Thursday, May 02, 2013

யயாதியின் கடுந்தவம்! | ஆதிபர்வம் - பகுதி 86

Rigid vows of Yayati! | Adi Parva - Section 86 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 22)

பதிவின் சுருக்கம் : அனைத்தையும் துறந்து வானப்பிரஸ்த வாழ்வு வாழ்ந்து சொர்க்கத்தை அடைந்த யயாதி...

வைசம்பாயனர் சொன்னார், "நகுஷ மைந்தன் மன்னன் யயாதி, தனது மகனை அரியணையில் அமர்த்தி மிகுந்த மகிழ்ச்சியடைந்து, துறவு வாழ்க்கை வாழக் கானகத்திற்குச் சென்றான்.(1) கடுந்தவங்கள் இயற்றும் பிராமணர்களுடன் இருந்த அந்த ஏகாதிபதி, அனைத்தையும் துறந்து, வெறும் கனிகளையும், கிழங்குகளையும் மட்டும் உண்டு சில காலம் கானகத்தில் வாழ்ந்து, தேவலோகத்திற்கு உயர்ந்தான்.(2) அப்படி தேவலோகத்துக்கு உயர்ந்து அங்கு அருளப்பட்டு இருந்தான். ஓ மன்னா! ஆனால் விரைவில் அவன் இந்திரனால் தேவலோகத்திலிருந்து கீழே பூமிக்குத் தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் இருந்தான் என்று கேள்விப்பட்டேன். அதன் பிறகு, சிறிது காலம் சென்று அவன் வசுமான், அஷ்டகன், பிரதார்தனன் மற்றும் சிபியுடன் தேவர்களின் உலகை அடைந்தான் என்றும் கேள்விப்பட்டேன்" என்றார்.(3-5)



ஜனமேஜயன், "யயாதி, தேவலோகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பிறகு ஏன் தூக்கி வீசப்பட்டு, மறுபடியும் ஏன் சேர்க்கப்பட்டான் என்பதை முழுமையாகச் சொல்வீராக. அதை அறிய விரும்புகிறேன்.(6) ஓ பிராமணரே! இவையெல்லாவற்றையும் இருபிறப்பாளர்களான இந்த முனிவர்கள் மத்தியில் சொல்வீராக. பூமியின் தலைவனான யயாதி, நிச்சயமாக மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தவன்.(7) குரு பரம்பரையின் அந்த மூதாதை, சூரியனைப் போல ஒளி வீசுபவனாவான். தனது சாதனைகளுக்காக அகில உலகிலும் புகழ்வாய்ந்த அந்தச் சிறப்புவாய்ந்தவரின் கதையை முழுமையாக, அதாவது தேவலோகத்திலும், பூமியிலும் அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை முழுமையாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் சொன்னார், "உண்மையில், நான் யயாதியின் துணிச்சல்மிக்க பூலோக மற்றும் தேவலோக வாழ்வு அடங்கியதும், பாவங்களை விலக்கவல்லதுமான அந்தப் புனிதமானக் கதையை உரைக்கிறேன். கேட்பாயாக.(9)

நகுஷ மைந்தனான மன்னன் யயாதி, தனது மூத்த மகன் யது உட்பட அனைத்து மகன்களையும் மிலேச்சராகும்படி விட்டு, தனது இளைய மகன் பூருவை அரியணையில் அமர்த்திவிட்டு, துறவு வாழ்க்கை வாழ, கானகத்திற்குள் சென்றான்.(10) அந்த மன்னன் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு சில காலம் கானகத்தில் வாழ்ந்தான்.(11) தனது மனத்தையும், உணர்ச்சிகளையும் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த மன்னன் பித்ருக்களையும், தேவர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தான். வானப்பிரஸ்த வாழ்க்கை வாழ்பவர்கள், என்னச் சடங்கு செய்ய வேண்டுமோ அப்படி தூய்மையாக்கப்பட்ட நெய்யை நெருப்பில் விட்டுச் சடங்குகள் செய்தான்.(12)

அறுவடைக்குப் பின் சிதறிக் கிடக்கும் தானியங்களை எடுத்துத் தான் உண்டு உயிரைத் தாங்கி வந்தாலும், நாடி வரும் விருந்தினர்களுக்கும், அந்நியர்களுக்கும் கனிகளைக் கொடுத்தும், தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் கொடுத்தும் அந்தச் சிறப்புவாய்ந்தவன் கவனித்துக் கொண்டான்.(13) அந்த மன்னன் இதைப் போன்ற வாழ்வை ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். பேசா நோன்பிருந்து, தனது மனத்தை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு, தூங்காமல் ஒரு முழு வருடத்தைக் கடத்தினான். அடுத்த ஒரு வருடம் நான்கு புறமும் நெருப்பு வளர்த்து, மேலே கதிரவன் காயக் கடுமையான தவமியற்றினான். காற்றை மட்டுமே உண்டு, ஆறு மாதங்கள் ஒரு காலில் நின்றான். அந்த மன்னன் தனது புனிதமானக் கடமைகளின் பயனாகத் தேவலோகத்தையும், பூலோகத்தையும் தனது புகழால் மறைத்து தேவலோகத்துக்கு உயர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(14-16)


ஆங்கிலத்தில் | In English