Wednesday, September 11, 2013

அந்தணர்களுக்குப் படைக்கப்பட்ட பன்றிக்கறியும் மான்கறியும்! - சபாபர்வம் பகுதி 4

Brahmanas were served pork and venison! | Sabha Parva - Section 4 | Mahabharata In Tamil

(சபா கிரியா பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : மயனால் கட்டப்பட்ட அந்த தெய்வீக சபைக்குள் யுதிஷ்டிரன் நுழைதல்; பிராமணர்களுக்கு தானம் செய்தல்; அந்தச் சபையில் அமர்ந்திருந்த க்ஷத்திரியர்கள் மற்றும் முனிவர்களின் பெயர் வரிசை…

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரன், பத்தாயிரம் பிராமணர்களுக்கு, பாலுடனும், நெய் கலந்த அரசியுடனும், தேன் கலந்த கனிகளுடனும், கிழங்குகளுடனும், பன்றியிறைச்சி மற்றும் மான் இறைச்சியுடனும் உணவு கொடுத்த பிறகு, அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான். பல நாடுகளில் இருந்து வந்திருந்த அந்த பிராமணர்களுக்கு, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} எள்ளால் பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், ஜிபந்தி {ஜீவநதிகை} என்ற காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவையும், அரிசியுடன் தெளிந்த நெய்யைக் கலந்து {ஹவிஷ்யம்},(1,2) பல வகைகளில் தயாரிக்கப்பட்ட இறைச்சிகளுடன், மேலும் பல்வேறு உணவு வகைகளுடனும், உறிஞ்சத் தக்க வகையிலும், குடித்தக்கத்த வகையிலும் கொடுத்தான்.[1]  மேலும், பல ஆடைகளையும், சித்திர வேலைப்பாடு நிறைந்த அற்புத துணிகளையும் கொடுத்தான்.(3,4) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} ஒவ்வொரு பிராமணனுக்கும் ஆயிரம் பசுக்களையும் கொடுத்தான்.


[1] கும்பகோணம் பதிப்பில், "நெய்யும், பாலும், தேனும் சேர்ந்த அன்னத்தையும், பக்ஷணங்களையும், கிழங்குகளையும், கனிகளையும், எள்ளன்னத்தையும், ஜீவநதிகையென்னும் புஷ்டியைத் தரும் ஓர் உணவையும், ஹவிஷ்யமென்னும் உணவையும், பன்றிகள், மான்கள் முதலியவற்றின் பலவகை மாம்ஸங்களையும், கடித்து மெல்லத்தக்கவற்றையும், உறிஞ்சத்தக்கவற்றையும், குடிக்கத்தக்கவற்றையும் மிகுதியாகக் கொடுத்துப் பல தேசங்களிலிருந்து வந்த பிராமணோத்தமர்கள் பதினாயிரவரைப் புசிப்பித்து அனேக விதங்களான புதிய வஸ்திரங்களையும், புஷ்ப மாலைகளையும் அளித்து அவர்களைத் திருப்தி செய்வித்தார்" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், "ஜீவநதிகை என்பதை யவனர் விரிஞ்சியென்பர். சர்க்கரை போல் தித்திக்கும் புஷ்பமுள்ள ஒரு மூலிகையென்றும், சீந்திக் கொடியென்றும் சிலர் சொல்லுவர். ஹவிஷ்யமாவது பனிக்காலத்திலுண்டானவையும், புழுக்காதவையுமான வெள்ளைத் தானியத்தையும், பச்சைப்பயறு, எள், யவை, அரேணுகம், தினை, நீவாரம், குறுவையிவற்றையும், வாஸ்துகம், ஹிலமோசிகை, காலசாகம் என்னும் கீரைகளையும், கேமுகம் தவிர மற்ற கிழங்குவகைகளையும், இந்துப்பு, கடலுப்பு இவற்றையும், பசுவின் தயிர், நெய், ஆடையெடுக்காத பால், பாலப்பழம், மாம்பழம், கடுக்காய், புளி, ஜீரகம், நாகரங்கம், திப்பிலி, வாழைப்பழம், லவலிப்பழம், தான்றிக்காய் இவைகளையும், வெல்லம் தவிர்க்க கரும்பு ஸம்பந்தமான சர்க்கரை கற்கண்டு முதலியவற்றையும் சேர்த்துத் தைலபாகமில்லாமல் செய்யப்பட்டது. மேற்கூறியவற்றோடு தேங்காய், நெல்லிக்கனிகளையும் சேர்த்துக் கூறுவதுமுண்டு" என்று இருக்கிறது.

பிறகு ஓ பாரதா {ஜனமேஜயா}, "என்ன அதிர்ஷ்டமான நாள் இது!" என்ற பேரொலியுடன் நிறைவடைந்திருந்த பிராமணர்களின் குரல் விண்ணுலகம் வரை கேட்டது.(5) அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பலவகை இசையாலும், கணக்கிலடங்கா மதிப்புவாய்ந்த நறுமணப் பொருட்களாலும் தேவர்களை வழிபட்டு அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான்.(6) விளையாட்டு வீரர்களும், பரிசுக்காகப் போரிடும் வீரர்களும், பாடகர்களும், புகழ்மாலை சூட்டுபவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டி அந்த சிறப்பு வாய்ந்த தர்மனின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} நிறைவுசெய்தனர்.

இவ்வாறு கொண்டாட்டத்துடன் அரண்மனைக்குள் நுழைந்த யுதிஷ்டிரன், விண்ணுலகில் நுழையும் சக்ரனைப் {இந்திரனைப்} போலத் தனது தம்பிகளுடன் அந்த அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) அந்த அரண்மனையின் ஆசனங்களில் பாண்டவர்களுடன் சேர்ந்து, முனிவர்களும், பல நாட்டு மன்னர்களும் அமர்ந்தனர்.(9) அசிதர், தேவலர், சத்யர், சர்ப்பமாலி {ஸர்ப்பிர்மாலி}, மஹாசிரன் {மஹாசிரஸ்}, அர்வாவசு, சுமித்ரர், மைத்ரேயேர், சுனகர், பலி, பகர், தல்வியன் {தல்பாபுத்திரன்}, ஸ்தூலசிரன் {ஸ்தூலசிரஸ்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சுகர், வியாசரின் சீடர்களான சுமந்து, ஜைமினி, பைலர் ஆகியோரும் நாமும் {வைசம்பாயனனாகிய நானும்}; பிறகு தித்திரி, யக்ஞவல்கியர், தனது மகனுடன் {சௌதியுடன்} கூடிய லோமஹர்ஷணர் {ரோமஹர்ஷணர்}, அப்சுஹோமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர், தாமோஷ்ணீஷர், த்ரைபலி, பரணாதர், பரயானுகர் {கடஜானுகர்}, மௌன்ஞாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாரிகர், பலிவாகர், சிலீவாகர் {ஸினீவாகர்}, சத்யபாலர் {ஸ்ப்தபாலர்}, கிருதச்ரமர், ஜாதூகர்ணர், சிகாவத் {சிகாவான்}, ஆலம்பர், பாரிஜாதகர், மேன்மையான பர்வதர், பெரும் முனி மார்க்கண்டேயர், பவித்ரபாணி, சாவர்ணர், பாலுகி, காலவர், ஜங்காபந்து, ரைப்யர், கோபவேகர், பிருகு, ஹரிபப்ரு, கௌண்டின்யர், பப்ருமாலி, சனாதனர், கக்ஷீவத் {கக்ஷீவான்}, அஷிஜர், நசிகேதர், ஔஷிர், நாஸிகேதர், கௌதமர், பைங்கியர், வராஹர், சுனகர், பெரும் ஆன்மத் தகுதி கொண்ட சாண்டில்யர், குக்குரர், வேணுஜங்கர், கலாபர், கடர், மேலும், கல்விமான்களான பல முனிவர்களும், புலன்களையும் ஆன்மாவையும் முழு கட்டுக்குள் வைத்திருந்த முனிவர்களும், வேதம் மற்றும் வேதாங்கங்களை அறிந்த எண்ணிலடங்கா முனிவர்களும் சிறப்பு வாய்ந்த யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து, அவனிடம் புனித கதைகள் பேசி அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர். எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களும் அங்கே வந்திருந்தனர்.(10-20)

சிறப்புவாய்ந்தவனும் அறம்சார்ந்தவனுமான முஞ்சகேது, விவர்த்தனன், சங்கிராமஜிதன், துர்முகன், பலம் வய்ந்த உக்ரசேனன், கக்ஷசேனன், ஒப்பற்ற க்ஷேமகன், காம்போஜ நாட்டு மன்னன் கமடன், காலகேயர்களென்ற அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரதாரி {இந்திரன்} போல, தனியொருவனாக யவனர்களை நடுங்கச் செய்தவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான கம்பனன்,(21-23) ஜடாஸுரன், மத்ரகர்களின் மன்னன், குந்தி {குந்திபோஜன்}, கிராதர்களின் மன்னன் புளிந்தன், அங்கம் {அங்கன்}, வங்கம் {வங்கன்}, பௌந்தரம் {புண்ட்ரகன்} ஆகிய நாட்டு மன்னர்களும், {பாண்டியன்}, ஒட்ர நாட்டு மன்னனும், அந்தகன் {ஆந்தரன்}, சுமித்ரன், எதிரிகளைக் கொல்லும் சைப்பியன், கிராதர்களின் மன்னன் சுமணன் {ஸுமனஸ்}, யவனர்களின் மன்னன் சாணூரன், தேவராதன், போஜன், பீமரதன், கலிங்க மன்னன் சுருதாயுதன், மகதமன்னன் ஜெயசேனன், சுகர்மன், சேகிதானன், எதிரிகளைக் கொல்லும் புரு, கேதுமான், வசுதானன், வைதேஹன் {விதேஹ நாட்டு மன்னன்}, கிருதாக்ஷணன், சுதர்மன், அனிருத்தன், பெரும் பலம் வாய்ந்த சுருதாயு, ஒப்பற்ற அனூபராஜன், அழகான க்ரமஜித், தனது மகனுடன் சேர்ந்த வந்த சிசுபாலன், காருஷ நாட்டு மன்னன், ஆகியோர் அங்கே வந்திருந்தனர். மேலும் விருஷ்ணி குலத்தின் ஒப்பற்ற இளைஞர்களான ஆஹுகன், விப்ருது, கதன், சாரணன், அக்ரூரன், கிருதவர்மன், சினியின் மகன் சத்யகன், பீஷ்மகன், அங்கிருதி {அக்ருதி}, சக்திவாய்ந்த த்யுமத்சேனன் சோமக குலத்தைச் சார்ந்த வில்வீரர்களில் முதன்மையான கைகேயர்கள், யக்ஞசேனன் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் குந்தியின் மகன் யுதிஷ்திடிரனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி அங்கே அந்த சபையில் காத்திருந்தனர்.(24-31)

பெரும்பலம் பொருந்தியவர்களும், நன்கு ஆயுதம் தரித்திருந்தவர்களும், செல்வந்தர்களுமான கேதுமான், வசுமனஸ் மற்றும் எண்ணற்ற பல க்ஷத்திரியர்களும் அந்த சபையில் காத்திருந்தனர். பெரும் பலம் பொருந்திய அந்த இளவரசர்கள் மான்தோலுடுத்தி அர்ஜுனனிடம் ஆயுத அறிவியல் பயின்று யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர். ஓ மன்னா, அர்ஜுனனுக்குக் கீழிருந்து ஆயுத அறிவியலைப் பயின்ற விருஷ்ணி குலத்தின் இளவரசர்களான,(32-34) பிரத்யும்னன் {ருக்மிணியின் மகன்}, சாம்பன், சாத்யகியின் மகன் யுயுதானன், சுதர்மன், அனிருத்தன், சைப்பியன் ஆகிய மனிதர்களில் முதன்மையானவர்களும் மற்றும் பல தேசத்து அரசர்களும் அங்கே அந்த சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்.(35) தனஞ்செயனின் நண்பனான தும்புருவும், தனது அமைச்சர்களுடன் கூடிய கந்தர்வன் சித்திரசேனனும், பல கந்தர்வர்களும், அப்சரஸ்களும், வாய்ப்பாட்டு மற்றும் ஒலி ஒழுங்கு இசைக்கருவிகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும், தேவர்களுக்காக இனிய குரலில் பாட்டுப்பாடும் கின்னரர்களும், அங்கே பாண்டுவின் மகன்களுக்காகவும் அந்தச் சபையில் வீற்றிருந்த முனிவர்களுக்காகவும் காத்திருந்தனர். அந்தச் சபையில் அமர்ந்திருந்த பெரும் நோன்புகள் நோற்று உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்த அந்த மனிதர்களில் காளைகள், பிரம்மனுக்காக காத்திருக்கும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(36-40)


ஆங்கிலத்தில் | In English