Saturday, July 13, 2019

விஷ்ணுஸஹஸ்ரநாமம் - விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 149

Vishnu Sahasranamam - Thousand names of Lord Vishnu! | Anusasana-Parva-Section-149 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 149)


பதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்? நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்? எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது? எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?" என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)

உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)

[1] "இந்தத் தவசிகள் அண்டத்தின் மூலப் படைப்பு குறித்து ஒருபோதும் ஊகம் செய்ய முயற்சிப்பதில்லை. எனினும் அவர்களது ஊகங்கள், அவாந்தரச் சிருஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன் விழிப்படையும்போது உண்டாகும் படைப்புத் தொடர்புடையனவாகும். இடையறாமல் தோற்றமும், அழிவும் நேர்ந்திருக்கின்றன, இன்னும் இடையறாமல் நடந்து கொண்டே இருக்கும். நித்தியத்தின் தொடக்கத்தை உணர முடியாததைப் போலவே அசல் படைப்பை உணர இயலாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில், "மஹாத்மாவான பகவானுக்கு எந்த நாமங்கள் குணங்களாலும், செய்கைகளாலும் வந்தனவாகப் பிரஸித்தி பெற்றவையோ, ரிஷிகளால் நன்றாகக் கீர்த்தனம் செய்யப்பட்டவையோ அவற்றை ஆத்மோஜ்ஜீவனத்திற்காக உனக்குச் சொல்கிறேன்" என்றிருக்கிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக, "வேதவ்யாஸர், ஸஹஸ்ரநாமத்தைக் கண்டறிந்த ரிஷி. அடியொன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்கள் அடங்கிய அனுஷ்டூப் என்னும் சந்தஸில் இந்த ஸஹஸ்ரநாமமிருக்கிறது. இதற்குப் பகவனான விஷ்ணு தேவதை. ‘அம்ருதாம்சூத்பவ:’ என்பது இம்மந்திரத்துக்குப் பீஜம் (=ஆதாரம்). ‘தேவகீநந்தந:’ என்பது சக்தி. ‘த்ரிஸாமா’ என்பது ஹ்ருதயம். ஸர்வதோஷ நிவாரணம் என்னும் ப்ரயோஜனத்தில் இம்மந்திரத்துக்கு உபயோகம். ஆயுதத்திற்கு எஃகு முதலிய காரணம் பீஜமென்றும் முனை சக்தியென்றும் அதன் நடு ஹ்ருதயம் என்றும் சொல்வதும் அதைச் சத்ருவதம் முதலிய கார்யங்களில் உபயோகிப்பதும் எப்படியோ, அப்படியே மந்த்ரங்கள் எல்லாவற்றிற்கும் சொல்வது வழக்கம் பரம் வ்யூஹம் விபவம் என்னும் அவதாரங்களினால் ஏற்பட்ட நாமங்களில், புரஸ்வரூப நாமங்கள் முதலில் சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது.
[3] விஷ்ணுசஹஸ்ரநாமம் இங்கிருந்து தொடங்குகிறது. கீழே கங்குலியில் உள்ள உரையை மொழிபெயர்த்து, கும்பகோணம் பதிப்பில் உள்ள எளிய மூலச் சொற்களை { } என்ற அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன். விஷ்ணுசஹஸ்ரநாமத் துதியை மூலச்சொற்களில் படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (ஸம்ஸ்க்ருதம்)!  | விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்)!  என்ற இரு சுட்டிகளைப் பார்க்கலாம். அடைப்புக் குறி இல்லாமல் விஷ்ணுஸஹஸ்ரநாமத் துதியை தமிழில் தனியாகப் படிக்க விரும்புவோர்  விஷ்ணுஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில்! என்ற சுட்டியைப் பார்க்கலாம். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களையும் அகர வரிசையில் பொருளோடு படிக்க விரும்புவோர் விஷ்ணுஸஹஸ்ரநாமம் - அகராதி! என்ற சுட்டியைப் பார்க்கலாம்.

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},  அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},  அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},  அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)

தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)

யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)

அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)

அளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)

(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)

அனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)

எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)

தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)

பிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)

வசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)

அனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)

எங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)

உலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்ட்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)

பிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்},  எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)

இந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)

தங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நிறுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)

புத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)

அனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)

சுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)

மரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)

அறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்},  வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)

முக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)

ஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)

சிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)

வேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா},  அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனைவருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)

புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)

(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)

பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)

எவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)

நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)

(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)

(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)

அமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)

துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)

உந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)

ஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)

அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)

படைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)

குணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)

யோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)

படைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்தையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)

பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)

மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹாதனன்}<426-434>;(59)

மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)

அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)

(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)

ஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)

அறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)

எண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)

பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)

ஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)

உயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம்  ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)

பிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)

(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)

பெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)

விதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன்  {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)

(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)

மூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)

அழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)

புறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)

தன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)

அழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவன் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)

அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)

பிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)

காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)

வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)

மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)

பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)

அனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)

மனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)

அறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)

அண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)

தனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)

பொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)

ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)

சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)

நான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆகிய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)

உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)

அழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)

உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)

பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)

பூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)

(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}, ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)

ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)

மிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவன் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)

(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)

(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)

வீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமிக்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)

ஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)

எல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)

தொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)

கோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)

கோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)

மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)

எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)

தொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)

அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)

பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்},  தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)

பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)

வேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)

இருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)

(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரதாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].

[1] மேலே < > என்ற அடைப்புக்குறிக்குள் கங்குலி இட்டிருக்கும் பெயர்களின் எண்ணிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது. கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் சரியாக ஆயிரம் பெயர்கள் இருக்கின்றன என எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில இடங்களில் எண்ணிக்கை சரியாக வரவில்லை. இருப்பினும் கங்குலி பின்பற்றிய எண்ணிக்கையின்படியே மேற்கண்ட ஆயிரம் பெயர்களையும் வகுத்திருக்கிறேன். பிபேக்திப்ராயின் பதிப்பில் 886 பெயர்கள்தான் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பெயர்களை அப்பதிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

[2] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பெயர்பட்டியல் முடியும் இடத்தில் வரும் அடிக்குறிப்பில் "ஸர்வப்ரஹரணாயுத: என்பதை இருமுறை சொல்லி "ஓம்நம:" என்று முடிக்க வேண்டும். இரண்டு முறை சொல்வது கிரந்த முடிவைத் தெரிவிக்கிறது. "ஓம்" என்பது மங்களக்குறிப்பு. "நம:" என்பது பணிவைக் காட்டுவது. "ஓம்" என்பது, "அத" என்பது இவ்விரண்டும் ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பிரம்மதேவரின் கழுத்தைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டன. ஆதலால், இவ்விரண்டு சொற்களும் மங்களகரமானவை. எதில் முதலில் விஷ்ணு நமஸ்காரம் செய்யப்படுகிறதோ, அதுதான் நல்ல லக்னம்; அதுதான் நல்ல நக்ஷத்ரம்; அதுதான் சுபதினம்; அதுதான் கிரியைக்குச் சுத்தம். இங்கு, முதலில் என்று சொன்னது முடிவில் நமஸ்காரம் செய்வதையும் சேர்த்துக் கொள்ளும் கருத்துள்ளது. நமஸ்காரம் செய்வதற்கு முன்னமே அதன் பலன் வந்துவிடுமென்று தெரிவிப்பதற்காக முடிவிலும் நமஸ்கரிப்பது சிஷ்டாசாரம். கிருஷ்ணனுக்குச் செய்த ஒரு நமஸ்காரமும், பத்து அசுவமேதயாகங்கள் செய்து அவபிருத ஸ்நானம் செய்ததற்குச் சமானம். பத்து அசுவமேதயாகங்கள் செய்தவனும் திரும்பி ஜனிப்பான். கிருஷ்ணனை நமஸ்கரிப்பது திரும்பி ஜனிக்கவொட்டாது. காயாம்பூ நிறமுள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், ஸ்வரூபஸ்வபாவங்கள் மாறாமலிருப்பவருமான கோவிந்தரை நமஸ்கரிப்பவர்களுக்குப் பயமில்லை. மூன்று லோகங்களுக்கும் அதிபதியும், ஒப்பற்ற மகிமையுள்ளவரும், ஸர்வசக்தரும், ஸர்வேசுவரருமான பகவானைச் சிறிது தலை வணங்கினாலும், மனிதனுக்குப் பல ஜன்மங்களிலும் ப்ரளயங்களிலும் யுகங்களிலும் உண்டான பாவங்களனைத்தும் உடனே ஒழிந்துவிடும்" என்றிருக்கிறது.

இவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)

எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)

வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)

முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை" என்றார் {பீஷ்மர்}.(142)

அநுசாஸனபர்வம் பகுதி – 149ல் உள்ள சுலோகங்கள் : 142

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்