Tuesday, February 04, 2020

மனம் நிறைந்த நிறைவு விழா


முழுமஹாபாரதம் மொழிபெயர்ப்புப் பணி இந்தப் பொங்கல் நாளுக்கு முன்பு (14.1.2020) நிறைவடைந்தது. இரண்டே நாட்களில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். விழாவுக்கு நிச்சயம் நண்பர் ஜெயவேலன் அவர்களையும் அழைத்து வருமாறு சொன்னார். நாங்கள் சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் செய்திருந்தனர்.



நானும், ஜெயவேலன் அவர்களும் 31.1.2020 அன்று மாலை புறப்பட்டு அன்று இரவே கோவையை அடைந்தோம். உடன் திரு.ஜா.ராஜகோபால் அவர்களும் வந்திருந்தார். பொதுவாகவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்தவர்கள் உலக இலக்கியங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். இவர் அவர்களில் முதன்மையானவர். ரயிலில் ஜாஜா அவர்களுடன் மஹாபாரதம் குறித்தும், பல்வேறு கருத்துகள் குறித்தும் உரையாடி வந்தது மனத்துக்கு உற்சாகமாக இருந்தது. எங்களை வரவேற்று அழைத்துச் செல்ல திரு.செந்தில் அவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். நாங்கள் தங்குவதற்கு விஜய் பார்க் இன் விடுதியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். ஜாஜா திரு.செந்தில் அவர்களுடன் சென்றார்.

அடுத்த நாள் 1.2.2020 காலை முதல் மாலை வரை நல்ல ஓய்வு. மாலை 4.30 மணிக்கு வந்து விழா அரங்கிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார்கள். சொன்ன நேரத்திற்குச் சரியாக வாசலில் அழைப்பு மணி கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தால் எதிரே ஜெயமோகன் அவர்களே நின்று கொண்டிருக்கிறார். சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அது தந்தது. ஜெயமோகன் அவர்களுடன் திரு. டைனமிக் நடராஜன் அவர்களும் எங்களை விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விடுதியிலேயே இருந்து என்னுடனும், ஜெயவேலன் அவர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தார். ஜெயவேலன் கிட்டத்தட்ட ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் பெரும்பான்மையானவற்றைப்  படித்தவர். இருப்பினும் அது குறித்து அவருடன் ஒன்றும் பேசாமல் தன்னடக்கத்துடன் அமர்ந்திருந்தார்.

என் மனைவி லட்சுமி, சித்தி மற்றும்  நண்பர்கள் மூவர் ஆகியோர் காலையில் புறப்பட்டு மதிய வேளையில் கோவையை வந்தடைந்து ரயில் நிலையம் அருகிலேயே ஒரு விடுதியில் அறைகளெடுத்துத் தங்கியிருந்தனர். உண்மையில் அவர்களை அழைத்து வரும் எண்ணம் எனக்கு இல்லை. என் சித்தி சிறு வயது முதல் என்னை வளர்த்தவர். இந்தப் பாராட்டு விழாவை நிச்சயம் பார்க்க வேண்டுமென விரும்பினார். அதை அப்போதுதான் அந்தத் தகவலை ஜெயமோகன் அவர்களிடம் சொன்னேன். முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? என்று அவர் கடிந்து கொண்டார்.

பிறகு என்னையும், ஜெயவேலனையும் ஜெயமோகனும், டைனமிக் நடராஜனும் அவர்கள் வந்த மகிழுந்திலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். விழா தொடங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பே அரங்கை அடைந்தோம்.

என்னுடைய சித்தி, மனைவி லட்சுமி மற்றும் நண்பர்களும் அரங்கிற்கு வந்துவிட்டனர். ஜெயமோகன் அவர்களிடம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். நண்பர் திரு.தாமரைச்செல்வன் அவர்களும் வந்திருந்தார். விழாவுக்கு வந்தவர்களுக்கெனச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. ஏற்கனவே விஷ்ணுபுரம் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதால் அங்குக் கடைப்பிடிக்கப்படும் படைமுகாமுக்குரிய ஒழுங்கை அறிவேன். விழா சரியான நேரத்திற்குப் பாரதியின் பாடலுடன் தொடங்கியது. திரு.செல்வேந்திரன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மற்ற மஹாபாரதங்களுக்கும், முழுமஹாபாரதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளையும், இதற்கு முன்பு செய்யப்பட்ட முழுமையான மஹாபாரத மொழிபெயர்ப்புகளுக்கு ஆன செலவுகளையும், அவற்றுக்குக் கிடைத்த பொருளாதார ஆதரவுகளையும், அதற்கு அவர்கள் அடைந்த துன்பத்தையும் அரங்கிலுள்ளோர் அனைவருக்கும் அறிமுகம் செய்தார்.

கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயாகாகோ திரு.சுப்ரமணியம் அவர்கள் தமது அனுபவத்தில் இந்தியா முழுவதும் மஹாபாரதம் எவ்வாறு உணரப்படுகிறது என்பதைச் சொல்லி தலைமையுரை வழங்கினார். தொழிலதிபர் திரு.டி.பாலசுந்தரம் அவர்கள் கும்பகோணம் மஹாபாரத மொழிபெயர்ப்பு குறித்தும், நமது முழுமஹாபாரதம் குறித்தும் தகவல்கள் பலவற்றையும் சுவைபட எடுத்துரைத்தார். எழுத்தாளர் திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் 2013 முதலே முழுமஹாபாரதத்தைத் தொடர்ந்து பாராட்டி வருபவர். நமது முழுமஹாபாரதத்தில் இருந்து யக்ஷப்ரஸ்னம், நகுஷன் கேள்வி பதில் ஆகிய பகுதிகளை எடுத்து வாசித்து அந்த மொழியின் எளிமையையும், மூலத்தோடு நெருங்கிய அதன் மொழிபெயர்ப்பையும் எடுத்துரைத்தார். அவருடைய அருகாமையும், ஆசிகளும் பெரும் ஊக்கமளித்தன. அடுத்து எழுத்தாளர் திரு.ஜா.ராஜகோபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது போல இவரது இனிமையான உரையில் ஈர்க்கப்படாதவர்கள் வேறு எதனிலும் ஈர்ப்படையமாட்டார்கள். முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு மட்டுமன்றி அதையொட்டி நம் தளத்தில் இருக்கும் சில ஆய்வுகளையும், முக்கியச் சுட்டிகளையும் அறிமுகம் செய்தார். எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் இந்த மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தைக் குறித்தும், இந்த வலைத்தளம் எவ்வாறெல்லாமல் பிற்காலத்தில் மேலதிக தகவல்களுக்குக் களஞ்சியமாக விளங்கும் என்பதையும் தன் இயல்பான ஆழத்துடன் சொன்னார். அனைவரும் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களையும் பாராட்டிப் பேசினர்.

நான் ஏற்புரை வழங்கினேன். ஏற்புரையின் முடிவில் அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் செய்தது மெய்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

வானவராயர், நாஞ்சில்நாடன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், மேனாள் மேகாலயா ஆளுநர் வி.ஷண்முகநாதன், கோவை கொடிஷியா புத்தகக் கண்காட்சி அமைப்பாளர் சௌந்தரராஜன், காலப்பிரதீப் சுப்ரமணியன் [லயம்] என முதன்மையான பலர் அரங்கில் இருந்தனர். சென்னையிலிருந்து கல்கி உதவியாசிரியர் அமிர்தம் சூரியா உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள். ஜெயமோகன் அவர்கள் புத்தர் சிலையொன்றை நினைவுப்பரிசாக அளித்தார்.

பாண்டிச்சேரி விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்தவர்கள் வெள்ளிப்பதக்கம் பொறிக்கப்பட்ட வாழ்த்துப்பலகையை நினைவுப்பரிசாக அளித்தனர். என்னைத்தூக்கி வளர்த்த சித்தி அருகில் இருந்தது நெகிழ்வாக இருந்தது. சொற்களால் சொல்லமுடியாத இன்பம் அஃது. எங்கள் வீட்டில் இப்படிப்பட்ட பாராட்டு விழாக்களைக் கண்டவர்கள் யாரும் இல்லை. சித்திக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. கண்களில் கண்ணீர் துளிர்க்கும் அளவுக்கு. நண்பர் ஜெயவேலன் அவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இறுதி நிகழ்வாக திரு. டைனமிக் நடராஜன் அவர்கள் நன்றியுரை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.

விழா நிறைவடைந்ததும், இரவு உணவு தயாராக இருந்தது. இரவு 10.30க்கு ரயில். மீண்டும் சென்னையை அடைந்தோம். எங்கள் அனைவரின் மனங்களும் நிறைந்திருந்தன.

நிறைவுவிழா புகைப்படங்கள்

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா - ஜெயமோகன் 

‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்

 




*********

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…


அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி


அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி


அருட்செல்வப்பேரரசன் அந்திமழை பேட்டி


 *********