Sunday, September 01, 2013

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன்! - ஆதிபர்வம் பகுதி 222

Arjuna Kidnapped Subhadra! | Adi Parva - Section 222 | Mahabharata In Tamil

(சுபத்திரா ஹரணப் பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : ரைவதக மலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சுபத்திரை அர்ஜுனன் கடத்திக் கொண்டு செல்வது; இதை அறிந்த யாதவர்கள் கோபம் கொள்வது; பலராமன் கிருஷ்ணனைக் கேட்பது; அர்ஜுனன் குறித்த தனது எண்ணத்தை பலராமன் சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், "யுதிஷ்டிரனின் சம்மதத்தைக் கேள்விப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த மங்கை ரைவதக மலைக்குச் சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டு, வாசுதேவனின் சம்மதத்தையும், அனைத்து ஆலோசனைகளையும் செய்து ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.(1) மனிதர்களில் முதன்மையான அந்தப் பாரதக் குலத்தின் காளை {அர்ஜுனன்}, கிருஷ்ணனின் சம்மதத்துடன், நன்றாக உருவாக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் பயணித்தான்.(2) அந்த தேரில் சிறு மணிகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன.  அனைத்து வித ஆயுதங்களும் அதற்குள் இருந்தன. தேர்ச் சக்கரங்களின் ஓசை மேகத்தின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. அந்தத் தேர் சுடர்விட்டு எரியும் நெருப்புப் போலப் பிரகாசமாக இருந்தது. பகைவர்கள் கண்டால் அஞ்சி நடுங்கும் அந்த தேரில் சைவியம் மற்றும் சுக்ரீவம் என்ற இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அர்ஜுனன் கவசம் பூண்டு, கையில் வாள் தாங்கி, விரல்களுக்குத் தோல் கையுறை அணிந்து, வேட்டைக்குக் கிளம்புவது போலச் சென்று கொண்டிருந்தான்.(3-5)

அதே வேளையில் சுபத்திரை, மலைகளின் இளவரசனான ரைவதத்தை வழிபட்டு, அங்கிருந்த தெய்வங்களை வணங்கி, பிராமணர்கள் வாழ்த்துகளைப் பெற்று,(6) மலையைச் சுற்றி நடந்து, துவாரவதியை {துவாரகையை} நோக்கிச் செல்லும் பாதையில் வந்து கொண்டிருந்தாள். காமனின் கணைகளால் தாக்குண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, திடீரென அந்தக் குற்றங்குறையற்ற யாதவப் பெண் மேல் பாய்ந்து, அவளை {சுபத்திரையை} வலுக்கட்டாயமாகத் தனது தேரில் ஏற்றினான். இனிமையான புன்னகை கொண்ட அந்த மங்கையைக் கைப்பற்றிய பிறகு, அந்த மனிதர்களில் புலியானவன், அந்தத் தங்க ரதத்தைத் தனது நகரத்தை (இந்திரப்பிரஸ்தத்தை) நோக்கிச் செலுத்தினான்.(7,8) அதேவேளையில் ஆயுதம் தரித்த சுபத்திரையின் பணியாட்கள், அவள் இப்படி அபகரித்துச் செல்லப்பட்டதைக் கண்டு, துவாரகை நகரத்தை நோக்கி அழுது கொண்டே ஓடினர்.(9) சுதர்மம் என்று அழைக்கப்பட்ட அந்த யாதவச் சபைக்கு அனைவரும் சென்று, பார்த்தனின் {அர்ஜுனனின்} அற்றலைக் குறித்து சபையின் தலைவனிடம் தெரிவித்தனர்.(10)

பணியாட்களிடம் இருந்து இவை அனைத்தையும் கேட்ட சபைத்தலைவன், தனது தங்கத்தாலான எக்காளத்தை எடுத்து உரத்து முழக்கமிட்டுப் படைகளை அழைத்தான்.(11) அந்த ஒலியால் உந்தப்பட்ட போஜர்களும், விருஷ்ணிகளும், அந்தகர்களும் எல்லாப் புறங்களிலிருந்து ஓடி வந்தனர். உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் அதை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தனர். குடித்துக் கொண்டிருந்தவர்கள் குடியை விட்டு ஓடி வந்தனர்.(12) மனிதர்களில் புலிகளான விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்கள், அற்புதமான விரிப்புகளால் மூடப்பட்டுப் பலவண்ண ரத்தினங்கள், பவளங்களால் அலங்கரிக்கப்பட்டு எரியும் நெருப்புப் போலப் பிரகாசமாய் இருந்த ஆயிரம் தங்க அரியணைகளில் ஏறி அமர்ந்தனர். உண்மையில் எரியும் நெருப்பின் மேல், மேலும் அதன் பிரகாசத்தினை அதிகரிக்க அவர்கள் ஏறி அமர்ந்தது போல இருந்தது.(13,14) அப்படி அவர்கள் அனைவரும் வந்த அந்தச் சபையில் தங்கள் அரியணைகளில் தேவர்களைப் போல அமர்ந்த பிறகு, சபைத்தலைவன், அவனது பின் இருந்தவர்களின் துணைக் கொண்டு, ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} நடத்தையைக் குறித்துச் சொன்னான்.(15)

மதுவால் சிவந்த கண்களுடன் இருந்த அந்தக் கர்வம் கொண்ட விருஷ்ணி வீரர்கள், இதைக் கேட்டதும், அர்ஜுனன் செய்கையைத் தாங்க முடியாமல் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர்.(16) அவர்களில் சிலர், "ரதங்களைத் தயார் செய்யுங்கள் என்றனர். சிலர், "ஆயுதங்களை எடுங்கள்" என்றனர். சிலர் "நமது விலை உயர்ந்த வில்லையும், உறுதியான கவசங்களையும் கொண்டு வாருங்கள்" என்றனர். சிலர் சத்தமாகத் தங்கள் சாரதிகளிடம் தேரை எடுக்கச் சொல்லினர். சிலர் பொறுமையிழந்து, அவர்களாகவே தங்கள் குதிரைகளுக்கு நுகத்தடி பூட்டி, அவற்றைத் தங்கள் தங்க தேர்களில் பூட்டினர்.(17,18) அவர்களது தேர்களும், ஆயுதங்களும், மற்றப் பொருட்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வீரர்களிடம் பெரும் முழக்கங்கள் எழுந்தன.(19)

வெண்மையானவனும் கைலாச மலையைப் போல உயரமானவனுமான பலதேவன் {பலராமன்}, காட்டுப் பூக்களாலும், நீல ஆடைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, மது கொடுத்த போதையுடன்,(20) "புத்தியற்றவர்களே, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அமைதியாக அமர்ந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் வீணாகக் கோபத்தில் முழங்காதீர்கள்!(21) சொல்ல வேண்டியதை இந்த உயர் ஆன்மக் கிருஷ்ணன் சொல்லட்டும். அவன் செய்ய விரும்புவதை உடனடியாக நிறைவேற்றுங்கள்" என்றான்.(22)

ஹலாயுதனின் {பலராமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு, "நன்று! நன்று!" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் அமைதி அடைந்தனர்.(23) புத்திசாலியான பலதேவனின் {பலராமனின்} வார்த்தைகளால் அங்கு அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் சபையில் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர்.(24)

எதிரிகளை ஒடுக்குபவனான ராமன் {பலராமன்} வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இங்கே அமர்ந்து கொண்டு, நீ ஏன் அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?(25) ஓ அச்யுதா {கிருஷ்ணா}, உன் நிமித்தமாகவே, பிருதையின் மகன் {அர்ஜுனன்} இங்கு அழைக்கப்பட்டு நம்மால் கௌரவிக்கப்பட்டான். இருப்பினும், நமது மரியாதைக்கு அந்தப் பாவி {அர்ஜுனன்} உகந்தவனல்லன் என்று படுகிறது.(26) மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த எந்த மனிதன், தான் உணவு உண்ட தட்டை உடைத்துப் போடுவான்?(27) இத்தகு சம்பந்தத்தை ஏற்க விரும்பும் எவன்தான், இங்கு ஏற்ற தொண்டுகளைக் கருத்தில் கொண்டும், இன்பத்தை விரும்பி இத்தகு மூர்க்கமான செயலைச் செய்வான்?(28) அவன் {அர்ஜுனன்} நம் அனைவரையும் அவமதித்து, இன்று சுபத்திரையைத் தூக்கிச் சென்றதால், அவன் தனது மரணத்தை விரும்புகிறான் என்றே படுகிறது.(29) அவன் {அர்ஜுனன்} அவனது காலை எனது முடி தரித்த தலையில் வைத்துவிட்டான். ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, என்னால் எவ்வாறு இதைப் பொறுத்துக் கொள்ள முடியும்? மிதிக்கப்பட்ட பாம்பு அதைத் தாங்கிக் கொள்ளாது சீறுவது போல நானும் சீற வேண்டாமா?(30) இன்று நான் தனியாகச் சென்று உலகத்திலிருந்து கௌரவர்களை அழித்து ஒழிக்கிறேன்! அர்ஜுனனின் இந்த வரம்பு மீறிய செயலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றான்.(31)

அங்கிருந்த போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோர் அனைவரும், பலதேவன் {பலராமன்} சொன்னது அனைத்தையும் ஏற்று மேக முழக்கம் போலவும் துந்துபி வாத்தியம் போலவும் முழக்கம் செய்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(32)


ஆங்கிலத்தில் | In English