Saturday, August 31, 2013

அப்சரஸ்களைச் சபித்த அந்தணன்! - ஆதிபர்வம் பகுதி 218

Brahmana's curse on the Apsaras! | Adi Parva - Section 218 | Mahabharata In Tamil

(அர்ஜுன வனவாச பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : பிராமணனின் சாபத்தால் அப்சரஸ்கள் முதலைகளாக மாறியது...

வைசம்பாயனர் சொன்னார், "அந்தப் பாரதக் குலத்தின் காளை {அர்ஜுனன்}, புண்ணிய நீர்நிலையான தெற்குக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே பல துறவிகள் வசித்து வந்தனர்.(1) அங்கே ஐந்து பகுதிகளாக நிலம் சிதறிக் கிடந்தது; அங்கெல்லாம் பல துறவிகள் வசித்து வந்தனர். ஆனால், அந்த ஐந்து நீர் நிலைகளும் அனைவராலும் தவிர்க்கப்பட்டிருந்தன.(2) அகஸ்தியம், சௌபத்ரம், பெரும் புனிதம் வாய்ந்த பௌலோமம், பெரும் நன்மைகளையும், அந்த நீர்நிலையில் குளித்தால், குதிரை வேள்விக்கு ஒப்பான பயன் தரக்கூடிய கரந்தமம் என்ற நீர்நிலையும், பெரும் பாவங்களைப் போக்க வல்ல பரத்வாஜம் என்ற நீர்நிலையும் புனிதம் வாய்ந்தவையாக இருந்தன.(3,4)

குரு குலத்தவரில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அந்த ஐந்து புண்ணிய நீர்நிலைகளையும் கண்டு, அங்கே யாரும் வசிக்கவில்லை என்பதையும் கண்டு, குறிப்பாகத் துறவிகள் அங்கே வசிக்க வில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டு அங்கே இருந்த நல்லவர்களிடம் கரங்கள் கூப்பி,(5) "ஓ துறவிகளே, இந்த ஐந்து நீர்நிலைகளும் பிரம்மனை உச்சரிக்கும் துறவிகளால் விலக்கப்பட்டிருக்கிறதே; அஃது ஏன்?" என்று கேட்டான்.(6) அதற்கு அந்தத் துறவிகள், "இந்த நீர்நிலைகளில் ஐந்து பெரும் முதலைகள் வசிக்கின்றன. அவை அங்கே குளிக்க வரும் துறவிகளை இழுத்துச் சென்று விடுகின்றன. அதன் காரணமாகவே, ஓ குரு குலத்தின் மகனே {அர்ஜுனனே}, இந்த நீர்நிலைகள் விலக்கப்பட்டிருக்கின்றன" என்று சொன்னார்கள்.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தத் துறவிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சக்தி மிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அவர்களால் விலக்கப்பட்ட அந்த நீர்நிலைகளைக் காணச் சென்றான்.(8) சுபத்ர என்ற பெரும் முனிவரின் பெயரால் அழைக்கப்படும் அற்புதமான நீர்நிலைக்கு வந்த அந்த எதிரிகளை அழிக்கும் வீரன், குளிப்பதற்காகத் திடீரென நீர்நிலைக்குள் மூழ்கினான்.(9) அந்த மனிதர்களில் புலியானவன் {அர்ஜுனன்} அந்த நீர்நிலைக்குள் மூழ்கியதும், அவனது காலை ஒரு பெரும் முதலை பற்றியது.(10) ஆனால், வலிய கரங்களைக் கொண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போராடிய அந்த நீர் அதிகாரியைக் {முதலையைக்} கரையில் பலவந்தமாக இழுத்துப் போட்டான்.(11) ஆனால் அர்ஜுனனால் கரையில், நிலத்தில் இழுத்துப் போடப்பட்ட அந்த முதலை, ஆபரணங்கள் பூண்ட அழகான பெண்ணாக மாறியது.(12)

குந்தியின் மகனான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} காணற்கரிய அந்தக் காட்சியைக் கண்டு, அந்த மங்கையிடம் நிறைவடைந்த இதயத்துடன்,(13) "ஓ அழகானவளே, நீ யார்? நீ ஏன் இந்த நீரை அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறாய்? நீ ஏன் இப்படிப்பட்ட பாவங்களை இழைக்கிறாய்?" என்று கேட்டான்.(14)

அதற்கு அந்த மங்கை, "ஓ வலிய கரங்களைக் கொண்டவரே! நான் கானகத்தில் விளையாடும் ஓர் அப்சரஸ் ஆவேன். ஓ பலம் வாய்ந்தவரே, எனது பெயர் வர்க்கை ஆகும்.  நான் தெய்வீகப் பொருளாளருக்கு {தேவலோகப் பொக்கிஷ அதிகாரிக்கு} (குபேரனுக்கு} மிகவும் அன்பானவள்.(15) என்னுடன் இன்னும் நான்கு தோழிகள் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் அழகானவர்கள்; நினைத்த இடத்திற்குச் செல்லக்கூடிய சக்தி பெற்றவர்கள். அவர்களுடன் ஒருநாள் நான் குபேரனின் வசிப்பிடத்திற்குச் சென்றேன்.(16) அப்படிச் செல்லும் வழியில் நாங்கள் கடும் தவத்தில் இருந்த ஒரு பிராமணனைக் கண்டோம். அவன் மிகுந்த அழகுடனும், வேதங்களில் அறிவுடனும், தனிமையில் தவம் மேற்கொண்டிருந்தான்.(17) அந்த முழுக் கானகமும் அங்கே இருந்த துறவிகளின் பிரகாசத்தால் மறைக்கப்பட்டிருந்தது. அவன் அந்தப் பகுதியையே சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்திருந்தான்.(18)

அந்த நேரத்தில், அவனது தவ அர்ப்பணிப்பையும், அவனது அற்புதமான அழகையும் கண்ட நாங்கள் அவனது தியானத்தைக் கலைக்கத் திட்டமிட்டோம்.(19) நான் {வர்க்கை}, சௌரபேயி, சமீசி, வியுத்யுதை {புத்புதை} மற்றும் லதை ஆகியோர் அந்த பிராமணனை அணுகினோம்.(20) நாங்கள் பாட்டுப் பாடியும், சிரித்தும் மற்றும் பல வழிகளிலும் அந்த பிராமணனை மயக்க முயற்சி செய்தோம். ஆனால் பிராமணன் {இளைஞன்} அவனது இதயத்தை எங்களில் நிலைபெறச் செய்யவில்லை.(21) அவனது மனம் முழுவதும் தியானத்தில் நிலைத்திருந்தது. இளமையின் பெரும் சக்தி படைத்த அந்த பிராமணன், தனது இதயத்தை எங்களிடம் செலுத்தாமல் உறுதியான இதயத்துடன் இருந்தான். ஆனால், ஓ க்ஷத்திரியர்களில் காளையே {அர்ஜுனரே}, அவன் எங்களைக் கண்ட போதும் பெரும் கோபத்துடன் கண்டான். அவன் எங்களைப் பார்த்து, "நீங்கள் அனைவரும் முதலைகளாக மாறி, நூறு வருடங்களுக்கு நீர்நிலைகளில் அதிகாரம் செலுத்துங்கள்" என்று சபித்தான்” {என்று கூறினாள் அப்சரஸ் வர்க்கை}.(22)


ஆங்கிலத்தில் | In English