Thursday, September 12, 2013

நாரதரின் விசாரணை! - சபாபர்வம் பகுதி 5

The enquiry of Narada! | Sabha Parva - Section 5 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் சபைக்கு வந்த நாரதர்; யுதிஷ்டிரன் தன் கடமைகளைச் சரியாகச் செய்கிறானா என்பதை அவனிடம் விசாரித்தது; நாரத நீதி…

வைசம்பாயனர் சொன்னார், "சிறப்பு மிகுந்த பாண்டவர்கள், அந்தச் சபையில் கந்தர்வத் தலைவர்களுடன் அமர்ந்திருந்த போது, ஓ பாரதா, வேதங்களையும் உபநிஷதங்களையும் அறிந்தவரும் - தேவர்களால் வழிபடப்படுபவரும், வரலாறுகளையும் புராணங்களையும், பழங்கால கல்பங்களையும்[1] (யுகச்சக்கரங்கள்), நியாய சாத்திரத்தையும் (தர்க்கம் - பேச்சுவார்த்தை), உச்சரிப்பு, இலக்கணம், யாப்பிலக்கிணம், அடிப்படைச் சொற்களின் விளக்கம், அறச்சடங்குகளின் விளக்கம், வானசாத்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களின் முழு அறிவையும் அறிந்த தேவமுனிவரான நாரதர் அந்தக் கூட்டத்திற்கு வந்தார்.(1,2)

[1] கல்பங்கள் (யுகச்சக்கரங்கள்),

காலத்தை பின்வருமாறு நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்:

12 மாதம் = 1 வருடம் ;

10,80,000 வருடங்கள் = 1 யுகம் ;

4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்  (சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்)

71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்.

இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள்.)

ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட 17,28,000 வருட காலத்தைக் கொண்டுள்ளது. எனவே 1 மன்வந்திரம் + 1 சாந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள்

14 மன்வந்திரம் + 14 சந்தி = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்.

432,00,00,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்.

1 கல்பம் + 1 கல்ப சாந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்.

1 கல்பம் அல்லது 432,00,00,000 வருடங்கள் = பிரம்மனின் ஒரு பகல் பொழுது.

அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும்.

பிரம்மதேவனின் ஒரு நாள் என்பது = 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = ஆக 864,00,00,000 வருடங்கள்

360 நாட்கள் (360 x 864,00,00,000 வருடங்கள்) கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.

அப்படிப்பட்ட 100 வருடங்கள் கொண்டது பிரம்மனின் ஆயுள்.

அதாவது, மேற்சொன்ன 864,00,00,000 வருடங்களை {864 கோடி வருடங்கள்} ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.

(சூரியனின் மொத்த ஆயுள் ஏறத்தாழ 900 கோடி ஆண்டுகள். நம்முடைய சூரியன் ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள், வாழ்ந்தாகிவிட்டது. இன்னும் ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் வாழும் என அறிவியலாள்ர்கள் கணித்துள்ளனர்.)

சாஸ்திர கணிப்பு படி பிரம்மனின் ஒரு நாள் என்பது 864 கோடி ஆண்டுகள். இன்றைய அறிவியல் அறிஞர்கள் கணிப்பு படி சூரியனின் ஆயுள் 900 கோடி ஆண்டுகள். - ஆதாரம்: http://134804.activeboard.com/t48612283/15/

நாரதர், கிடைத்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு ஊகித்து அறியும் திறமையையும் பெற்றவராக இருந்தார். ஐந்து முன்மொழிகள் கொண்ட நேரியல் வாத முறையின் சரியான மற்றும் தவறான பகுதிகளைக் குறித்து தீர்மானிக்கத் தகுதிவாய்ந்தவராகவும் அவர் இருந்தார். அவர் {நாரதர்}, பெரும் ஆன்மா கொண்டு, மேலும் கீழும், சுற்றியும் இருக்கும் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் கண்டு, அறம் {தர்மம்}, பொருள் {செல்வம் (அர்த்தம்)}, இன்பம், வீடு {முக்தி} ஆகிய கட்டமைப்புகளில் உறுதியான தீர்மானங்களைக் கொண்டிருந்ததால், பிரகஸ்பதிக்கே தொடர்ந்து பதிலளிக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார்.(3-5)

தேவர்களையும் அசுரர்களையும் அடக்க அவர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்த விரும்பும் அவர் {நாரதர்}, சாங்கியம் மற்றும் யோக வகை தத்துவங்கள் இரண்டிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தார்.(6) போர் மற்றும் ஒப்பந்த அறிவியலையும், தனது உற்று அறியும் திறனால் மட்டும் அல்லாமல் ஒப்பந்தம், போர், போர்ப்பயணம், எதிரிக்கு எதிரானவைகளைப் பராமரித்தல், தந்திரங்கள், மறைந்திருத்தல் ஆகிய ஆறு அறிவியல்களைக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வருபவராகவும்,(7) அனைத்துக் கல்வியிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும், போர், இசை ஆகியவற்றின் பிரியராகவும், எந்த அறிவியலாலும் எதன் மூலமாகவும், எந்த செயலின் மூலமாகவும் முறியடிக்க முடியாதவராகவும், கணக்கற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவும் அவர் {நாரதர்} இருந்தார்.

பல்வேறு உலகங்களில்[2] உலவும் அந்த முனிவர் {நாரதர்} {யுதிஷ்டிரனின்} அந்த சபைக்கு வந்தார்.(8,9) அளவிட முடியாத பிரகாசமும் பெரும் சக்தியும் கொண்ட அந்த தெய்வீக முனிவர், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பாரிஜாதர், புத்திசாலியான ரைவதர், சௌமியர் மற்றும் சுமுகர் ஆகியோருடன் அங்கே இருந்தார்.(10) மனோவேகம் கொண்ட அந்த முனிவர் {நாரதர்} பாண்டவர்களைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தார். அங்கே வந்த அந்த பிராமணர் யுதிஷ்டிரனுக்கு தனது மரியாதையையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, அவன் {யுதிஷ்டிரன்} வெற்றி அடையும்படி வாழ்த்தினார்.(11)

[2] பல்வேறு உலகங்களில் உலவும் அந்த முனிவர் {நாரதர்} அந்த சபைக்கு வந்தார். எனில்....

பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றிய பிரபஞ்சத்தில் குறைந்த பட்சம் ஐயாயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் (Galaxies) இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களிலும் ஏறக்குறைய பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களும் (சூரியன்களும்}, அந்த நட்சத்திரத்திரங்களை (சூரியன்களை) சுற்றி வரும் எண்ணற்ற கிரகங்களும் (உலகம் எனப்படும் பூமி போன்ற கோள்களும்) உள்ளன.

இத்தகைய பல வித்தியாசமான உலகங்களில் உலவும் நாரதர் என எடுத்துக் கொள்ளலாம்.

கல்விமானான அம்முனிவர் அங்கே வந்ததைக் கண்டதும், கடமைகளின் விதிகளை அறிந்த பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, உடனே தனது தம்பிகளுடன் எழுந்தான்.(12) தாழ்மையுடன் பணிந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரனை}, மகிழ்ச்சியுடன் அந்த முனிவரை {நாரதரை} வணங்கி வழிபட்டு அவருக்கு உரிய இருக்கையை அளித்தான்.(13) அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவருக்கு பசுவும், இயல்பாகக் கொடுக்கப்படும் காணிக்கையான தேனுடன் கலந்த அர்க்கியத்தையும், மதுபர்க்கத்தையும் கொடுத்தான். அனைத்து கடமைகளையும் அறிந்த அந்த ஏகாதிபதி அந்த முனிவரை ரத்தினங்களாலும் நகைகளாலும் முழு இதயத்துடன் வழிபட்டான்.(14) யுதிஷ்டிரனிடம் இருந்து உரிய முறையில் வழிபாட்டை ஏற்ற அந்த முனிவர் பெரும் திருப்தி கொண்டார். இப்படி பாண்டவர்களால் வழிபடப்பட்ட, வேதங்களில் முழு நிபுணத்துவம் கொண்ட அந்தப் பெரும் முனிவரான நாரதர், யுதிஷ்டிரனிடம் கீழ்க்கண்ட வார்த்தைகளில் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு குறித்து விசாரித்தார்.(15)

நாரதர், "நீ ஈட்டும் செல்வம் உரிய பொருள்களுக்காகச் செலவிடப்படுகிறதா? உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா? நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா? உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்காமல் இருக்கிறதா?(16) ஓ மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, மூன்று வகையான (நல்ல, அலட்சிய, தீய வகைகளாக இருக்கும்) உனது குடிகளிடம் உனது மூதாதையர்கள் பயின்றதைப் போல அறம் மற்றும் பொருளுக்கு இசைவான உன்னத நடத்தை {ஒழுக்கத்தைக்} கொண்டிருக்கிறாயா?(17)

பொருளுக்காக அறத்துக்கும், அல்லது எளிதாக மயக்கும் இன்பத்துக்காக, அறத்துக்கும், பொருளுக்கும் தீங்கு செய்யாது இருக்கிறாயா?(18) ஓ அனைவரின் நலனின் அர்ப்பணிப்புடன் இருக்கும் அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்ய அறிந்தவனான நீ, அறம் {அனைத்திலும் நல்லவனாக இருக்க முயற்சித்தல்}, பொருள் {சம்பாதிப்பது}, இன்பம் {மகிழ்ச்சியாக இருப்பது}, வீடு {முக்தி அடைய முயற்சி செய்தல்} ஆகியவற்றுக்கு நீதியுடன் சரியாக நேரத்தைப் பிரித்து செலவிடுகிறாயா?(19) ஓ பாவமற்றவனே, மன்னர்களின் ஆறு பண்புக்கூறுகளைக் கொண்டு (பேச்சில் புத்திசாலித்தனம், வழி செய்ய தயாராக இருத்தல், எதிரியைக் கையாள்வதில் புத்திசாலித்தனத்துடன் இருத்தல், நினைவுத் திறனுடன் இருத்தல், அறங்களையும், அரசியலையும் அறிந்து வைத்திருத்தல் ஆகியனவற்றைக் கொண்டு) ஏழு {7} வழிமுறைகளைக் (வேற்றுமை விதைத்தல், தண்டனை அளித்தல், சமரசம், பரிசுகள், மந்திரங்கள், மருத்துவம் மற்றும் மாயம் ஆகியவற்றைக்) கவனிக்கிறாயா? நீ உனது சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகு எதிரிகளின் பதினான்கு உடைமைகளைப்[3] பரிசோதிக்கிறாயா?(20)

[3] அவையாவன: நாடு, கோட்டைகள், ரதங்கள், யானைகள், குதிரைப்படை, காலாட்படை, மாநிலத்தின் {நாட்டின்} முதன்மை அதிகாரிகள், உயர்குடி பெண்களின் அந்தப்புரம், உணவு வழங்கல், இராணுவம் மற்றும் பொருள் வரவுக்கான கணக்கீடுகள், நடைமுறையில் உள்ள சமயக் கட்டுப்பாடுகள் {நடைமுறையில் உள்ள மத ஒப்பந்தங்கள்}, மாநில {நாட்டின் கணக்கு வழக்குகள்} கணக்குகள், வருவாய், மதுக்கடைகள், இரகசிய எதிரிகள் ஆகும்.

ஓ அறம்சார்ந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, உனது நாட்டிலும் எதிரியின் நாட்டிலும் எட்டு தொழில்களைச் (விவசாயம், வணிகம் போன்றவை)[4] சரியாக ஆய்வு செய்து கவனிக்கிறாயா?(21)

[4] விவசாயம், வணிகம், கோட்டை, அணை, யானை பிடித்தல், புதையல் எடுத்தல், தங்கம் வெட்டுதல், காலி இடங்களில் மக்களைக் குடியேற்றுதல் ஆகியன என்று கங்குலி அல்லாத வேறு உரையில் கண்டேன்.

ஓ பாரத குலத்தின் காளையே, உனது நாட்டின் ஏழு முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் ஈட்டிய செல்வத்தால் சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.(22) மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன்.(23) உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா? அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா?(24) அந்நியர்களிடமும், உன்னிடம் நடுநிலையுடன் நடந்து கொள்பவர்களிடமும் நீ நடு நிலைமையுடன் நடந்து கொள்கிறாயா? ஓ வீரனே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்களை, வயதில் மூத்தவர்களாக, கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக் கூடாது என்பதைப் புரிந்து கொள்பவர்களாக, பிறப்பாலும் இரத்தத்தாலும் சுத்தமானவர்களாக, உன்னிடம் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தகுதியில் உன்னைப் போலவே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாயா? ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அரசர்களின் வெற்றிகளுக்கு நல்ல ஆலோசனைகளே {அமைச்சர்களே} காரணம்.(25,26)

ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, உனது நாடு, சாத்திரங்களைக் கற்றவர்களும், தங்கள் ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்பவர்களுமான அமைச்சர்களால் காக்கப்படுகிறதா? எதிரிகள் அதை பலவீனப்படுத்தாமல் இருக்கின்றார்களா?(27) நீ உறக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கிறாயா? சரியான நேரத்தில் விழிக்கிறாயா? லாபம் விளைவிக்கும் தேடுதல்களை, இரவின் கடைசி மணிநேரங்களில் நினைத்து, அடுத்த நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாதென்றும் தீர்மானிக்கிறாயா?(28)

எதையும் தனிமையாக நீயே தீர்மானிக்காமலும், அதே நேரத்தில் பல பேரிடம் ஆலோசனை கேட்காமலும் இருக்கிறாயா? நீ செய்ய நினைக்கும் ஆலோசனைகளை உனது நாடு அறியாமல் இருக்கிறதா?(29) சிறிய சாதனையும், பெரிய பயனும் உள்ள காரியங்களைத் தேர்ந்தெடுத்து அப்படிப்பட்டவற்றை இடையூறு வராதவாறு விரைவாகச் செய்கிறாயா?(30) உழவர்களை உனது பார்வையில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா? அவர்கள் உன்னை அணுக அச்சமில்லாமல் இருக்கிறார்களா? நீ உனது காரியங்களை நம்பிக்கைக்குரிய தூய்மையானவர்களையும், அனுபவம் கொண்டவர்களையும் கொண்டு செய்கிறாயா? ஓ வீர மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் சாதிக்கப்பட்ட சாதனைகளையும் உன்னால் தொடங்கப்பட்டு முடியாத காரியங்களை மட்டுமே மக்கள் அறிந்து, தொடங்கப்படாததையும், ஆலோசனையில் உள்ளதையும் அறியாமல் இருக்கிறார்களா?(31,32)

இளவரசர்களுக்கும், படைகளின் தலைவர்களுக்கும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும், ஒழுக்க அறிவியலையும் கற்றுக் கொடுக்க அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறாயா?(33) ஆயிரம் பாமரர்களைக் கொடுத்து ஒரு கல்விமானை விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா? கல்விமானே, நாட்டுக்குத் துயர் நிறைந்த காலங்களில் பெரும் நன்மையைச் செய்கிறான்.(34) உனது கோட்டைகளில் எப்போதும், செல்வமும், உணவும் ஆயுதங்களும், நீரும், பொறிகளும் கருவிகளும், இருக்கின்றனவா? அங்கே பொறியாளர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்களா?(35) புத்திசாலித்தனமும், வீரமும் கொண்ட ஒரே அமைச்சரேனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, ஞானமும் நீதியும் கொண்டிருந்தானானால், அவனால் ஒரு மன்னனுக்கோ, மன்னனின் மகனுக்கோ பெரும் வளமையைக் கொடுக்க முடியும். எனவே, நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னிடம் அப்படிப்பட்ட அமைச்சர் இருக்கிறாரா?(36)

மும்மூன்று உளவாளிகளைக் கொண்டு உனது எதிரியின் பதினெட்டு தீர்த்தங்களைக்[5]  குறித்து அனைத்தையும் அறிந்து கொண்டு, பிறகு உன்னுடைய பதினைந்து  தீர்த்தங்களையும்[6] அறிந்து கொண்ட பிறகு அந்த மூன்று உளவாளிகளும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறியாமல் இருக்கின்றனரா?(37)

[5] எதிரியின் 1. அமைச்சன், 2. புரோகிதன், 3. இளவரசன், 4. தளபதி, 5. வாயில் காப்போன், 6. அந்தப்புர அதிகாரி, 7. சிறைச்சாலை அதிகாரி, 8. செல்வங்களை வாங்கி வைப்பவன், 9. செல்வங்களை செலவழிப்பவன், 10. கட்டளையை நிறைவேற்றுபவன், 11. நகர அதிகாரி, 12. காரியங்களை விதிப்பவன், 13. நீதிபதி 14. சபை தலைவர், 15. தண்டனை அளிப்பவன், 16. தண்டனையை நிறைவேற்றுபவன், 17. எல்லைக் காவலாளி, 18. காட்டதிகாரி.

[6] மேற்கண்டதில் அமைச்சன், புரோகிதன், இளவரசன் நீங்கலாக மற்றது அனைத்தும். இது தன் நாட்டுக்குப் பொருந்துவது.

எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, உனது எதிரிகளை அவர்களுக்குத் தெரியாமல் கவனத்துடன் கண்காணித்து வருகிறாயா?(38) உன்னால் மதிக்கப்படும் உனது புரோகிதர், எளிமையும், தூய குருதியும், புகழும் கொண்டவருமாக இருந்து, பொறாமை அற்றவராகவும், தாராளத்தன்மை அற்றவராகவும் இருக்கிறாரா? கட்டளை இடும் அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தில், நன்னடத்தையுள்ள, புத்திசாலியான, வஞ்சனை அற்ற ஒரு பிராமணனை, நெருப்பு முன்பான உனது தினச் சடங்குகளுக்காக நியமித்திருக்கிறாயா? அவர் சரியான நேரத்தில் எப்போதெல்லாம் ஹோமங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறாரா? நீ நியமித்திருக்கும் கணியர் {சோதிடர்} பொருள்களின் பொது அமைப்பை அறியும் திறன் வாய்ந்தவரா? சகுனங்களை அறிந்து சொல்லத்தக்கவரா? இயற்கைத் தடங்கல்களை சமன்படுத்தவல்ல தகுதி வாய்ந்தவரா?(39-41)

மதிப்புமிக்க அலுவல்கள் நடைபெறும் இடங்களில் மதிப்புக்குரிய வேலையாட்களை நியமித்திருக்கிறாயா? அலட்சியமான அலுவல்களில் அலட்சியமானவர்களையும் கீழ்மையான அலுவல்களில் கீழ்மையானவர்களையும் நியமித்திருக்கிறாயா?(42) உயர்ந்த அலுவல்களில் வஞ்சனையற்றவர்களாகவும், பரம்பரை பரம்பரையாக நன்னடைத்தைக்குப் பேர் போன குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவும், இயல்பானவர்களுக்கு மேலான குணம் கொண்டவர்களாகவும் இருக்கும் அமைச்சர்களை நியமித்திருக்கிறாயா?(43) உனது மக்களை கடுமையான மற்றும் கொடூரமான தண்டனைகள் கொடுத்து தண்டிக்காமல் இருக்கிறாயா? மேலும், ஓ பாரத குலத்தின் காளையே, உனது அமைச்சர்கள் உனது கட்டளைக் கீழ்ப்படிந்தே நாட்டை ஆள்கிறார்களா?(44)  வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் சில வீழ்ந்த மனிதர்களிடம் லேசாகச் {மேலும் அவர்களால் வேள்விகளைச் செய்ய இயலாதவர்கள் என்று} சொல்வது போலவும், அல்லது கர்வம் கொண்ட கணவர்களை மனைவிகள் லேசாக எடுத்துக் கொண்டு அவமதித்து தன்னடக்கமற்றவர்களாக இருப்பது போலவும் உனது அமைச்சர்கள் உன்னை அவமதிக்காமல் இருக்கின்றனரா?(45)

உனது படைகளின் தளபதி போதுமான நம்பிக்கையும், வீரமும், புத்திசாலித்தனமும், அமைதியும், நன்னடத்தையும், கொண்டு நல்ல பிறப்பாகப் பிறந்து, உனக்கு அர்ப்பணிப்புடன் இருந்து தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானா?(46) அனைத்து வகையிலும் திறன்வாய்ந்த, நன்னடத்தையுள்ள, பெரும் வீரம் கொண்ட உனது படையின் தலைமை அதிகாரிகளை மரியாதையுடன் கருதியும் நடத்தியும் வருகிறாயா?(47) உனது படைகளுக்குத் தேவையான சலுகைகளையும், ஊதியத்தையும் குறித்த நேரத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? இவற்றை {சலுகை + ஊதியம்} கொடுக்காதிருந்து அவர்களை ஒடுக்காமல் இருக்கிறாயா?(48) ஊதியத்தை நிலுவையில் வைப்பதும், சலுகைகளை முறையான குறித்த நேரங்களில் கொடுக்காமல் நினைத்த நேரங்களில் கொடுப்பதும், படைகளைக் கலகம் செய்யத் தூண்டும் என்றும், இவையே தீமைகளில் பெரும் தீமை என்று கற்றவர்கள் கருதுகிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறாயா?(49) உயர் குடி மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உன்னிடம் அர்ப்பணிப்புடனும், போரில் உனக்காக தங்கள் உயிரைக் கொடுக்க தாயாராகவும் இருக்கிறார்களா?(50)

படையைப் பொறுத்தவரையில், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒருவன், தான் நினைத்தவாறு உத்தரவிட நீ அனுமதிக்காமல் இருக்கிறாயா?(51) உனது பணியாட்களில் யாராவது, தனித்திறமையுடன் ஒரு சாதனையைச் செய்த பிறகு, உன்னிடம் கூடுதல் மரியாதையாக கூடுதல் உணவையும் கூடுதல் ஊதியத்தையும் அடைவதில் ஏமாற்றம் கொள்ளாமல் இருக்கின்றனரா?(52) கல்விமான்களான எளிமையானவர்களையும், அனைத்து வகை அறிவிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் சரியானபடி செல்வங்களைப் பரிசளித்தும், அவரவர் தகுதிக்கேற்ப மரியாதை கொடுத்தும் கௌரவித்து வருகிறாய் என நான் நம்புகிறேன்.(53) ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா?(54) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா?(55)

ஓ பூமியின் தலைவா, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல அவர்கள் உன்னை அச்சமில்லாமல் அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா?(56) ஓ பாரதகுலத்தின் காளையே, உனது எதிரியின் துயரைக் கேட்டவுடன், நேரத்தைக் கடத்தாமல் உனது முப்படைகளையும்  அங்கே நடத்திச் செல்கிறாயா?(57) ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, நேரம் வந்ததும், அனைத்து சகுனங்களையும் கண்டு, அவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்து, வெற்றியை அளிக்கும் பனிரெண்டு மண்டலங்களையும்[7] குறித்துக் கொண்டு படைகளை நடத்துகிறாயா?(58)

[7] சேமிப்பு, மறைவிடம், போன்றவையும் படை வீரர்கள் ஊதியத்தை முன்பணமாகக் கொடுத்தல் ஆகியவையும்.

ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, எதிரியின் முக்கிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப நகைகளையும், ரத்தினங்களையும் எதிரி அறியாதவாறு கொடுத்து வருகிறாயா?(59) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, முதலில் உனது ஆன்மாவை வெற்றிகொண்டு, உனது புலன்களை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு, உனது எதிரிகள் எந்த மாதிரியான ஆசைளுக்கெல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து வெற்றி கொள்ள முனைகிறாயா?(60) நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான இணக்கம் உண்டாக்குதல்{1}, பரிசளித்தல்{2}, ஒற்றுமையின்மையை விளைவித்தல்{3}, பலத்தைப் பிரயோகம் செய்தல்{4} போன்ற {சாம, தான, பேத, தண்ட} உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா?(61) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா? அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, எஞ்சிய சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா? அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா?(62) உனது படைகள், வழக்கமான துருப்புகள்{1}, கூட்டணி துருப்புகள்{2}, கூலிப்படையினர்{3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள்{4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள்{1}, யானைகள்{2}, குதிரைகள்{3}, அதிகாரிகள்{4}, காலாட்படை{5}, பணியாட்கள்{6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள்{7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர்{8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா?(63)

ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, எதிரி நாட்டின் பயிர் அறுப்பு காலத்தையும், பஞ்ச காலத்தையும் {பயிரைக் காப்பாற்றும் காலத்தையும்} கருத்தில் கொண்டு எதிரிகளைக் கொல்கிறாயா?(64) ஓ மன்னா, உனது பணியாட்களும், முகவர்களும், உனது நாட்டிலும், எதிரிகள் நாட்டிலும் தொடர்ந்து தங்கள் தங்கள் கடமைகளையாற்றி, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள், என நான் நம்புகிறேன்.(65) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உனது உணவு, நீ அணியும் ஆடைகள், நீ பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான பணியாட்களை நியமித்திருக்கிறாய், என நான் நம்புகிறேன்.(66) ஓ மன்னா, {யுதிஷ்டிரா} உனது கருவூலம் {பொக்கிஷம்}, தானியக் களஞ்சியம், தொழுவங்கள் {மாட்டுத் தொழுவம், குதிரைக் கொட்டகை போன்றவை}, படைக்கலன்கள், பெண்களின் அந்தப்புரங்கள் ஆகியவை உனது நன்மையை விரும்பி உனக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பணியாட்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, என நான் நம்புகிறேன்.(67) ஓ ஏகாதிபதியே, {யுதிஷ்டிரா} முதலில், உனது வீட்டுப் பணியாட்களிடம் இருந்தும், பொது பணியாட்களிடம் இருந்தும், உனது உறவினர்களின் பணியாட்களிடம் இருந்தும், உன்னை நீ பாதுகாத்துக் கொண்டும் உனது உறவினர்களால் உனது பணியாட்களைப் பாதுகாத்துக் கொண்டும் வருகிறாய், என நான் நம்புகிறேன்.(68)

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, காலையில், நீ மதுவுக்கும், விளையாட்டுகளுக்கும், பெண்களுக்கும் செலவு செய்யும் மிதமிஞ்சிய செலவுகளைக் குறித்து, உனது பணியாட்கள் உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களா?(69) எப்போதும் உனது செலவு, உனது வருமானத்தில் நாலில் ஒரு பாகத்திலோ, மூன்றில் ஒரு பாகத்திலோ அல்லது அரை பாகத்திலோ முடிகிறதா?(70) உணவு, செல்வம், உறவினர், மூத்தவர், வணிகர், முதியவர், மற்ற கிளைகள், துயரத்தில் இருப்பவர்கள் ஆகியோரை எப்போதும் ஆதரித்து வருகிறாயா?(71) உனது வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள உன்னால் நியமிக்கப்பட்ட கணக்கர்களும், எழுத்தர்களும், ஒவ்வொரு நாளும் காலையில் உன்னிடம் வரவு செலவுகள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறார்களா?(72) காரியங்களைச் சாதிக்கும் பணியாட்களையும், உனது நன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களையும், புகழ் பெற்றவர்களையும் அவர்களிடம் குற்றம் இல்லாதபோதே அவர்களை அதிகாரங்களில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா?(73)

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, மேன்மையானவர்கள், அலட்சியமானவர்கள், கீழ்மையானவர்கள் ஆகியோரை சோதனை செய்த பிறகு, அவர்களைத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறாயா?(74) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, திருடர்களையோ, சபலத்துக்கு ஆட்படுபவர்களையோ, பகையுள்ளவர்களையோ, வயதில் இளையவர்களையோ பணியில் நியமிக்காமல் இருக்கிறாயா?(75) திருடர்களாலும், பேராசைக்காரர்களாலும், சிறுவர்களாலும், பெண்களாலும் உனது நாட்டுக்குத் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்கிறாயா? உனது நாட்டில் இருக்கும் உழவர்கள் மனநிறைவுடன் இருக்கிறார்களா?(76) வேளாண்மை வான்மழையை மட்டும் நம்பியிராமல், பெரிய குளங்களும் ஏரிகளும் நாடு முழுவதும் தகுந்த இடைவெளி கொண்ட தொலைவுகளில் கட்டப்பட்டுள்ளனவா?(77) உனது நாட்டின் உழவர்களுக்கு விதையோ உணவோ பற்றாக்குறையில்லாமல் இருக்கின்றனவா? உழுபவர்களுக்கு அன்புடன் நூற்றுக் கணக்கில் கடன் {விதை நெல்களை} கொடுத்து, அதிகமாக இருப்பதில் நூறில் நான்கு பங்கை எடுத்துக் கொள்கிறாயா?(78)

ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான்கு தொழில்களான, உழவு{1}, வணிகம்{2}, கால்நடை வளர்த்தல்{3}, வட்டிக்கு கடன் கொடுத்தல்{4} ஆகியவை நேர்மையான மனிதர்களால் நடத்தப்படுகின்றனவா? ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா} இவற்றிலேயே உனது மக்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.(79) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களும் ஞானவான்களுமான ஐந்து மனிதர்களை, நகரம்{1}, கோட்டை{2}, வணிகர்{3}, உழவர்{4}, குற்றவாளிகளைத் தண்டித்தல்{5}, ஆகிய ஐந்து அலுவலகங்களில் நியமித்து, அவர்களை {அந்த ஐவரை} நாட்டின் நன்மைக்காக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வேலை செய்ய வைக்கிறாயா?(80) உனது நகரங்களின் பாதுகாப்புக்காக, கிராமங்களை நகரங்கள் போலவும், சிறுகிராமங்களும் புறநகர்களும் கிராமங்கள் போலவும் செய்யப்பட்டிருக்கின்றனவா? இவையெல்லாம் உனது நேரடிக் கண்காணிப்பில் செய்யப்பட்டு, உனது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா?(81) உனது நகரத்தைக் கொள்ளையிடும் கொள்ளையரும் திருடர்களும், உனது நகர்க்காவலர்களால் உனது நாட்டின் சமமான மற்றும் சமமற்றப் {மேடு பள்ளமான} பகுதிகளிலும் பின்தொடரப்படுகிறார்களா?(82) பெண்களை ஆறுதலுடன் நடத்துகிறாயா? அவர்களுக்கு உனது ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களிடம் {பெண்களிடம்} நீ எந்த நம்பிக்கையும் கொள்ளாமல், அவர்கள் {பெண்கள்} எதிரில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறாயா?(83)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஏதாவது ஆபத்தைக் கேள்விப்பட்டாலும், அது குறித்து சிந்திக்காமல், அந்தப்புரங்களில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு படுத்துக்கிடக்காமல் இருக்கிறாயா?(84) இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில்[8] உறங்கி, {நான்காவது பிரிவில்} அறத்தையும் பொருளையும் சிந்தித்து எழுகிறாயா?(85) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரியான நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து, நன்றாக உடுத்திக் கொண்டு, மங்கல நேரங்களை அறிந்த அமைச்சர்கள் துணையுடன் உன்னை உனது மக்களின் காட்சிக்கு அளிக்கிறாயா?(86) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, கைகளில் வாளுடனும், பல ஆயுதங்களுடனும் இருக்கும் சிவப்பு ஆடை உடுத்தியவர்கள் {மெய்காப்பாளர்கள்}, உன்னைக் காப்பதற்காக உனது அருகில் இருக்கிறார்களா?(87)

[8] மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரங்களை நான்காகப் பிரித்து, முதல் பிரிவு (ஜாமம்) மாலை நேரமாதலால் (6.00 - 9.00) தூங்காமல், இரண்டாவது பிரிவு (ஜாமம்) {9.00 - 12.00) மற்றும் மூன்றாவது பிரிவு (ஜாமம்) (12.00 - 3.00)ல்} தூங்கி, நான்காவது பிரிவில் {(ஜாமத்தில்) 3.00-6.00 மணிக்குள்}

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தண்டனைக்குத் உகந்தவர்களிடமும், வழிபாட்டுக்குத் தகுந்தவர்களிடமும், உன்னிடம் அன்புடன் இருப்பர்களிடமும், உன்னை விரும்பாதவர்களிடமும், நீதி தேவன் {தர்மதேவன், யமன்} போல சமமாக நடந்து கொள்கிறாயா?(88) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, மருந்துகளாலும், பத்தியங்களாலும், உடல்நோயையும், பெரியவர்கள் அறிவுரைகளால் மன நோயையும் குணப்படுத்திக் கொள்கிறாயா?(89) உனது உடல்நலத்தைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் எட்டு வகை சிகிச்சைகளை[9] அறிந்து உன்னிடம் பிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்களா?(90) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உன்னிடம் வந்த வாதி, பிரதிவாதிகளிடையே பேராசையாலோ, அறியாமையாலோ, கர்வத்தாலோ முடிவு காணமுடியாத நிலையில் அவர்களை வஞ்சிக்காமல் இருக்கிறாயா?(91) பேராசையாலோ, அறியாமையிலோ, உனது பாதுகாப்பை நாடி நம்பிக்கையுடனும் அன்புடனும் வந்தவர்களை ஏமாற்றாமல் இருக்கிறாயா?(92) உனது ஆட்சியில் வசிக்கும் மக்கள், எதிரிகளால் பொருள் கொடுத்து வசப்படுத்தப்பட்டவர்களாக ஒன்று சேர்ந்து உன்னுடன் பகை கொள்ளாமல் இருக்கிறார்களா?(93) உனது எதிரிகளில் பலவீனர்கள், உனது ஆலோசனைகளாலும் வலிமையான துருப்புகளாலும் எப்போதும் நசுக்கப் படுகிறார்களா? பலவான்கள், நல்ல ஆலோசனையின் உதவியுடனோ, நல்லாலோசனை மற்றும் துருப்புகளின் உதவியுடனோ ஒடுக்கப்படுகிறார்களா?(94) உனது நாட்டின் முக்கியத் தளபதிகள் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களா? அவர்கள் உனது உத்தரவின் பேரில் அவர்களது உயிரைக்கூட உனக்காகத் தர சித்தமாக இருக்கிறார்களா?(95)

[9] எட்டு வகை சிகிச்சைகள் என்பன. 1.சல்யம் = உடலுக்குள்ளிருக்கும் முள் முதலியவற்றை எடுப்பது. 2.சாலாகயம் = குத்தி நீர் எடுப்பது. 3.காயசிகித்ஸை = நோய்க்கு மருந்து கொடுப்பது. 4.பூதவித்தை=பேய் முதலியவற்றை ஓட்டுவது. 5.கௌமாரப்ருத்யம் = குழந்தைகளுக்கும், பெண்களுக்குமான சிகிச்சை. 6.அகததந்திரம் = நஞ்சு சிகிச்சை. 7.ரஸாயனதந்திரம்=உடல் பருமனையும், வாழ்நாள் நீட்டிப்பு முதலியவற்றை உண்டாக்குவது. 8.வாஜீகரணம் = போகங்களில் அதிக உற்சாகப்படுத்துவது.

நீ பிராமணர்களையும், ஞானிகளையும் அவர்களது தரத்துக்கு ஏற்றபடியும், கல்வியின் பல கிளைகளில் அவர்கள் அடைந்த தகுதியின் அடிப்படையிலும் வழிபடுகிறாயா? இத்தகைய வழிபாடு உனக்கு நன்மையைப் பயக்கும் என்பதில் ஐயமில்லை.(96) உனக்கு முன்பே இருந்த மனிதர்களால் பயிலப்பட்ட மூன்று வேதங்களை அடிப்படையாகக் கொண்ட அறத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களை நீயும் பின்பற்றுகிறாயா?(97) சாதித்த பிராமணர்கள் உனது இல்லத்தில் சத்துள்ள அற்புதமான உணவால் உனது பார்வையில் கொண்டாடப்படுகிறார்களா? அந்த விருந்தின் முடிவில் பணம் சம்பந்தமான பரிசுகளை அவர்கள் பெறுகிறார்களா?(98) ஆசைகளை உன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, மனத்தில் ஒருமையுடன், வாஜபேயம் மற்றும் பௌண்டரீகம் என்ற வேள்விகளை அவற்றுக்குரிய முழு சடங்குகளுடன் செய்ய முயற்சிக்கிறாயா?(99)

உனது உறவினர்களுக்கும், மூத்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், தேவர்களுக்கும், துறவிகளுக்கும், பிராமணர்களுக்கும், மக்களுக்கும் நன்மையைச் செய்து கொண்டு கிராமங்களில் இருக்கும் நெடிய (ஆல) மரங்களுக்கும் நீ தலை வணங்குகிறாயா?(100) ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, யாருடைய துன்பத்துக்கும் கோபத்துக்கும் நீ காரணமாக இருக்கிறாயா? மூன்று மங்கலக்கனிகளை அருளும் புரோகிதர்கள் உனது அருகில் எப்போதும் இருக்கிறார்களா?(101) ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் சொன்னவாறு உனது மனோநிலையும், பயிற்சிகளும் இருக்கின்றனவா? இவைகள் {மேலே சொன்னவைகள்} ஒருவனது புகழை பரப்பி, அறம், இன்பம் மற்றும் பொருளுக்குக் காரணமாக இருந்து வாழ்வின் நீட்சியை மேம்படுத்தும்.(102) மேற்சொன்ன வழிகளில் தன்னை அமைத்துக் கொள்பவன், தனது நாடு துயரத்திலோ அல்லது பாதிக்கப்பட்டோ இருப்பதைக் காண மாட்டான்; அந்த ஏகாதிபதி முழு உலகத்தையும் வென்று, உயர்ந்த இன்பநிலையை அனுபவிப்பான்.(103)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சாத்திரமறியா அமைச்சர்களின் பேராசை கொண்ட செயலால், நன்னடத்தையுள்ள, தூய ஆன்மா கொண்ட, மரியாதைக்குரிய நபர் யாரும், பொய்க் குற்றச்சாட்டின் பேரிலோ, திருட்டு காரணமாகவோ பாழாக்கப்படாமல், கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.(104) ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்கள் பேராசையின் காரணமாக செல்வத்துடன் பிடிபட்ட உண்மையான திருடர்களை தப்ப விடவில்லை என நான் நம்புகிறேன்.(105) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உனது அமைச்சர்களை லஞ்சத்தால் வெல்ல முடியாது என்றும், ஏழை பணக்காரனிடையே நடக்கும் சச்சரவுகளில் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்.(106) மன்னர்கள் ஆட்படக்கூடாத பதின்நான்கு{14} தீமைகளான நாத்திகம்{1}, பொய்மை{2}, கோபம்{3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை}{4}, காலம் கடத்துதல்{5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல்{6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல்{7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்}{8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்தல்{9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுதல்{10}, தீர்க்கப்பட்ட ஒரு திட்டத்தைக் கைவிடுதல்{11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல்{12}, நன்மைக்கான மங்கலக் காரியங்களைச் செய்யாமல் இருத்தல்{13}, எதையும் சிந்திக்காமல் செய்தல்{14} - ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா? ஓ மன்னா இவற்றால், பாழடையாத ஏகாதிபதிகள், தங்கள் அரியணையில் உறுதியாக நிலைத்திருப்பார்கள்.(107-109) உனது வேதகல்வி, உனது செல்வம் மற்றும் சாஸ்த்திர ஞானம், திருமணம் ஆகியவை கனி கொடுத்திருக்கின்றனவா?" என்று கேட்டார் {நாரதர்}".(110)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "முனிவர் முடித்ததும், யுதிஷ்டிரன், "ஓ முனிவரே, வேதம், செல்வம், மனைவி, சாத்திர ஞானம் ஆகியவை எவ்வாறு கனி கொடுக்கின்றன?" என்று கேட்டான்.(111)

அதற்கு முனிவர் {நாரதர்}, "வேதங்கள், அதைப் படித்து முடித்து, அக்னிஹோத்ரமும், வேள்விகளும் செய்யத் தொடங்கியதும் கனியைக் கொடுக்கின்றன. செல்வம், ஒருவன் அதை அனுபவித்து பிறகு அதைத் தானமாகக் கொடுக்கும்போது கனியைக் கொடுக்கிறது. ஒரு மனைவி, அவள் பயன்படும்போதும், பிள்ளைகளைப் பெறும்போதும் கனி கொடுக்கிறாள். சாத்திர ஞானம், அடக்கத்தினாலும், நன்னடத்தையாலும் கனி கொடுக்கிறது" என்றார்".(112)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் துறவியான நாரதர், யுதிஷ்டிரனிடம் அப்படிப் பதிலுரைத்து மேலும் அந்த ஆட்சியாளனிடம், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சமூகத்தில் இருந்து ஈட்டப்படும் வரிகளில் இருந்து கூலி கொடுக்கப்படும் உனது அரசாங்கத்தின் அதிகாரிகள், லாபத்தின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்படாமல், வெகுதூரத்தில் இருந்து வரும் வணிகர்களிடம் இருந்து சரியான நிலுவைகளைத்தான் {சுங்கத்தைத் தான்} வசூலிக்கிறார்களா? ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது நாட்டுக்கும் தலைநகருக்கும் பொருட்களைக் கொண்டு வரும் வணிகர்கள், போலிக் காரணங்கள் மூலம் ஏமாற்றப்படாமல் (பொருள் வாங்குபவர்களாலும் {நுகர்வோராலும்}, அதிகாரிகளாலும் {அரசாங்கத்தாலும்}) மரியாதையாக நடத்தப்படுகிறார்களா?(114-115)

ஓ ஏகாதிபதி {யதிஷ்டிரா}, பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்த முதியோர்கள் சொல்லும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கிறாயா?(116) வேளாண் உற்பத்தி, பசுக்கள், கனிகள் மற்றும் மலர்கள் பெருகவும் அறம் வளரவும் பிராமணர்களுக்கு தேனும், தெளிந்த நெய்யையும் பரிசாகக் கொடுக்கிறாயா?(117) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் நியமிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றுக் கலைஞர்களுக்கு, நான்கு மாதத்திற்கு வேண்டிய அளவு வேலைக்குத் தேவையான பொருட்களையும், அவர்களது கூலியையும் முன்பே கொடுக்கிறாயா?(118) உன்னால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த வேலையைக் கண்டு, அவர்கள் சிறப்பை நல்ல மனிதர்கள் முன்னிலையில் பாராட்டி, பரிசளித்து, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறாயா?(119)

ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, யானைகள், குதிரைகள், தேர்கள் குறித்த காரியங்களில் (முனிவர்களின்) பழமொழிகளைப் பின்பற்றுகிறாயா?(120) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நகருக்கும் செறிவூட்டப்பட்ட இடங்களுக்கும் பயன்படும், ஆயுத அறிவியல், போரில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் குறித்த பழமொழிகளும், உனது சபையில் படிக்கப்படுகிறதா?(121) ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, அனைத்து புதிர் நிறைந்த மந்திரங்களையும், அனைத்து எதிரிகளையும் அழிக்கும் நச்சுகளின் ரகசியங்களையும் அறிந்து வைத்திருக்கிறாயா?(122) நெருப்பு, பாம்புகள், மற்றும் உயிருக்கு நாசத்தை விளைவிக்ககூடய மற்ற விலங்குகள், ராட்சசர்கள் ஆகியோரிடம் இருக்கும் அச்சத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கிறாயா?(123) அனைத்துக் கடமைகளையும் அறிந்த நீ, உனது தந்தை, குருடர், ஊமை, முடவர், உரு குலைந்தவர் {அவலட்சணமானவர்}, நண்பர்கள் இல்லாதவர்கள், வீடில்லாத துறவிகள் ஆகியோரை ஆதரித்து வருகிறாயா?(124) ஓ ஏகாதிபதி, உறக்கம்{1}, சோம்பல்{2}, அச்சம்{3}, கோபம்{4}, மனப் பலவீனம்{5}, காலம் கடத்துதல்{6} என்ற ஆறு தீமைகளை வெளியேற்றிவிட்டாயா?" என்று கேட்டார் {நாரதர்}".(125)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிறப்பு மிகுந்த குருக்களின் காளை {யுதிஷ்டிரன்}, அந்த பிராமணர்களில் சிறந்தவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவரைப் {நாரதரைப்} பணிந்து வணங்கி, அவரது பாதங்களை வழிபட்டான்.(126) அவர் {நாரதர்} கேட்ட அனைத்திலும் மனநிறைவு கொண்ட அந்த ஏகாதிபதி, தெய்வீக வடிவில் இருந்த நாரதரிடம், "நீர் வழிகாட்டிய படியே நடந்து கொள்கிறேன். உமது அறிவுறுத்தலால் எனது ஞானம் விரிந்திருக்கிறது {வளர்ந்திருக்கிறது}" என்று சொன்னான்.(127) மேலும், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டு, கடல்களைக் கச்சையாக அணிந்த முழு உலகையும் {உலகின் அரசுரிமையையும்} சரியான நேரத்தில் பெற்றான். நாரதர் மறுபடியும் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வகைகளைக் காக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மன்னன், அவனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தி, இதற்குப் பிறகு அவன் சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை (விண்ணுலகத்தை) அடைவான்.” {என்றார் நாரதர்}.(128)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்