Monday, July 08, 2013

வாரணாவதம் கிளம்பினர் பாண்டவர்கள் - ஆதிபர்வம் பகுதி 145

Pandava's set for Varanavata | Adi Parva - Section 145 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : வாரணாவதத்தில் நடக்கும் திருவிழாவையும், அதனை அழகையும் வர்ணித்த அமைச்சர்கள்; பாண்டவர்களின் ஆவல் தூண்டப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரனன் அவர்களை அங்கே சென்றுவரச் சொன்னது; பாண்டவர்களை வாழ்த்திய பெரியவர்கள்; வாரணாவதம் புறப்பட்ட பாண்டவர்கள்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இளவரசன் துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து, மக்களுக்குச் செல்வங்களும், மரியாதைகளும் கொடுத்து அவன் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தான்.(1) அதே நேரத்தில், திருதராஷ்டிரனால் உத்தரவுகள் கொடுக்கப்பட்ட சில புத்திசாலி சபை அங்கத்தினர்கள் {அமைச்சர்கள்}, ஒரு நாள், வாரணாவதம் என்ற நகரத்தின் அழகைப்பற்றி வர்ணிக்கத் தொடங்கினர்.(2) அவர்கள், "வாரணாவதத்தில் வரவிருக்கும் பசுபதி (சிவன்) திருவிழாவைப் பற்றிக் கூறினர். அத்திருவிழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் பெரியதும்,(3) அதன் நிகழ்வு உலகத்திலேயே மிக உற்சாகமானதும் மகிழ்ச்சிகரமானதும் ஆகும். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நகரம், பார்வையாளர்களின் இதயங்களையும் வசீகரிக்கிறது" என்றனர். இவ்வாறே திருதராஷ்டிரனால் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்த அமைச்சர்கள் அந்நகரத்தைக் {வாரணாவதத்தைக்} குறித்துப் பேசினர்.(4) அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இனிமையான நகரத்திற்குச் செல்ல பாண்டவர்களும் விரும்பினர்.(5)


பாண்டவர்களின் ஆவல் தூண்டப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட அம்பிகையின் மைந்தன் {திருதராஷ்டிரன்} அவர்களிடம்,(6) "இந்த மனிதர்கள் வாரணாவதம் தான் உலகத்திலேயே மிக மகிழ்ச்சிகரமான நகரம் என்று என்னிடம் எப்போதும் சொல்கிறார்கள்.(7) எனவே, குழந்தைகளே, வாரணாவதத்தில் நடக்கும் திருவிழாவைக் காணும் ஆவல் உங்களுக்கு இருந்தால், உங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும் அங்கே சென்று தேவர்களைப் போல மகிழ்ச்சியாக இருப்பீராக.(8) அங்கே பிராமணர்களுக்கும், (அங்கே கூடியிருக்கும்) இசைக் கலைஞர்களுக்கும் முத்துக்களையும், ரத்தினங்களையும் அளிப்பீராக.நீங்கள் விரும்பும்வரை அங்கே தேவர்களைப் போல சில காலம் மகிழ்ச்சியாக விளையாடிய பிறகு ஹஸ்தினாபுரம் திரும்புங்கள்" என்றான்".(9,10)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "திருதராஷ்டிரனின் நோக்கங்களை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டாலும், தான் பலவீனமாக இருப்பதைக் கருதிய அவன், மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான்.(11) அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், அறிவுள்ள விதுரன், துரோணர், பாஹ்லீகர், கௌரவரான சோமதத்தர், கிருபர், அஸ்வத்தாமன், பூரிஸ்ரவஸ், மற்ற சபை உறுப்பினர்கள், பிராமணர்கள் மற்றும் துறவிகள், புரோகிதர்கள் மற்றும் குடிமக்கள், சிறப்புமிகுந்த காந்தாரி ஆகியோரிடம் யுதிஷ்டிரன், மெதுவாகவும், எளிமையாகவும், "திருதராஷ்டிரர் உத்தரவின் பேரில் நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூடிய நாங்கள், மக்கள் கூட்டம் நிறைந்ததும், மகிழ்ச்சி நிறைந்ததுமான வாரணாவதத்திற்குச் செல்கிறோம்.(15) நாங்கள் வளமை அடையவும், பாவங்கள் எங்களை அணுகாதிருக்கவும் எங்களை வாழ்த்துவீராக" என்றான்.(16)

பாண்டுவின் மூத்த மகன் இப்படிக் கேட்டுக் கொண்டதும், கௌரவத் தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக அவர்களை வாழ்த்தி, "பாண்டுவின் மைந்தர்களே, உங்கள் வழியெங்கும் அனைத்துக் கூறுகளும் (ஐம்பூதங்களும்) உங்களுக்கு நற்பேற்றை அளிக்கட்டும். சிறு தீமையும் உங்களை அணுகாதிருக்கட்டும்" என்றனர்.(17,18)

பாண்டவர்கள், (தங்கள் பங்கு) நாட்டை அடைய நல்லெண்ணங்களை உண்டாக்கும் சிலச் சடங்குகளைச் செய்துவிட்டு, தங்கள் தயாரிப்புகளை முடித்துக் கொண்டு வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச்சென்றர்.(19)




ஆதிபர்வம் பகுதி 145ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English