Friday, September 20, 2013

எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15

Eighty six kings in Jail! | Sabha Parva - Section 15 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்...

யுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}" நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை.(1) தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவதற்கரியதாகும்.(2) மற்றவர்களின் ஆற்றலையும், பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் புகழத்தகுந்தவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான்.(3) விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும் மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பல்வேறு வகையாகவும் விரிவானவையாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய். தன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே செழிப்புண்டாகிறது. நான் இந்த வேள்வியைச் செய்தால், உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன்.(5)



ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பெரும் சக்தியும் புத்திகூர்மையும் கொண்ட இந்தக் {குரு} குலத்தில் பிறந்தவர்கள், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களில் ஒருவன் க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாக வருவான் என்று கருதுகின்றனர்.(6) ஆனால், ஓ மேன்மை மிக்கவனே, ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} தீய குணத்தால் நாங்களும் அவனுக்குப் பயந்தே இருந்தோம். ஓ போர்க்களத்தில் ஒப்பற்றவனே {கிருஷ்ணா}, உனது பலம் வாய்ந்த கரமே எனக்குப் பாதுகாப்பு. நீயே ஜராசந்தனின் பலத்துக்கு அஞ்சினால், நான் எவ்வாறு என்னை அவனுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்?(7,8) ஓ மாதவா {கிருஷ்ணா}, ஓ விருஷ்ணி குலத்தவனே, ஜராசந்தன் உன்னாலோ, ராமனாலோ {பலராமனாலோ}, பீமசேனனாலோ, அர்ஜுனனாலோ கொல்லப்படக்கூடியவனா? இல்லையா? என்று நினைக்கும்போதே நான் மிகுந்த துயர் கொள்கிறேன். ஆனால், நான் என்ன சொல்வேன், ஓ கேசவா {கிருஷ்ணா}? அனைத்திலும் நீயே எனது உயர்ந்த அதிகாரம்" என்றான் {யுதிஷ்டிரன்}.(9,10)

இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், பேச்சில் வல்லவனுமான பீமன், "கடும் முயற்சியற்ற ஓர் அரசனோ, ஆதரவற்ற பலவீனமான மன்னனோ, ஒரு பலசாலியுடன் பகைமை கொண்டானெனில், மலைபோன்ற எறும்புப்புற்று அழிவடைவது போல அழிவான்.(11) இருப்பினும், தனது விழிப்புணர்வாலும், கொள்கைகளைச் சரியாகப் பயன்படுத்துவதாலும் பலவீனமான மன்னன், பலமான மன்னை வீழ்த்தி, தனது ஆசைகளின் கனிகளை {பலன்களை} அடைவதையும் நாம் காணத்தான் செய்கிறோம்.(12) கிருஷ்ணனிடம் கொள்கையும் {வியூகமும்}, என்னிடம் {பீமனிடம்} பலமும், அர்ஜுனனிடம் வெற்றியும் இருக்கிறது. எனவே, வேள்வியில் சாதிக்கப்படும் மூன்று நெருப்பைப் போல, நாம் மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்கு} மரணத்தை ஏற்படுத்தலாம்" என்றான் {பீமன்}.(13)

அப்போது கிருஷ்ணன், "புத்திமுதிராதொருவன், பிற்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதைக் கருதாமல், தனக்கு வேண்டிய ஆசையின் கனிகளை எதிர்பார்க்கிறான். தனது நலனில் அக்கறையுள்ள யாரும், ஒரு புத்தி முதிரா எதிரியை நினைத்து விட்டுக்கொடுப்பதில்லை.(14) கிருத யுகத்தில், யுவனாஸ்வனின் வரிகளை விலக்கியும், பகீரதன் தனது குடிகளிடம் அன்பாக இருந்தும், கார்த்தவீரியன் தனது தவ சக்தியாலும், தலைவன் பரதன் தனது பலம் மற்றும் ஆற்றலாலும், மருத்தன் செழிப்பாலும் என இந்த ஐவரும் முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மாமன்னர்கள் {சக்கரவர்த்திகள்} ஆனார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனால், ஓ யுதிஷ்டிரரே, மாட்சிமையில் விருப்பம் கொண்டு அதை ஏற்கும் தகுதி கொண்ட நீர், வெற்றி, மக்களைக் காத்தல், அறம், வளமை, கொள்கை ஆகிய அனைத்துக் குணங்களிலும் ஒன்றிலும் குறையில்லாமல் இருக்கிறீர்.(15-17)

ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, பிருஹத்ரதன் மகனான ஜராசந்தனும் அதே {உம்மைப் போன்ற} குணங்களுடனே இருக்கிறான். நூறு குலங்களைச் சேர்ந்த அரசர்களும் ஜராசந்தனை எதிர்க்கத் திராணியற்று இருக்கின்றனர்.(18) எனவே, அவன் {ஜராசந்தன்}, தனது பலத்தால் மாமன்னாக மதிக்கப்படத் தகுதியானவனே. நகைகளை அணிந்த மன்னர்கள் ஜராசந்தனை (நகைகளைப் பரிசாகக் கொடுத்து) வழிபடுகிறார்கள். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து தீயவனாக இருக்கும் அவன் {ஜராசந்தன்} அந்த வழிபாடுகளால் நிறைவடையவில்லை.(19,20) அனைவருக்கும் முதன்மையானவன் ஆனதால், தலையில் மகுடன் {கிரீடம்} கொண்ட அனைத்து மன்னர்களையும் அவன் தாக்குகிறான். அவனுக்கு {ஜராசந்தனுக்குக்} கப்பம் கட்டாத எந்த மன்னனையும் நாம் காண முடியவில்லை.(21)

இப்படியே கிட்டத்தட்ட நூறு மன்னர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, பலவீனமான ஏகாதிபதிகள் அவனுடன் பகைமை கொள்ள எப்படித் துணிவார்கள்?(22) ஓ பாரத குலத்தவரே {யுதிஷ்டிரரே}, சிவனின் ஆலயத்துக்குள் பலியாகும் வேறு விலங்குகள் பலவற்றைப் போல அவனுக்காக {ஜராசந்தனுக்காக} அத்தேவனுக்கே பலியாகப் போகும் அந்த ஏகாதிபதிகளின் மனவேதனையைத் தூண்டும் பெருந்துயரம் எவ்வாறு இருக்கும்?(23) போரில் இறக்கும் க்ஷத்திரியன் எப்போதும் மதிப்பு மிக்கவனாக கருதப்படுகிறான். எனவே, ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஜராசந்தனைப் போரில் சந்திக்கக்கூடாது?(24) அவன் ஏற்கனவே எண்பத்தாறு மன்னர்களைக் கொண்டு வந்து, நூறு எண்ணிக்கையை நிறைவு செய்ய பதினான்கு பேருக்காகக் காத்திருக்கிறான். அந்தப் பதினான்கு பேரை அவன் {ஜராசந்தன்} அடைந்ததும், அவனது தீய செயலைத் தொடங்குவான்.(25) அத்தீயச்செயலைத் தடுப்பவன் எவனும் பெரும் புகழை அடைவான். ஜராசந்தனை வீழ்த்தும் எவனும், நிச்சயமாக அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் மாமன்னனாக {சக்கரவர்த்தியாக} ஆவான்" {என்றான் கிருஷ்ணன்}.(26)


ஆங்கிலத்தில் | In English