Brahmanas were served pork and venison! | Sabha Parva - Section 4 | Mahabharata In Tamil
(சபா கிரியா பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : மயனால் கட்டப்பட்ட அந்த தெய்வீக சபைக்குள் யுதிஷ்டிரன் நுழைதல்; பிராமணர்களுக்கு தானம் செய்தல்; அந்தச் சபையில் அமர்ந்திருந்த க்ஷத்திரியர்கள் மற்றும் முனிவர்களின் பெயர் வரிசை…
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரன், பத்தாயிரம் பிராமணர்களுக்கு, பாலுடனும், நெய் கலந்த அரசியுடனும், தேன் கலந்த கனிகளுடனும், கிழங்குகளுடனும், பன்றியிறைச்சி மற்றும் மான் இறைச்சியுடனும் உணவு கொடுத்த பிறகு, அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான். பல நாடுகளில் இருந்து வந்திருந்த அந்த பிராமணர்களுக்கு, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} எள்ளால் பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், ஜிபந்தி {ஜீவநதிகை} என்ற காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவையும், அரிசியுடன் தெளிந்த நெய்யைக் கலந்து {ஹவிஷ்யம்},(1,2) பல வகைகளில் தயாரிக்கப்பட்ட இறைச்சிகளுடன், மேலும் பல்வேறு உணவு வகைகளுடனும், உறிஞ்சத் தக்க வகையிலும், குடித்தக்கத்த வகையிலும் கொடுத்தான்.[1] மேலும், பல ஆடைகளையும், சித்திர வேலைப்பாடு நிறைந்த அற்புத துணிகளையும் கொடுத்தான்.(3,4) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} ஒவ்வொரு பிராமணனுக்கும் ஆயிரம் பசுக்களையும் கொடுத்தான்.


