படிப்பவனும் மகிழ்ச்சியை அடைந்து அனைத்து செழிப்புகளையும் அடைவான். கிருஷ்ணனை அடைந்த மனிதர்கள் எவரும் வஞ்சிக்கப்பட்டதில்லை. பெரும் பயங்கரங்களில் மூழ்கிவிட்டவர்களை எப்போதும் காப்பவன் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} ஆவான்.

ஓ! பாரதா {துரியோதனா}, உள்ளபடி இதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், தன் முழு ஆன்மாவுடன், பூமியின் தலைவனும், யோகத்தின் தலைவனும், உயர்வான அருள் நிறைந்தவனுமான கேவசனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடியிருக்கிறான்" {என்றார் பீஷ்மர்}.


ஆங்கிலத்தில் | In English

"கிருஷ்ணன் மனிதனா?" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 066

'Is Krishna a human?" Bhishma! | Bhishma-Parva-Section-066 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 24)

பதிவின் சுருக்கம் : பிரம்மனின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு; வந்தது யார் என்று பிரம்மனிடம் தேவர்கள் கேள்வி; கிருஷ்ணனின் பெருமைகளைச் சொல்லும் பிரம்மன்; கிருஷ்ணனின் பெருமைகளைத் துரியோதனனுக்குச் சொல்லும் பீஷ்மர்...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அப்போது, உலகங்களின் தலைவனான அந்த ஒப்பற்ற தேவன் {நாராயணன்} மென்மையான மற்றும் ஆழமான குரலில், "யோகத்தின் மூலம், ஓ! ஐயா {பிரம்மனே}, உன்னால் விரும்பப்படும் அனைத்தும் என்னால் அறியப்பட்டது. நீ விரும்பியது போலவே நடக்கும்" என்று சொல்லி அங்கேயே மறைந்து போனான்.

பிறகு, பெரும் வியப்பால் நிறைந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் பிரம்மனிடம் ஆவலுடன், "ஓ! தலைவா {பிரம்மரே}, ஒப்பற்றவரான உம்மால் பணிவுடன் வணங்கப்பட்டவனும், இத்தகு உயர்ந்த வார்த்தைகளால் புகழப்பட்டவனுமான அவன் யார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளால் மறுமொழியாக, "தத் என்று அழைக்கப்படுபவன் எவனோ, உயர்ந்தவன் எவனோ, இப்போதும், எப்போதும் இருப்பவன் எவனோ, பரமாத்மா எவனோ, உயிரினங்களின் ஆன்மா எவனோ, பெருந்தலைவன் எவனோ, தேவர்களில் காளைகளே, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனான அவனிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். அண்டத்தின் நன்மைக்காக, மனித குலத்தின் மத்தியில், வசுதேவன் குடும்பத்தில் பிறப்பெடுக்கும்படி, அந்த அண்டத்தின் தலைவன் {நாராயணன்} என்னால் வேண்டப்பட்டான்.


நான் அவனிடம் {பிரம்மனாகிய நான் நாராயணனிடம்}, "அசுரர்களின் படுகொலைக்காக மனிதர்களின் உலகில் உன் பிறப்பை எடுப்பாயாக" என்றேன். போரில் கொல்லப்பட்டவர்களும், கொடுமையான வடிவமும், பெரும் பலமும் கொண்டவர்களுமான அந்தத் தைத்தியர்களும், ராட்சசர்களும் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருக்கிறார்கள். உண்மையில், ஒப்பற்றவனும், வலிமைமிக்கவனுமான தலைவன் {நாராயணன்}, மனிதக் கருவறையில் பிறந்து, நரனின் துணையுடன் பூமியில் வாழ்வான். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போரிட்டாலும் கூட, புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான அந்த நரனையும், நாராயணனையும் வீழ்த்த இயலாது.

அளவிலா பிரகாசம் கொண்ட முனிவர்களான அந்த நரனும், நாராயணனும் மனிதர்களின் உலகில் ஒன்றாகப் பிறப்பெடுக்கும்போது மூடர்கள் அவர்களை அறியமாட்டார்கள். எவனுடைய ஆன்மாவில் இருந்து, முழு அண்டத்தின் தலைவனும், பிரம்மனுமான நான் உதித்தேனோ, உலகங்கள் அனைத்தின் தலைமை தெய்வமான அந்த வாசுதேவன், உங்கள் துதிகளுக்குத் தகுந்தவனாவான். தேவர்களில் சிறந்தவர்களே, பெரும் சக்தி கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனுமான அவன், வெறும் மனிதன் என்று எப்போதும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.

தலைமையான புதிர் {பரமரகசியம்} அவனே, தலைமையான புகலிடம் அவனே, தலைமையான பிரம்மம் அவனே, தலைமையான மகிமை அவனே. சிதைவில்லாதவன், தோற்றமில்லாதவன், நித்தியமானவனும் அவனே. யாராலும் புரிந்துகொள்ளப்பட முடியாத அவனே, புருஷன் என்றும் பாடப்படுகிறான். தலைமையான சக்தி என்றும், தலைமையான மகிழ்நிலை என்றும் தேவ தச்சன் {விஸ்வகர்மா} அவனைப் பாடியிருக்கிறான்.

எனவே, இந்திரனைத் தங்கள் தலைமையாகக் கொண்ட தேவர்களோ, அசுரர்கள் அனைவருமோ, அளவிலா ஆற்றல் படைத்த தலைவன் வாசுதேவனை, அவன் ஒரு மனிதன்தானே என ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. வெறும் மனிதன்தானே ரிஷிகேசன் என்று பேசி அலட்சியம் செய்யும் மூட அறிவு கொண்டவன் இழிந்தவன் என்று அழைக்கப்படுவான்.

அந்தத் தெய்வீகமானவனை, படைக்கப்பட்டவையான அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆன்மாவானவனை, (தன் மார்பில்) மங்கலகரமான சக்கரத்தைத் {ஸ்ரீவத்சம் என்ற மறுவைத்} தாங்கியிருப்பவனை, திகைப்பூட்டும் பிரகாசம் கொண்டவனை, தன் நாபியில் (பழங்காலத்} தாமரை உதித்தவனைக் குறித்து அறியாத ஒருவன் மக்களால் இருளில் மூழ்கியவன் {தமோ குணம் கொண்டவன்} என்று சொல்லப்படுகிறான். கிரீடத்தையும், கௌஸ்துப ரத்தினத்தையும் தரித்தவனும், தன் நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அவனை அவமதிப்பவன் அடர்த்தியான இருளில் {கோரமான அந்தகாரத்தில்} மூழ்குகிறான். தேவர்களில் சிறந்தவர்களே, இந்த உண்மைகள் அனைத்தையும் முறையாக அறிந்த அனைவராலும், உலகங்களின் தலைவனான அந்த வாசுதேவன் துதிக்கப்பட வேண்டும்" என்றான் {பிரம்மன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "பழங்காலத்தில், தேவர்களிடமும், முனிவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்ன ஒப்பற்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பித் தன் வசிப்பிடம் திரும்பினார். பிரம்மனால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரசுகள் ஆகியோர் மகிழ்ச்சியால் நிறைந்து சொர்க்கத்திற்குத் திரும்பினார்கள்.

ஓ! ஐயா {துரியோதனா}, பண்பட்ட ஆன்மா கொண்ட, முனிவர்களின் சபையில் பழமையானவனான வாசுதேவனைக் குறித்த இவை என்னால் கேட்கப்பட்டன. மேலும், ஓ! சாத்திரங்களை நன்கறிந்தவனே {துரியோதனா}, ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமர்}, பெரும் அறிவு கொண்ட மார்க்கண்டேயர், வியாசர் மற்றும் நாரதர் ஆகியோரிடம் இருந்தும் நான் இதைக் கேட்டிருக்கிறேன்.

இவை யாவற்றையும் அறிந்தும், ஒப்பற்ற வாசுதேவனே நித்தியமான தலைவன் என்றும், உலகங்கள் அனைத்தின் தலைமையான தெய்வம் என்றும், பெரும் உரிமையாளன் என்றும், எவனில் இருந்து பிரம்மன் உதித்தானோ அவனே என்றும், அண்டத்தின் தகப்பன் என்றும் கேட்டும், மனிதர்களால் வாசுதேவன் ஏன் துதிக்கப்படவும், வழிபடப்படவும் கூடாது? ஓ! ஐயா {துரியோதனா}, "வில்தரித்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டவர்களிடமும் ஒருபோதும் போருக்குச் செல்லாதே" என்று பண்பட்ட ஆன்மாக்களை உடைய முனிவர்களால் முன்பே தடுக்கப்பட்டும், மடமையினால் அஃது உன்னால் புரிந்து கொள்ளப்படவில்லை.

எனவே, நான் உன்னைக் கொடிய ராட்சசன் என்றே கருதுகிறேன். இதுதவிரவும், இருளில் {தமோ குணத்தில்} நீ மூழ்கியிருக்கிறாய். இதனால் தான் நீ கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வெறுக்கிறாய். மனிதர்களின் மத்தியில் வேறு யார்தான் தெய்வீகமான நரனையும், நாராயணனையும் வெறுப்பார்கள்? இதனால் தான், ஓ! மன்னா {துரியோதனா}, அவன் {கிருஷ்ணன்} நித்தியமானவன் என்றும், மங்காதவன் என்றும், அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவன் என்றும், மாற்றமில்லாதவன் என்றும், ஆட்சியாளன் என்றும், அனைத்தையும் படைத்துத் தாங்குபவன் {காப்பவன்} என்றும், உண்மையான இருப்பு என்றும் நான் உனக்குச் சொல்கிறேன்.

மூன்று உலகங்களையும் தாங்குபவன் அவனே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைமைத் தேவன் அவனே, பெரும் உரிமையாளன் அவனே, போராளி அவனே, வெற்றி அவனே, வெல்பவனும் அவனே, மேலும் இயற்கை அனைத்தின் தலைவனும் அவனே. ஓ! மன்னா {துரியோதனா}, நற்குணம் {சத்வ குணம்} நிறைந்தவனும், மேலும், இருள் {தமோ} மற்றும் பேராசையின் {ராஜச} குணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டவனும் அவனே.

கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அங்கே அறம் {தர்மம்} இருக்கும்; அறம் எங்கிருக்குமோ அங்கே வெற்றியிருக்கும். அவனது {கிருஷ்ணனுடைய} யோக மகிமையாலும், அவனது ஆன்ம யோகத்தாலுமே, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் ஆதரிக்கப்படுகின்றனர். எனவே, வெற்றி என்பது, நிச்சயம் அவர்களுடையதே. நீதியுடன் கூடிய அறிவையும், போரில் பலத்தையும் பாண்டவர்களுக்கு எப்போதும் அளிப்பவன் அவனே {கிருஷ்ணனே}; மேலும், ஆபத்துகளில் இருந்து எப்போதும் அவர்களைப் பாதுகாப்பவனும் அவனே {கிருஷ்ணனே}.

அனைத்துயிர்களில் ஊடுருவியிருப்பவனும், அருளுடன் எப்போதும் இருப்பவனுமான அவனே நித்திய தேவனாவான். நீ எவனைக் குறித்துக் கேட்டாயோ, அவன், வாசுதேவன் {கிருஷ்ணன்} என்ற பெயரால் அறியப்படுகிறான். தங்களுக்கெனத் தனித்துவமான பண்புகளைக் கொண்ட பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், தங்கள் தனிப்பட்ட கடமைகளை ஆற்றி, ஒடுங்கிய இதயங்களுடனும் பணிவுடனும் அவனையே சேவித்து வழிபடுகிறார்கள். துவாபர யுக முடிவின் நெருக்கத்திலும், கலி யுகத் தொடக்கத்திலும் அர்ப்பணிப்புள்ள பக்தர்களால் சங்கர்ஷணனுடன் {பலராமனுடன்} சேர்த்துப் பாடப்படுபவன் அவனே. யுகத்துக்குப் பின் யுகத்தையும், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகங்களையும், கடலால் சூழப்பட்ட நகரங்கள் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் படைத்தவன் வாசுதேவனே {கிருஷ்ணனே}" {என்றார் பீஷ்மர்}.

இந்தப் பகுதி விஸ்வோபாக்யானம் என்று அழைக்கப்படுகிறது.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்