Wednesday, June 05, 2013

எட்டு திக்கும் முரசு கொட்டிய பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 113

Victorious Pandu! | Adi Parva - Section 113 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 49)

பதிவின் சுருக்கம் : பாண்டுவுக்காக சல்லியனிடம் மாத்ரியைப் பெண் கேட்கச் சென்ற பீஷ்மர்; தங்கள் குலவழக்கத்தைச் சொன்ன சல்லியன்; பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்து மாத்ரியை அழைத்து வந்த பீஷ்மர்; உலகை வெல்லப் புறப்பட்ட பாண்டு; பெரும் பொக்கிஷத்தோடு ஹத்தினாபுரம் திரும்பியது...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிறிது காலத்திற்குப் பிறகு, சந்தனுவின் புத்திசாலி மகன் பீஷ்மர், பாண்டுவுக்கு இரண்டாவதாக ஒரு மனைவியைப் பெற மனத்தில் தீர்மானித்தார்.(1) முதிர்ந்த ஆலோசகர்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் நால்வகைப் படையினருடன் மத்ர மன்னனின் {சல்லியனின்} தலைநகருக்குச் சென்றார் பீஷ்மர்.(2) பாஹ்லீகர்களில் காளையான மத்ர மன்னன் {சல்லியன்}, பீஷ்மரின் வருகையைக் கேள்விப்பட்டு, அவரை {பீஷ்மரை} வரவேற்க வெளியே வந்தான். அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வரவேற்றுத் தனது அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.(3) மத்ர மன்னன் {சல்லியன்} பீஷ்மரை உள்ளே அழைத்து, வெண்ணிறத் ஆசனத்தில் அவரை {பீஷ்மரை} அமர வைத்து, அவரது கால்களைக் கழுவ நீர் கொடுத்து, தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான வழக்கமான பல்வேறு பொருட்களை மரியாதையின் நிமித்தமாகக் கொடுத்தான். அவர் {பீஷ்மர்} வசதியாக அமர்ந்த பிறகு, அவரின் {பீஷ்மரின்} வருகைக்கான காரணம் குறித்து மன்னன் {சல்லியன்} கேட்டான்.(4)

குருக்களின் பெருமைகளைப் பேணும் பீஷ்மர், மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்}, "ஓ அனைத்து எதிரிகளையும் அழிப்பவனே, நான் ஒரு கன்னிகையின் கரத்திற்காக வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக. பெரும் அழகுக்காகவும், அறத்திற்காகவும் கொண்டாடப்படும் மாத்ரி என்ற பெயர் கொண்ட ஒரு தங்கை உனக்கு உண்டு என்று கேள்விப்பட்டேன். நான் அவளை {மாத்ரியை} பாண்டுவுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.(6) ஓ மன்னா {சல்லியா}, நீ எங்களுடன் கூட்டுச் சேர அனைத்துத் தகுதிகளும் கொண்டவன். நாங்களும் உன் தகுதிக்குக் குறைந்தவர்கள் அல்லர். ஓ மத்ரவின் மன்னா {சல்லியா}, இவையெல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, எங்களை ஏற்றுக் கொள்வாயாக" என்றார்.(7)

இப்படிச் சொல்லப்பட்ட மத்ர ஆட்சியாளன், பீஷ்மரிடம், "என் மனத்தைப் பொறுத்தவரை, உமது குடும்பத்தைத் தவிர நான் கூட்டுச் சேர வேறு எந்தக் குடும்பமும் இல்லை.(8) ஆனால், எங்கள் குடும்பத்தில் எங்கள் மூதாதையர் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லதாகவும் இருக்கலாம், இருப்பினும் என்னால் அந்த வரம்பை மீற முடியாது.(9) இஃது அனைவராலும் அறியப்பட்டதே. நீரும் அதை அறிந்திருப்பீர். அதில் நான் ஐயம் கொள்ளவில்லை. எனவே, என் தங்கையை {மாத்ரியை} அளிக்க வேண்டும் என்று என்னிடம் நீர் இப்படிக் கேட்பது முறையல்ல.(10)  எங்கள் குடும்ப வழக்கத்தையே நான் கடைப்பிடிப்பேன். எங்களுக்கு அறம் சார்ந்ததும், கடைப்பிடிக்கத் தகுந்ததும் அதுவே. ஓ எதிரிகளை அழிப்பவரே {பீஷ்மரே}, இதன்காரணமாகவே, உமது கோரிக்கைக்கு என்னால் எந்த உறுதியான பதிலும் தர முடியவில்லை" என்றான்.(11)

இதைக்கேட்ட பீஷ்மர், மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்}, "ஓ மன்னா {சல்லியா}, உங்கள் வழக்கம் அறமே[1] என்பதில் ஐயமில்லை. சுயம்புவே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறார்.(12) உமது மூதாதையர்கள் இந்த வழக்கத்தையே கடைப்பிடித்தனர். இதில் குற்றங்காண ஒன்றும் இல்லை.  ஓ சல்லியா, குடும்பப் பெருமைக்கான இவ்வழக்கம் ஞானம் கொண்டவர்களாலும், நல்லவர்களாலும் ஏற்கப்பட்டு நன்கறியப்பட்டதே" என்று சொன்னார்.(13) பிறகு, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, நாணயமாகவும், நாணயமல்லாதவையாகவும் நிறையத் தங்கத்தையும், பல நிறங்களில் ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த கற்களையும், யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும், ஆடை ஆபரணங்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் சல்லியனிடம் கொடுத்தார்.(14,15)

[1] அர்ஷம் என்ற திருமண முறைப்படி இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகாதானம் செய்வது

சல்லியன் அந்த விலையுயர்ந்த பரிசுகளை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தனது தங்கையை {மாத்ரியை} அந்தக் குருக்களில் காளையிடம் {பீஷ்மரிடம்} கொடுத்தான்.(16) பெருங்கடலுக்குச் செல்லும் கங்கையின் மைந்தனும், ஞானம் கொண்டவருமான பீஷ்மர், தனது காரியம் ஈடேறியதில் மகிழ்ந்து, மாத்ரியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, யானையின் பெயர் கொண்ட குருக்களின் தலைநகரத்திற்குச் (ஹஸ்தினாபுரத்திற்குச்) சென்றார்.(17) பின்பு ஞானிகள் குறித்துக் கொடுத்த ஓர் அதிர்ஷ்டமான நாள் மற்றும் நேரத்தில் மாத்ரியுடன் மன்னன் பாண்டு இணைத்து வைக்கப்பட்டான்.(18) திருமணச் சடங்குகள் முடிந்ததும், குருக்களின் மன்னன் (பாண்டு), அந்த அழகான மணமகளை, அழகுநிறைந்த அறையில் அமர்த்தினான்.(19) ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பாண்டு}, தனது இருமனைவியருடனும் {குந்தி மற்றும் மாத்ரியுடனும்} தான் விரும்பியபடி சிறந்தவாறு உல்லாசமாக இருந்தான்.(20)

ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, முப்பது நாட்கள் கழித்து, அந்தக் குருக்கள் மன்னன் {பாண்டு}, உலகத்தை வெல்ல எண்ணித் தனது தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} இருந்து கிளம்பினான்.(21) பீஷ்மரிடமும், மற்றக் குரு பரம்பரையின் பெரியவர்களிடமும், மரியாதையுடன் தலைவணங்கித் திருதராஷ்டிரனிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் பிரியாவிடை பெற்றுப் பெரும் யானைப்படையுடனும், குதிரை மற்றும் தேர்ப்படைகளுடனும், தனது குடிமக்களின் வாழ்த்துகளுடனும் பயணத்தைத் தொடங்கினான்.(22-24) அவ்வளவு பலம் வாய்ந்த படையுடன் பலதரப்பட்ட எதிரிகளைச் சந்தித்தான் பாண்டு. அந்த மனிதர்களின் புலியானவன், குருக்களின் புகழைப் பரப்புபவன், முதலில் தசாஹர்களின் திருடர்க் குழுக்களை அடக்கினான்.(25) பிறகு, கணக்கிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்கள், மற்றும் ரதவீரர்களைக் கொண்ட தனது படையை, சுயபலத்தில் பெருமிதம் கொண்டு பல ஏகாதிபதிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த மகத நாட்டு மன்னன் தீர்க்கனின் பக்கம் திருப்பினான். அவனது தலைநகரில் வைத்து அவனைத் தாக்கிய பாண்டு அங்கேயே அவனைக்கொன்று, அவனது {தீர்க்கனது} கருவூலத்திலிருந்த அனைத்துச் செல்வங்களையும், மற்றும் வாகனங்களையும், கணக்கிலடங்கா விலங்குகளையும் கவர்ந்து சென்றான். பிறகு அவன் {பாண்டு} மிதிலை {Mithila} நோக்கித் திரும்பி விதேஹர்களை வென்றான்.(26-28)

பிறகு, ஓ மனிதர்களில் காளையே, பாண்டு, தனது படையைக் காசி, சம்பா, புண்டரம் ஆகிய நாடுகளுக்கு வழி நடத்தித் தனது பலத்தாலும் வீரத்தாலும் குருக்களின் புகழைப் பரவச் செய்தான்.(29) நீண்ட தொலைவுக்குச் சென்று தாக்கும் நெருப்புச் சுடர்களைப் போன்ற கணைகளையும், பிரகாசமான ஆயுதங்களையும் கொண்டவனும், எதிரிகளை ஒடுக்கபவனுமான பாண்டு, தன்னை எதிர்த்து வரும் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தினான்.(30) பாண்டுவைத் தலைமையாகக் கொண்ட அந்தப் படையால் வீழ்த்தப்பட்ட நாடுகள், குருக்களின் அடிமை நாடுகளாக்கினான் {கப்பம் கட்டச் செய்தான். அவன் {பாண்டு}, உலகில் உள்ள எல்லா மன்னர்களையும் வீழ்த்தி, தேவலோகத்தில் இந்திரன் மதிக்கபடுவதுபோலப் பூமியில் ஒரே வீரனாக மதிக்கப்பட்டான்.(31) பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் அவன் {பாண்டு} முன்னால் கரங்கூப்பித் தலைவணங்கி, அவனுக்காகக் காத்திருந்து, பலதரப்பட்ட ரத்தினங்களும் செல்வங்களும், மதிப்பற்ற கற்கள், முத்துகள், பவளங்கள், பெரும் அளவில் தங்கம் மற்றும் வெள்ளி, முதல் தரம்வாய்ந்த பசுக்கள், அழகான குதிரைகள், அழகான ரதங்கள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருமைகள், ஆடுகள், பொன்னாடைகள், அழகான மிருகத் தோல்கள், விலங்குகளின்மயிர்களாலான ஆடைகள் ஆகியனவற்றை அவனுக்குக் கொடுத்தார்கள். ஹஸ்தினாபுரத்தின் மன்னன் {பாண்டு} அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தனது குடிமக்களின் பெருமகிழ்ச்சிக்கிடையே தனது தலைநகர் திரும்பினான். அவனது நாட்டின் குடிமக்களும் மற்றவர்களும் பெரும் மகிழ்ச்சியுடனிருந்தனர்.(32-36)

மன்னர்களும் அமைச்சர்களும், "மன்னர்களில் புலியான சந்தனு மற்றும் ஞானியான பரதனின் சாதனைகளும் புகழும் சாகப் போகும் தருவாயில் (மங்கப் போகும் நேரத்தில்), அவை பாண்டுவால் மீட்டெடுக்கப்பட்டன" என்றனர்.(37) முன்பு குருக்களின் நிலத்தையும் செல்வத்தையும் திருடியவர்கள் அத்தனை பேரும் ஹஸ்தினாபுரத்தின் புலியான பாண்டுவால் வீழ்த்தப்பட்டுக் கப்பம் கட்டப் பணிக்கப்பட்டனர்.(38) குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டு வெற்றியடைந்து வந்த தங்கள் மன்னனை {பாண்டுவை} வரவேற்க வெளியே வந்தனர். அப்போது தங்கள் மன்னனின் {பாண்டுவின்} பணியாட்கள் கொண்டு வந்த செல்வத்தையும், யானைகள், குதிரைகள், ரதங்கள், பசுக்கள், ஒட்டகங்கள் மற்றும் மற்ற மிருகங்களையும் கண்டனர். அந்தப் பணியாட்கள் செல்வது ஒரு முடிவில்லாத பேரணியாக இருப்பதையும் கண்டனர்.(39-42)

பாண்டு தனது தந்தை {விசித்திரவீரியன்} போன்ற பீஷ்மரைக் கண்டு, அவரது பாதம் பணிந்து வணங்கிக் குடிமக்களை அவரவர் தகுதிக்கேற்ப வணங்கினான்.(43) பீஷ்மர், பல எதிரி நாடுகளை வென்று திரும்பியிருக்கும் தனது மகனான {தன் தம்பி விசித்திரவீரியனின் மகனான} பாண்டுவை ஆரத்தழுவி, மகிழ்ச்சி மிகைப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.(44) பாண்டு, தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கிடையேயும், துந்துபி, சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகளுக்கிடையே தனது தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(45)

ஆங்கிலத்தில் | In English