Sunday, October 20, 2013

சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபாபர்வம் - பகுதி 66

Draupadi was dragged down the assembly | Sabha Parva - Section 66B | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 22)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் தனது பணியாளை அழைத்து திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; பணியாள் மறுபடியும் சபைக்கு வந்து திரௌபதியின் கேள்வியைக் கேட்டல்; துரியோதனன் தனது பணியாளிடம் மீண்டும் திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; அவன் தயங்கி நிற்பதைக் கண்டு துச்சாசனனை அனுப்புவது; துச்சாசனன் சென்று திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே இழுத்து வருவது; திரௌபதி சபை பெரியோர்களிடம் நியாயம் கேட்பது; பீஷ்மர் கைவிரிப்பது; இந்த நிலையில் யுதிஷ்டிரனைக் கண்டு பீமன் கோபப்படுவது...

Draupadi dragged into court by Dussasana

வைசம்பாயனர் சொன்னார், "செருக்கால் போதையுண்ட திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, க்ஷத்தனை {விதுரனைக்} கண்டு, "சீ" என்று சொல்லி விட்டு பணியாளான பிராதிகாமினைப் பார்த்து, மரியாதைக்குரிய மூத்தவர்கள் முன்னிலையில் அவனை {பிராதிகாமினை} அழைத்து,(1) "செல் பிராதிகாமின், சென்று திரௌபதியை இங்கே கொண்டு வருவாயாக. பாண்டுவின் மகன்களிடம் அச்சம் கொள்ளாதே. விதுரர் மட்டுமே அப்படி பயத்தால் உளறுகிறார். மேலும், அவர் நமது செழிப்பை எப்போதும் விரும்புவதில்லை" என்றான்".(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி ஆணையிடப்பட்டவனும், சூத சாதியைச் சேர்ந்தவனுமான பிராதிகாமின், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு விரைவாக சென்று, சிங்கத்தின் குகைக்குள் நாய் நுழைவது போல பாண்டவர்களின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து பாண்டு மகன்களின் ராணியை {திரௌபதியை} அணுகினான்.(3) 

பிறகு அவன் {பிராதிகாமின்}, "ஓ திரௌபதி, பகடையில் போதையுண்ட யுதிஷ்டிரனிடம் இருந்து துரியோதனன் உன்னை வென்றுவிட்டார். எனவே, திருதராஷ்டிரர் வசிப்பிடத்திற்கு இப்போதே வருவாயாக. ஓ யக்ஞசேனி {திரௌபதி}, நான் உன்னை அழைத்துச் சென்று, வீட்டு ஊழியம் செய்யும் இழிபணியில் உன்னை நியமிக்கப் போகிறேன்" என்றான்.(4)

திரௌபதி, "ஓ பிராதிகாமின், ஏன் இப்படிப் பேசுகிறாய்? தனது மனைவியை பந்தயப் பொருளாக வைத்து எந்த இளவரசன் விளையாடுவான்? மன்னர் நிச்சயமாக பகடையில் போதையுண்டிருக்கிறார். இல்லையென்றால், அவரால் பந்தயமாக வைத்தாட வேறு பொருளைக் காண முடியாதா?" என்றாள்.(5)

பிராதிகாமின், "அவரிடம் {யுதிஷ்டிரனிடம்} எதுவும் இல்லாத போதே பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} உன்னை வைத்து சூதாடினார். மன்னன் {யுதிஷ்டிரன்} முதலில் தனது தம்பிகளையும், பிறகு அவரையும், அதன் பிறகு உன்னையும் பந்தயமாக வைத்து விளையாடினார் ஓ இளவரசி {திரௌபதி}" என்றான்.(6)

திரௌபதி, "ஓ சூதக் குல மகனே {பிராதிகாமினே}, நீ சென்று, அந்தச் சபையில் இருக்கும் சூதாடியிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரை முதலில் அவர் இழந்தார், தன்னையா அல்லது என்னையா என்று கேட்பாயாக.(7) இதை உறுதி செய்து கொண்டு, இங்கே வருவாயாக. பிறகு, ஓ சூதக் குல மகனே {பிராதிகாமினே}, நீ என்னை அழைத்துச் செல்லலாம்" என்றாள்".(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்தச் சபையில் இருந்த அனைவரிடமும் திரௌபதியின் வார்த்தைகளைச் சொன்னான். பிறகு மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனிடம்,(9) "திரௌபதி உம்மிடம், ’என்னை விளையாட்டில் தோற்ற போது, நீர் யாருக்கு தலைவனாக இருந்தீர்? நீர் உம்மை முதலில் இழந்தீரா அல்லது என்னையா?’ என்று கேட்கச் சொன்னாள்" என்று சொன்னான்.(10) 

யுதிஷ்டிரன் அறிவாற்றலை இழந்து, நினைவிழந்து அமர்ந்திருந்தான். நன்மையாகவோ, தீமையாகவோ அந்த சூதனுக்கு அவன் {யுதிஷ்டிரன்} ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தான்.(11)

துரியோதனன், "பாஞ்சால இளவரசி {திரௌபதி} இங்கே வந்து தனது கேள்வியைக் கேட்கட்டும். இந்தச் சபையில் இருக்கும் அனைவரும் அவளும் {திரௌபதியும்} யுதிஷ்டிரனும் பேசிக் கொள்வதைக் கேட்கட்டும்" என்றான்".(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரியோதனனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்த அந்தத் தூதுவன் {பிராதிகாமின்} மறுபடியும் வேகமாக அந்த அரண்மனைக்குச் சென்று, அவனே {பிராதிகாமினே} மிகத் துயர் கொண்டு, திரௌபதியிடம்,(13) "ஓ இளவரசி, அந்தச் சபையில் இருப்பவர்கள் உன்னை அழைக்கிறார்கள். கௌரவர்களின் அழிவு உன் கைகளில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஓ இளவரசி, துரியோதனன் உன்னை சபையின் முன்னே அழைக்கிறான் எனும்போது, பலவீனமான மூளை கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்}, தனது செழிப்பை வெகு காலத்திற்குக் காத்துக் கொள்ள முடியாது" என்றான்.(14)

திரௌபதி, "உலகத்தின் பெரும் ஆணையாளரின் {பிரம்மனின்} ஆணை நிச்சயமாக அப்படித்தான் இருக்கிறது. மகிழ்வும் துயரமும் ஞானமுள்ளோரையும் ஞானமற்றோரையும் தொடுக்கின்றன. இருப்பினும் அறமே உலகத்தில் உயர்ந்த பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சரியாக காத்தோமானால், அது நிச்சயம் நமக்கு அருளைக் கொடுக்கும்.(15) அறம் கௌரவர்களைக் கைவிடாதிருக்கட்டும். திரும்ப சென்று அந்தச் சபையில் உள்ளோரிடம், அறநெறிகளுக்கு ஏற்ற எனது வார்த்தைகளை மறுபடி சொல். அந்த அறம் சார்ந்த, அறநெறி அறிந்த மூத்தோர் உறுதியாகச் சொல்லும் சொல் கேட்டு நடக்க நான் தயாராக இருக்கிறேன்" என்றாள்".(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யக்ஞசேனியின் {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த சூதன் {பிராதிகாமின்}, சபைக்குத் திரும்ப வந்து, திரௌபதியின் வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். ஆனால், அனைவரும் தங்கள் முகத்தை கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனின்} ஆவலையும் தீர்மானத்தையும் அறிந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தனர்.(17)

இருப்பினும், யுதிஷ்டிரன், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனின் நோக்கத்தைக் கேள்விப்பட்டு, ஒரு நம்பிக்கைக்குரிய தூதுவரிடம்,(18) 'திரௌபதி தனது மாதவிடாய்க் காலத்தில் இருப்பதால், உந்தி வெளிப்பட ஒற்றையாடையுடன் இருந்தாலும், தனது மாமனார் முன்னிலையில் அழுது கொண்டே வரட்டும்" என்று சொல்லி திரௌபதியிடம் அனுப்பினான்.(19) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த புத்திசாலித் தூதுவனும் திரௌபதியின் வசிப்பிடத்திற்கு வேகமாக வந்து யுதிஷ்டிரனின் நோக்கங்களைத் தெரிவித்தான்.(20) 

அதே வேளையில் அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள் துயரம் கொண்டு, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய இயலாமல் இருந்தனர்.(21) அவர்கள் {பாண்டவர்கள்} மீது பார்வையைச் செலுத்திய மன்னன் துரியோதனன் இதயத்தில் மிகவும் மகிழ்ந்து அந்தச் சூதனிடம், "ஓ பிராதிகாமின், அவளை {திரௌபதியை} இங்கே கொண்டு வா. கௌரவர்கள் அவளது கேள்விக்கு அவள் முகத்துக்கு எதிரேயே பதில் சொல்லடும்" என்றான்.(22) அவனது {துரியோதனது} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் அந்தச் சூதன் {பிராதிகாமின்}, துருபதன் மகளின் {திரௌபதியின்} கோபத்துக்குப் {கோபத்துக்கு வாய்ப்பிருப்பதை நினைத்து} பயந்து, நுண்ணறிவுக்கான நற்பெயரைக் கருதாமல், மறுபடியும் அந்தச் சபையில் இருந்தவர்களிடம், "நான் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} என்ன சொல்வது?" என்று கேட்டான்.(23)

பிராதிகாமினின் சொல்லைக் கேட்ட துரியோதனன் "ஓ துச்சாசனா, எனது சூதனின் குறைந்த புத்தியுடைய மகன் {பிராதிகாமின்} விருகோதரனுக்கு {பீமனுக்கு} அஞ்சுகிறான். எனவே, நீயே சென்று யக்ஞசேனனின் மகளை {திரௌபதியை} இங்கு வலுக்கட்டாயமாக இழுத்து வருவாயாக. தற்போது நமது எதிரிகள் நமது விருப்பத்தை எதிர்பார்த்தே இருக்கின்றனர். அவர்களால் {பாண்டவர்ககளால்} உன்னை என்ன செய்ய முடியும்?" என்றான்.(24)

தனது அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவைக் கேட்ட துச்சாசனன் ரத்தச்சிவப்பாக இருந்த கண்களுடன் எழுந்து, அந்தப் பெரும் போர்வீரர்களின் {பாண்டவர்களின்} வசிப்பிடத்திற்கு நுழைந்து, அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்},(25) "ஓ பாஞ்சால இளவரசி கிருஷ்ணையே {திரௌபதி}, வா... வருவாயக... நீ எங்களால் வெல்லப்பட்டாய். ஓ தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவளே {திரௌபதியே}, இப்போதே வந்து குருக்களை உனது தலைவர்களாக ஏற்றுக் கொள். நீ அறம் சார்ந்தே அடையப்பட்டாய், சபைக்கு வருவாயாக" என்றான் {துச்சாசனன்}.(26)

இந்த வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரத்துடன் எழுந்த திரௌபதி, தனது மங்கிய முகத்தை தனது கரத்தால் துடைத்துக் கொண்டு, பெரும் துயரத்துடன் திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்கள் இருந்த இடத்திற்கு ஓடிப் போனாள்.(27) இதனால் கோபத்துடன் முழங்கிய துச்சாசனன், அவள் பின்னே ஓடி, நீல நிறத்தில், அலை அலையாக இருந்த ராணியின் {திரௌபதியின்} அடர்த்தியான கூந்தலைப் பற்றினான்.(28) 

ஐயோ! ராஜசூய வேள்வியில் மந்திரங்களுடன் ஆன்ம நீர் தெளிக்கப்பட்ட அந்தக் கூந்தலை பாண்டவர்களின் ஆற்றலைக் கருதாமல், இப்போது திருதராஷ்டிரன் மகன் {துச்சாசனன்}, வலுக்கட்டாயமாக பற்றி இழுத்தான்.(29) கிருஷ்ணையின் {திரௌபதியின்} நீண்ட கூந்தலைப் பற்றி சபையின் நடுவே இழுத்துச் சென்றான். அவள் {திரௌபதி} பலம் நிறைந்த காப்பாளர்களைப் பெற்றிருந்தும், இப்படி இழுத்து வரப்பட்டதால், புயலில் சிக்கிய வாழை மரம் என நடுங்கினாள்.(30)

அவனால் {துச்சாசனனால்} இழுத்தவரப்பட்டு, உடல் வளைந்திருந்த அவள் {திரௌபதி}, மயக்கத்துடன் அழுதாள், "பாவி, என்னை இப்படி சபையின் நடுவே கொண்டு செல்வது தவறான நடத்தையாகும். எனது மாதாந்திர காலம் வந்திருக்கிறது. நான் இப்போது ஒற்றை ஆடை உடுத்தியிருக்கிறேன்" என்றாள்.(31) 

மேலும் விஷ்ணுவும், நரனும் நாராயணராகவும் இருந்த கிருஷ்ணனிடம் பாவமாக வேண்டிக் கொண்டிருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} கருங்கூந்தலை வலுக்கட்டையமாக பற்றி இழுத்துச் சென்ற துச்சாசனன்,(32) "உனது மாதாந்திர காலம் வந்ததோ இல்லையோ, நீ ஒற்றையாடையுடன் இருக்கிறாயோ அல்லது நிர்வாணமாக இருக்கிறாயோ, பகடையில் நீ வெல்லப்பட்டு பிறகு, எங்களுக்கு நீ அடிமையாக ஆன பிறகு எங்கள் பணிப்பெண்கள் வாழும் இடத்தில் நீ விரும்பியவாறு இருந்து கொள்" என்றான்".(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துச்சாசனால் இழுத்துச் செல்லப்பட்ட போது, கலைந்த முடிகளுடன், அவளது பாதி ஆடை தளர்ந்து, கோபத்தால் உட்கொள்ளப்பட்ட எளிமையான கிருஷ்ணை {திரௌபதி}, மயக்கத்துடன்,(34) "கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த, வேள்விக்கு தங்களை அர்ப்பணித்து, இந்திரனுக்கு சமமான மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்தச் சபையில் சிலர் மேன்மையானவர்களாகவும், மற்றவர்கள் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நான் இந்த நிலையில் நிற்க முடியாது.(35) ஓ பாவி! கொடுஞ்செயல் புரிபவனே {துச்சாசனனே} என்னை இப்படி இழுக்காதே. என்னை இப்படித் திறந்து காட்டாதே. நீ தேவர்களையும் இந்திரனையும் கூட்டாளியாக வைத்திருந்தாலும், இந்த இளவரசர்கள் (எனது தலைவர்கள்) உன்னை மன்னிக்க மாட்டார்கள்.(36) தர்மனின் சிறப்புவாய்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, இப்போது அறநெறிக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இருப்பினும், அறநெறி மிகவும் நுட்பமானது. தெளிந்த பார்வையுள்ளவர்கள் மட்டுமே அதை உறுதி செய்ய முடியும். எனது தலைவன் {யுதிஷ்டிரன்} அறத்தை மறந்து அணுவளவு குற்றம் செய்தார் என்று என் வாக்கினாலும்கூட சொல்ல நான் விரும்பவில்லை.(37) 

மாதாந்திர காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே.(38) சீ... உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் குருக்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களே!(39) 

ஓ, துரோணரும், பீஷ்மரும், க்ஷத்தரும் {விதுரரும்}, இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குருக்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?" என்றாள் {திரௌபதி}".(40)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே அந்தக் கொடியிடை கிருஷ்ணை {திரௌபதி} அந்தச் சபையில் துக்கத்துடன் அழுதாள். தனது பார்வையைத் தனது கோபம் கொண்ட தலைவர்களான பாண்டவர்களிடம் செலுத்திய அவள் {திரௌபதி}, தனது பார்வையால் மேலும் அவர்களின் {பாண்டவர்களின்} கோபத்தைத் தூண்டினாள்.(41) தங்கள் நாட்டையோ, செல்வத்தையோ, விலையுயர்ந்த ரத்தினங்களையோ களவாடியது குறித்து அவர்கள் பெரிதும் துயரம் கொள்ளவில்லை. ஆனால், நாணத்தோடும் கோபத்துடனும் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} பார்வையைக் கண்டு கோபத்தால் பெரும் துயர் அடைந்தனர்.(42) 

ஆதரவற்ற தங்கள் தலைவர்களைக் காணும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்ட துச்சாசனன், மேலும் அவளை {திரௌபதியை} வலுக்கட்டாயமாக இழுத்து, அவளிடம், "அடிமையே அடிமையே" {தாசி, தாசி} என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான்.(43) அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து சத்தமாகச் சிரித்தான். அதே போல, சுபலனின் மகனான காந்தார மன்னன் சகுனியும் துச்சாசனனைப் பாராட்டினான்.(44) கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சபை நடுவே இழுத்துவரப்பட்டதைக் கண்டு இவர்கள் மூவர் {துச்சாசனன், கர்ணன், சகுனி} மற்றும் துரியோதனனைத் தவிர்த்து அனைவரும் சோகத்தில் நிறைந்திருந்தனர்.(45)

இவையனைத்தையும் கண்ட பீஷ்மர், "ஓ அருளப்பட்டவளே, அறம் மிகவும் நுட்பமானது. எனவே, இக்காரியத்தில் என்னால் எந்தத் தீர்மானத்துக்கு வர முடிய வில்லை. ஒரு புறம், செல்வமில்லாதவன் மற்றவருடைய செல்வத்தைப் பணயம் வைக்க முடியாது என்றாலும், மறுபுறம், மனைவியர் தங்கள் தலைவர்களின் ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள்.(46) யுதிஷ்டிரன், இந்த உலகம் முழுதும் நிறைந்த செல்வத்தையும் கைவிடுவான், ஆனால் அவன் {யுதிஷ்டிரன்} அறத்தைக் கைவிட செய்ய மாட்டான். {அப்படிப்பட்ட} அந்தப் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, "நான் வெல்லப்பட்டேன் என்கிறான். எனவே, என்னால் இக்காரியத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை.(47) பகடையில் சகுனி அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சமமானவன் கிடையாது {ஆனால் உயர்ந்தவன்}. இருப்பினும், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} தானே முன்வந்து பந்தயம் வைத்தான். அந்தச் சிறப்பு மிகுந்த யுதிஷ்டிரனே சகுனி ஏமாற்றி விளையாடினான் என்று கருதவில்லை. எனவே இக்காரியத்தில் என்னால் எதுவும் தீர்மானிக்க முடியாது" என்றான்.(48)

திரௌபதி, "பகடையில் நிபுணத்துவம் இல்லை என்றாலும், மன்னர் {யுதிஷ்டிரர்} இந்தச் சபைக்கு அழைக்கப்பட்டு, {பகடையில்} திறன் வாய்ந்தவரும், தீயவரும், வஞ்சகருமான பெரும் சூதாடியுடன் {சகுனியுடன்} விளையாட வைக்கப்பட்டார். இப்படியிருக்கையில், அவர் {யுதிஷ்டிரர்} தானாக முன்வந்து பந்தயம் வைத்தார் என்று எப்படிச் சொல்லப்படுகிறது?(49) பாண்டவர்களின் தலைவரை {யுதிஷ்டிரரை} வஞ்சக நடத்தையும், அறமற்ற நோக்கங்களும் கொண்ட பாவிகள் ஒன்றுகூடி மதியிழக்கச் செய்து வீழ்த்தினர். அவர்களின் தந்திரங்களை அவர் {யுதிஷ்டிரர்} அறிய முடியாது, ஆனால் அவர் இப்படிச் செய்துவிட்டார்.(50) இங்கு, இந்தச் சபையில், தனது மகன்களுக்கும், மருமகள்களுக்கும் தலைவர்களான குருக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும், எனது வார்த்தைகளை மனத்தில் கொண்டு, நான் சொல்லியிருக்கும் காரியத்தைத் தீர்மானியுங்கள்" என்றார்".(51)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிப் பரிதாபமாக அழுது கொண்டிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, துச்சாசனன் ஏற்றுக்கொள்ள முடியாத கடும் சொற்களைப் பேசிய போது ஆதரவற்ற தனது தலைவர்களை {பாண்டவர்களை} அடிக்கடி பார்த்தாள்.(52) மாதவிடாய் காலத்தில் இருந்த அவள் இப்படி இழுத்து வரப் படுவதையும், அவளுக்கு {திரௌபதிக்கு} சற்றும் பொருந்தாத நிலையில், மேலாடை தளர்ந்த நிலையில் அவள் இருப்பதையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தனது உறுதியையும் தாண்டி, கண்களை யுதிஷ்டிரனிடம் நிலைக்க வைத்து, கோபத்துக்கு உள்ளானான்" {என்றார் வைசம்பாயனர்}.(53)

ஆங்கிலத்தில் | In English