Sunday, May 05, 2013

வாழ்வின் நான்கு நிலைகள்| ஆதிபர்வம் - பகுதி 91

Four modes of life! | Adi Parva - Section 91 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 27)

பதிவின் சுருக்கம் : வாழ்வின் நான்கு நிலைகள், முனிவர்களின் வகைகள் ஆகியவற்றைப் பற்றி யயாதியிடம் கேட்டு அறிந்து கொண்ட அஷ்டகன்...

அஷ்டகன், "வாழ்வின் நான்கு நிலைகளான, கிருஹஸ்தம், பிக்ஷூ, பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் எப்படி நடந்து கொண்டு அறத்தகுதிகளை அடைய வேண்டும் என்பதில் வேதத்தை அறிந்தவர்கள் வேறு பட்டு இருக்கிறார்களே!" என்று கேட்டான்.(1)

யயாதி, "பிரம்மச்சாரிகள் பின்வருமாறு செயல்பட வேண்டும். தனது குருவின் வசிப்பிடத்தில் தங்கி, அந்தக் குருவின் கட்டளைப்படி பாடம் கற்க வேண்டும். குருவின் கட்டளைக்காகக் காத்திராமல் அவரது குறிப்புணர்ந்து சேவை செய்ய வேண்டும். குரு உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் முன்பு அவன் விழித்துவிட வேண்டும். குரு உறங்கச் சென்ற பிறகே அவன் உறங்கச் செல்ல வேண்டும். அவன் எளிமையானவனாக, தனது உணர்ச்சிகளைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, அமைதியுடனும், விழிப்புடனும் படிப்புக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெற்றியடைய முடியும்.(2)



பழமையான உபநிஷத்தில்[1] இவையெல்லாம் சொல்லப்பட்டுள்ளன. கிருஹஸ்தன் (இல்லறவாசி), நேர்மையான, நியாயமான வழிகளில் செல்வம் ஈட்ட வேண்டும். அவன் வேள்விகள் செய்ய வேண்டும்.  அவன் எப்போதும் ஏதாவது தானம் தர வேண்டும். தனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களை அன்போடு உபசரிக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும், அதில் சிறுபகுதியையேனும் மற்றவனுக்குக் கொடுக்காமல் தானே எடுத்துக் கொள்ளக் கூடாது.(3)

[1] கும்பகோணம் பதிப்பில், "இது க்ருஹஸ்தனைப் பற்றிய பழைமையாகிய ரஹஸ்யமான சாஸ்திரம்" என்று சொல்லப்படுகிறது.

ஒரு முனிவன், கானகங்களைத் தேடாமல், தனது சக்தியை மட்டுமே நம்பி, எல்லாத் தீய காரியங்களிலிருந்தும் விடுபட வேண்டும். அவன் ஏதாவது தானம் செய்ய வேண்டும். எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. அப்போதுதான் அவன் தனது வழியில் வெற்றியை அடைவான்.(4)

உண்மையான பிக்ஷூ என்பவன், தனது செயல்களினால் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல்  எண்ணற்ற சாதனைகள் செய்திருக்க வேண்டும். அவன் தனது உணர்ச்சிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.  உலக நிகழ்வுகளில் இருந்து அவன் தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஓர் இல்லறவாசியின் கூரைக்குக்கீழே படுத்துறங்கக் கூடாது. அவன் மனைவியைக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவன் சிறிது தூரத்தைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும்.(5)

நாட்டின் பெரும்பகுதிகளில் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். உலகம் சம்பந்தமான தனது கடமைகளை முடித்த கற்றவன், வானப்பிரஸ்த வாழ்வுமுறையைத் (உலகத்தைத் துறந்து, காட்டில் வசிப்பது) தேர்ந்தெடுக்க வேண்டும். இன்பங்களுக்கான தனது பசியைக் குறைத்துக் கொண்டு, செல்வம் சேர்ப்பதில் விருப்பத்தைத் தவிர்த்து வர வேண்டும். இந்த வாழ்வுமுறையை அனுசரித்து வரும்போது இறந்து போகும் மனிதன், தனது பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் தெய்வீகத் தன்மையடையச் செய்கிறான்" என்று பதிலுரைத்தான்.(6,7)

அஷ்டகன், "எத்தனை வகையான முனிவர்கள் (பேசாநோன்பை நோற்பவர்களாக) இருக்கிறார்கள்?" என்று கேட்டான்.(8)

யயாதி, "முனிவன் என்பவன், ஒன்று கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் {கிராமம்} இருக்க வேண்டும். அல்லது அவன் வாழுமிடத்தில் வசித்தாலும், அருகில் கானகம் இருக்க வேண்டும்" என்றான்.(9)

அஷ்டகன், "முனிவன் என்றால் என்ன? {காட்டில் வாழும்போது வாழுமிடம் சம்பந்தமானவற்றையும், வாழுமிடத்தில் இருக்கும்போதும் காடு சம்பந்தமானவற்றையும் ஒருவனால் எவ்வாறு அடைய முடியும்?}" என்று கேட்டான்.(10)

யயாதி, "ஒரு முனிவன், அனைத்து உலகப் பொருட்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, கானகத்தில் வசிக்கிறான். வாழுமிடங்களில் இருக்கும் பொருட்கள் தன்னைச் சூழாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் முனிவன், தேவைப்படும்போதும் அவையனைத்தும் தனது தவ மகிமையால் பெறுவான்.(11)

அவன் கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் இருக்க வேண்டும். உலகப் பொருட்களையெல்லாம் துறந்த ஒரு அறிவுள்ளவன், ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு துறவியாக வாழ்கிறான். அவன் தனது குலப்பெருமையையோ, பிறப்பு அல்லது கல்வியின் பெருமையையோ காண்பித்துக் கொள்ளக்கூடாது. அவன் குறைந்த அளவு ஆடை உடுத்திக்கொண்டு, அதையே ஆடம்பரமாகக் கருத வேண்டும். அவன் தனது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கே உண்ண வேண்டும்.(12,13)

அப்படிப்பட்ட மனிதன் வாழிடத்தில் வசித்தாலும், கானகத்தில் வசித்ததற்குச் சமமே. அப்படிப்பட்ட மனிதன், தனது உணர்ச்சிகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பேசா நோன்பு {மௌன விரதம்} நோற்று, தன்னை எல்லாச் செயல்களிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, விருப்பங்களைத் துறந்து வெற்றியை அடைகிறான்.(14)

அறம் அனுமதித்த போதும், தூய்மையான உணவை மட்டுமே உண்டு, அடுத்தவர்களுக்கு எப்போதும் தீங்கிழைக்காமல், எப்போதும் சுத்தமான இதயங்கொண்டு, துறவு நிலை கொண்டு, ஆசைகளைத் துறந்து இருக்கும் மனிதனை நாம் ஏன் மதிக்கக்கூடாது?(15)

தவங்களால் மெலிந்து, சதை, எலும்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவை சுருங்கி அவன் இந்த உலகத்தையும், உயர்ந்த உலகங்களையும் வெற்றி கொள்கிறான்.(16)

ஒரு முனிவன் யோகத் தியானத்தில் அமரும்போது, மகிழ்வும், துயரமும், மதிப்பும், அவமதிப்பும் அவனுக்கு ஒன்றாகிப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையை அடைந்த அவன், இந்த உலகத்தை விட்டு, பிரம்மத்துடன் ஒருங்கிணைந்து இன்பமடைகிறான். (17)

ஒரு முனிவன், (தாயின் மடியில் உறங்கும் குழந்தையைப் போல) எதையும் எதிர்பார்க்காமல், எந்த மகிழ்ச்சியும் அடையாமல் பசுவைப் போலவோ, பிற விலங்குகளைப் போலோ உணவை உண்டால், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவைப் போல அவன் மொத்த அண்டத்துடனும் அடையாளம் காணப்பட்டு, முக்தியை அடைகிறான்" என்றான் {யயாதி}.(18)


ஆங்கிலத்தில் | In English