Sunday, October 13, 2013

ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் - சபாபர்வம் பகுதி 57

Pandavas came to Hastinapore | Sabha Parva - Section 57 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 13)

பதிவின் சுருக்கம் : விதுரன் இந்திரப்பிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை அழைப்பது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; விதுரன் அஃதை ஆமோதிப்பது; திருதராஷ்டிரன் கட்டளையை இருவரும் ஏற்று ஹஸ்தினாபுரம் வருவது; ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் உறவினர்கள் அனைவரையும் சந்திப்பது...

Vidura and Yudhishthira

வைசம்பாயனர் சொன்னார், "தன் விருப்பத்திற்கு மாறாக மன்னன் திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட விதுரன், அதிக உறுதியும், பெரும் வேகமும், பலமும் கொண்ட குதிரைகள் உதவியுடன் அமைதியாகவும் பொறுமையாகவும், பாண்டுவின் ஞானமுள்ள மகன்கள் வசிப்பிடத்திற்குப் புறப்பட்டான்.(1)  பெரும் புத்திசாலித்தனம் கொண்ட விதுரன் பாண்டவர்த் தலைநகரம் போகும் பாதையில் முன்னேறிச் சென்றான். மன்னன் யுதிஷ்டிரனின் நகரத்தை அடைந்து, அதற்குள் நுழைந்து, எண்ணிலடங்கா பிராமணர்களால் வணங்கப்படும் அரண்மனையை நோக்கி முன்னேறினான்.(2) குபேரனின் மாளிகை போல இருந்த அந்த அரண்மனைக்கு வந்த அறம்சார்ந்த விதுரன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை அணுகினான்.(3) பூமியில் எந்த எதிரியும் இல்லாதவனும், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான அந்த சிறப்புவாய்ந்த அஜமீடன் {யுதிஷ்டிரன்}, விதுரனை வணங்கி, திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்கள் குறித்து விசாரித்தான்.(4) 

யுதிஷ்டிரன், "ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே} மகிழ்ச்சியற்ற மனங்கொண்டவராகத் தெரிகிறீர். அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் தானே இங்கு வந்திருக்கிறீர்? திருதராஷ்டிரரின் மகன்கள், முதிர்ந்தவரான அவர்களின் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் என்று நம்புகிறேன். மக்கள், திருதராஷ்டிரரின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்" என்றான்.(5)

விதுரன், "தமது மகன்களுடன் கூடிய சிறப்புமிக்க மன்னர் {திருதராஷ்டிரர்} நலமாகவும், தமது உறவினர்கள் சூழவும் இந்திரனைப் போல ஆண்டு வருகிறார். தமக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது மகன்கள் அனைவராலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதி, தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புடன் இருக்கிறார்.(6) குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரர்}, உன் {உள்ள} அமைதி {குறைவின்மை} மற்றும் செழிப்பை விசாரிக்குமாறும், திருதராஷ்டிரர் புதிதாகக் கட்டியிருக்கும் அரண்மனையானது, உன்னுடையதற்கு {உன் அரண்மனைக்கு} நிகராக இருக்கிறதா என்று காண்பதற்கு உன் தம்பிகளுடன் கூடிய நீ ஹஸ்தினாபுரத்திற்கு வருமாறு உன்னிடம் கேட்கவும் எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(7) ஓ பிருதையின் மகனே, நீ உன் தம்பிகளுடன் அங்கே வந்து மகிழ்ந்திருந்து, நட்புரீதியிலான ஒரு பகடையாட்டத்தில் அமர்வாயாக. குருக்கள் ஏற்கனவே வந்துவிட்டனர் என்பதால் நீயும் அங்கே சென்றால் நாங்கள் மகிழ்வோம்.(8) சிறப்புமிக்க மன்னர் திருதராஷ்டிரர் அங்கே கொண்டு வந்திருக்கும் சூதாடிகளையும், வஞ்சகர்களையும் நீ காண வேண்டும். ஓ மன்னா, இதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். மன்னரின் ஆணையை நீ அங்கீகரிப்பாயாக." என்றான் {விதுரன்}[1].(9)

[1] கும்பகோணம் பதிப்பில் விதுரர், "ராஜாவே, மஹாத்மாவான திருதராஷ்டிர மஹாராஜா தம் புத்ரர்களாலும், குலத்தோராலும் சூழப்பெற்று இந்திரன் போல ஸுகமாக இருக்கிறார். அந்த மஹாத்மாவானவர், தம் புத்ரர்களுடைய குணங்களால் மாற்றப்பட்டவராய் வ்யஸனத்தைவிட்டுத் தம்மிலேயே ஸுகமடைந்து ஸந்தோஷமுற்றிருக்கிறார். கௌரவராஜாவான் திருதராஷ்டிரர் முதலில் உன்னுடைய க்ஷேமத்தையும், குறைவின்மையையும் விசாரித்து, பிறகு, "புத்ரனே, உன் ஸஹோதரர்களின் இந்த ஸபை உன் ஸபைக்குச் சமமான அழகுள்ளதாயிருக்கிறது. நீ வந்து பார்க்க வேண்டும். குந்தி புத்திரனே, ஸஹோதரர்களுடன் கூட நீ இந்தச் சபைக்கு வந்து ஸ்நேஹிதர்களுக்குள் சொக்கட்டானாட்டத்தை ஆடி மகிழ வேண்டும். நீங்கள் எல்லாரும் சேருவதில் நமக்கு விருப்பமிருக்கிறது. கௌரவர்களனைவரும் முன்னமே வந்து சேர்ந்திருக்கின்றனர்" என்று (உனக்குச் சொல்லும்படி) சொன்னார். ராஜாவே, மஹாத்மாவான திருதராஷ்டிர மஹாராஜாவினால் ஏற்படுத்தப்பட்டு அந்தச் சபையில் உட்கார்ந்திருக்கும் மோசக்காரர்களான சூதாட்டக்காரர்களை நீ பார்க்கக்கடவாயென்பதைச் சொல்வதற்காக நான் வந்தேன். இதை நீ செய்வாயாக" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "தமது மகன்களுடன் கூடிய சிறப்புமிக்க மன்னர் {திருதராஷ்டிரர்} நலமா இருக்கிறார். தமது உறவினர்கள் சூழ இந்திரனைப் போல அவர் ஆண்டு வருகிறார். ஓ மன்னா, தமக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது மகன்கள் அனைவராலும் அந்த ஏகாதிபதி மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அவர் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புடன் இருக்கிறார்.(6) குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரர்}, முதலில் உன்  அமைதி மற்றும் செழிப்பை விசாரிக்குமாறும், அதன் பிறகு அவரது சார்பில் பின்வருமாறு சொல்லவும் எனக்கு ஆணையிட்டிருக்கிறார். (அவர் உன்னிடம்) "(என்னால் கட்டப்பட்டிருக்கும்) உன் தம்பியின் சபா மண்டபம் உன் சபைக்கு இணையானதாக இருக்கிறது. எனவே, (வந்து) அதைப் பார்ப்பாயாக..(7) ஓ பிருதையின் மகனே, அங்கே வந்து அரண்மனையில் இன்புற்றிருந்து, உன் தம்பிகளுடன் {துரியோதனாதிகளுடன்} சேர்ந்து நட்புரீதியிலான ஒரு பகடையாட்டம் ஆடுவாயாக. உன் வருகையில் நாமும், அங்கே திரண்டிருக்கும் குருக்கள் அனைவரும் மகிழ்வோம்" {என்றும் சொல்லச் சொன்னார்}.(8) ஓ மன்னா, சிறப்புமிக்க மன்னர் திருதராஷ்டிரர் கொண்டு வந்திருக்கும் வஞ்சகச் சூதாடிகளை நீ அங்கே காண்பாய். இதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். மன்னரின் ஆணையை நீ அங்கீகரிப்பாயாக.(9)" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளது போன்றே இருக்கிறது. இந்த உரையாடலே சரியானதாகவும் தெரிகிறது. கங்குலியின் பதிப்பில் வாக்கியங்களின் அமைப்பில் வேறுபாடு தெரிகிறது.

யுதிஷ்டிரன், "ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே}, நாம் பகடையாட அமர்ந்தால், நமக்குள் சச்சரவு தோன்றக்கூடும். இதை அறிந்தும் எந்த மனிதன் சூதாட இணங்குவான்? எங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று நீர் நினைக்கிறீர்? நாங்கள் அனைவரும் உமது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து இருக்கிறோம்" என்றான்.(10)
விதுரன், "துயரங்கள் அனைத்திற்கும் வேரானது சூது என்பதை நான் அறிவேன். அந்த எண்ணத்தை மன்னர் {திருதராஷ்டிரன்} கைவிட என்னால் முடிந்த வரை போராடினேன். இருப்பினும், மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம் அறிந்து கொண்டு, ஓ கற்றவனே, எது நன்மையோ அதைச் செய்வாயாக" என்றான்.(11) 
யுதிஷ்டிரன், "திருதராஷ்டிரரின் மகன்கள் தவிர, விளையாடத் தயாராக இருக்கும் வேறு நேர்மையற்ற சூதாடிகள் யார் யார்? ஓ விதுரரே, அவர்கள் யார்? எங்கள் நூற்றுக்கணக்கான உடைமைகளைப் பந்தையப் பொருளாக வைத்து நாங்கள் யாருடன் விளையாட வேண்டி வரும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்றான்.(12)
விதுரன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பகடையில் நிபுணனான காந்தார மன்னன் சகுனி, தனது கைகளின் நிபுணத்துவத்தால் பந்தயப் பொருளை அடைவதில் உறுதியாக இருக்கிறான். மேலும், விவிம்சதி, மன்னன் சித்திரசேனன், சத்தியவிரதன், புருமித்திரன், ஜயன் ஆகியோரும் அங்கே இருக்கின்றனர்" என்றான்.(13)

யுதிஷ்டிரன், "எப்போதும் வஞ்சகத்தையே நம்பியிருப்பவர்களும், உறுதிமிக்கவர்களுமான கொடும் சூதாடிகள் அங்கிருப்பது தெரிகிறது. இருப்பினும், இந்த முழு அண்டமும், படைத்தவனின் விருப்பத்தின்படியும், விதியின் கட்டுப்பாட்டிற்குள்ளும் நடக்கிறது. அது சுதந்திரமானதல்ல.(14) ஓ கற்றவரே {விதுரரே}, மன்னன் திருதராஷ்டிரரின் உத்தரவின் பேரில் நான் சூதாட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. ஒரு தந்தை தனது மகனுக்கு நன்மையையே செய்வான். நீர் எங்கள் குரு, ஓ விதுரரே, எங்களுக்கு எது நன்மையானது என்பதை எனக்குச் சொல்வீராக.(15) சூதாட எனக்கு விருப்பமில்லை, எனவே நான் விளையாட மாட்டேன். ஆனால் அந்தச்சபையில் தீய சகுனி என்னை அழைத்தால்? அப்படி அவன் அழைத்தால், என்னால் மறுக்க முடியாது. அது தீர்மானிக்கப்பட்ட எனது நிலைத்த நோன்பாகும்" என்றான்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் யுதிஷ்டிரன் விதுரனிடம் இப்படிச் சொல்லிவிட்டு, காலந்தாழ்த்தாமல் தனது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டான். மறுநாள், மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது உறவினர்களுடனும், பணியாட்களுடனும், திரௌபதியை மையமாகக் கொண்டிருக்கும் வீட்டிலிருக்கும் மங்கையரையும் அழைத்துக் கொண்டு குருக்களின் தலைநகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(17) பகைவரைத் தண்டிப்பவனான மன்னன் யுதிஷ்டிரன், 'கண்ணுக்கு முன்னால் ஒளிரும் பொருட்கள் விழுவதைப் போல, ஏதோ மனிதன் கயிற்றால் கட்டப்பட்டு ஆடுவதைப் போல, விதி நமது மதியை மயக்கி இயற்கையின் ஆளுகைக்குள் நம்மைத் தள்ளுகிறது' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, திருதராஷ்டிரனின் ஆணை குறித்து மேலும் ஆராயாமல், க்ஷத்தனுடன் {விதுரனுடன்} புறப்பட்டான். (18,19)

பகை வீரர்களைக் கொல்பவனும், பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனுமான அவன் {யுதிஷ்டிரன்}, பாஹ்லீக நாட்டு மன்னன் கொடுத்த தேரில் ஏறி, அரச அங்கிகள் பூட்டிக் கொண்டு தனது தம்பிகளுடன் புறப்பட்டான்.(20) அரசப் பிரகாசத்துடன் கூடிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்கள் தனக்கு முன்பு நடக்க, தனது நகரத்தில் இருந்து புறப்பட்டு, திருதராஷ்டிர ஆணையின் பேரிலும், காலத்தின் உந்துதலாலும் {தன் நகரத்தில் இருந்து} புறப்பட்டுச் சென்றான்.(21) ஹஸ்தினாபுரத்தை அடைந்து, திருதராஷ்டிரனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே சென்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னனை {திருதராஷ்டிரனை} அணுகினான்.(22) பிறகு அந்த மேன்மையானவன் {யுதிஷ்டிரன்} பீஷ்மரையும், துரோணரையும், கர்ணனையும், கிருபரையும், துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} அணுகி ஆரத்தழுவினான். பதிலுக்கு அவர்களாலும் தழுவிக் கொள்ளப்பட்டான்.(23)

பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்தப் பேராற்றல் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, சோமதத்தனை அணுகினான், பிறகு துரியோதனன், சல்லியன், சுபலனின் மகன் {சகுனி},(24) மேலும் தனக்கு முன்பே அங்கு வந்திருந்த மன்னர்கள் அனைவரையும் அணுகினான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} வீரனான துச்சாசனனையும், பிறகு தனது (மற்ற) தம்பிகளையும்,(25) பிறகு ஜெயத்ரதனையும், பிறகு குருக்கள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக அணுகினான். பெரும் பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனான அவன், தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனின் அறைக்குள் நுழைந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், எப்போதும் தனது தலைவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் மரியாதைக்குரிய காந்தாரி, தனது மருமகள்களால் சூழப்பட்டு ரோகிணி நட்சத்திரம் போல வீற்றிருப்பதைக் கண்டான். பிறகு காந்தாரியை வணங்கி, அவளால் ஆசி வழங்கப்பட்டு,(26-28) தமது கண்ணைப் போன்ற ஞானம் கொண்ட சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியான, முதிர்ந்த பெரியப்பாவை {திருதராஷ்டிரனை} மன்னன் {யுதிஷ்டிரன்} கண்டான்.(29) பிறகு மன்னன் திருதராஷ்டிரன், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவனது {யுதிஷ்டிரனது} தலையை முகர்ந்து பார்த்து, பீமசேனனை மூத்தவனாகக் கொண்டவர்களும், பாண்டுவின் மகன்களுமான மற்ற நான்கு இளவரசர்களின் தலைகளையும் முகர்ந்தான்.(30) மனிதர்களில் புலிகளான அழகான பாண்டவர்களைக் கொண்ட குருக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.(31) 

பிறகு மன்னனால் உத்தரவிடப்பட்டு, பாண்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரத்திரனங்களும் நகைகளும் நிறைந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் அறைகளுக்குள் சென்றதும், திருதராஷ்டிரனின் வீட்டுப் பெண்மணிகள் துச்சலையுடன் {திருதராஷ்டிரனின் ஒரே மகளுடன்} சென்று அவர்களைப் {பாண்டவர்களைப்} பார்த்து வந்தனர்.(32) பிரகாசமிக்கவளும், செழிப்பானவளும், அழகியுமான யக்ஞசேனியைக் {திரௌபதியைக்} கண்ட திருதராஷ்டிரனின் மருமகள்கள் மகிழ்ச்சியற்றுப் போய் பொறாமையால் நிறைந்தனர்.(33)

அந்தப் பெண்மணிகளுடன் உரையாடிய அந்த மனிதர்களில் புலிகள் பிறகு தங்கள் தினசரி உடற் பயிற்சிகளையும், அந்த நாளுக்குரிய தங்கள் சடங்குகளையும் செய்தனர்.(34) தங்கள் தினசரி வழிபாடுகளை முடித்து, வாசனை மிகுந்த சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசிக் கொண்டு, நற்பேறு பெற எண்ணி, பிராமணர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றனர். பிறகு சிறந்த சுவையுள்ள உணவை உண்டு இரவு ஓய்வுக்காகத் தங்கள் அறைகளுக்குள் சென்றனர்.(35) 
அந்த குருக்களின் காளைகள், அழகான பெண்களின் இசையால் உறங்க வைக்கப்பட்டனர். அந்த எதிரிகளின் நகரங்களை அடக்கும் வீரர்கள், அந்தப் பெண்களின் சுகத்தால் அந்த இரவை இனிமையாகக் கழித்தனர். இரவை இன்பமாகக் கழித்த அவர்கள், காலையில் பாடகர்களால் இனிமையான இசை இசைத்து எழுப்பப்பட்டு, தங்கள் படுக்கைகளில் இருந்து விடியலிலேயே எழுந்தனர்.(36,37) பிறகு தங்கள் தினசரி சடங்குகளை முடித்துக் கொண்டு சபா மண்டபத்துக்குள் நுழைந்தனர். அங்கே அவர்கள் {பாண்டவர்கள்}, சூதாடத் தயாராக இருந்தவர்களால் வணங்கப்பட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஆங்கிலத்தில் | In English