Friday, March 13, 2015

அனைத்தும் நானே! - உத்யோக பர்வம் பகுதி 46ஆ

I am all! | Udyoga Parva - Section 46b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 6)
பதிவின் சுருக்கம் : அனைவரினுள்ளும் பரமாத்மா சமமாகவே வசிக்கிறான் என்றும், முக்தி அடைந்தவர்கள் மட்டுமே அவனை அடைகிறார்கள் என்றும்; தூய அறிவு என்பது பரமாத்மாவின் மற்றொரு பெயர் என்றும்; மனதை அடக்கியவர்கள் மட்டுமே பரமாத்மாவை அடைகிறார்கள் என்றும்; அனைத்துப் பொருட்களும் பரமாத்மாவிடமே இறுதியில் இணைகின்றன என்றும்; பரமாத்மாவுக்குக் காணத்தக்க உருவம் கிடையாது என்றும்; தீயவர்களால் வழிநடத்தப்படுபவர்கள் நரகத்தை அடைகிறார்கள் என்றும்; பிரம்மத்தை அறிந்தவன் இரட்டைகளில் சம நிலையுடன் இருப்பான் என்றும்; ஒருவன் தன்னில் அனைத்தையும் காண வேண்டும் என்றும்; அனைத்திலும் நானே இருக்கிறேன் என்பதை உணர வேண்டும் என்றும் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

{சனத்சுஜாதர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “தனி நபர்களுக்கு மத்தியில், தங்கள் மனங்களை அடக்க தேர்ச்சி அடைந்தவர்களும், அப்படி {தேர்ச்சி} அடையாதவர்களும் உண்டு. எனினும், பரமாத்மா மனிதர்கள் அனைவரிலும் சமமாகக் காணப்படுகிறான். உண்மையில், முக்தி அடைந்தவனிடமும், {முக்தி} அடையாதவனிடமும் அவன் {பரமாத்மா} சமமாகவே வசிக்கிறான் {இருக்கிறான்}. அவர்களுக்குள் இருக்கும் இந்தச் சிறு வேறுபாடான முக்தியை அடைந்தவர்கள் மட்டுமே அடர்த்தியான தேனூற்றை {பேரின்பத்தை} அடைகிறார்கள். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.


வாழ்க்கைப்பயணத்தை மேற்கொள்ளும் ஒருவன், தான் மற்றும் தானற்றவற்றில் {சுயம் மற்றும் சுயமற்றவற்றில்} அறிவை {ஞானத்தை} அடைந்தால், அவனது அக்னி ஹோத்ரம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பது ஒரு பொருட்டே இல்லை.


ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, “நான் உனது அடிமை” என்பது போன்ற வார்த்தைகள் அவர்கள் {பரமாத்மாவை அடைய முயற்சிப்பவர்கள்} வாயில் இருந்து வராதிருக்கட்டும். தூய அறிவு {சுத்தஞானம்} என்ற மற்றொரு பெயரும் பரமாத்மாவுக்கு உண்டு. மனதை அடக்கியவர்கள் மட்டுமே அவனை {பரமாத்மாவை} அடைகின்றனர். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

அவன் அப்படியே இருக்கிறான். நீக்கமற பரிபூரணமாய் நிறைந்திருக்கும் அவனிடம் {பரமாத்மாவிடம்}, அனைத்து உயிரினங்களும் இணைகின்றன. பரிபூரணத்தின் உருவகத்தை அறிபவன், தனது நோக்கத்தை (விடுதலை என்ற முக்தியை) இங்கேயே {இவ்வுலகிலேயே} அடைந்துவிடுகிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

ஆயிரம் சிறகுகளை விரித்து மனோ வேகத்துடன் பறக்கும் ஒன்று {ஆத்மா}, வாழும் உயிரினத்திற்குள் உள்ள (வெகு தொலைவில் இருக்கும் பொருட்களும் எதன் உள்ளே வசிக்குமோ அந்த) மைய ஆவியிடமே {பரமாத்மாவிடமே} திரும்பி வர வேண்டும். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பரமாத்மா யோகிகளால்
காணப்படுகிறான்
அவனது {பரமாத்மாவின்} உருவம் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க இயலாது. தூய இதயங்கள் கொண்டோர் மட்டுமே அவனைக் {பரமாத்மாவைக்} காண இயலும். அனைவரின் நன்மையையும் ஒருவன் நாடும்போது, {அவன்} தனது மனதைக் கட்டுப்படுத்துவதில் வெல்கிறான். அவனது மனம் எப்போதும் துயரத்திற்கு ஆட்படாது. அப்படியிருப்பவன் தனது இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த உலகத்தையும் அதன் பயன்களையும் கைவிடத்தக்கவர்கள் அழியா {இறவா} நிலையை அடைகிறார்கள். (இறப்புக்கு ஆட்படாத பரமாத்மாவான) தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

துளைகளில் தங்களை மறைத்துக் கொள்ளும் பாம்புகளைப் போல, {தீய} ஆசான்களின் ஆணைகளைப் பின்பற்றும் மனிதர்கள், தங்கள் தன்னடத்தையால், கூர்மையான ஆய்வுகளின் பார்வையில் இருந்து தங்கள் தீமைகளை மறைத்துக் கொள்கின்றனர். இவர்களால் சிறு மதி கொண்டோர் {மூடர்கள்} வஞ்சிக்கப்படுகிறார்கள். உண்மையில், எந்த ஒழுங்கு முறைகளுமின்றி வெளிப்படையாகத் தங்களைத் தாங்கிக் கொள்ளும் இவர்கள் {மூடர்கள்}, {யாரால்} பாதிப்படைந்தார்களோ அவர்களால் வஞ்சிக்கப்பட்டு நரகத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள். (எனவே, இதற்கு நேர் எதிராக இருக்கும் மனிதர்களின் துணையை அடைபவர்கள் அவனை {பரமாத்மாவை} அடையலாம்). அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

“தோன்றி மறையும் {இயல்புடைய} உயிரினங்களால் {உடலால்} எனக்கு மகிழ்ச்சியையும் துயரத்தையும், அது தொடர்பான பிற பண்புகளையும் அளிக்க முடியாது; அதே போல எனது வழக்கிலும் இறப்புப் பிறப்பு போன்ற எதுவும் கிடையாது; மேலும், விரோதிக்க எந்த எதிர்ப்பு சக்தியும் அற்றதும், அனைத்து நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒரே போன்று இருப்பதுமான பிரம்மம், உண்மைகள் மற்றும் பொய்மைகள் ஆகிய இரண்டும் ஓய்ந்திருக்கும் இடத்தில் இருக்கும்போது, முக்தி எவ்வாறு எனதாகும்? அனைத்து காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் தோற்றமாக நானே இருக்கிறேன்” (நான் அல்லது சுய வடிவமாக {பிரம்மம் இருக்கிறது}) என்று முக்தியடைந்த ஒருவன் நினைக்கிறான். அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பிரம்மத்தை அறிந்த, அந்தப் பிரம்மத்துக்கு நிகரான மனிதன் நற்செயல்களால் சிறப்படைவதோ, தீய செயல்களால் அசுத்தமடைவதோ இல்லை. சாதாரண மனிதர்களுக்கு {பிரம்மத்தை அறியாதவர்களுக்கு} மட்டுமே நல்ல அல்லது தீய செயல்கள் வேறுபட்ட விளைவுகளை உண்டாக்குகின்றன. பிரம்மத்தை அறிந்த மனிதன் அமிர்தத்துக்கு ஒப்பாகவோ, நன்மை அல்லது தீமைகளால் பாதிக்கப்படாத கைவல்யம் {Kaivalya} என்று அழைக்கப்படும், நிலையடைந்தவனாகக் கருதப்பட வேண்டும். எனவே, ஒருவன், சுட்டிக்காட்டப்பட்ட வழியில் மனதை அகற்றி, அந்தச் சாரத்தின் இனிமையை (பிரம்மத்தை) அடைய வேண்டும். அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

பிரம்மத்தை அறிந்த மனிதனின் இதயம், “நான் (வேதங்களைக்) கற்கவில்லை, அல்லது நான் அக்னி ஹோத்ரம் செய்ய வில்லை” என்ற நிந்தை எண்ணத்துக்கு வருந்தாது. மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் மட்டுமே அடையும் அறிவை {ஞானத்தை}, பிரம்ம அறிவு கொண்டவன் விரைவில் அடைகிறான். (துயரம் மற்றும் அறியாமையில் இருந்து ஆன்மாவை விடுவிக்கும் அந்தப் பிரம்மம் என்ற) அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.

எனவே, தன்னில் அனைத்தையும் கண்ட ஒருவன் அதற்கு மேலும் வருந்த தேவையில்லை. பல்வேறு வகையான உலகத் தொழில்களில் ஈடுபடுவோரே வருந்த வேண்டியிருக்கும். பரந்த விரிவு அல்லது பெரிய நீர்த்தேக்கம் ஒருவனின் (தாகத் தணிப்பு முதலிய) நோக்கத்திற்கு உதவுவது போல, கிணற்றிலும் உதவி கிடைக்கிறது. அது போலவே, வேதங்களின் பல்வேறு நோக்கங்களும் ஆத்மாவை அறிந்தவனால் பெறப்படுகிறது.

பார்க்கத்தக்க ஒரு பொருளல்ல
இதயத்தில் வசிக்கும் கட்டைவிரல் அளவுள்ளவனும், பரிபூரணத்தின் உருவகமும் ஆன அந்த ஒப்பற்றவன் பார்க்கத்தக்க ஒரு பொருளாக இருக்க மாட்டான். பிறப்பற்ற அவன் இரவும் பகலும் விழிப்பான நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறான். அவனை {பரமாத்மாவை} அறிந்தவர்கள், கற்றவர்களாகவும் இன்பம் நிறைந்தவர்களாகவும் ஆகிறார்கள். நானே தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கப்படுகிறேன். மேலும் நானே மகனாகவும் இருக்கிறேன். இருந்த அனைத்தும், இருக்கப்போகும் அனைத்தும் ஆத்மாவாக இருப்பவன் நானே. ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நானே பாட்டன், நானே தந்தை, நானே மகனுமாக இருக்கிறேன். நீங்கள் எனது ஆத்மாவிலேயே வசிக்கிறீர்கள், எனினும் நீங்கள் என்னுடையவர்களல்ல, நானும் உங்களுடையவன் கிடையாது!

கடவுள் துகள்-எலக்ட்ரான் -அணு- மூலக்கூறு-
DNA-இனப்பெருக்கம்-வம்சவிருத்தி
பிறப்புக்கும், இனப்பெருக்கத்திற்கும் {வம்ச விருத்திக்கும்} எனது ஆன்மாவே காரணமாக இருக்கிறது. நானே இந்த அண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாகவும் {தொகுப்பாகவும்}, ஊடு இழையாகவும் இருக்கிறேன்.
நான் ஓய்ந்திருக்கும் இடம் அழிவற்றதாக இருக்கிறது. பிறப்பற்றவனான நான் பகலும் இரவும் விழித்திருக்கிறேன். என்னை அறிந்த ஒருவனே கற்றவனாகவும் இன்பம் நிறைந்தவனாகவும் ஆகிறான்.

நுட்பமானதினும் நுட்பமானவன்
நுட்பமானவற்றைவிட நுட்பமானவனாக, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கும் திறன் பெற்ற அற்புதமான கண்களுடன் கூடி அனைத்து உயிர்களிலும் பிரம்மம் விழிப்புடன் இருக்கிறது. அவனை {பிரம்மத்தை} அறிந்தவர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இதயத்திலும் வசிக்கும் அண்டத்தின் தகப்பனை {பரமாத்மாவை} அறிகிறார்கள். 


வேறு பதிப்புகளில் இங்கே "சனத்சுஜாத பர்வம்" நிறைவடைந்து "யானசந்தி பர்வம்" ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலியில் உத்யோக பர்வம் பகுதி 41 தொடங்கி 71 வரை சனத்சுஜாதபர்வம் நீள்கிறது. நாம் கங்குலியின் வழியிலேயே செல்கிறோம்.