Thursday, May 30, 2013

சாபம் பெற்ற தர்ம தேவன்! - ஆதிபர்வம் பகுதி 108

The curse begot by the god of Justice! | Adi Parva - Section 108 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 44)

பதிவின் சுருக்கம் : பிழை செய்துவிட்டதை உணர்ந்து மாண்டவ்யரிடம் மன்னிப்பைக் கோரிய மன்னன்; ஆணிமாண்டவ்யர் என்ற பெயரின் காரணம்; தர்மதேவனைச் சபித்த ஆணிமாண்டவ்யர்...

வைசம்பயாணர் சொன்னார், "இப்படிக் கேட்கப்பட்ட அந்த முனிவர்களில் புலியானவர் தவத்தை செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்களிடம், "நான் யாரைப் பழிப்பது? உண்மையில், (என்னைத் தவிர) எனெக்கதிராக வேறு யாரும் எதையும் செய்யவில்லை" என்றார்.(1) ஓ ஏகாதிபதியே, அதன்பிறகு, அந்த நீதி அதிகாரிகள், அவரை உயிருடன் கண்டு, மன்னருக்குத் தெரிவித்தனர்.(2) மன்னனும் அவர்கள் சொன்னதைக் கேட்டு, அலோசகர்களுடன் ஆலோசித்து, அந்த இடத்திற்கு வந்து சூலத்தில் இருந்த முனிவரை அமைதிப்படுத்த முயன்றான்.(3)

மன்னன் அவரிடம், "ஓ முனிவர்களில் சிறந்தவரே, நான் எனது அறியாமையால் உமக்குத் தீங்கிழைத்துவிட்டேன். அதற்கான மன்னிப்பை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன். நீர் என்னிடம் கோபம் கொள்ளாதிருப்பீராக" என்று கேட்டான்.(4) மன்னன் இப்படிக் கேட்டுக் கொண்டதன் பின்னர் முனிவர் அமைதியடைந்தார். கோபத்திலிருந்து விடுபட்டிருந்த அம்முனிவரைக் கண்டு, சூலத்துடன் சேர்த்து அவரைத் தூக்கி, அவரது உடலிலிருந்து அச்சூலத்தை உருவ முயன்றான் மன்னன். ஆனால் அவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை.(5,6) எனவே அந்த முனிவரின் உடலுக்கு வெளியே இருந்த பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தான். அதன்பின் அந்த முனிவர், கழுவின் ஒரு பகுதியை உடலில் தாங்கிக் கொண்டே நடந்தார். அந்த நிலையிலும், கடும் தவங்கள் நோற்று, எவராலும் அடைய முடியாத எண்ணற்ற உலகங்களை அடைந்தார்.(7)



அந்தச் சூலம் அவரது உடலுக்குள்ளேயே இருந்ததால், மூவுலகங்களிலும் அவர் ஆணி மாண்டவ்யர் என்ற பெயரால் அறியப்பட்டார். தர்மத்தின் உயர்ந்த உண்மையை அறிந்த அந்த பிராமணர் ஒரு நாள் தர்மதேவனின் இருப்பிடத்திற்குச் சென்றார்.(8) தர்மதேவன் தனது அரியணையில் அமர்திருப்பதைக் கண்டு, அவனை அணுகி, "நான் இந்தத் தண்டனையை ஏற்க, அறியாமல் நான் செய்த பாவம்தான் என்ன? விரைவாகச் சொல், பின்பு எனது ஆன்ம பலத்தைப் பார்" என்று கேட்டார்.(9,10)

இப்படிக் கேட்கப்பட்ட தர்மதேவன், மறுமொழியாக, "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஒரு காலத்தில் நீர் புல்லைக் கொண்டு ஒரு பூச்சியைத் துளைத்தீர். அச்செயலின் காரணமாகவே நீர் இத்துன்பத்தைத் தாங்க வேண்டியதாயிற்று. ஓ முனிவரே, ஒரு பரிசு, அஃது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தர்மத்தின் அளவுக்கேற்றபடி அது பெருகும். அதே போல ஒரு பாவகாரியமும் அதன் தகுதிக்கேற்பப் பெருகி, துன்பத்தைக் கூடவே அழைத்து வரும்" என்றான்.(11)

இதைக் கேட்ட ஆணி மாண்டவ்யர், "இதை நான் எப்போது செய்தேன் என்று உண்மையைச் சொல்?" என்று கேட்டார். அவர் குழந்தையாக இருக்கும்போது அதைச் செய்ததாகத் தர்மதேவன் சொன்னான். அந்த முனிவர், "பிறந்ததிலிருந்து பனிரெண்டு வயதுக்குட்பட்ட பிள்ளை செய்யும் காரியம் பாவமாகாது. சாத்திரங்கள் அதைப் பாவம் எனக் கொள்ளாது. ஒரு சிறு குற்றத்திற்காக என்னை இப்படித் தண்டித்தது தகாது. இது கொடுமையானது. வேறு எந்த உயிரைக் கொல்வதைக் காட்டிலும் ஒரு பிராமணனைக் கொல்வது பாவகரமானது. எனவே, ஓ தர்மதேவனே, நீ மனிதர்களில் சூத்திர வகையில் பிறப்பாய். பதினான்கு வயதுக்கு முன்பு ஒரு பிள்ளையால் செய்யப்படும் எந்தக் காரியமும் பாவமாகாது என்ற விதியை நான் இது முதல் அமலுக்குக் கொண்டு வருகிறேன். அந்த வயதைக் கடந்து ஒருவர் செய்யும் தீய செயலே, பாவமாகக் கருதப்படும்" என்றார்.(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தச் சிறப்புமிக்க முனிவரால் சபிக்கப்பட்டதால், தர்ம தேவன் சூத்திர வகையில் விதுரனாகப் பிறந்தான். விதுரன் தர்மநீதி, அரசியல், உலக ஆதாயம் ஆகிய சித்தாந்தங்களில் தெளிவான அறிவுடன் இருந்தான். பேராசை மற்றும் கோபத்திலிருந்து அவன் முற்றிலும் விடுபட்டவனாக இருந்தான். எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் பார்வையும், கலக்கமடையா மன அமைதியும் பெற்றிருந்த விதுரன், குருக்களின் நலன்களுக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்தான்” {என்றார்}.{14,15)


ஆங்கிலத்தில் | In English