Tuesday, September 03, 2013

ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன்! - ஆதிபர்வம் பகுதி 226

Arjuna asked for weapons! | Adi Parva - Section 226 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : அக்னிக்கு வழி காட்டிய பிரம்மன்; அக்னி கிருஷ்ணனிடமும் அர்ஜுனனிடமும் வந்தது; அக்னியிடம் பேசிய அர்ஜுனன்; அக்னியிடம் வில்லும், குதிரைகளுடன் கூடிய தேரும்; வற்றாத அம்புகளும் கேட்ட அர்ஜுனன்…

வைசம்பாயனர் சொன்னார், "ஹாவ்யவாகனன் (அக்னி) கோபமும், ஏமாற்றமும் கொண்டு, தனது பிணி போக்கப்படாமல் {நோய் குணமாகாமலேயே}, பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சென்றான்.(1) பிரம்மனிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். அந்தச் சிறப்புவாய்ந்த தேவன், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அவனிடம் {அக்னியிடம்},(2) "ஓ பாவமற்றவனே, இந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நீ காண்டவ வனத்தை இன்றே உண்ணும் வழியை நான் கண்டுவிட்டேன்.(3) பழங்காலத்தின் தேவர்களான நரனும் நாராயணனும், இந்த மனித உலகத்தில் தேவர்களின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அவதரித்திருக்கிறார்கள்.(4) அவர்கள் அர்ஜுனன் என்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இப்போது காண்டவ வனத்தில்தான் தங்கியிருக்கிறார்கள்.(5) அந்தக் கானகத்தை எரிக்க அவர்களின் துணையை நாடுவாயாக. அதன் பிறகு, அந்த வனத்தைத் தேவர்களே காத்தாலும், நீ அதை உண்டுவிடலாம்.(6) அவர்கள் நிச்சயமாகக் காண்டவ வனத்தின் உயிரினங்கள் தப்பிப் போகாதவாறு இந்திரனை (யாரும் தப்பிப் போக இந்திரன் உதவினால் அவனை) முறியடிப்பார்கள். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை" என்றான்.(7)

இந்த வார்த்தைகளைக் கேட்ட அக்னி, விரைவாகக் கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறப்பு மிகுந்த அந்த இருவரிடமும் அவன் {அக்னி} என்ன பேசினான் என்பதை நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, இந்திரனின் விருப்பத்திற்கு எதிராகக் காண்டவ வனத்தை எரிக்கும் விருப்பம் கொண்ட அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, அந்தச் சந்தர்ப்பத்திற்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனிடம் {அக்னியிடம்},(8-10) "என்னிடம் எண்ணிலடங்கா அற்புதமான தெய்வீக ஆயுதங்கள் இருக்கின்றன. அதைக் கொண்டு வஜ்ரதாரிகளை {இந்திரர்களை} எதிர்த்தும் நான் போரிட முடியும்.(11) ஆனால், ஓ உயர்ந்தவரே {அக்னியே}, போர்க்களத்தில் எனது சக்தியை நான் செலுத்துவதற்கு வேண்டிய எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வில் என்னிடம் இல்லை.(12) எனது கரநளினத்திற்கு ஏற்ற வகையில் என்னிடம் வற்றாத கணைகள் {அம்புகள்} இல்லை. நான் எடுத்துச் செல்ல விரும்பும் எனது கணைகளின் சுமையை எனது தேரால் தாங்க முடியாது.(13) காற்றின் வேகம் கொண்ட தெய்வீக வெண்ணிறக் குதிரைகளும் மேக முழக்கம் செய்யும் சக்கரங்களும் பூட்டப்பட்ட சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரை நான் விரும்புகிறேன்.(14) மேலும், கிருஷ்ணனின் சக்திக்கு ஏற்றவகையில் நாகர்களையும் பிசாசங்களையும் கொல்லும் எந்த ஆயுதமும் மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} இல்லை.(15) ஓ உயர்ந்தவரே, இந்திரன் இந்த அகன்ற கானகத்தில் மழையைப் பொழியும் போது அதைத் தடை செய்யவும், இந்தக் காரியத்தில் நாங்கள் வெற்றி அடையவும் நீரே எங்களுக்கு வழி காட்ட வேண்டும்.(16) ஓ பாவகா {அக்னியே}, நாங்கள் ஆண்மையினாலும், ஆற்றலினாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓ உயர்ந்தவரே, அதற்குத் தேவையான பொருட்களை நீர்தான் எங்களுக்குக் கொடுக்க வேண்டும்" என்றான் {அர்ஜுனன்}.(17)


ஆங்கிலத்தில் | In English