Friday, September 13, 2013

எனது சபைக்கு ஈடானவை உண்டா? - சபாபர்வம் பகுதி 6

Are there equals to my Sabha? | Sabha Parva - Section 6 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : நாரதரின் கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாகப் பதிலளித்த யுதிஷ்டிரன்; நாரதரிடம் தனது சபைக்கு சமமாக வேறு எங்கும் கண்டதுண்டா என்று கேட்டது; தேவர்களின் சபைகளையும், பிரம்மாவின் சபையையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது. அவற்றை விபரிக்கச் சொல்லி யுதிஷ்டிரன் நாரதரை வேண்டுவது…

வைசம்பாயனர் சொன்னார், "நாரதரின் வார்த்தைகளின் முடிவில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் அவரை முறைப்படி வழிபட்டான்; அவரால் {நாரதரால்} உத்தரவிடப்பட்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுருக்கமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.(1)

யுதிஷ்டிரன், "ஓ தெய்வீகமானவரே {நாரதரே}, நீர் குறிப்பிட்டவாறு அறம் மற்றும் ஒழுக்கவிதிகளின் உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக நீதியுடனும் சரியான முறையிலும் செய்யப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, நான் அந்த விதிகளை முறையாக எனது சக்தியில் சிறந்தவாறு கடைப்பிடித்து வருகிறேன்.(2) உண்மையில், பழங்காலத்தின் ஏகாதிபதிகளால் சரியாகச் செய்யப்பட்டச் செயல்கள் எல்லாம், சந்தேகமற, சரியான கனியைக் {பலனைக்} கொடுக்கும் என்று கருதலாம். அப்படிக் கருதி, சரியான பொருட்களை அடைய திடமான காரணங்களுடன் அந்தச் செயல்களை மேற்கொள்ளலாம்.(3) ஓ தலைவா {நாரதரே}, நாங்கள், தங்கள் ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த ஆட்சியாளர்கள் நடந்த அறம் சார்ந்த பாதையில் நடக்கவே விரும்புகிறோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டுவின் மகனான பெரும் புகழ் கொண்ட யுதிஷ்டிரன், நாரதரின் வார்த்தைகளை மரியாதையுடன் ஏற்று, அந்த முனிவருக்குப் பதில் சொல்லிவிட்டு, சிறிது நேரம் யோசித்தான். அந்த முனிவரின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, சரியான சந்தர்ப்பத்தைக் கண்டு கொண்டு, மன்னர்களின் கூட்டத்தில், வசதியாக அமர்ந்திருந்த, அனைத்து உலகத்திற்கும் தான் விரும்பிய படியே சென்று வரக்கூடிய சக்தி படைத்த அந்த நாரதரிடம்,(5,6)

{யுதிஷ்டிரன்} "பழங்காலத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட பலவகைப்பட்ட உலகங்களில் சுற்றி, அனைத்தையும் கண்டவர் நீர்.(7) ஓ பிராமணரே {நாரதரே}, நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த எனது சபாமண்டபத்தைப் போன்றோ {இதற்குச் சமமாகவோ} அல்லது இதைவிட மேன்மையாகவோ ஒரு சபாமண்டபத்தை இதற்கு முன் நீர் எங்காவது கண்டிருந்தால் எனக்குச் சொல்லும்!" என்றான்.(8)

நீதிமானான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட நாரதர், சிரித்துக் கொண்டே அந்தப் பாண்டுவின் மகனுக்கு இனிமையாகப் பதிலளித்தார்.(9)

நாரதர், "ஓ குழந்தாய், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களுக்கு மத்தியில் இதைப் போன்று, ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட இந்த உனது சபாமண்டபத்தைப் போல நான் கண்டதோ கேட்டதோ கிடையாது.(10) ஓ பாரதா, இருப்பினும், இறந்தவர்களின் மன்னன் (யமன்), பெரும் புத்திகூர்மை கொண்ட வருணன் (Neptune) {நெப்டியூன் கிரகம் என்கிறார் கங்குலி}, தேவர்களின் மன்னன் இந்திரன், கைலாசத்தில் தனது வீட்டினை வைத்திருப்பவன் (குபேரன்) ஆகியோரது சபா மண்டபங்களைப் பற்றி நான் உனக்குச் சொல்கிறேன்.(11) அனைத்து களைப்புகளையும் {அசௌகரியங்களையும்} விரட்டும் பிரம்மனின் தெய்வீக சபையையும் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். இந்த அனைத்து சபாமண்டபங்களும், பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவங்களையும் தங்களுக்குள் கொண்டு, மனித மற்றும் தெய்வீக வடிமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. அவை எப்போதும் தேவர்களாலும், பித்ருக்களாலும், சத்யஸ்யர்களாலும், கணங்கள் என்று அழைக்கப்பட்ட சிறுதெய்வங்களாலும், தங்கள் ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இடைவிடாது அமைதியான முனிவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு பரிசுகள் வழங்கி, வேள்விகளைக் காணிக்கையாக அளிக்கும் துறவிகளாலும் வணங்கப்பட்டு வருகின்றன. ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ நான் சொல்வதைக் கேட்க விரும்பினால், இவை எல்லாவற்றையும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்", என்றார் {நாரதர்}.(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) பிராமணர்களில் முதன்மையானவர்களுடனும் (வேண்டுதல் செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான்.(14)

அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "அந்தச் சபாமண்டபங்களக் குறித்து எங்கள் அனைவருக்கும் விளக்குவீராக. நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம்.(15) ஓ பிராமணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன? அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு? பெருந்தகப்பனுக்காக {பிரம்மனுக்காக} அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள்? {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்?}(16) தேவர்களின் தலைவனான வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்}, விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்? வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்?(17) ஓ பிராமண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது", என்றான் {யுதிஷ்டிரன்}.(18)

பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டபங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்" என்றார் {நாரதர்}.(19)


ஆங்கிலத்தில் | In English