Saturday, May 04, 2013

மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது? | ஆதிபர்வம் - பகுதி 90

What happens after man's death, and before his birth? | Adi Parva - Section 90 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 26)

பதிவின் சுருக்கம் : புண்ணியம் குறைந்தவர்கள் பூமியில் விழுவார்கள்; பொருளில்லாதவனை உலகம் மதிக்காது; நான்கு கால் உயிரினங்கள் பிறக்கும் முறை; மனிதர்கள் பிறக்கும் முறை; இறந்த மனிதன் செல்லும் உலகங்கள்; நல்லுலகங்கள் மற்றும் தீய உலகங்களையும் மனிதன் அடையும் காரணம் ஆகியவற்றை அஷ்டகனுக்கு விளக்கிய யயாதி...

அஷ்டகன், "நினைத்த உருவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து, கோடி வருடங்கள் நந்தனத்தில் இருக்கும் நந்தவனத்தில் வாழ்ந்துள்ளீர். ஓ கிருத யுகத்தின் புகழ்வாய்ந்தவர்களில் முதன்மையானவரே! நீர் எப்படி அந்தப் பகுதியிலிருந்து துரத்தப்பட்டு இங்கு வந்தீர்?" என்று கேட்டான்.(1)



யயாதி, "உறவினர்களும், நண்பர்களும், சொந்தங்களும் எப்படி ஒரு மனிதனை இந்த உலகத்தில் கைவிடுகிறார்களோ, அப்படியே அவர்களது செல்வமும் கைவிட்டுப் போகும். அடுத்த உலகத்தில், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் நாம் அறத்தை இழக்கும்போது நம்மைக் கைவிடுகிறார்கள்" என்றான்.(2)

அஷ்டகன், "எப்படி அடுத்த உலகத்தில் நாம் அறத்தை இழக்கமுடியும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன். ஓ மன்னா! பேரான்மாக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அறிந்தவர் நீர் என்பது எனக்குத் தெரியும். என்ன செயல்புரிந்தால், எந்த உலகத்தை அடையலாம் என்பதையும் எனக்குச் சொல்லும்" என்றான்.(3)

யயாதி, "ஓ பக்தியுள்ளவனே, தங்கள் தற்பெருமையையே பேசிக் கொண்டிருப்பவர்கள் பௌமா என்ற நரகத்தில் வீழ்ந்து தண்டிக்கப்படுவார்கள். என்னதான் மெலிந்திருந்தாலும் அவர்கள் பூமியில் வளர்ந்து (மகன்கள் மற்றும் பேரன்கள் வகையில்) கழுகுகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்கும் உணவாக மாறுவர்.(4) எனவே, ஓ மன்னா {அஷ்டகா}, பெரிதும் கண்டிக்கத்தக்க களங்கமுள்ள தீயவர்கள் அடக்கப்பட வேண்டும். ஓ மன்னா, உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். நான் இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றான்.(5)

அஷ்டகன், "வாழ்வில் முதுமை அடைந்து அழிந்துபோகும்போது, கழுகுகளும், மயில்களும், பூச்சிகளும், புழுக்களும் மனித உடலை உண்கின்றன. அப்போது அந்த உடலில் இருந்த மனிதன் எங்கிருக்கிறான் (அவை உண்ணும்போது)? அவன் எப்படி மறுபடியும் பிறக்கிறான்? பௌமா என்ற நரகைப் பற்றிப் பூமியில் நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றான்.(6)

யயாதி, "உடல் அழிந்த பிறகு, மனிதன், தனது செயல்களுக்கேற்ப, மறுபடியும் ஒரு தாயின் கருவறைக்குள் புகுகிறான். அவன் அங்கேயே தெளிவில்லாத உருவுடன் இருக்கிறான். தெளிவான உருவடைந்து, பின்பு காணும்படியான தோற்றத்தை அடைந்து உலகில் தோன்றி, பூமியின் பரப்பில் நடக்கிறான். அவன் எங்கே விழுகிறானோ அதுதான் பூமியில் நரகமாகும் (பௌமா). வாழ்வின் முடிவை அவன் காண்பதில்லை. அதனால் அவன் அந்த அடிமைத்தளையை அறுப்பதில்லை.(7) சிலர் தேவலோகத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்கின்றனர், சிலர் எண்பது ஆண்டுகள் வாழ்கின்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் கீழே விழுகின்றனர். அப்படி அவர்கள் விழும்போது, ராட்சத உருவில் இருக்கும் மகன்கள், பேரன்கள், உறவினர்கள் ஆகியோரால் தாக்குண்டு தங்களது இதயத்திலிருந்து விலகி தங்கள் அடிமைத்தளைகளை அறுப்பதில்லை" என்றான்.(8)

அஷ்டகன், "என்ன பாவத்திற்காக சொர்க்கத்தில் இருந்து விழும்போது, கூர்மையான பற்கள் கொண்ட ராட்சசர்களால் தாக்கப்படுகிறார்கள்? ஏன் அவர்கள் முழுவதுமாக அழிவதில்லை? அவர்கள் எப்படி ஒரு கருவறைக்குள் புலனுணர்வுகளுடன் புகுகின்றனர்?" என்று கேட்டான்.(9)

யயாதி, "சொர்க்கத்தில் இருந்து விழுந்தவுடன், நுண்ணியப் பொருளாக நீரில் கலக்கிறான். இந்த நீரே உயிர் வித்தான விந்தணுவாகிறது. பிறகு பெண்மைக்கான காலத்தில் ஒரு தாயின் கருவறைக்குள் புகுகிறது. அங்கே அது கருவாக வளர்கிறது. பிறகு, மலரிலிருந்து கனி உருவாவது போல், காணும் தோற்றம் கொண்ட வடிவத்தைப் பெறுகிறது. மரங்கள், செடிகள், மற்ற காய்கறிவகைகள், நீர், காற்று, பூமி, ஆகாயம், ஆகியவற்றில் இதே உயிர்நீராக இருந்து, நான்கு கால் விலங்கினங்களாகவும், இரண்டு கால் விலங்கினங்களாகவும் உருவாகிறது. இதுதான் அனைத்து உயிர்களுக்கும் நேர்கிறது" என்றான்.(10,11)

அஷ்டகன், "நான் எனது சந்தேகங்களைக் கேட்கிறேன். அவற்றை எனக்குச் சொல்வீராக. கருவறை நுழைந்து, மனித வடிவை அடையும் ஓர் உயிர், எப்படி ஒரு ஒரு வடிவத்தையோ, வேறு வடிவத்தையோ அடைகிறது? தனித்தன்மை வாய்ந்த உருவமும், கண்களும், காதுகளும், நினைவும் எப்படிக் கிடைக்கிறது? ஓ தந்தையே, நீர் பேரான்மாக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அறிந்தவர். எனவே, என்னால் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலைச் சொல்லும்" என்றான்.(12,13)

யயாதி, "ஓர் உயிரானது, ஒருவனது செயல்களின் தகுதிக்கேற்ப, உயிர்வித்துக்குள் நுண்ணிய வடிவங்கொண்டு, மறுபிறப்பின் காரணத்திற்கான சுற்றுப்புற சக்திகளால் ஈர்க்கப்பட்டு, கருவறைக்குள் விழுகிறது. அங்கே அது குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்கிறது.(14) முதலில் அது கருவாகிறது, பிறகு வெளிப்புற உறுப்புகள் வளர்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் அந்தக் கருவறையைவிட்டு வெளியே வந்து, மனிதனாகி, தனது காதுகளால் ஒலியை உணர்கிறது. தனது கண்களால் நிறத்தையும், வடிவத்தையும் உணர்கிறது; தனது மூக்கால் மணத்தையும், தனது நாவால் சுவையையும், தனது முழு உடலால் தொடுதல் உணர்வையும், தனது மனதால் கருத்துகளையும் உணர்கிறது. ஓ அஷ்டகா, இப்படியே நுண்ணியச் சாறு கண்கள் காணும் உடலாக வளர்கிறது" என்றான்.(15,16)

அஷ்டகன், "மரணத்திற்குப் பிறகு, உடல் எரிக்கப்படுகிறது. அல்லது அழிக்கப்படுகிறது. முழுவதுமாக அழிக்கப்பட்ட பிறகு, என்ன நியமத்தால் (கொள்கையால்) ஒருவன் புத்துயிர் பெறுகிறான்?" என்று கேட்டான்.(17)

யயாதி, "ஓ மன்னர்களில் சிங்மே! இறக்கும் மனிதன் ஒரு நுண்ணிய வடிவைக் கொள்கிறான். தனது செயல்களைக் கனவு போல் நினைவில் கொள்கிறான், பிறகு அவன் வேறு உருவத்திற்குள் காற்றைவிட வேகமாக வடிவம் மாறுகிறான்.(18) நற்குணமிக்கவர்கள் உயர்வான வடிவையும், தீயவர்கள் கீழ்மையான வடிவையும் அடைகிறார்கள். தீயவர்கள் புழுக்களாகவும், பூச்சிகளாகவும் ஆகிறார்கள். வேறேதும் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.(19) ஓ தூய பெரும் ஆன்மாவே! உயிரினங்கள் எவ்வாறு பிறக்கின்றன, கருவில் வளர்ந்து, பிறகு நான்கு கால்கள், ஆறு கால்கள் அல்லது இன்னும் அதிகமாகக் கால்களுடைய உயிரினங்களாக எப்படி ஆகின்றன என்பதைச் சொல்லிவிட்டேன். நீ என்னிடம் வேறு என்ன கேட்கப் போகிறாய்?" என்றான்.(20)

அஷ்டகன், "ஓ ஐயா! மனிதர்கள் பூமிக்குத் திரும்பாத அளவுக்கு உயர்ந்த உலகங்களை எப்படி அடைகிறார்கள்? ஆன்மிகத்தாலா அல்லது ஞானத்தாலா? ஒருவன் படிப்படியாக எப்படிப் பாராட்டப்படும் உயர்ந்த உலகங்களை அடைய முடியும்? இதற்கு முழுமையாகப் பதிலளியுங்கள்" என்றான்.(21)

யயாதி, "மனிதர்கள் சொர்க்கத்தில் நுழைவதற்கு அவர்கள் ஏழு வாயில்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஞானமுள்ளோர் சொல்கிறார்கள். துறவு (ஆன்மிகம்), தயவு, அமைதியான மனம் (மன அமைதி), சுய கட்டளை, அடக்கம், எளிமை, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு ஆகியவையே அவை. கர்வத்தால் ஒருவன் இவையனைத்தையும் இழக்கிறான் என்று ஞானமுள்ளோர் சொல்கிறார்கள்.(22) ஞானத்தைப் பெற்றுக் கொள்பவன் தன்னைத் தானே கல்விமானாக நினைத்துக் கொள்கிறான். அந்தக் கல்வியால் மற்றவர்களை மதிக்காமல் இருக்கிறான். அப்படிப்பட்டவன் போற்றப்படும் அழிவில்லாத உலகங்களை அடைய முடியாது. அந்த வகை ஞானம் உள்ள ஒருவன் பிரம்மத்தை அடைய முடியாது.(23)

கல்வி, குறைவாகப் பேசும் தன்மை, நெருப்பு முன்பு வழிபாடு, வேள்விகள் ஆகிய இந்த நான்கும் ஒருவனது அச்சத்தை விலக்கவல்லனவாகும்.  இருப்பினும், செருக்கு கலப்பின், பயம் விலகுவதற்குப் பதில், அஃது அதிகரிக்கும்.(24) ஞானமுள்ளோர் மதிக்கப்படும்போது உவகையும், அவமதிக்கப்படும்போது துன்பமும் அடையக்கூடாது. ஞானமுள்ளோர் மட்டும் மற்றுமொரு ஞானமுள்ளவரை மதிப்பார். தீயவர்களால் நல்லொழுக்கம் உள்ளவர்கள் போல நடந்து கொள்ள முடியாது. நான் நிறையக் கொடுத்திருக்கிறேன் - நான் நிறைய வேள்விகளைச் செய்திருக்கிறேன் - நான் நிறையக் கற்றிருக்கிறேன் - நான் நிறைய நோன்புகளைக் கடைப்பிடித்திருக்கிறேன் என்பன போன்ற கர்வங்களே அச்சங்களின் வேர்களாகும். எனவே, நீ அது போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடாது.(25) உன்னைப் போன்ற நற்குணமிக்க கற்றவர்கள், மாற்றமில்லாத, பிறப்பு இறப்பற்ற பிரம்மத்தை மட்டுமே துணையாகக் கருதி; இகத்திலும் பரத்திலும் நிரந்தர அமைதியைப் பெறுகிறார்கள்" என்றான்.(26)


ஆங்கிலத்தில் | In English