Tuesday, August 13, 2013

ஔர்வரின் கடுந்தவம்! - ஆதிபர்வம் பகுதி 181

Rigid Ascetic Penance of Aurva! | Adi Parva - Section 181 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 15)

பதிவின் சுருக்கம் : அந்தப் பிராமணப் பெண்ணின் சொல்லைக் கேட்டு ஔர்வரைத் தஞ்சமடைந்த க்ஷத்திரியர்கள்; கண்பார்வையைத் திரும்பப் பெற்ற க்ஷத்திரியர்கள்; உலகத்தை அழிக்க தவம் செய்த ஔர்வரைத் தடுத்த அவருடைய பித்ருக்கள்...

வசிஷ்டர் தொடர்ந்தார், "இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், "குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.(1) தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது.(2) குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான்.(3) பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது.(4) பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன.(5) எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்" என்றாள்".(6)

வசிஷ்டர் தொடர்ந்தார், "அந்த பிராமணப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசர்கள், தொடையில் பிறந்த அக்குழந்தையிடம், "நன்மை செய்வாயாக" என்று வேண்டினர். அக்குழந்தையும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினான்.(7) அந்தப் பிராமண முனிவர்களில் சிறந்தவன், தனது தாயின் தொடையைக் கிழித்துப் பிறந்ததால், இந்த உலகத்தில் ஔர்வன் (தொடையில் பிறந்தவன்) என்று அழைக்கப்பட்டான்[1].(8) அந்த இளவரசர்கள் தங்கள் பார்வையைப் பெற்றுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பிருகு குலத்தைச் சேர்ந்த முனிவர் ஔர்வர் இவ்வுலகத்தை வெல்ல முடிவு செய்தார்.(9) அந்த பிருகு குலத்தின் கொழுந்து, இறந்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த முழு உலகத்தையே அழிப்பதற்காகக் கடும் தவம் இருந்தார்.(10,11) தனது மூதாதையர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எண்ணிய அந்த முனிவர், தனது கடும் தவத்தால், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் பாதிப்படையச் செய்தார்.(12)


[1] ஊரூஜன் என்றால் தொடையில் பிறந்தவன் என்ற பொருள் என்று கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.

தங்கள் குலத்தைச் சேர்ந்த பிள்ளை என்ன செய்கிறான் என்பதை அறிந்த பித்ருக்கள் {ஔர்வரின் மூதாதையர்கள்} அனைவரும் தங்கள் உலகங்களை விட்டு அந்த முனிவரிடம் வந்து,(13) "ஔர்வா, ஓ மகனே, உனது தவம் கடுமையானதாக இருக்கிறது. உனது சக்தியை நாங்கள் கண்டோம். ஓ மகனே, மூன்று உலகங்களுக்கும் நன்மையைச் செய்யக் கருதி உனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(14) ஓ குழந்தாய், ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்த பிருகுக்கள், கொலைகார க்ஷத்திரியர்களின் கரங்களில் அழிவையடைந்தும் பாரபட்சமின்றி இருந்தது எங்கள் இயலாமையில் அல்ல.(15) ஓ குழந்தாய், நாங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீண்ட வாழ்நாட்களால் களைத்துப் போய், க்ஷத்திரியர்களைக் கருவியாகப் பயன்படுத்தி எங்கள் அழிவை நாங்களே விரும்பினோம்.(16)

பிருகுக்கள் நிலத்துக்கடியில் பதுக்கிய செல்வம் என்பது, க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தூண்டி சச்சரவை உண்டாக்க ஒரு காரணமே ஆகும்.(17) ஓ பிராமணர்களில் சிறந்தவனே, எங்களுக்குத் தேவலோகத்தில் விருப்பம் உண்டானதால், அந்தச் செல்வங்களால் எங்களுக்கு யாது பயன்? தேவலோகத்தின் பொருளாளர் (குபேரன்) எங்களுக்காகப் பெரும் செல்வத்தை வைத்திருக்கிறான்.(18) எங்களை மரணம் வெல்ல முடியாது என்பதை நாங்கள் எப்போது அறிந்தோமோ, அப்போதுதான், ஓ குழந்தாய், நாங்கள் இந்தச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்.(19) தற்கொலை செய்பவர்கள் அருளப்பட்டவர்களின் உலகத்தை அடையவே முடியாது. இதை உணர்ந்த நாங்கள் தற்கொலை எண்ணம் கொள்ளவில்லை.(20) எனவே, எதை நீ செய்ய விரும்புகிறாயோ, அஃது எங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மொத்த உலகத்தையும் அழிக்கும் இந்தப் பாவகரச் செயலிலிருந்து பின்வாங்குவாயாக.(21) ஓ குழந்தாய், க்ஷத்திரியர்களையோ, ஏழு உலகங்களையோ அழிக்காதே. உனது ஆன்ம சக்திக்குக் களங்கத்தை உண்டாக்கும்வகையில் உனக்குள் இருக்கும் இந்தக் கோபத்தைக் கொல்வாயாக" என்றனர் {பித்ருக்கள்}[2].(22)

[2] மஹாபாரதம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்புக் கொண்டது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை கதைகளுக்குள் கதை என்பதைக் இப்போது கவனியுங்கள். நைமிசாரண்யம் என்ற இடத்தில், சௌதி என்பவர் தவசிகள் கூட்டத்திடம் சொல்லும் கதைக்குள்ளே [கதை 1] - வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயனிடம் சொல்லும் மற்றொரு கதைக்குள்ளே [கதை 2]- கந்தர்வன் அர்ஜுனனிடம் சொல்லும் மற்றும் ஒரு கதைக்குள்ளே [கதை 3] - வசிஷ்ட மகரிஷி தனது பேரன் பராசரரிடம் சொல்லும் கதைக்குள் [கதை 4] - பிருகு குல பித்ருக்கள் பிருகு குலத் தோன்றலான ஔர்வன் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட கோபத்தால் இந்த உலகையே அழிக்க முடிவு எடுத்தபோது விவரிக்கப்படும் காட்சியே மேற்காணும் பகுதியாகும் [கதை 5].


ஆங்கிலத்தில் | In English