Monday, February 20, 2017

துரியோதனன் சொன்ன சிவத் துதி! - கர்ண பர்வம் பகுதி – 33

Siva adoration said by Duryodhana! | Karna-Parva-Section-33 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : தாரகாசுரனை முன்னிட்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கு நடந்த போரைக் குறித்துச் சல்லியனிடம் சொன்ன துரியோதனன்; பிரம்மனை நோக்கித் தவமிருந்த தாரகனின் மகன்கள் மூவர்; வரமளித்த பிரம்மன்; மயனின் உதவியால் முந்நகரத்தை {திரிபுரத்தைக்} கட்டிய தைத்தியர்கள்; முந்நகரத்தை வெல்லத் தவறிய இந்திரன்; முந்நகரத்தை வெல்ல பிரம்மனிடம் வழிகேட்ட இந்திரன்; தேவர்கள் சொன்ன சிவத்துதி; ஆறுதலளித்த சிவன்...


துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ! தலைவா {சல்லியரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உமக்குச் சொல்லப் போவதை மீண்டும் கேட்பீராக.(1) இதைப் பெரும் முனிவரான மார்க்கண்டேயர் என் தந்தைக்கு உரைத்தார். ஓ! அரச முனிகளில் சிறந்தவரே, அதில் எதையும் விட்டுவிடாமல் இப்போது நான் உமக்கு உரைக்கிறேன். கிஞ்சிற்றும் ஐயமில்லாமல் நம்பிக்கையுடன் அவ்விவரங்களைக் கேட்பீராக.(2) ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தாரகனையே {தாரகாசுரனையே} கேடாகக் (வேராகக்) கொண்ட பெரும் போர்[1] ஒன்று நடந்தது. தைத்தியர்கள் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) தைத்தியர்கள் வீழ்ந்ததும், ஓ! மன்னா {சல்லியரே}, தாரகாக்ஷன் {தாராக்ஷன்}, கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற பெயர்கொண்ட தாரகனின் {தாரகாசுரனின்} மூன்று மகன்களும், கடும் தவங்களைப் பயின்று, உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ்ந்து வந்தனர். ஓ! எதிரிகளை எரிப்பவரே {சல்லியரே}, அந்த நோன்புகளால் அவர்கள் உடல் மெலிந்தவர்களானார்கள்.(4,5) வரமளிக்கும் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்களின் சுயக்கட்டுப்பாடு, நோன்புகள், தவங்கள், தியானங்கள் ஆகியவற்றின் விளைவாக மனநிறைவு கொண்டு அவர்களுக்கு வரங்களை அளித்தான்.(6) ஒன்றாகச் சேர்ந்திருந்த அவர்கள், உலகத்தின் எந்த உயிரினத்தின் மூலமும், எக்காலத்திலும் மரணம் நேராதபடி {மரணமில்லாமையைப்} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} வரம் கேட்டனர்.(7)


[1] பிபேக் திப்ராயின் பதிப்பில் இந்தப் போருக்கு “தாரகமாயை” என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தெய்வீகத் தலைவனும், உலகங்கள் அனைத்தின் குருவுமான அவன் {பிரம்மன்} அவர்களிடம், “எவ்வுயிரின் வாயிலாகவும் மரணமடையாதவாறு இருக்கக்கூடிய எந்தத் தன்மையும் உண்டாகாது. எனவே, அசுரர்களே, அத்தகு வேண்டுதல்களில் இருந்து விலகுவீராக. உங்களுக்கு விருப்பமான வேறேதும் வரத்தைக் கேட்பீராக” என்றான். பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, வேறு வரத்தைக் குறித்து நீண்ட காலம் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் ஆலோசித்து, உலகங்கள் அனைத்தின் பெருங்குருவான அவனிடம் {பிரம்மனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ! தேவரே, ஓ! பெரும்பாட்டனே {பிரம்மாவே}, {பின்வரும்} இந்த வரத்தை எங்களுக்கு அளிப்பீராக.(9) {விரும்பியபடி காற்றில் திரியக்கூடிய} முந்நகரங்களில் {திரிபுரத்தில்} வசித்தபடியே உமது அருளால் நாங்கள் இவ்வுலகில் திரிந்து வருவோம்.(10) ஓராயிரம் வருடங்கள் சென்ற பிறகு, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம், எங்கள் முந்நகரங்களும் கூட ஒன்றுசேரும்.(11) அப்போது தேவர்களில் முதன்மையான எவனாவது, ஒரே கணையால் அந்த மூன்று நகரங்களையும் துளைத்தால், ஓ! தலைவோ, அப்போது எங்கள் அழிவு நேரட்டும்” என்று கேட்டனர்[2].(12)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இந்த வேண்டுதல் இருக்கிறது.

வேறொரு பதிப்பில், “இஷ்டப்படி செல்லக்கூடியதும், மங்களகரமானதும், விரும்பப்படுகின்ற ஸமஸத்வஸ்துக்களும் நிரம்பியதும், தேவர்களாலும் தானவர்களாலும் நாசம் செய்யத்தகாததுமான நகரத்தை வாஸஸ்தானமாக ஏற்படுத்திக் கொள்வதற்கு விரும்புகிறோம். தேவரே, பிரபிதாமஹரே, யக்ஷர்களாலும், ராக்ஷஸர்களாலும், ஸர்ப்பக் கூட்டங்களாலும் நானாவித ஜாதியில் தோன்றின பிராணிகளாலும், பிசாசங்களாலும், சஸ்திரங்களாலும், பிரம்மவாதிகளுடைய சாபங்களாலும் நாசம் செய்யப்படாத மூன்று பட்டணங்களை எங்களுக்கு நீர் கொடுக்கக்கடவீர். தேவரீருடைய அனுக்ரகத்தை முன்னிட்டு, நாங்கள் இவ்வுலகத்தில் மூன்று பட்டணங்களையே வாஸஸ்தானமாகக் கொண்டு இந்தப் பூமியில் ஸஞ்சரிக்கப் போகின்றோம். ஆயிரக்கணக்கான வருஷங்கள் சென்றபிறகு, ஒருவரோடொருவர் சேரப் போகின்றோம். தோஷமற்றவரே, இந்த மூன்று பட்டணங்களும் ஐக்யமடையப்போகின்றன. ஒன்றுசேர்ந்த இந்த மூன்று பட்டணங்களையும் அப்பொழுது பெருமைபொருந்திய தேவஸ்ரேஷ்டனான எவன் ஒரே பாணத்தினால் நாசம் செய்வானோ அவனே எங்களுக்கு ம்ருத்யுவாகுக” என்று கேட்டனர்” என்று இருக்கிறது.

பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஓ! தேவா, ஓ! பெரும்பாட்டனே, எங்களுக்கு இந்த வரத்தை அளிப்பீராக. உமது அருளால் பூமிக்கு மேலே மூன்று நகரங்களில் வசித்துக்கொண்டே நாங்கள் இந்தப் பூமியில் வலம் வருவோம். ஓ குற்றமில்லாதவரே, ஓராயிரம் வருடங்களுக்கு ஒரு முறை அந்த மூன்று நகரங்களும் ஒன்றோடொன்று ஒன்று கலந்து ஒன்றாக மாறும். ஓ சிறப்புமிக்கவரே, அவை ஒன்று கலக்கும்போது, தேவர்களில் தலைமையான எவனாவது ஒரே கணையால் எங்களைக் கொல்வானென்றால், அதுவே எங்கள் மரணத்திற்கான வழியாகட்டும்” என்று கேட்டனர்” என்று இருக்கிறது.

“அப்படியே ஆகட்டும்” என்று அவர்களிடம் சொன்ன அந்தத் தேவன் {பிரம்மன்} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அவ்வரங்களைப் பெற்று மகிழ்ச்சியால் நிறைந்த அந்த அசுரர்கள், அந்த மூன்று நகரங்களையும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்று தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு,(13) அந்நோக்கத்தை அடைவதற்காக, அழிவோ, களைப்போ அறியாதவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனும், பெரும் அசுரனும், தெய்வீகக் கைவினைஞனுமான மயனை {மயாசுரனைத்} தேர்ந்தெடுத்தனர்.(14) பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மயன், தன் தவச் சக்தியின் துணையால், தங்கத்தாலான ஒன்றும், வெள்ளியால் மற்றொன்றும், கருப்பு இரும்பால் இன்னும் ஒன்றும் என முந்நகரங்களைக் கட்டமைத்தான்.(15) ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, தங்க நகரம் சொர்க்கத்திலும், வெள்ளி நகரம் ஆகாயத்திலும், இரும்பு நகரம் பூமியிலும் என அவை அனைத்தும் வட்டமாகச் சுழன்று வருவது போன்ற வழியில் நிறுவப்பட்டன[3].(16) அந்த நகரங்கள் ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் நீளமும் கொண்டிருந்தன. மேலும் அவை, வீடுகளையும், மாளிகைகளையும், உயர்ந்த சுவர்களையும், முகப்பு மண்டபங்களையும் கொண்டிருந்தன.(17) ஒன்றுக்கொன்று நெருக்கமாகச் சிறந்த அரண்மனைகளால் பெருகியிருந்தாலும், அவற்றின் தெருக்கள் {வீதிகள்} அகலமாகவும், விசாலமாகவும் இருந்தன. மேலும் அவை பல்வேறு மாளிகைகளாலும், வாயில்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18)

[3] “சக்கராஸ்தம் என்பதை நான் இங்கே உரைத்திருக்கும் பொருளிலேயே நீலகண்டர் விளக்கியிருக்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஆனால் அவையாவும் {அந்த மூன்று நகரங்களும்} ஒரு சக்கரத்தின் மீது நிலை கொள்ளச் செய்யப்பட்டன” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் “வட்டமாகச் சுற்றி வருவது போல அவை {அந்த மூன்று நகரங்களும்} இருந்தன” என்றிருக்கிறது.

மேலும், ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, அந்நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மன்னன் ஒருவனைக் கொண்டிருந்தன.(19) தங்கத்தாலான அழகிய நகரமானது சிறப்புமிக்கத் தாரகாக்ஷனுக்கும், வெள்ளியாலான நகரம் கமலாக்ஷனுக்கும், இரும்பாலானது வித்யுன்மாலிக்கும் சொந்தமானவையாக இருந்தன.(20) அந்தத் தைத்திய மன்னர்கள் மூவரும், விரைவில் தங்கள் சக்தியால் மூவுலகங்களையும் தாக்கியபடி அங்கே வசித்து ஆட்சி செய்து கொண்டே, “படைத்தவன் என்று அழைக்கப்படுபவன் எவன்?”[4] என்று சொல்லத் தொடங்கினர்.(21) தங்களுக்கு நிகரான வீரர்கள் எவரும் இல்லாதவர்களும், தானவர்களில் முதன்மையானவர்களுமான அவர்களிடம் {அந்த மூன்று மன்னர்களிடம்}, செருக்குடையவர்களும், தேவர்களால் முன்பு வீழ்த்தப்பட்டவர்களும், பெரும் செழிப்பை விரும்பியவர்களுமான ஊனுண்ணும் தானவர்கள் லட்சக் கணக்கில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்து, அந்த முந்நகரங்களில் குடியேறினர்.(22,23) இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் விரும்பிய அனைத்தையும் கொடுப்பவனாக மயன் இருந்தான். அவனை நம்பியே, முற்றிலும் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரும் அங்கே வசித்தனர்.(24) முந்நகரத்தில் வசித்தவர்களில் எவரும், எப்பொருளையும் தன் இதயத்தால் விரும்பினால், மயன் தனது மாயா சக்திகளின் துணையால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றினான்.(25)

[4] வேறொரு பதிப்பில், “பிரம்மா என்பவன் எவன்?” என்று கேட்டதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பிரஜாபதி என்பவன் எவன்?” என்று கேட்டதாக இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பிரஜாபதி என்று அறியப்படுபவன் எவன்?” என்று கேட்டதாக இருக்கிறது.

தாரகாக்ஷன், ஹரி என்ற பெயரில் ஒரு வீரமான, வலிமைமிக்க மகனைப் பெற்றிருந்தான். மிகக் கடுமையான தவங்களைச் செய்த அவனிடம் பெரும்பாட்டன் {பிரம்மன்} மனநிறைவு கொண்டான்.(26) அந்தத் தேவன் {பிரம்மன்} மனம் நிறைந்த போது, அவனிடம் ஹரி, “ஆயுதங்களால் கொல்லப்பட்டவர்கள் {தடாகத்தில்} வீசப்பட்டால், இருமடங்கு பலத்துடன் உயிருடன் மீண்டு வரும் வகையில் எங்கள் நகரத்தில் ஒரு தடாகம் உண்டாகட்டும்”[5] என்ற ஒரு வரத்தைக் கேட்டான்.(27) இந்த வரத்தை அடைந்தவனும், தாரகாக்ஷனின் மகனுமான வீரன் ஹரி, ஓ! தலைவா {சல்லியரே}, இறந்தோரை உயிருடன் மீட்கவல்ல ஒரு தடாகத்தைத் தன் நகரத்தில் உண்டாக்கினான்.(28) எவ்வடிவமும், எத்தோற்றமும் கொண்ட தைத்தியன் எவன் கொல்லப்பட்டாலும், அத்தடாகத்தில் அவன் வீசப்பட்டால், அதே வடிவம் மற்றும் தோற்றத்துடன் மீண்டும் அவன் உயிரோடு வெளியே வந்தான்.(29) தைத்தியர்கள், தங்களில் கொல்லப்பட்டோரை மீண்டும் அடைந்து, மூன்று உலகங்களையும் பீடிக்கத் தொடங்கினர். தவ வழிகளின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தேவர்களின் அச்சங்களை அதிகரிப்பவர்களுமான அவர்கள் {தைத்தியர்கள்}, ஓ! மன்னா {சல்லியரே}, போரில் எந்த இழப்பையும் அடையவில்லை.(30,31)

[5] வேறொரு பதிப்பில், “சஸ்திரங்களால் கொல்லப்பட்டு எந்தக் குளத்தில் விழுபவர்கள் மறுபடியும் அதிகப் பலசாலிகளாகத் தோன்றுவார்களோ அந்தக் குளமானது எங்களுடைய பட்டணத்தில் உண்டாக வேண்டும்” என்று கேட்டதாக இருக்கிறது.

பேராசை, மூடத்தனம் ஆகியவற்றால் மயக்கமடைந்து, தங்கள் அறிவை இழந்த அவர்கள் அனைவரும், அண்டத்தில் நிறுவப்பட்ட மாநகரங்கள் மற்றும் நகரங்களை வெட்கமில்லாமல் அழித்தனர்.(32) தாங்கள் பெற்ற வரங்களால் செருக்கில் நிறைந்த அவர்கள், எந்நேரமும், எல்லா இடங்களிலும், தேவர்களையும், அவர்களது துணைவர்களையும் தங்கள் முன் விரட்டிக் கொண்டே, தெய்வீகக் காடுகள், சொர்க்கவாசிகளின் விருப்பத்திற்குரிய ஆட்சிப்பகுதிகள் மற்றும் இனிமையானவையும், புனிதமானவையுமான முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவற்றில் விரும்பியவாறெல்லாம் திரிந்து கொண்டிருந்தனர். மேலும் தீயவர்களான அந்தத் தானவர்கள் எவருக்கும் எந்த மரியாதையும் காட்டவில்லை.(33,34) உலகங்கள் இவ்வாறு பீடிக்கப்படுகையில், மருத்துக்களால் சூழப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இடியை {வஜ்ரத்தை} ஏவிய படி அந்த முந்நகரங்களையும் எதிர்த்துப் போரிட்டான்.(35) எனினும், ஓ! மன்னா {சல்லியரே}, படைத்தவனின் {பிரம்மனின்} வரங்களால் ஊடுருவமுடியாதவையாக இருந்த அந்த நகரங்களைத் துளைப்பதில் புரந்தரன் {இந்திரன்} தவறியபோது, அச்சத்தில் நிறைந்த அந்தத் தேவர்களின் தலைவன்{இந்திரன்} அந்நகரங்களை விட்டகன்று, அசுரர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளைத் தெரிவிப்பதற்காக, எதிரிகளைத் தண்டிப்பவரான பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றான்.(36,37)

தெய்வீகமான பெரும்பாட்டனிடம் அனைத்தையும் தெரிவித்து, அவனுக்குத் தலைவணங்கிய அவர்கள், முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்கக்கூடிய வழிமுறைகளைக் கேட்டனர்.(38) இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {பிரம்மன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவன் எவனும், எனக்கு எதிராகக் குற்றம் செய்தவனே ஆவான்.(39) அசுரர்கள் அனைவரும், தீய ஆன்மாக்களைக் கொண்டவர்களாகவும், எப்போதும் தேவர்களை வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். உங்களுக்கு வலியை {துன்பத்தைத்} தருபவர்கள், எனக்கு எதிராக எப்போதும் குற்றம் இழைப்பவர்களே.(40) உயிரினங்கள் அனைத்திடமும் நான் வேறுபாடு காணாதவன். இதில் எந்த ஐயமும் கிடையாது. எனினும், அநீதிமிக்கவர்கள் {அதர்மிகள்} அனைவரும் கொல்லத்தக்கவர்களே. இதுவே என் நிலைத்த நோன்பாகும்.(41) அந்த மூன்று கோட்டைகளும் [6] ஒரே கணையால் துளைக்கப்பட வேண்டும். வேறு எவ்வழியாலும் அவற்றை அழிக்க முடியாது. ஸ்தாணுவை {சிவனைத்} தவிர வேறு எவனாலும் அவற்றை ஒரே கணையால் துளைக்க முடியாது.(42) ஆதித்யர்களே, ஈசானன் என்றும், ஜிஷ்ணு என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், உழைப்பில் எப்போதும் களைப்பறியாதவனுமான ஸ்தாணுவை {சிவனை} உங்கள் போர்வீரனாகத் தேர்ந்தெடுப்பீராக. அவனே அந்த அசுரர்களை அழிப்பான்” என்றான் {பிரம்மன்}.(43)

[6] வேறொரு பதிப்பில் “துர்க்கங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அரண்கள்” என்பது அதற்குப் பொருள்.

பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலானவர்களுமான தேவர்கள், பிரம்மனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, காளையைத் தன் குறியீடாகக் கொண்ட தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நாடி சென்றனர்.(44) கடுந்தவங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களும், வேதங்களின் அழியாத வார்த்தைகளைச் சொல்பவர்களுமான முனிவர்களின் துணையுடன் கூடிய அந்த நீதிமான்கள் {தேவர்கள்}, தங்கள் மொத்த ஆன்மாவான பவனை {சிவனை} நாடினார்கள்.(45) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அச்சங்களை விலக்குபவனும், அண்டத்தின் ஆன்மாவும், தன் ஆன்மாவால் அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவனுமான அந்தப் பரமாத்மாவை {ஈஸ்வரனான சிவனை} வேதங்களின் உயர்ந்த வார்த்தைகளில் அவர்கள் புகழ்ந்தனர்.(46) தன் ஆன்மாவின் செயல்பாடுகள் அனைத்தையும் தனிச்சிறப்புக் கொண்ட தவங்களால் நிறுத்த அறிந்தவனும், ஆன்மாவுக்கும், பருப்பொருளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்தவனும், தன் ஆன்மாவை எப்போதும் கட்டுக்குள் கொண்டவனும், அண்டத்தில் ஒப்பற்றவனும், (அனைத்திற்கும்) மூலமானவனும், பாவமற்றவனும், ஈசானன் என்று அழைக்கப்படுபவனுமான அந்த உமையின் தலைவனை {சிவனை}, அவர்கள் கண்டனர்.(47,48) அந்தத் தேவன் ஒருவனேயென்றாலும், அவர்கள் பல்வேறு வடிவங்களில் அவனைக் கற்பனை செய்திருந்தனர். அவர்கள், தங்கள் தங்கள் இதயங்களில் தனித்தனியாகக் கண்டிருந்த பல்வேறு வடிவங்கள் ஒவ்வொன்றையும் அந்த உயர் ஆன்மாவிடம் {சிவனிடம்} கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(49) பிறவாதவனான அந்த அண்டத் தலைவனை உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களில் கண்ட அந்தத் தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அனைவரும், தங்கள் சிரங்களால் பூமியைத் தொட்டனர்.[7](50)

[7] வேறொரு பதிப்பில் இந்த வர்ணனை பெரிதாக இருக்கிறது. அது பின்வருமாறு, “அவ்விதமான வாக்யத்தினாலே தூண்டப்பட்ட அந்தத் தேவர்கள் முடிவணங்கி நின்றார்கள். மங்களகரமான மத்தையுடையவர்களும், மஹாத்மாக்களுமான தேவஸ்ரேஷ்டர்கள் தேவ வருஷத்தில் ஆயிரம் வருஷம் தவம்புரிந்து விருஷபத்வஜரிடம் சென்றனர். தேவர்கள் பிரம்மாவை முன்னிட்டுக் கொண்டு சரண்யரான ருத்திரரைச் சரணமடைந்து சாஸ்வதமான வேதமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பெருந்தவம் புரிந்தார்கள். எல்லோரும் மன்மதனை எரித்தவரும், தேவர்களுக்குத் தேவரும், ஸ்ஷ்டரும், ஸ்திரமாயிருப்பவரும், வரங்களைக் கொடுக்கின்றவரும், மூன்று கண்களையுடைவரும், மங்களரூபியுமான ஈஸ்வரரை ஸாவ்விதத்தினாலும் சரணமடைந்தார்கள். அந்தத் தேவர்கள் (எல்லாப் பிரஜைகளையும்) ஸம்ஹரிப்பவரும், துதிக்கத்தக்கவரும், பிறப்பில்லாதவரும், சந்திரனால் அடையாளமிடப்பட்ட தலைமயிரையுடையவரும், பயம் நேர்ந்த காலங்களில் அபயம் கொடுப்பவரும், தவறாத விரதமுள்ளவரும், ஸர்வவஸ்உதக்களையும் தம் சரீரமாகக் கொண்டவரும், பெருமையுள்ளவரும் உலகத்தையெல்லாம் ஸ்வரூபத்தால் வியாபித்திருக்கின்றவருமான ருத்திரை உக்கிரங்களும், ராக்ஷஸர்களை நாசஞ்செய்பவைகளுமான மந்திரங்களால் ஸ்தோத்திரஞ்செய்தார்கள். எந்தப் பகவான் பற்பல விதமான தபோவிசேஷங்களால் தம்முடைய மஹிமையை அறிந்திருக்கிறாரோ, எந்தப் பகவான் புத்தியினால் நிச்சயிக்கத்தக்க ஆகமதத்வத்தைத் தாமாகவே அறிந்திருக்கிறாரோ, அந்தப் பகவானுக்கு எப்பொழுதும் மனமானது தம் வசத்தில் நிலைபெற்றிருக்கின்றதோ, அத்தகைய மகிமை பொருந்தியவரும், தேஜோராசியும் உமாபதியும் (பாவங்களைப்) போக்குகின்றவரும், ஐஸ்வரியமுள்ளவரும், உலகத்தில் மற்றொருவரும் நிகரில்லாதவரும், அதிகமாகத் தபிக்கச் செய்பவரும் பாமற்றவருமான ஈஸ்வரரை அந்தத் தேவர்கள் மிகுந்த முயற்சியினால் ஸாக்ஷாத்கரித்தார்கள். ஒருவராயிருக்கின்ற அந்தப் பகவான் அப்படிப்பட்ட தம் ரூபத்தினிடதில் பல வித ரூபங்களை உண்டு பண்ணினார். அதிகமான ஆச்சரியத்தையுடையவர்களான தேவர்களனைவர்களும் மஹாத்மாவினிடத்தில் ஆத்மாவினுடைய பிரதிபிம்பங்களாயிருக்கிற பரஸ்பரரூபங்களைக் கண்டார்கள். ஸர்வபூதஸ்வரூபியும், பிறப்பறவரும், உலகத்திற்கு நாதருமான அந்த ருத்திரரைக் கண்டு தேவர்களும் பிரம்ம ரிஷிகளும் தலை பூமியில் படும்படி நமஸ்கரித்தனர்” என்றிருக்கிறது.

“நல்வரவு” என்ற வார்த்தையால் அவர்களை வணங்கி, அவர்களது பணிந்த தன்மையில் இருந்து அவர்களை உயர்த்திச் சிரித்த சிறப்புமிக்கச் சங்கரன், “உங்கள் வருகையின் நோக்கத்தை எமக்குச் சொல்வீராக” என்றான்.(51) முக்கண் தேவனால் {சிவனால்} இவ்வாறு ஆணையிடப்பட்டதும் அவர்களது இதயங்கள் ஆறுதலை அடைந்தன. அப்போது அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்: “ஓ! தலைவா, உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். தேவர்கள் அனைவரின் மூலமே ஆனவனும், வில் தரித்தவனும், கோபத்தால் நிறைந்தவனுமான உன்னை வணங்குகிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், உயிரினங்களின் தலைவர்கள் அனைவராலும் புகழப்படுபவனுமான உன்னை வணங்குகிறோம்.(53) சிவந்தவனும், மூர்க்கமானவனும், நீல மிடறு {தொண்டை} கொண்டவனும், திரிசூலந்தரித்தவனும்,(54) கலங்கடிக்கப்பட முடியாதவனும், மான்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைக் கொண்டு போரிடுபவனும், துதிகள் அனைத்திற்கும் தகுந்தவனும், மிகத் தூய்மையானவனும், அழிவின் வடிவே ஆனவனும், காலனே ஆனவனும்,(55) தடுக்கப்பட முடியாதவனும், பிரம்மனே ஆனவனும், பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்பவனும், ஈசானனும், அளக்கப்பட முடியாதவனும், பெரும் கட்டுப்பாட்டாளனும், கந்தலாடை அணிந்தவனும்,(56) பழுப்பானவனும், நோன்புகளை நோற்பவனும், விலங்கின் தோல்களை ஆடையாக அணிந்தவனும், குமாரனின் {முருகனின்} தந்தையும், முக்கண்ணனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைத் தரிப்பவனும்,(57) {உன்} பாதுகாப்பை நாடுவோர் அனைவரின் துன்பங்களை அழிப்பவனும், பிராமணர்களை வெறுப்போர் அனைவரையும் அழிப்பவனும், மரங்கள் அனைத்தின் தலைவரும், மனிதர்கள் அனைவரின் தலைவனும், பசுக்கள் அனைத்தின் தலைவனும், எப்போதும் வேள்விகளின் தலைவனாக இருப்பவனுமான உன்னை வணங்குகிறோம்.(58) துருப்புகளின் தலைமையில் எப்போதும் இருப்பவனும், முக்கண்ணனும், கடும் சக்தி கொண்டவனுமான உன்னை வணங்குகிறோம். எண்ணம், சொல் மற்றும் செயல்களில் நாங்கள், எங்களை உனக்கு அர்ப்பணிக்கிறோம். எங்களிடம் அருள்கூர்வாயாக” {என்றனர்}.(59) இந்தத் துதியால் மனம் நிறைந்த அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நல்வரவு” என்ற வார்த்தையால் வணங்கி, அவர்களிடம், “உங்கள் அச்சங்கள் அகலட்டும். உங்களுக்கு யாம் செய்ய வேண்டியதைச் சொல்வீராக” என்றான் [சிவன்]”[8].(60)

[8] வேறொரு பதிப்பில் இந்தச் சிவத் துதி, “பிரபுவே, தேவரீருக்கு வந்தனம், வந்தனம், வந்தனம். தேவதைகளுக்கெல்லாம் அதிதேவதையானவரும், பிராணவல்லபையான அம்பிகைக்கு இருப்பிடமாயிருக்கின்றவரும், அதிகக் கோபமுள்ளவரும், தக்ஷப்பிரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவரும், ஸ்ருஷ்டிகர்த்தர்களாலே ஸ்தோத்திரம் செய்யப்பட்டவருமான உமக்கு வந்தனம். ஸ்தோத்திரம் செய்யப்பட்டவரும், ஸ்தோத்திரம் செய்யத்தக்கவரும், ஸ்தோத்திரம் செய்யப்படுகின்றவரும், மங்களுங்களுக்கு உத்பத்தி ஸ்தானமாயிருப்பவரும், மிகச் சிவந்தவரும் (பிராணிகளை) ரோதனம் செய்யும்படி செய்கின்றவரும், கறுத்த கழுத்தையுடையவரும், சூலத்தைத் தரித்தவரும், ஸ்பலமானவரும், ம்ருகசரீரத்தைத் தரித்தவரும், சிறந்த ஆயுதங்களால் போர்புரிகின்றவரும், ஆராதனத்துக்குத் தகுந்தவரும், சுத்தரும், க்ஷயத்துக்குக் காரணமாயிருப்பவரும், ஹிம்ஸிக்கின்றவரும், ஒருவராலும் தடுக்கமுடியாதவரும், சுக்கிரஸ்வரூபியும், பிரம்மஸ்வரூபியும், பிரம்மச்சாரியும் ஜகதீசரும், மனத்தினாலே அளிவிடமுடியாதவரும், (துஷ்டர்களை) ஸம்ஹரிக்கின்றவரும், தோலை ஆடையாக உடுத்தவரும், தவத்தில் பற்றுதலுள்ளவரும், மஞ்சள் நிறமுள்ளவரும், விரதங்களை அனுஷ்டிப்பவரும், தோலை உடுத்தவரும், ஸுப்ரம்மண்யருக்குப் பிதாவும், முக்கண்ணரும், உத்தமமான ஆயுதங்களைத் தரித்தவரும், சரணமடைந்தவர்களுடைய துன்பத்தை நீக்குகின்றவரும், பிரம்மவேஷிகளுடைய கூட்டங்களை நாசம் செய்கின்றவரும், வனஸ்பதிகளுக்குப் பதியாயிருப்பவரும், வனங்களுக்குப் பதியுமான தேவரீருக்கு வந்தனம். பசுக்களுக்கெல்லாம் பதியும், எப்பொழுதும் யஜ்ஞங்களுக்குப் பதியுமான தேவரீருக்கு வந்தனம். ஸைன்யங்களையுடையவரும், மூனுற கண்களையுடையவரும், அளவுகடந்த வல்லமை பொருந்தியவருமான தேவரீருக்கு வந்தனம். மனவாக்குக் காயங்களால் உம்மைச் சரணமடைந்திருக்கின்ற எங்களைத் தேவரீர் பாதுகாக்க வேண்டும்” என்றிருக்கிறது.
-------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 33-ல் உள்ள சுலோகங்கள் : 60

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்