Sunday, December 14, 2014

கங்கையின் மகனே உண்மையைச் சொல்லும்! - விராட பர்வம் பகுதி 51

Son of Ganga, say what is true! | Virata Parva - Section 51 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 26)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : பீஷ்மர் துரோணரிடம் அஸ்வத்தாமனிடமும் கோபம் தணியச் சொல்வது; அஸ்வத்தாமன் என்னிடம் சொல்லாதீர் என்பது; துரியோதனன் துரோணரின் கோபத்தைத் தணிப்பது; துரோணர் பாண்டவர்களின் வனவாச காலம் முடிந்து விட்டதா என்பதைப் பீஷ்மரே சொல்ல வேண்டும் என்று சொன்னது...

பீஷ்மர் சொன்னார்,துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நன்றாகக் கவனித்திருக்கிறான், கிருபரும் சரியாகவே கவனித்திருக்கிறார். கர்ணனைப் பொறுத்தவரை, க்ஷத்திரிய வகையின் கடமைகளைக் கருத்தில் கொள்வதால் மட்டுமே அவன் {கர்ணன்} போரிட விரும்புகிறான். ஞானம் கொண்ட எந்த மனிதனும் ஆசானைப் பழிக்கலாகாது. எனினும், காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்ளும் நான், நாம் போரிட வேண்டும் என்றே கருதுகிறேன். தங்கள் சிரமகாலத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஐந்து பிரகாசமிக்கச் சூரியன்களைப் போன்ற, ஐந்து வீரப் போராளிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் {துரியோதனன்} ஏன் குழம்பமாட்டான்? அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களை நீ ஏற்றாலும், ஏற்காவிடினும் அதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.


(தளரும்) நமது வீரம் எழுச்சியடையவே கர்ணன் உன்னிடம் இப்படிச் சொன்னான். ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, உன்னைப் பொறுத்தவரை, அனைத்தையும் மன்னிப்பாயாக. ஆபத்து அருகில் இருக்கிறது. குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்திருக்கும்போது, {நமக்குள்} சண்டையிட இது நேரமில்லை. அனைத்தும் {அஸ்வத்தாமனான} உன்னாலும், ஆசானான கிருபராலும் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும். சூரியனில் இருக்கும் ஒளி போல, உன்னிடம் அனைத்து ஆயுதங்களின் திறமையும் வசிக்கின்றன. சந்திரனில் இருந்து அழகு பிரிக்கப்படாதது போல, வேதங்கள் மற்றும் பிரம்ம ஆயுதம் ஆகிய இரண்டும் உன்னில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பொருளில் {மனிதனில்} நான்கு வேதங்கள் வசிப்பதையும், மற்றொன்றில் க்ஷத்திரிய குணங்கள் வசிப்பதையும் நாம் எப்போதும் காண்கிறோம்.

பாரதக் குல ஆசானிடமும் {துரோணரிடம்}, அவரது மகனிடமும் {அஸ்வத்தாமனான உன்னிடம்} தவிர வேறு எந்த மனிதனுக்குள்ளும் அவ்விரண்டும் ஒன்றாக வசிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதையே நான் நினைக்கிறேன். வேதாந்தங்களிலோ, புராணங்களிலோ, பழம் வரலாறுகளிலோ, ஓ! மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான்? வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, பொறுத்துக்கொள். ஒற்றுமையின்மைக்கு இது நேரமல்ல. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, {எதிர்த்து} வந்து கொண்டிருக்கும், இந்திரனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவோம். ஞானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த ஒரு படைக்கு நேரும் அழிவுகள் அனைத்திலும், தலைவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையே {ஒற்றுமையின்மையால் ஏற்படும் அழிவே} மோசமானதாகும்” என்றார் {பீஷ்மர்}.

அதற்கு அஸ்வத்தாமன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே {பீஷ்மரே}, இந்த உமது அவதானிப்புகள் எங்கள் முன்னிலையில் சொல்லத்தக்கதல்ல; எனினும், கோபத்தில் நிறைந்திருக்கும் ஆசான் {துரோணர்}, அர்ஜுனனின் நற்குணங்களைக் குறித்துப் பேசினார். ஒருவனுடைய ஆசானின் குறைகள் கூடச் சுட்டிக்காட்டப்படலாம் எனும்போது, எதிரியின் நற்குணங்களையும் {நாம்} ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு, ஒருவன் தனது மகன் அல்லது சீடனின் தகுதிகளை அறிவிக்க வேண்டும்” என்றான் {அஸ்வத்தாமன்}.

அதற்குத் துரியோதனன், “ஆசான் தனது மன்னிப்பை அருளட்டும். அமைதி திரும்பட்டும். நம்மில் ஒருவராக ஆசான் {துரோணர்} இருக்கும்போது, (தற்போதையை அவசர நிலையில்) என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கர்ணன், கிருபர், உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் ஆகியோரின் உதவியுடன் துரியோதனன், துரோணரைத் சமாதானப் படுத்தினான் {அவரது கோபத்தைத் தணித்தான்}.”

துரோணர், “சந்தனு மகனான பீஷ்மர் பேசிய முதல் வார்த்தைகளிலேயே நான் சமாதானமடைந்துவிட்டேன். போர்களத்தில் துரியோதனனைப் பார்த்தன் {அர்ஜுனன்} அணுகமுடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்படட்டும். துடுக்குத்தனம் மற்றும் தீர்மானமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக, மன்னன் துரியோதனன் எதிரியால் சிறைபிடிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். வனவாசத்தின் குறித்த காலம் முடிவதற்கு முன்னரே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. அதே போலவே, பசுக்களை மட்டும் மீட்டுக் கொண்டு, இன்று (நமது) இந்தச் செயல்களை மன்னித்துவிடமாட்டான். எனவே, நமது துருப்புகளை வீழ்த்தி, திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தாக்குவதில், அவன் {அர்ஜுனன்} வெல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். (குறித்த வனவாச காலத்தின் நிறைவில் உள்ள சந்தேகத்தோடு) என்னைப் போலவே முன்பு துரியோதனனும் சொன்னான். இதை மனதில் கொண்டு, எது உண்மை என்பதைச் சொல்வதே கங்கையின் மகனுக்குத் {பீஷ்மருக்குத்} தகும்” என்றார் {துரோணர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!