Wednesday, February 13, 2019

சிவஸஹஸ்ரநாமம் - சிவனின் ஆயிரம் பெயர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 17

Siva Sahasranamam - Thousand names of Lord Shiva! | Anusasana-Parva-Section-17 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 17)


பதிவின் சுருக்கம் : தண்டி முனிவரால் அருளப்பட்டதாக உபமன்யு சொன்ன சிவஸஹஸ்ரநாமத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! யுதிஷ்டிரரே, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்கமுதல் சொல்லத் தொடங்கினார்.(1)


உபமன்யு, "பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பெருந்தேவனைத் துதிக்கப் போகிறேன்.(2) திறம்பெற்ற மனிதர்களால் (பெருந்தேவனுக்குப் பொருத்தமான) அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அவை, வாய்மையும் வெற்றியும் நிறைந்தவையும், {அந்தப் பெயர்களைச்} சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லவையுமாக இருக்கின்றன. வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டடைந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.(3) உண்மையில், நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு, முதன்மையானவனும், முதல்வனே ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கப் போகிறேன்.(4) (அவை உண்மையில் எங்கிருந்து உண்டானதோ அந்தப்) பிரம்ம லோகத்தில் இருந்து பரவிய அப்பெயர்கள் அண்டம் முழுவதும் கேட்கப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மை நிறைந்தவையாக இருக்கின்றன. வேதங்களின் மூலம் (அண்டத்திற்கு) அறிவிக்கப்பட்டவனும், நித்தியமானவனுமான அந்தப் பரப்பிரம்மனை அப்பெயர்களைக் கொண்டு நான் துதிக்கப் போகிறேன்.(5)

ஓ! யது குலத் தலைவா {கிருஷ்ணா}, நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ {கிருஷ்ணா} அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய். தேவர்கள் அனைவரிலும் தனித்துவமானவனும், சிறப்புமிக்கவனுமான அந்தப் பவனை நீ வழிபடுவாயாக.(6) நீ அவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருப்பதாலேயே நீ கேட்கும்படி நான் அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். மஹாதேவனே நித்திய பிரம்மமாவான். நூறு வருடங்கள் தொடர்ந்து சொன்னாலும், யோக பலம் கொண்டவர்களாலும் அந்தப் பெருந்தேவனின் மகிமையையும், பலத்தையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் மஹாதேவனின் தொடக்கமும், நடுவும், முடிவும் தேவர்களாலேயே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.(7,8) ஓ! மாதவா, உண்மை இவ்வாறிருக்கையில், மஹாதேவனின் குணங்களை வேறு யாரால் உரைக்க முடியும்? இருப்பினும், சிறப்புமிக்கவனும், முற்றான ஞானம் கொண்டவனுமான அந்தப் பரமதேவனின் கருணையால், நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் தொகுதி என்ற வடிவில் நான் அவனது குணங்களைச் சொல்லப் போகிறேன்.(9) அந்த உயர்ந்த தலைவனின் அனுமதி பெறாமல் எவராலும் அவனைத் துதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், அவனது அனுமதி பெறுமளவுக்கு நற்பேறு பெற்ற பிறகே அவனைத் துதிப்பதில் வென்றேன்.(10)

பிறவியும், அழிவும் அற்றவனும், அண்டத்தின் மூலக் காரணனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், வெளிப்படாத தோற்றம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனின் பெயர்களில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான அந்தத் தேவனின் பெயர்களில் பிரம்மன் மூலம் சொல்லப்பட்ட சிலவற்றைக் கேட்பாயாக.(12) நான் சொல்லப் போகும் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.(13) தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது {நெய்யானது} வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும், தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.(14) இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.(15)

இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கும்[1]. இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது. பெருந்தேவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அர்ப்பணிப்புள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனுக்கு மட்டுமே இது சொல்லப்பட வேண்டும். அர்ப்பணிப்பில்லாதவனும், நம்பிக்கையில்லாதவனும், தன் ஆன்மாவை வெல்லாதவனுமான ஒருவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லக் கூடாது[2].(16) ஓ! கிருஷ்ணா, அனைத்துப் பொருட்களின் மூலக் காரணனும், பரமாத்மாவும், பெருந்தேவனும், சிறப்புமிக்கவனுமான மஹாதேவனிடம் வன்மத்தை வளர்க்கும் உயிரினம் தனக்கு முன்பான மூதாதையருடனும், தனக்குப் பின் வரும் தன் பிள்ளைகள் அனைவருடனும் நிச்சயம் நரகத்திற்கே செல்வான்.(17) இப்போது நான் சொல்லப்போகும் இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகிறது. இது யோகமாகவும் காணப்படுகிறது. தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்க வேண்டும். இஃது அறிவுக்கு இணையானதாகும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.(18) ஒருவன் தன் இறுதிக் கணத்திலாவது, இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமானதாகும். அனைத்து வகை நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகும். இஃது அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.(19) அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் பழங்காலத்தில் தொகுக்கப்பட்டு, சிறந்த துதிகள் {ஸ்தோத்திரம்} அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.(20)

[1] "இஃது {சிவசஹஸ்ரநாமம்} ஓதப்பட்டால் ராட்சசர்களிடம் இருக்கும் அச்சங்களை அழிக்கும். இதன் ஒலி கேட்டாலே ராட்சசர்கள் தப்பி ஓடுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில், "பக்தியும், சிரத்தையும், நம்பிக்கையுமுள்ளவனுக்கே கொடுக்கத்தக்கது; சிரத்தையில்லாதவனுக்கும், நாஸ்திகனுக்கும், மனத்தையடக்காதவனுக்கும் காரண ரூபியான ஈஷ்வரரைப் பகைக்கிறவனுக்கும் கொடுக்கத்தகாதது" என்றிருக்கிறது.

அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் சொல்லும் இந்தத்துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக {ஸ்தோத்திர ராஜவெனக்} கருதப்படுகிறது.(21) துதிகள் அனைத்தின் மன்னனான இது, முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்திற்குச் சொல்லப்பட்டது. தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்ட துதியாக அறியப்படுகிறது.(22) தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாகும், இது கொடும்பாவங்களையும் கழுவவல்லதாகும்.(23) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் பழமையானவனை,(24) சக்திகள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, காந்திகள் அனைத்திலும் காந்தி கொண்டவனை,(25) கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் கட்டுப்பாடுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேர்களின் தேவனாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,(26) வேள்விகள் அனைத்தின் வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,(27) யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்தின் காரணனை, இல்லாமையில் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,(28) இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனை, அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகிறது. அந்தப் பெரும் சர்வனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களை {சிவசஹஸ்ரநாமத்தை} உரைக்கப் போகிறேன் கேட்பாயாக.(29) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக {என்றார் உபமன்யு}.

{சிவசஹஸ்ரநாமம் இங்கிருந்து தொடங்குகிறது. கீழே கங்குலியில் உள்ள உரையை மொழிபெயர்த்து { } என்ற அடைப்புக்குறிக்குள் மூலச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவஸஹஸ்ரநாமத் துதியை மூலச்சொற்களில் படிக்க விரும்புவோர் சிவஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (ஸம்ஸ்க்ருதம்)!  | சிவஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்)!  என்ற இரு சுட்டிகளைப் பார்க்கலாம். அடைப்புக் குறி இல்லாமல் சிவஸஹஸ்ரநாமத் துதியை தமிழில் தனியாகப் படிக்க விரும்புவோர்  சிவஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் என்ற சுட்டியைப் பார்க்கலாம்.}

{உபமன்யு சொன்னார்}, "ஓம் {ௐ}. அசைவற்றவன் {ஸ்திரன்} நீயே. நிலையானவன் {ஸ்தாணு} நீயே, பலமிக்கவன் {ப்ரபு} நீயே, பயங்கரன் {பாநு / பீமன்} நீயே, முதன்மையானவன் {பரவரன்} நீயே, வரமளிப்பவன் {வரதன்} நீயே, மேன்மையானவன் {வரன்} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவன் {ஸர்வவிச்யாதன்} நீயே, அனைத்துப் பொருட்களும் {ஸர்வன்} நீயே, அனைத்தையும் படைத்தவன் {ஸர்வகன்} நீயே, பவன் நீயே.(30-1) தலையில் சடாமுடி தரித்தவன் {ஜடி} நீயே, விலங்கின் தோலை ஆடையாக அணிபவன் {சர்மி} நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை கொண்டவன் {சிகண்டி/சீகி/கட்கீ} நீயே, மொத்த அண்டத்தையும் அங்கங்களாகக் கொண்டவன் {ஸர்வாங்கன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் {ஸர்வபாவநன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவால் ஹரன் நீயே. மானுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {ஹரிணாக்ஷன்} நீயே, அனைத்து உயிரினங்களையும் அழிப்பவன் {ஸர்வபூதஹரன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன் {ப்ரபு} நீயே.(31-2)

அனைத்துச் செயல்பாடுகளும் உண்டாகும் ப்ரவ்ருத்தி நீயே, செயலின்மை {நிவ்ருத்தி} நீயே, நோன்புகளை நோற்பவன் {நியதன்} நீயே, நித்தியமானவன் {சாஸ்வதன்} நீயே, மாற்றமில்லாதவன் {த்ருவன்} நீயே, சுடலையில் வசிப்பவன் {ஸ்மசாநவாஸி} நீயே, தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந} நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன் {கசரன்} நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {கோசரன்} நீயே, பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிப்பவன் {அர்த்தநன்} நீயே.(32-3) அனைவரும் வணங்கத்தக்கவன் {அபிவாத்யன்} நீயே, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மன்} நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன் {தபஸ்வி} நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன் {பூதபாவநன்} நீயே, பித்தன் போல வேடமிட்டு உண்மை இயல்பை மறைப்பவன் {உந்மத்தவேஷப்ரச்சந்நன்} நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான் {ஸர்வலோகப்ரஜாபதி} நீயே.(33-4) அளவிடமுடியாத வடிவம் கொண்டவன் {மஹாரூபன்} நீயே, பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே, அறத்தின் வடிவம் {வ்ருஷரூபன்} நீயே, பெரும்புகழ் {மஹாயசஸ்} நீயே, உயர்ந்த ஆன்மா {மஹாத்மா} நீயே, அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வபூதாத்மா} நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஸ்வரூபன்} நீயே, (அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் காலத்தில் அண்டத்தை விழுங்குவதற்கான) பெரும் கோரப்பற்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(34-5)

உலகங்கள் அனைத்தின் பாதுகாவலன் {லோகபாலன்} நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா {அந்தர்ஹிதாத்மா} {வெளிப்படா குணம் கொண்டவன்} நீயே, மகிழ்ச்சி {ப்ரஸாதன்} நீயே. கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஹயகர்த்தபி} நீயே. மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் {பவித்ரன்} நீயே, துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன் {நியமன்} நீயே. தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம் {நியமாச்ரிதன்} நீயே.(35-6) அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன் {ஸர்வகர்மா} நீயே, (எவராலும் படைக்கப்படாத) சுயம்பு {ஸ்வயம்பூதன்} நீயே. அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தொடக்கம் {ஆதி} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைக்கும் ஹிரண்யகர்ப்பன் {ஆதிகரன்} நீயே, வற்றாத பலமும் இன்பநிலையும் {நிதி} நீயே, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்} நீயே, பெரும் சக்தியுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {விசாலாக்ஷன்} நீயே, ஸோமன் நீயே. ஆகாயத்தில் ஒளிர்வதற்காக உயிரினங்களில் அறவோரை மகிமையின் வடிவங்களை ஏற்கச் செய்பவன் {நக்ஷத்ரஸாதகன்} நீயே.(36-7)

சந்திரமாஸ் {சந்திரன்} நீயே, ஸூர்யன் நீயே, சனிக்கோள் {சநி} நீயே, சந்திரனின் இறங்கு கணு {கேது} நீயே, ஏறு கணுவும் {க்ரஹன் / ராஹு} நீயே,  மங்கலன் (செவ்வாய் கோள்) {கோள்களின் தலைவன்} {க்ரஹபதி} நீயே, பிருஹஸ்பதி (வியாழன் கோள்) நீயே, சுக்கிரன் (வெள்ளி கோள்) நீயே, புதன் (புதன் கோள்) நீயே, அத்ரியின் மனைவியை வழிபடுபவன் {அதரி} நீயே, {அத்ரியாநமஸ்கர்த்தன்}, கோபம் கோண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடிய போது அந்த வேள்வியை நோக்கி கணை ஏவியவன் {ம்ருகபாணார்ப்பணன்} நீயே, பாவமண்டாதவன் {அநகன்} நீயே.(37-8) அண்டத்தைப் படைக்கும் சக்தி கொண்ட தவங்களை உடையவன் {மஹாதபஸ்} நீயே, அண்டத்தை அழிக்கும் சக்தி கொண்ட தங்களை உடையவன் {கோரதபஸ்} நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன் {அதீநன்} நீயே, உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தீநஸாதகன்} நீயே, (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்றுக் காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன் {ஸம்வத்ஷரகரன்} நீயே, (பிரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்} மந்திரன் {மந்தரன்} நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுப்பவன் {ப்ரமாணன்} நீயே, உயர்ந்த தவம் {பரமதபன்} நீயே.(38-9)

யோகத்தில் அர்ப்பணிப்புமிக்கவன் {யோகி} நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன் {யோஜ்யன்} நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் வித்து {மஹாபீஜன்} நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததைக் காட்டுபவன் {மஹாரேதஸ்} நீயே, அளவிலா வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே, தங்கத்தையே வித்தாகக் கொண்டவன் {ஸ்வர்ணரேதஸ்} நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால்) அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்} நீயே, அனைத்துப் பொருட்களின் காரணன் {ஸுபீஜன்} நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைகளுக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் {பீஜவாஹனன்} நீயே.(39-10) பத்துக் கரங்களைக் கொண்டவன் {தசபாஹு} நீயே, (எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன் {அநிமிஷன்} நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்டவன் {நீலகண்டன்} நீயே, உமையின் தலைவன் {உமாபதி} நீயே, அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் {விஷ்வரூபன்} நீயே, சுயமேன்மை கொண்டவன் {ஸ்வயம்ஸ்ரேஷ்டன்} நீயே, வலிமையில் வீரன் {பலவீரன்} நீயே, செயலாற்றலற்ற பருப்பொருள் {பலன்} நீயே, (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் {கணன்} நீயே.(40-11) தத்துவங்களை விதிப்பவனும் ஆள்பவனும் {கணகர்த்தன்} நீயே, கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் {கணபதி} நீயே, முடிவிலா வெளியை மறைப்பவன் {திக்வாஸஸ்} நீயே, ஆசையின் தேவனான காமன் நீயே, (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்களை அறிந்தவன் {மந்தரவித்} நீயே, (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திரம் {பரமோமந்த்ரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் {ஸர்வபாவகரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் {ஹரன்} நீயே.(41-12)

உன் கரங்களில் ஒன்றில் கமண்டலம் தரிப்பவன் {கமண்டலுதரன்} நீயே. மற்றொன்றில் வில்லைத் தரிப்பவன் {தந்வி} நீயே. மற்றொன்றில் கணைகளைத் தரிப்பவன் {பாணஹஸ்தன்} நீயே. மற்றொன்றில் மண்டையோட்டைத் தரிப்பவன் {கபாலவாந்} நீயே. வஜ்ரத்தைத் தரிப்பவன் {அசநி} நீயே. நூறு கொல்லியை {சதக்நியைத்} தரிப்பவன் நீயே. வாள் தரிப்பவன் {கட்கி} நீயே. போர்க்கோடரி தரிப்பவன் {பட்டிசி} நீயே. சூலந்தரித்தவன் {ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்} {ஆயுதி} நீயே. துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே.(42-13) உன் கரங்களில் ஒன்றில் வேள்விக் கரண்டியைக் கொண்டிருப்பவன் {ஸ்ருவஹஸ்தன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {ஸுரூபன்} நீயே. அபரிமிதமான சக்தியைக் கொண்டவன் {தேஜஸ்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரை அலங்கரிக்கும் அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் {தேஜஷ்கரன்} நீயே. தலையில் தலைப்பாகை அணிபவன் {உஷ்ணீஷி} நீயே. அழகிய முகம் கொண்டவன் {ஸுவக்த்ரன்} நீயே. காந்தியிலும் பலத்திலும் பெருகுபவன் {உதக்ரன்} நீயே. எளிமையும், பணிவும் கொண்டவன் {விந்தன்} நீயே.(43-14) மிக நெடியவன் {தீர்க்கன்} நீயே. புலன்களையே கதிர்களாகக் கொண்டவன் {ஹரிகேசன்} நீயே. ஆசான்களில் பேராசான் {ஸுதீர்த்தன்} நீயே. (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான)[3] பரப்பிரம்மம் {க்ருஷ்ணன்} நீயே. (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவை ஏற்றவன் {ஸ்ருகாலரூபன்} நீயே. (தவங்களில் இருந்து பெறும்) பலத்திற்காகக் காத்திராமல் நோக்கங்களை அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தார்த்தன்} நீயே. (துறவின் குறியீடாக) மொட்டைத் தலையுடன் இருப்பவன் {முண்டன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவன் {ஸர்வசுபங்கரன்} நீயே.(44-15)

[3] "கிருஷ்ணன் என்ற சொல் உரையாசிரியரால் இவ்வாறு விளக்கப்படுகிறது. கிருஷ் என்பது பூ அல்லது இருப்பைக் குறிக்கும் சொல்லாகும். ண என்ற எழுத்து நிவ்ருத்தியைக் குறிக்கிறது. எனவே கிருஷ்ணன் என்பது ஆனந்தசன்மாத்ரா என்று விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிறப்பற்றவன் {அஜன்} நீயே. எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவன் {பஹுரூபன்} நீயே. அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் {கந்தகாரி} நீயே. (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, தலையில் உள்ள சடாமுடியில் அதனை உறிஞ்சிக் கொண்டவன் {கபர்த்தி} நீயே. அரசையும், தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி {ஊர்த்வரேதஸ்} நீயே. பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் {மேல்நோக்கிய குறியைக் கொண்டவன்} {ஊர்த்வலிங்கன்} நீயே. எப்போதும் அண்ணாந்து {மல்லாந்து / மேல்நோக்கிப்} படுப்பவன் {ஊர்த்வசாயி} நீயே. பலத்தையே வசிப்பிடமாகக் கொண்டவன் {நபஸ்தலன்} நீயே.(45-16) தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் {த்ரிஜடி} நீயே. மரவுரி தரித்தவன் {சீரவாஸஸ்} நீயே. (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே. தேவர்களின் படைத்தலைவன் {ஸேநாபதி} நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விபு} நீயே. பகலில் உலவுபவன் {அஹஸ்சரன்} நீயே. இரவில் உலவுபவனும் {நக்தஞ்சரன்} நீயே[4]. கடுங்கோபம் கொண்டவன் {திக்மமந்யு} நீயே. (வேத கல்வி மற்றும் தவங்களால் பிறக்கும்) பளிச்சென்ற பிரகாசம் கொண்டவன் {ஸுவர்ச்சலன்} நீயே.(46-17) உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் {கஜஹன்} நீயே. அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் கொல்பவன் {தைத்யஹன்} நீயே. அண்டத்தை அழிக்கும் காலன் நீயே. அண்டத்தின் தலைமை ஆணையாளன் {லோகதாதா} நீயே. சிறந்த சாதனைகள் அனைத்தின் சுரங்கம் {குணாகரன்} நீயே. சிங்கம் மற்றும் புலியின் வடிவம் {ஸிம்மசார்த்தூலரூபன்} நீயே. {குருதியால் நனைந்த} யானைத் தோலை உடுத்தியிருப்பவன் {ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன்} நீயே.(47-18) காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி {காலயோகி} நீயே. அசல் ஒலி {மஹாநாதன்}நீயே. விருப்பங்கள் அனைத்தின் கனியும் {ஸர்வகாமன்} நீயே. நான்குவழிகளில் துதிக்கப்படுபவன் {சதுஷ்பதன்} நீயே[5]. (வேதாளம் மற்றும் பிறவற்றைப் போன்ற) இரவுலாவி {நிசாசரன்} நீயே. சடலங்களின் துணையுடன் திரிபவன் {பிரேதசாரி} நீயே. பூதங்களின் துணையுடன் திரிபவன் {பூதசாரி} நீயே. இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் உயர்ந்த தலைவன் {மஹேஸ்வரன்} நீயே.(48-19) இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக் கொண்டவன் {பஹுபூதன்} நீயே. மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளைத் தாங்குபவன் {பஹுதரன்} நீயே. ராஹு என்ற பெயரில் அறியப்படும் ஆதி அறியாமை, அல்லது தமஸ் {ஸ்வர்ப்பாநு} நீயே. அளவற்றவன் {அமிதன்} நீயே. விடுதலை அடைந்தவர்களால் {முக்தர்களால்} அடையப்படும் உயர்ந்த கதி நீயே. நடன விரும்பி {ந்ருத்யப்ரியன்} நீயே. எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பவன் {நித்யநர்த்தன்} நீயே. பிறரை நடனமாடச் செய்பவன் {நர்த்தகன்} நீயே. அண்டத்தின் நண்பன் {ஸர்வலாலஸன்} நீயே.(49-20)

[4] "தேவர்கள் பகலில் உலவுவார்கள், அசுரர்களும், ராட்சசர்களும் இரவில் உலவுவார்கள், எனவே, தேவர்களும், தைத்தியர்களும், பிறரும் நீயே என்று இங்கே சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "விஸ்வம், தைஜசம், பிராஜ்ஞை, சிவத்தியானம் என்ற நான்கு வழிகள் இவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அமைதியான, மென்மையான குணம் கொண்டவன் {கோரன்} நீயே. அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய தவப் பலத்தைக் கொண்டவன் {மஹாதபஸ்} நீயே. மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் கட்டியிருப்பவன் {பாசன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {நித்யன்} நீயே. (கைலாச) மலையில் வசிப்பவன் {கிரிருஹன்} நீயே. பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளி போன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவனும் {நபன்} நீயே. ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரஹஸ்தன்} நீயே. வெற்றி {விஜயன்} நீயே. சோம்பலற்றவனும், விடாமுயற்சி தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாதவனும் {வ்யவஸாயன், அதந்த்ரிதன்} நீயே.(50-21) அச்சமற்றவன் {அதர்ஷணன்} நீயே. அச்சமும் {தர்ஷணாத்மா} நீயே. பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் {யஜ்ஞஹன்} நீயே. பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமநாசகன்} நீயே. தக்ஷனின் வேள்வியை அழித்தவன் {தக்ஷாயாகபஹாரி} நீயே. இனிமையானவன் {ஸுஸஹன்} நீயே. சற்றே இனிமையானவன் {சார்பற்றவன்} {மத்யமன்} நீயே.(51-22) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் சக்தியை அபகரிப்பவனும் {தேஜோபஹாரி} நீயே. அசுரன் பலனைக் கொன்றவன் {பலஹன்} நீயே. எப்போதும் மகிழ்ச்சிமிக்கவன் {முதிதன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் {அர்த்தன்} வடிவம் நீயே. ஒருபோதும் வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. உன்னைத் தவிரத் துதிக்கத்தக்கவன் எவனும் இல்லாதவன் {அவரன்} நீயே. (பெருங்கடலின் வடிவில்) ஆழ்ந்த முழக்கங்களை இடுபவன் {கம்பீரதோஷன்} நீயே. (வெளியின் வடிவில் இருப்பதால்) எவராலும் அளக்க முடியாத ஆழத்தைக் கொண்டவன் {கம்பீரன்} நீயே. எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும் கொண்ட துணைவர்கள் மற்றும் காளையைக் கொண்டவன் {கம்பீரபலவாஹநன்} நீயே.(52-23) (மேல் நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தங்கும் கிளைகளைக் கொண்டதுமான உலக மரம் {ந்யக்ரோதரூபன்} நீயே. ஆலமரம் {ந்யக்ரோதன்} நீயே. அண்டத்திற்கு அழிவு நேரும் வேளையில், அளவற்ற நீரில் ஓர் ஆலம் இலையில் உறங்கிக் கொண்டிருப்பவன் {வ்ருக்ஷகர்ணஸ்திதி} நீயே. ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலி வடிவங்களில் வழிபாட்டாளர்கள் அனைவருக்கும் கருணை காட்டுபவன் {விபு} நீயே. (கடலைகளை மெல்வதைப் போல எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்க வல்லவன் என்பதால்) கூரிய பற்களைக் கொண்டவன் {ஸுதீக்ஷ்ணதசநன்} நீயே. வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவு கொண்டவன் {மஹாகாயன்} நீயே. அண்டத்தை உடனே விழுங்கும் அளவுக்குப் பெரிய வாயைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே.(53-24) எவனுடைய துருப்புகள் எங்கும் துதிக்கப்படுமோ அவன் {விஷ்வக்ஸேநன்} நீயே. யானைகளின் இளவரசன் கைப்பற்றப்பட்ட போது தேவர்களின் அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவன் {ஹரி} நீயே. அண்டத்தின் வித்து {யஜ்ஞன்} நீயே. போர்க்கொடியில் சின்னமாகக் கொண்ட அதே காளையை வாகனமாகவும் கொண்டவன் {ஸம்யுகாபீடவாஹநன்} நீயே. அக்னியையே ஆன்மாவாகக் கொண்டவன் {தீக்ஷ்ணதாபன்} நீயே. தேரில் பச்சை குதிரைகள் பூட்டப்பட்ட சூரியன் {ஹர்யச்வன்} நீயே. ஜீவனின் நண்பன் {ஸஹாயன்} நீயே. அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய முறையான காலத்தை அறிந்தவன் {கர்மகாலவித்} நீயே.(54-25)

(கொண்டாடப்படும் சக்கரத்தை அடைவதற்காக) விஷ்ணுவால் துதிக்கப்பட்டவன் நீயே. விஷ்ணு நீயே. {ப்ரஸாதிதன், யஜ்ஞன்} பெருங்கடல் {ஸமுத்ரன்} நீயே. நெருப்பைக் கக்கிக் கொண்டும், வேள்வி நெய்யைப் போல உப்பு நீரைக் குடித்துக் கொண்டும் பெருங்கடலுக்குள் திரியும் குதிரைத் தலை {படபாமுகன்} நீயே. அக்னியின் நண்பனான காற்று {வாயு / ஹுதாசநஸஹாயன்} நீயே. மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் {ப்ரசாந்தாத்மா} நீயே. மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யெனும் ஆகுதிகளைப் பருகுபவன் {ஹுதாசநன்} நீயே.(55-26) அணுகப்பட முடியாதவன் {உக்ரதேஜஸ்} நீயே. முடிவிலா அண்டத்தில் பிரகாசத்தைப் பரப்புபவன் {மஹாதேஜஸ்} நீயே. போரில் வல்லவன் {ஜந்யன்} நீயே. வெற்றியடையும்பொருட்டுப் போரில் எப்போது ஈடுபட வேண்டும் என்ற காலத்தை நன்கறிந்தவன் {விஜயகாலவித்} நீயே. கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியல் {ஜோதிடம்} {ஜ்யோதிஷாம்அயநன்} நீயே. வெற்றியின் வடிவம் {ஸித்தி} நீயே. (உடல் ஒருபோதும் சிதைவடையாதவனாக இருப்பதால்) எப்போதும் உடலைக் கொண்டவன் {ஸர்வவிக்ரஹன்} நீயே.(56-27) தலையில் குடுமி தரிப்பதால் இல்லறத்தான் {கிருஹஸ்தன் / சிகி} நீயே. தலை மொட்டையாக இருப்பதால் சந்நியாசி {முண்டி} நீயே. (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் சடாமுடி தரிப்பவன் {ஜடி} நீயே. (உன்னோடு அடையாளங்காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) உன் கடுங்கதிர்களுக்காகப் புகழ்பெற்றவன் {ஜ்வாலி} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் உடலில் பொதிந்திருக்கும் இதய ஆகாயத்தில் தோன்றுபவன் {மூர்த்திஜன்} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் மண்டையோட்டுக்குள் (மூளைக்குள்) நுழைபவன் {மூர்த்தகன்} நீயே. வயதின் தோல்சுருக்கங்களைத் தரித்தவன் {பலி} நீயே. மூங்கில் புல்லாங்குழலைத் தரிப்பவன் {வேணவி} நீயே. சிறு முரசும் {பணவமும்} கொண்டவன் {பணவி} நீயே. தாளி என்றழைக்கப்படும் இசைக்கருவியைத் தரிப்பவன் {தாளி} நீயே. தானியங்களின் உமி நீக்க மரக்கலத்தைப் பயன்படுத்துபவன் {கலி} நீயே. யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன் {காலகடங்கன்} நீயே[6].(57-28) ஆகாயக் கோள்களால் அமைந்த காலச்சக்கர நகர்வுகளில் எப்போதும் புத்தியைச் செலுத்துவதால் கணியன் {சோதிடன் / நக்ஷத்ரவிக்ரஹமதி} நீயே. சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களின் விளைவாக இருக்கும் பொருட்களில் புத்தியைச் செலுத்தும் ஜீவன் {குணபுத்தி} நீயே. அழிவேற்படும்போதும் அனைத்துப் பொருட்களும் எதில் கலக்குமோ அந்நிலை {லயன்} நீயே. எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையாவன் {அகமன்} நீயே. அனைத்து உயிரினங்களின் தலைவன் {ப்ரஜாபதி} நீயே. பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன் {விஸ்வபாஹு} நீயே. நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுபவன் {விபாகன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகன்} நீயே. (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக இருப்பதால்) வாயில்லாதவன் {முகமில்லாதவன் /  அறிவாயிருப்பவன் {அமுகன்} நீயே.(58-29) உலகப் பந்தங்களில் இருந்து உயிரினங்களை விடுவிப்பவன் {விமோசநன்} நீயே. எளிமையாக அடையத்தக்கவன் {ஸுஸரணன்} நீயே. தங்கக் கவசத்துடன் வெளிப்படுபவன் {ஹிரண்யகவசோத்பவன்} நீயே. லிங்கச் சின்னத்தில் தோன்றுபவன் {மேட்ரஜன்} நீயே. நீர்க்கோழிகள் மற்றும் விலங்குகளைத் தேடி காடுகளில் திரிபவன் {பலசாரி} நீயே. மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருப்பவன் {மஹீசாரி} நீயே. எங்குமிருப்பவன் {ஸ்ருதன்} நீயே.(59-30)

[6] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் காலகடங்கன் என்ற சொல்லை உரையாசிரிய் பின்வருமாறு விளக்குகிறார்: காலன் என்பது யமனாவான். பரமதேவனின் மாயையால் அவன் மறைக்கப்பட்டிருக்கிறான். அனைத்தையும் மறைக்கும் மாயையையும் பரமதேவன் மறைக்கிறான். அந்தப் பரமதேவன் நீயே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மூவுலகங்களிலும் முழக்கப்படும் எக்காளங்கள் அனைத்தினாலும் உண்டாக்கப்படும் முழக்கம் {ஸர்வதூர்யநிநாதி} நீயே. அனைத்து உயிரினங்களையும் உறவினர்களாகக் கொண்டவன் {ஸர்வாதோத்யபரிக்ரஹன்} நீயே. (சேஷன் என்றழைக்கப்படும் வலிமைமிக்க நாகனைப் போல நீ இருப்பதால்) பாம்பின் வடிவம் கொண்டவன் {வ்யாலரூபன்} நீயே. (ஜைகிஷவ்யரையோ, பிற யோகியரையோ போல) மலைக்குகைகளில் வாழ்பவன் {குஹாவாசி} நீயே. (தேவர்ப்படைத்தலைவன்) குஹனைப் போன்றவன் {குஹன்} நீயே. மலர் மாலைகளை அணிபவன் {மாலி} நீயே. உலகப் பொருட்களை அடைவதால் எழும் மகிழ்ச்சியை அனுபவிப்பவன் {தரங்கவிதன்} நீயே.(60-31) பிறப்பு, இறப்பு மற்றும் அழிவு என்ற மூன்று நிலைகளை அனைத்து உயிரினங்களும் எதனிலிருந்து பெறுகின்றனவோ அந்நிலை {த்ரிதசன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளில் தோன்றும், அல்லது இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்குபவன் {த்ரிகாலத்ருக்} நீயே. முற்பிறவி செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும், அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் உயிரினங்கள் விடுவிப்பவன் {கர்மஸர்வபந்தவிமோசநன்} நீயே. அசுரத் தலைவர்களைக் கட்டுபவன் {அஸுரேநத்ராணாம்பந்தநன்} நீயே. போரில் பகைவர்களைக் கொல்பவன் {யுதிசத்ருவிநாசகன்} நீயே.(61-32) ஞானத்தால் மட்டுமே அடையப்படுபவன் {ஸாங்க்யப்ரஸாதன்} நீயே. துர்வாசர்கள் {துர்வாஸர்} நீயே. அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்படுபவனும், துதிக்கப்படுபவனும் {ஸர்வஸாதுநிஷேவிதன்} நீயே. பிரம்மன் மற்றும் பிறரின் வீழ்ச்சிக்குக் காரணன் {ப்ரஸ்கந்தநன்} நீயே. செயல்களுக்குத் தகுந்த இன்ப துன்பங்களை அனைத்து உயிரினங்களுக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பவன் {விபாகஜ்ஞன்} நீயே. ஒப்பற்றவன் {அதுல்யன்} நீயே. வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை நன்கறிந்தவன் {யஜ்ஞபாகவித்} நீயே.(62-33) எங்கும் வசிப்பவன் {ஸர்வவாஸன்} நீயே. எங்கும் திரிபவன் {ஸர்வசாரி} நீயே. அழிவற்றவன் {த்ரோத்தமன்} நீயே. {துர்வாசன், வாஸவன், அமரன் நீயே} இமய மலைகளைப் போன்றவன் {ஹைமன்} நீயே. பசும்பொன்னைச் செய்பவன் {ஹேமகரன்} நீயே. செயல்களற்றவன் {அயஜ்ஞன்} நீயே. செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன் {ஸர்வதாரி} நீயே. தாங்குபவர்களாகக் கருதப்படும் முதன்மையான உயிரினங்கள் அனைத்தும் {தரோத்தமன்} நீயே.(63-34) குருதி தோய்ந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்} நீயே. முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்} நீயே. எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன் {விஜயாக்ஷன்} நீயே. பெரும் கல்வியுடையவன் {விசாரதன்} நீயே. பணியாட்களான உன் பக்தர்களை ஏற்பவன் {ஸங்க்ரஹன்} நீயே. புலன்களை அடக்கி ஒடுக்குபவன் {நிக்ரஹன்} நீயே. செயல்படுபவன் {கர்த்தன்} நீயே. பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன் {ஸர்ப்பசீரநிவாஸநன்} நீயே.(64-35)

பரமன் {முக்யன்} நீயே. தேவர்களில் இறுதியானவன் {அமுக்யன்} நீயே. நன்கு வளர்ந்தவன் {தேஹன்} நீயே. காஹளம் {எக்காளம் / காளம் / காகளம்} என்றழைக்கப்படும் இசைக்கருவியைக் கொண்டவன் {காஹலி} நீயே. அனைத்து ஆசைகளையும் அளிப்பவன் {ஸர்வகாமதன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம் {ஸர்வகாலப்ரஸாதன்} நீயே. எப்போதும் நன்கு பயன்படுத்தப்படும் வலிமையைக் கொண்டவன் {ஸுபலன்} நீயே. (கிருஷ்ணனின் அண்ணனான) பலராமனின் வடிவத்தை ஏற்றவன் {பலரூபத்ருதன்} நீயே.(65-36) விரும்பப்படும் அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான விடுதலையாக {முக்தியாக}, அல்லது உயிரினங்கள் அடையும் உயர்ந்த கதிகள் அனைத்துமாக இருப்பவன் {ஸர்வகாமவரன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் கொடுப்பவன் {ஸர்வதன்} நீயே. திசைகள் அனைத்திலும் முகத்தைக் கொண்டவன் {ஸர்வதோமுகன்} நீயே. வெளி அல்லது அந்தப் பூதத்தின் மாறுபாடுகளில் இருந்து அனைத்து வடிவங்களும் உதித்ததைப் போலவே பல்வேறு உயிரினங்கள் எவனிடம் உதித்தவனவோ அவன் {ஆகாசநிர்விரூபன்} நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் விழுபவன் {நிபாதி} நீயே. (உடலால்அமைந்த குழிக்குள் விழுந்து உன் பங்குக்கான கவலையைக் கடக்க முடியாதவனாக இருப்பதால்) ஆதரவற்றவன் {யாருக்கும் உட்படாதவன்} {அவசன்} நீயே. இதய ஆகாயத்தில் வசிப்பவன் {ககன்} நீயே.(66-37) மிகக் கொடிய வடிவம் கொண்டவன் {ரௌத்ரரூபன்} நீயே. அம்சு என்றழைக்கப்படும் தேவன் நீயே. அம்சுவின் தோழன் நீயே, ஆதித்தியன் என்றழைக்கப்படுபவன் நீயே. எண்ணற்ற கதிர்களைக் கொண்டவன் {பஹுரச்மி} நீயே. பளிச்சென்ற பிரகாசத்துடன் கூடியவன் {ஸுவர்ச்சஸி} நீயே. காற்றை விடப் பெரும் வேகம் கொண்டவன் {வஸுவேகன், மஹாவேகன்} நீயே. மனோ வேகம் கொண்டவன் {மநோவேகன்} நீயே. அறியாமையுடன் கூடிய அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {நிசாசரன்} நீயே.(67-38) ஒவ்வொரு உடலிலும் வசிப்பவன் {ஸர்வவாஸி} நீயே. செழிப்பைத் தோழனாகக் கொண்டு வசிப்பவன் {ஸ்ரீயாவாஸி} நீயே. அறிவையும், கல்வியைக் கற்பிப்பவன் {உபதேசகரன்} நீயே. முற்றான அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் {அகரன்} நீயே. (அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால்) உள்ளடங்கிப் பேசாதவன் {முநி} நீயே. ஆன்மாவைக் காண உடலைக் கடந்தவன் {ஆத்மநிராலோகன்} நீயே. நன்கு துதிக்கப்படுபவன் {ஸம்பக்நன்} நீயே. (கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {குபேரன்} அந்தக் கருவூலங்களை உன்னிடம் இருந்தே பெற்றதால்) ஆயிரங்கணக்கானவற்றைக் கொடுப்பவன் {ஸஹஸ்ரதன்} நீயே.(68-39) (கசியபர் மற்றும் வினதையின் மகனான கருடனாக இருப்பதால்) பறவைகளின் இளவரசன் {பக்ஷி} நீயே. உதவி செய்யும் நண்பன் {பக்ஷன்} நீயே. (ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தது போன்ற காந்தியைக் கொண்டவனாக இருப்பதால்) பெரும் பிரகாசம் கொண்டவன் {ரூபன், அதிதீப்தன்} நீயே. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆசான் {விசாம்பதி} நீயே. பசிகளைத் தூண்டுபவன் {மயங்கச் செய்பவன்} {உந்மாதன்} நீயே. காம தேவன் {மதநன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் அழகிய பெண்களின் வடிவம் {காமன்} நீயே. உலகின் மரம் {அச்வதன்} நீயே. கருவூலங்களின் தலைவன் {அர்த்தகரன்} நீயே. புகழைக் கொடுப்பவன் {யசஸ்} நீயே.(69-40)

உயிரினங்கள் அனைத்தின் செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில்) அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன் {வாமதேவன்} நீயே. நீ பகிர்ந்து கொடுக்கும் அந்தக் கனிகளும் {ப்ராக்} நீயே. (இருப்பில் ஏதும் இல்லாத காலத்தில் இருப்பதால்) மிகப் பழமையானவன் {தக்ஷிணன்} நீயே. மூவுலகங்களையும் ஓரடியில் மறைக்கத் தகுந்தவன் {வாமனே} நீயே. அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனான குள்ளனும் {வாமநன்} நீயே. (சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி {ஸித்தயோகி} நீயே. (வசிஷ்டர் மற்றும் பிறரைப் போல) பெரும் முனிவன் {மஹரிஷி} நீயே. (ரிஷபர் மற்றும் தத்தாத்ரேயர் ஆகியவர்களைப் போல) எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுபவன் {ஹித்தார்த்தன்} நீயே. (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) சந்நியாசி {ஸித்தஸாதகன்} நீயே.(70-41) துறவி வகைக் குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டவன் {பிக்ஷு} நீயே. அத்தகைய குறியீடுகள் அற்றவன் {பிக்ஷுரூபன்} நீயே. துறவி வகையினரின் நடைமுறைகளைக் கடந்து நிற்பவன் {விபணன்} நீயே. அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பவன் {மென்மையானவன்} {ம்ருது} நீயே. (மகிமையையும், அவமதிப்பையும் ஒன்றாகவே கருதுபவனாதலால்) ஆசைகளேதும் அற்றவன் {அவ்யபன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் என்றழைக்கப்படுபவன் {மஹாஸேநன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் மீது இந்திரன் வஜ்ரத்தை ஏவியபோது, அவனது உடலில் இருந்து எழுந்த விசாகன் நீயே. அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன் {ஷஷ்டிபாகன்} நீயே. (புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழிநடத்தப்படுவதால்) புலன்களின் தலைவன் {கவாம்பதி} நீயே.(71-42) (மலைகளைப் பிளக்கும்) வஜ்ரத்தைத் தரிப்பவன் {வஜ்ரஹஸ்தன்} நீயே. முடிவற்றவன் {விஷ்கம்பி} நீயே. போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடிப்பவன் {சமூஸ்தம்பநன்} நீயே. தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன் {வ்ருத்தாவ்ருத்தசரன்} நீயே. (பிரம்ம அறிவின் விளைவால்) உலகப் பெருங்கடலின் அடியாழத்தை அறிந்தவன் {தாலன்} நீயே. (கிருஷ்ணன் பிறந்த குலத்தைத் தோற்றுவித்த) மது என்றழைக்கப்படுபவன் நீயே. தேனுக்கு ஒப்பான நிறத்தில் கண்களைக் கொண்டவன் {மதுகலோசநன்} நீயே.(72-43) பிருஹஸ்பதிக்கு அடுத்து பிறந்தவன் {வாசஸ்பத்யன்} நீயே. வேள்விகளில் அதர்யுக்கள் செய்யும் செயல்களைச் செய்பவன் {வாஜஸநன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களாலும் எப்போதும் துதிக்கப்படுபவன் {நித்யம் ஆஸ்ரமபூஜிதன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன் {ப்ரம்மசாரி} நீயே. (துறவியாக இருக்கும் விளைவால்) உலகில் மனிதர்களின் வசிப்பிடங்களில் திரிபவன் {லோகசாரி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வசாரி} நீயே. வாய்மை அறிந்தவன் {விசாரவித்} நீயே.(73-44) ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து, அவற்றுக்கு வழிகாட்டுபவன் {ஈசாநன்} நீயே. மொத்த அண்டத்திலும் பரவி இருப்பவன் {ஈச்வரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தின் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்களுக்கான கனிகளை அவற்றுக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக அச்செயல்களைத் திரட்டிச் சேகரிப்பவன் {காலன்} நீயே. அண்ட அழிவைப் பின்தொடரும் இரவிலும் உயிரோடு இருப்பவன் {நிசாசாரி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரித்தவன் {பிநாகவாந்} நீயே. உன் கணைகள் எட்டும் இலக்குகளான தைத்தியர்களுடனும் வசிப்பவன் {நிமித்தஸ்தன்} நீயே. செழிப்பின் ஆசான் {நிமித்தன்} நீயே. {நந்தி, நந்திகரன்}, ராமாவதாரத்தில் ராவணனுக்கு எதிரான படையெடுப்பில்  பெருங்குரங்கின் உதவி பெற்ற விஷ்ணு {ஹரி} நீயே.(74-45)

உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவன் {நந்தீஸ்வரன்} நீயே. பல்வேறு கணங்கள் ஒவ்வொன்றும் {நந்தி} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் {நந்தநன்} நீயே. {நந்திவர்த்தநன்}. அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன் நீயே {பகஹாரி} நீயே. இந்திரனைப் போன்ற உயர்ந்தவர்களின் அரசுரிமையையும். செழிப்பை பறிப்பவன் {நிஹந்தன்} நீயே. மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருப்பவன் {காலன்} நீயே. அறுபத்து நான்கு கலைகளில் வசிப்பவன் நீயே. மிகப் பெரியவன் {ப்ரம்மன்} நீயே. (முப்பாட்டன்களின் தந்தையாக இருப்பதால்) பெரும்பாட்டன் {பிதாமஹன்} நீயே. {சதுர்முகன்}.(75-46) தேவர்களாலும். அசுரர்களாலும் துதிக்கப்படும் பெரும் லிங்கம் {மஹாலிங்கன்} நீயே. ஏற்புடைய அழகிய குணங்களைக் கொண்டவன் {சாருலிங்கன்} நீயே. இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் {லிங்காத்யக்ஷன்} நீயே. பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் {ஸுராத்யக்ஷன்} நீயே. (புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து. அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன் {யோகாத்யக்ஷன்} நீயே. (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து) கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன் {யுகாவஹன்} நீயே.(76-47) (நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) வித்துகளின் தலைவன் {பீஜாத்யக்ஷன்} நீயே. அத்தகைய வித்துகளின் மூலக் காரணன் {பீஜகர்த்தன்} நீயே. ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன் {அத்யாத்மாநுகதன்} நீயே. வலிமைக்கும். பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பலன்} நீயே. மஹாபாரதம் மற்றும் பிற வகை வரலாறுகள் அனைத்தும் {இதிஹாஸன்} நீயே. மீமாம்ஸை என்றழைக்கப்படும் சாத்திரங்கள் {கல்பன்} நீயே. (இயக்கவியலை நிறுவிய) கௌதமர் நீயே. சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் {நிசாகரன்} நீயே.(77-48) எதிரிகளைத் தண்டிப்பவன் {தம்பன்} நீயே. எவராலும் தண்டிக்கப்பட முடியாதவன் {அதம்பன்} நீயே. அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன் {வைதம்பன்} நீயே. அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன் {வஸ்யன்} நீயே. பிறரை அடக்க வல்லவன் நீயே {வஸகரன்} நீயே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சச்சரவுகளுக்கு ஒத்திசைபவன் {கலி} நீயே. (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே {லோககர்த்தன்} நீயே. பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் {பசுபதி} நீயே. ஐம்பூதங்களைப் படைத்தவன் {மஹாகர்த்தன்} நீயே. (பற்றற்றவனாக எப்போதும் இருப்பதால்) எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் {அநௌஷதன்} நீயே.(78-49) அழிவற்றவன் {அக்ஷரன்} நீயே. இன்பநிலையின் உயர்ந்த வடிவம் {பரமம்ப்ரம்ம} நீயே. வலிமையில் செருக்குடைய தேவன் {பலவத்} நீயே. சக்ரன் நீயே. அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான தண்டனை {நீதி} நீயே. உலகத்தில் நிலவும் கொடுங்கோன்மையின் வடிவம் {அநீதி} நீயே. தூய ஆன்மா கொண்டவன் {சுத்தாத்மா} நீயே. (அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனான) களங்கமற்றவன் {சுத்தன்} நீயே. துதிக்கப்படத் தகுந்தவன் {மாந்யன்} நீயே. இடையறாமல் தோன்றி மறையும் உலகம் {கதாகதன்} நீயே.(79-50)

பெருமளவு அருளைக் கொண்டவன் {பஹுப்ரஸாதன்} நீயே. நல்ல கனவுகளைக் கொண்டவன் {ஸுஸ்வப்நன்} நீயே. அண்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி {தர்ப்பணன்} நீயே. அக மற்றும் புறப்பகைவர்கள் அனைவரையும் அடக்குபவன் {அமித்ரஜித்} நீயே. வேதத்தைப் படைத்தவன் {வேதகாரன்} நீயே. தந்திரங்களிலும், புராணங்களிலும், மனிதமொழி வடிவிலும் உள்ள சாற்று மொழியைப் படைத்தவன் {மந்த்ரகாரன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வித்வாந்} நீயே. போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன் {ஸமரமர்த்தநன்} நீயே.(80-51) அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களில் வசிப்பவன் {மஹாமேகநிவாஸி} நீயே. (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன் {மஹாகோரன்} நீயே. மனிதர்கள் அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் {வசீகரன்} நீயே. பேரழிவை உண்டாக்குபவன் {அக்நிஜ்வாலன்} நீயே. நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் {மஹாஜ்வாலன்} நீயே. நெருப்பைவிட வலிய சக்தி கொண்டவன் {அதிதூம்ரன்} நீயே. அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்பு {ஹுதன்} நீயே. வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன் {ஹவி} நீயே.(81-52) மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும் {வ்ருஷ்ணன்} நீயே. நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன் நீயே, பேரின்பத்தைக் கொடுப்பவன் {சங்கரன்} நீயே. எப்போதும் பிரகாசத்துடன் கூடியவனும் {நித்யம்வர்ச்சஸ்வி} நீயே. நெருப்பின் வடிவம் {தூமகேதநன்} நீயே. வைடூரிய நிறம் கொண்டவன் {நீலன்} நீயே. லிங்கச் சினத்தில் எப்போதும் இருப்பவன் {அங்கலுப்தன்} நீயே. அருள் நிலையின் ஊற்றுக்கண் {சோபநன்} நீயே. நோக்கங்களைச் செயல்படுத்துவதில் எதனாலும் கலங்கடிக்கப்பட இயலாதவன் {நிரவக்ரஹன்} நீயே.(82-53) அருளை வழங்குபவன் {ஸ்வஸ்திதன்} நீயே. அருளின் வடிவம் {ஸ்வஸ்திபாவன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் பங்கு கொடுக்கப்படுபவன் {பாகி} நீயே. வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் ஒவ்வொரு பங்கையும் பகிர்பவன் {பாககரன்} நீயே. பெரும் வேகம் கொண்டவன் {லகு} நீயே. அனைத்துப் பொருட்களிலும் தொடர்பறுந்தவன் {பற்றற்றவன்} {உத்ஸங்கன்} நீயே. வலிமைமிக்க உறுப்புகளைக் கொண்டவன் {மஹாங்கன்} நீயே. உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவன் {மஹாகர்ப்பபராயணன்} நீயே.(83-54) (விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்) கரிய நிறத்தவன் {க்ருஷ்ணவர்ணன்} நீயே. (கிருஷ்ணனின் மகனான சாம்பனின் வடிவத்தில் இருக்கும்) வெண்ணிறத்தவன் {ஸுவர்ணன்} நீயே. உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்கள் {ஸர்வதேஹிநாம் இந்த்ரியன்} நீயே. பெரும் பாதம் கொண்டவன் {மஹாபாதன்} நீயே. பெருங்கரங்களைக் கொண்டவன் {மஹாஹஸ்தன்} நீயே. பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே. பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே.(84-55)

பெருந்தலை கொண்டவன் {மஹாமூர்த்தன்} நீயே. பேரளவுகளைக் கொண்டவன் {மஹாமாத்ரன்} நீயே. பரந்த பார்வையைக் கொண்டவன் {மஹாநேத்ரன்} நீயே. அறியாமையற்ற இரவின் இல்லம் {நிசாலயன்} நீயே. அழிப்பவனை அழிப்பவன் / யமனுக்கு யமன் {மஹாந்தகன்} நீயே. பெருங்காதுகளைக் கொண்டவன் {மஹாகர்ணன்} நீயே. பெரிய உதடுகளைக் கொண்டவன் {மஹோஷ்டன்} நீயே. பெரும் கன்னங்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(85-56) பெரும் மூக்கைக் கொண்டவன் {மஹாநாஸன்} நீயே. பெரும் தொண்டை கொண்டவன் {மஹாகம்பு} நீயே. பெரும் கழுத்தைக் கொண்டவன் {மஹாக்ரீவன்} நீயே. உடலின் பற்றுகளை அறுப்பவன் {ச்மசாநபாக்} நீயே. பரந்த மார்பைக் கொண்டவன் {மஹாவக்ஷஸ்} நீயே. பரந்த நெஞ்சம் {மஹோரஸ்கன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா {அந்தராத்மா} நீயே. மடியில் மானைக் கொண்டவன் {ம்ருகாலயன்} நீயே.(86-57) மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன் {லம்பநன்} நீயே. அண்ட அழிவின் போது அண்டத்தை விழுங்க உதடுகளைத் திறப்பவன் {லம்பிதோஷ்டன்} நீயே. {மஹாமாயன்}. பாற்கடல் {பயோநிதி} நீயே. பெரிய பற்களைக் கொண்டவன் {மஹாதந்தன்} நீயே. பெரிய தாடைகளைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. பெரிய நாவைக் கொண்டவன் {மஹாஜிஹ்வன்} நீயே. பெரிய வாயைக் கொண்டவன் {மஹாமுகன்} நீயே.(87-58) பெரிய நகங்களைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே. பெரிய மயிர்களைக் கொண்டவன் {மஹாரோமன்} நீயே. முடிவிலா நீளம் கொண்ட முடிகளைக் கொண்டவன் {மஹாகேசன்} நீயே. பெரும் வயிறு படைத்தவன் {மஹாகோசனே} நீயே, பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் {மஹாஜடன்} நீயே. எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஸந்நன்} நீயே. அருளின் வடிவம் {ப்ரஸாதன்} நீயே. நம்பிக்கையின் வடிவம் {ப்ரத்யயன்} நீயே. (போரில் ஆயுதமாக அல்லது) வில்லாக மலைகளைக் கொண்டவன் {கிரிஸாதநன்} நீயே.(88-59) பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் {ஸ்நேஹநன்} நீயே. அன்பேதும் இல்லாதவன் {அஸ்நேஹநன்} நீயே. வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. தியான (யோகத்தில்) எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் {மஹாமுநி} நீயே. உலக மரத்தின் வடிவம் கொண்டவன் {வ்ருக்ஷாகாரன்} நீயே. உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன் {வ்ருக்ஷகேது} நீயே. (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் {நெருப்பு} {அநலன்} நீயே. (நெருப்போடு அடையாளம் காணப்படுவதன் விளைவால்) இடத்திற்கு இடம் செல்லம் காற்றையே வாகனமாகக் கொண்டவன் {வாயுவாஹநன்} நீயே.(89-60)

மலைகளிலும் சிறு குன்றுகளிலும் திரிபவன் {கண்டலி} நீயே. மேரு மலைகளில் வசிப்பிடம் கொண்டவன் {மேருதாமன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவாதிபதி} நீயே. தலையை அதர்வணங்களாகக் கொண்டவன் {அதர்வசீர்ஷன்} நீயே. வாயை சாமங்களாகக் கொண்டவன் {ஸாமாஸ்யன்} நீயே. எண்ணற்ற கண்களை ஆயிரம் ரிக்குகளாகக் கொண்டவன் {ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன்} நீயே.(90-61) பாதங்களையும, கரங்களையும் யஜுஸ்களாகக் கொண்டவன் {யஜுப்பாதபுஜன்} நீயே. உபநிஷதங்கள் {குஹ்யன்} நீயே. (சாத்திரங்களில் தோன்றும்) மொத்த சடங்குகளும் {ப்ரகாசன்} நீயே. அசைவன அனைத்தும் {ஜங்கமன்} நீயே. வேண்டுதல்களை ஒருபோதும் வீண்போகச்செய்யாதவன் {அமோகார்த்தன்} நீயே. எப்போதும் அருள் வழங்குபன் {ப்ரஸாதன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {அபிகம்யன்} நீயே. {ஸுதர்சநன் நீயே}.(91-62)  (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவுக்கு) பக்தர்களை நெருங்குபவன் {உதவி செய்பவன்} {உபகாரன்} நீயே. அன்புக்குரியவன் {ப்ரியன்} நீயே. {ஸர்வன்}. அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் {கநகன்} நீயே. புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {காஞ்சநச்சவி} நீயே. (அண்டத்தின்) தொப்புளாக இருப்பவன் {நாபி} நீயே. (உன் மகிமைக்காக வேள்வி செய்வோரின் நன்மைக்காக) வேள்விக் கனிகளை வளரச் செய்பவன் {நந்திகரன்} நீயே. வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவம் {பாவன்} நீயே. அண்டத்தை வடிவமைத்தவன் {புஷ்கரஸ்தபதி} நீயே. (மலைகள் மற்றும் பொருட்களின்) வடிவில் அழிவற்றவனாக இருப்பவன் {ஸ்திரன்} நீயே.(92-63) ஒரு மனிதன் கடந்து செல்ல வேண்டிய பனிரெண்டு நிலைகள்[7] {த்வாதசன்} நீயே. (இப்பட்டியலில் உள்ள பத்து நிலைகளுக்கிடையில் ஏற்கப்படும் நிலைகளில்) அச்சத்தை உண்டாக்குபவன் {த்ராஸநன்} நீயே. அனைத்துப் பொருட்களின் தொடக்கம் {ஆத்யன்} நீயே. யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன் {யஜ்ஞன்} நீயே. ஜீவன் மற்றும் பரப்பிரம்மத்திற்கிடையில் யோகத்தின் மூலம் கலப்பை எது உண்டாக்குமோ அது {யஜ்ஞஸமாஹிதன்} நீயே. (ஆழ்ந்த மயக்கத்துடன் கூடிய) வெளிப்படாதவன் {நக்தன்} (காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் {கலி} நீயே. (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான காலம் {காலன்} நீயே.(94) ஆமையின் வடிவில் இருப்பவன் {மகரன்} நீயே. காலனால் வழிபடப்படுபவன் {காலபூஜிதன்} நீயே. (93-64)

[7] "தாயின் கருவறையில் வசிப்பது முதல், பத்தாவது நிலையான மரணம் வரை, பதினொன்றாவது சொர்க்கம், பனிரெண்டாவது முக்தி என்று ஏற்கனவே இப்பட்டியல் சொல்லப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் {ஸகணன்} நீயே. கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்ப்பவன் {கணகாரன்} நீயே. உன் தேருக்குப் பிரம்மனை சாரதியாகக் கொண்டவன் {பூதவாஹநஸாரதி} நீயே. சாம்பலில் {திருநீற்றில்} உறங்குபவன் {பஸ்மசயன்}[8] நீயே. சாம்பலால் அண்டத்தைக் காப்பவன் {பஸ்மகோப்தன்} நீயே. சாம்பலாலான உடலைக் கொண்டவன் {பஸ்மபூதன்} நீயே. அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் மரம் {தரு} நீயே. கணங்களின் வடிவைக் கொண்டவன் {கணன்} நீயே.(94-65)

பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் {லோகபாலன்} நீயே. அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் {அலோகன்} நீயே. (எந்தக் குறையுமில்லாத) முழுமையானவன் {மஹாத்மா} நீயே. அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் {ஸர்வபூஜிதன்} நீயே. (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) வெண்மையானவன் {சுக்லன்} நீயே. உடல், வாக்கு மனம் ஆகியவற்றை முன்னிலும் களங்கமற்றவையாகக் கொண்டவன் {த்ரிசுக்லன்} நீயே. விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் தூய இருப்பை அடைந்தவன் {ஸம்பநநன்} நீயே. எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன் {சுசி} நீயே. பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் {பூதநிஷேவிதன்} நீயே.(95-66) அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} முறையான வடிவம் {ஆச்ரமஸ்தன்} நீயே. சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் {க்ரியாவஸ்தன்} நீயே. அண்டத்தின் தெவ்வீக வடிவமைப்பாளனுடைய திறனின் வடிவம் {விச்வகர்மமதி} நீயே. அண்டத்தின் ஆதி வடிவமாகத் துதிக்கப்படுபவன் {வரன்} நீயே. பரந்த கரங்களைக் கொண்டவன் {விசாலசாகனே} நீயே. தாமிர வண்ணம் இதழ்களைக் கொண்டவன் {தாம்ரோஷ்டன்} நீயே. பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் {அம்புஜாலன்} நீயே. (மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில்) உறுதியாக நிலைத்திருப்பவன் {ஸுநிச்சலன்} நீயே.(96-67) கபிலர் நீயே. பழுப்பு நிறத்தவன் {கபிசன்} நீயே. வெண்கலவை கொண்ட வண்ணங்கள் அனைத்தும் {சுக்லன்} நீயே. வாழ்வுக்காலம் {ஆயுஸ்} நீயே. தொன்மையானவன் {பரன்} நீயே. அண்மையானவன் {அபரன்} நீயே. கந்தர்வன் நீயே. தேவர்களின் தாயான அதிதியின் வடிவில் இருப்பவன் (அல்லது அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) {அதிதி} நீயே. பறவைகளின் இளவரசனும், வினதையிடம் கசியபருக்குப் பிறந்தவனும் தார்க்ஷயன் என்று வேறுபெயரால் அழைக்கப்படுபவனும் {தார்க்ஷயன்} நீயே. எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடியவன் {ஸுவிஜ்ஞேயன்} நீயே. ஏற்புடைய சிறந்த வாக்கை உடையவன் {ஸுசாரதன்} நீயே.(97-68) போர்க்கோடரி தரித்தவன் {பரச்வதாயுதன்} நீயே. வெற்றியை விரும்புபவன் {தேவன்} நீயே. திட்டங்களை நிறைவேற்றுவதில் பிறருக்குத் துணை புரிபவன் {அநுகாரி} நீயே. {கிருஷ்ணனைப் போன்ற} சிறந்த நண்பன் {ஸுபாந்தவன்} நீயே. துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையைச் சுமப்பவன் {தும்பவீணன்} நீயே. (அண்ட அழிவின்போது வெளிப்படும்) பயங்கரக் கோபம் {மஹாக்ரோதன்} நீயே. மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்) பிள்ளைகளாகக் கொண்டவன் {மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன்}  {ஊர்த்வரேதஸ்} நீயே. அண்ட அழிவிக்குப் பிறகு நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் {ஜலேசயன்} நீயே.(98-69) பெருஞ்சீற்றத்துடன் அனைத்தையும் எரிப்பவன் {உக்ரன்} நீயே. வாரிசுகளை உண்டாக்குபவன் {வம்சக்ரன்} நீயே. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பமும், குலமும் {வம்சன்} நீயே. மூங்கிலாலான புல்லாங்குழலின் இசை {வம்சநாதன்} நீயே. களங்கமற்றவன் {அநிந்திதன்} நீயே. எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அவன் {ஸர்வாங்கரூபன்} நீயே. மாயை நிறைந்தவன் {மாயாவி} நீயே. திரும்பிவரும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் {பிரதிபலன் பாராமல்} பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருதன்} நீயே. {வாயு என்றழைகெகப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(99-70)

[8] "பஸ்மம் என்ற சொல் சாம்பலைக் குறிக்கும். அஃதாவது அது {அந்த சாம்பல்} பாவங்களை விலக்குவதும், பந்தங்கள் அனைத்தையும் அறுப்பதும், ஒவ்வொரு நோயையும் குணப்படுத்தவல்லதுமாகும். இந்தச் சாம்பல் {திருநீறு}, பாவங்களை எரித்து, ஒவ்வொரு பந்தத்தையும் அறுத்து, அனைத்து வகை நோயில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டதற்கான அறிகுறியாகச் சந்நியாசிகளால் தங்கள் தங்கள் உடல்களில் பூசிக்கொள்ளப்படுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஜீவனைக் கட்டும் உலகபந்தங்கள் {பந்தநன்} நீயே. அந்தக் கட்டுகளைப் படைப்பவன் {பந்தகர்த்தன்} நீயே. அத்தகைய கட்டுகளை அறுப்பவன் {ஸுபந்தநவிமோசநன்} நீயே. (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான} தைத்தியர்களிலும் வசிப்பவன் {ஸயஜ்ஞாரி} நீயே. (அனைத்துச் செயல்களையும் கைவிட்டவர்களான) செயல்கள் அனைத்தின் பகைவர்களில் வசிப்பவன் {ஸகாமாரி} நீயே. பெரும் பற்களைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. வலிமைமிக்க ஆயுதங்கள் {மஹாயுதன்} நீயே.(100-71) பெரிதும் நிந்திக்கப்படுபவன் {பஹுதாநிந்திதன்} நீயே. தாருகா வனத்தில் வசிக்கும் முனிவர்களைத் திகைக்கச் செய்தவன் {சர்வன்} நீயே. தாருகா வனத்தில் வசிப்பவர்களும், உன்னை இகழ்பவர்களுமான முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் {சங்கரன்} நீயே. அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் {சங்கரன்} நீயே. (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் {அதநன்} நீயே. தேவர்களின் தலைவன் {அமரேசன்} நீயே. (தேவர்களில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டு இந்திரனாலும் துதிக்கப்படுவதன் விளைவால்) தேவர்களில் பெரியவன் {மஹாதேவன்} நீயே. விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் {விச்வதேவன்} நீயே. தேவர்களின் பகைவர்களைக் கொல்பவன் {ஸுராரிஹா} நீயே.(101-72) அதளபாதாளத்தில் (சேஷன் என்ற பாம்பின் வடிவில்) வசிப்பவன் {அஹிர்புத்நியன்} நீயே. புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன் {அநிலோபன் / அநிலாபன்} நீயே. அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் {சேகிதாநன்} நீயே. உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவன் {ஹவிஸ்} நீயே. அஜைகபாத் என்றழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் {காபாலி} நீயே. (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால்) அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவம் {த்ரிசங்கு} நீயே. முக்குணங்களுக்கு உட்படாதவன் {அஜிதன்} நீயே. குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்பு {சிவன்} நீயே.(102-73) தந்வந்தரி என்றழைக்கப்படும் மருத்துவ இளவரசன் நீயே. (பாவிகளுக்கு நேரும் பேரிடர்களை உண்டாக்கும் விளைவாக உள்ள) வால்நட்சத்திரம் {தூமகேது} நீயே. ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத்தலைவன் நீயே. இணைபிரியாத் தோழனும், உலகக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்றழைக்கப்படுபவனுமான யக்ஷர்களின் மன்னன் {வைச்ரவணன்} நீயே. தாத்ரி {தாதா} நீயே. சக்ரன் நீயே. விஷ்ணு நீயே. மித்ரன் நீயே. (தெய்வீகத் தச்சனான) தாஷ்டிரி {த்வஷ்டா} நீயே. துருவ நட்சத்திரம் {த்ருவன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்குபவன் {தரன்} நீயே.(103-74) வசுக்களில் பிரபாவன் என்றழைக்கப்படுபவன் {ப்ரபாவன்} நீயே. (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் செல்லவல்ல காற்று {ஸர்வகோவாயு} நீயே. அர்யமான் {சூரியனின் பெயர்} {அர்யமா} நீயே. சாவித்ரி {ஸவிதா} நீயே. ரவி நீயே. உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன் {எரியும் கதிர்களைக் கொண்டவன்} {உஷங்கு} நீயே. பல்வேறு வழிகளில் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன் {விதாதா} நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) மாந்தாத்ரி {மாந்தாதா} நீயே. அனைத்து உயிரினங்களும் உயிர் பெறும் இடம் {பூதபாவநன்} நீயே.(104-75)

பல்வேறு வடிவங்களில் இருப்பவன் {விபு} நீயே. அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் {வர்ணவிபாவி} நீயே. (உன்னில் இருந்து உண்டாகுபவையாக உள்ள_ ஆசைகள் அனைத்தையும், குணங்கள் அனைத்தையும் தாங்குபவன் {ஸர்வகாமகுணாவஹன்} நீயே. தொப்புளில் தாமரையைக் கொண்டவன் {பத்மநாபன்} நீயே. வலிமைமிக்க எண்ணற்ற உயிரினங்களுள்ள கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. சந்திரனைப் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் {சந்த்ரவக்த்ரன்} நீயே. {வாயு என்றழைக்கப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(105-76) பெரும் வலிமை {பலவாந்} நீயே. ஆன்ம அமைதி கொண்டவன் {திறனை வெளிக்காட்டாதவன்} {உபசாந்தன்} நீயே. பழைமையானவன் {புராணன்} நீயே. அறத்தின் துணையால் அறியப்படுபவன் {புண்யசஞ்சு} நீயே. {ஸ்ரீ என்றழைக்கப்படும்} லக்ஷ்மி {ஈ} நீயே. (பரமதேவனைத் துதிக்க மனிதர்களுக்குப் பயன்படும்) செயற்களத்தை அமைப்பவன் {குருகர்த்தன்} நீயே. செயற்களத்தில் வாழ்பவன் {குருவாஸி} நீயே. செயற்களத்தின் ஆன்மா {குருபூதன்} நீயே. அரச குணங்களைத் தூண்டுபவன் அல்லது அவற்றுக்கான மருந்து {குணௌஷதன்} நீயே.(106-77) (கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால்) அனைத்துப் பொருட்களும் கிடக்கும் இடம் {ஸர்வாசயன்} {தர்ப்பசாரி} நீயே. உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி} நீயே. தேவர்களுக்குத் தேவன் {தேவதேவன்} நீயே. இன்பநிலையுடன் தொடர்புடையவன் {ஸுகாஸக்தன்} நீயே. (காரண வடிவமான) ஸத் நீயே. (விளைவின் / காரிய வடிவமான) அஸத் நீயே. அனைத்திலும் சிறந்தவன் {ஸர்வரத்நவித்} நீயே.(107-78) கைலாச மலைகளில் வசிப்பவன் {கைலாஸகிரிவாஸி} நீயே. இமய மலைகளுக்குச் செல்பவன் {ஹிமவத்கிரிஸம்ச்ரயன்} நீயே. கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் {கூலஹாரி} நீயே. புஷ்கரை, பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் படைத்தவன் {கூலகர்த்தன்} நீயே. முடிவிலா ஞானவகைகளைக் கொண்டவன் {பஹுவித்யன்} நீயே. முடிவற்ற அருளை வழங்குபவன் {பஹுப்ரதன்} நீயே.(108-79) (மனிதர்களின் நன்மைக்காக இந்நாட்டுப் பொருட்களை வேறு நாட்டிற்கும், வேறு நாட்டுப் பொருட்களை இந்த நாட்டிற்கும் கொண்டு வரும்) வணிகன் {வணிஜன்} நீயே. மரத்தச்சன் {வர்த்தகி} நீயே. (உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும்) மரம் {வ்ருக்ஷன்} நீயே. வகுளம் {மகிழம்} என்றழைக்கப்படும் மரம் நீயே. சந்தன மரம் {சந்தநம்} நீயே. {ஏழிலைப்பாலை என்றழைக்கப்படும்} சத மரம் {சதம்} நீயே. மிக உறுதியான கழுத்தைக் கொண்டவன் {ஸாரக்ரீவன்} நீயே. பெருந்தோள்களைக் கொண்டவன் {மஹாஜத்ரு} நீயே. (செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும்) அமைதியற்றவன் {ஆசையற்றவன்} {அலோலன்} நீயே. (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள) முக்கியப் பயிர்களும், செடிகளும் {மஹௌஷதன்} நீயே.(109-80)

பிறர் தங்கள் இதயங்களில் விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் {ஸித்தார்த்தகாரி}, {ஸித்தார்த்தன்} நீயே. வேதங்கள் மற்றும் இலக்கணத்தில் சரியான தீர்மானங்கள் {சந்தோவ்யாகரணோத்தரன்} நீயே. சிங்க முழக்கம் செய்பவன் {ஸிம்மநாதன்} நீயே. சிங்கப் பற்களுடன் கூடியவன் {ஸிம்மதம்ஷ்ட்ரன்} நீயே. பயணங்கள் செய்யச் சிங்கத்தில் செல்பவன் {ஸிம்மகன்} நீயே. சிங்கத்தால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஸிம்மவாஹநன்} நீயே.(110-81) உண்மையின் உண்மையென அழைக்கப்படுபவன் {ப்ரபாவாத்மா} நீயே. அண்டத்தின் காலனை உணவுத்தட்டாகக் கொண்டவன் {ஜகத்காலஸ்தாலன்} நீயே. உலகங்களுக்கு நன்மையை எப்போதும் நாடுபவன் {லோகஹிதன்} நீயே. (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில்) உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் {தரு} நீயே. சாரங்கம் என்றழைக்கப்படும் பறவை {ஸாரங்கன்} நீயே. புதிய அன்னப்பறவை {நவசக்ராங்கன்} நீயே. (சேவலைப் போலவோ, மயிலைப் போலோ} நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் தெரிபவன் {கேதுமாலி} நீயே. நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் {ஸபாவநன்} நீயே.(111-82) அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம் {பூதாலயன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் {பூதபதி} நீயே. (நித்திய பூதங்களாக அமைந்திருக்கும்) பகலும், இரவும் {அஹோராத்ரன்} நீயே. குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் {அநிந்திதன்} நீயே.(112-83) அனைத்து உயிரினங்களையும் தாங்குபவன் {ஸர்வபூதாநாம்வாஹிதன்} நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் {நிலயன்} நீயே. பிறப்பற்றவன் {விபு} நீயே. இருப்பவன் {பவன்} நீயே. எப்போதும் கனிநிறைந்தவன் {அமோகன்} நீயே. தாரணை, தியானம் மற்றும் சமாதியுடன் கூடியவன் {சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்} {ஸம்யதன்} நீயே. உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள் {அச்வன்} நீயே. உணவளிப்பவன் {போஜநன்} நீயே. உயிரினங்களின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பவன் {ப்ராணதாரணன்} நீயே.(113-84) பொறுமையுடன் கூடியவன் {த்ருதிமாந்} நீயே. நுண்ணறிவு கொண்டவன் {மதிமாந்} நீயே. முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன் {தக்ஷன்} நீயே. அனைவராலும் மதிக்கப்படுபவன் {ஸத்க்ருதன்} நீயே. அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணியபாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் {யுகாதிபன்} நீயே. (புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் {கோபாலி} நீயே. ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன் {கோபதி} நீயே. பொருட்களின் திரட்டுகள் அனைத்தும் {க்ராமன்} நீயே. மாட்டுத் தோல்களாலான உடைகளைக் கொண்டவன் {கோசர்மவஸநன்} நீயே. பக்தர்களின் துயரை அகற்றுபவன் {ஹரி} நீயே.(114-85)

தங்கக் கரம் கொண்டவன் {ஹிரண்யபாஹு} நீயே. தங்கள் தங்களுக்குள் நுழைய முயலும் யோகியரின் உடல்களைப் பாதுகாப்பவன் {ப்ரவேசிநாம்குஹாபாலன்} நீயே. எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குக் குறைப்பவன் {ப்ரக்ருஷ்டாரி} நீயே. மகிழ்ச்சியைப் பெருமளவில் கொண்டவன் {மஹாஹர்ஷன்} நீயே. தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன் {ஜிதகாமன்} நீயே. புலன்களை வென்றவன் {ஜிதேந்த்ரியன்} நீயே.(115-86) இசையின் எட்டாம் சுரமான காந்தாரம் நீயே. (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால்) சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் {ஸுவாஸன்} நீயே. எப்போதும் தவங்களுடன் தொடர்புடையவன் {தபஸ்ஸக்தன்} நீயே. உற்சாகம் மற்றும் நிறைவின் வடிவம் {ரதி} நீயே. முடிவற்றவன் அல்லது பரந்தவன் {நரன்} நீயே. தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான பாடல் {மஹாகீதன்} நீயே. நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடுபவன் {மஹாந்ருத்யன்} நீயே. அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் {அப்ஸரோகணஸேவிதன்} நீயே.(116-87) (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட) பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் {மஹாகேது} நீயே. மேரு மலை {மஹாதாது} நீயே. பெரும் மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் {நைகஸாநுசரன்} நீயே. பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் {சலன்} நீயே. சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்படவல்லவன் {ஆவேதநீயன்} நீயே. ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வயின் வடிவம் {ஆதேசன்} நீயே. இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடியவன் {ஸர்வகந்தஸ்ஸுகாவஹன்} நீயே.(117-88) நகரங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்புவாயில் {தோரணன்} நீயே. அரணமைக்கப்பட்ட நகரங்களைச் சூழ்ந்திருப்பவையும், முற்றுகையிடப்பட்ட கோட்டைக் காவற்படைகளுக்கு வெற்றியை அளிப்பவையுமான அகழிகள் மற்றும் குழிகளின் வடிவம் {தாரணன்} நீயே. காற்று நீயே {வாதன்} நீயே. மதில்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்ட அரணமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களின் வடிவம் {பரிதீபதி} நீயே. (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன் {கேசரன்} நீயே. எதிர்பாலினக் கலவியால் உற்பத்தியைப் பெருக்குபவன் {ஸம்யோகன்} நீயே. அறங்கள் மற்றும் அறிவுகள் அனைத்திலும் முதன்மையானவன் {வர்த்தநன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் முதல்வன் {வ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன் {அதிவ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்தவன் {குணாதிகன்} நீயே.(118-89) நித்தியமானவனும், மாற்றமில்லாதவனும், சுயம்சார்ந்தவனும் {நித்யாத்மஸஹாயன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் {தேவாஸுரபதி} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் {பதி} நீயே. கவசம் தரிப்பவன் {யுக்தன்} நீயே. பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் {யுக்தபாஹு} நீயே. சொர்க்கத்தில் ஸுபர்வன் என்றழைக்கப்படுபவனைக் காட்டிலும் துதிக்கத்தக்க பொருள் {திவிஸுபர்வணோதேவன்} நீயே.(119-90)

அனைத்துப் பொருட்களையும் தாங்கும், அல்லது சுமக்கும் சக்தியை அருள்பவன் {ஆஷாடன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் சுமக்கவல்லவன் {ஸுஷாடன்} நீயே. (ஒருபோதும் உறுதியற்றவனாக இல்லாத) நிலையுறுதி கொண்டவன் {த்ருவன்} நீயே. (எக்களங்கமும் இல்லாத) வெண்மையானவன், அல்லது தூயன் {ஹரிணன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும்) அழிக்கவல்ல திரிசூலம் தரிப்பவன் {ஹரன்} நீயே. அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் {ஆவர்த்தமாநேப்யோவபு} நீயே. செல்வத்தைவிட மதிப்புமிக்கவன் {வஸுச்ரேஷ்டன்} நீயே. (நன்மை மற்றும் பணிவன்பின் வடிவிலான) அறவழி அல்லது ஒழுக்கம் {மஹாபதன்} நீயே.(120-91) (வெறும் கோபத்தால் தூண்டப்படாமல்) ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் {சிரோஹாரி} நீயே. {விமர்சன் நீயே}. கைவரை நூல் {ரேகை சாஸ்திரம்}, அடிக்காலியல், தலை அமைப்பியல், மற்றும் விசித்திர மனத்தன்மைகளைக் குறிக்கும் உடல்வடிவம் தொடர்புடைய பிற அறிவுக்கிளைகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மங்கலக்குறிகள் அனைத்தையும் கொண்டவன் {ஸர்வலக்ஷணலக்ஷிதன்} நீயே. தேரின் அக்ஷம் என்றழைக்கப்படும் மரச்சட்டமாக இருப்பவனும், உடலெனும் தேரில் தொடர்புடையவனும் {ரதயோகிஅக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் {ஸர்வயோகி} நீயே. வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே.(121-92) வேதம் {ஸமாம்நாயன்} நீயே. ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் {அஸமாம்நாயன்} நீயே. ஒவ்வொரு புண்ணியத்தலத்தின் சிறப்புமிக்கத் தேவன் {தீர்த்ததேவன்} நீயே. பூமியைத் தேராகக் கொண்டவன் {மஹாரதன்} நீயே. ஒவ்வொரு உயிரின உடற்தொகுப்புக்குள்ளும் நுழையும் செயலாற்றலற்ற பூதங்கள் {நிர்ஜீவன்} நீயே. செயலாற்றலற்ற பூதங்களாலான ஒவ்வொரு தொகுப்புக்கும் உயிரைக் கொடுப்பவன் {ஜீவநன்} நீயே. உயிரற்ற பருப்பொருளில் உயிரை உட்செலுத்தும் புனித மந்திரங்களும், பிரணவமும் {மந்த்ரன்} நீயே. அமைதியான பார்வைகளைச் செலுத்துபவன் {சுபாக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் {பஹுகர்க்கசன்} நீயே.(122-93) மதிப்புமிக்க எண்ணற்ற குணங்களையும், உடைமைகளையும் கொண்டவன் {ரத்நப்ரபூதன்} நீயே. சிவந்த உடல் கொண்டவன் {ரத்நாங்கன்} நீயே. நீ பருகுவதற்காகப் பல குளங்கள் நிறைவதால் பரந்த பெருங்கடல்கள் அனைத்தும் {மஹார்ணவநிபாநவித்} நீயே. உலக மரத்தின் வேர் {மூலன்} நீயே. பெருஞ்சிறப்புகளைக் கடந்து ஒளிர்பவனும், மிக அழகியவனும் {விசாலன்} நீயே. அமுதத்தின் வடிவம் {அம்ருதன்} நீயே. காரணம், விளைவு {காரியம்} ஆகிய இரண்டும் {வ்யக்தாவ்யக்தன்} நீயே. (பெரும் யோகியாக இருப்பதால்) தவப்பெருங்கடல் {தபோநிதி} நீயே.(123-94) இருப்பின் உயர்ந்த நிலைக்கு உயரச் செய்பவன் {ஆரோஹணன்} நீயே. அந்நிலையை ஏற்கனவே அடைந்தவன் {அதிரோஹன்} நீயே. தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நோன்புகளுக்காகப் புகழ்பெற்றவன் {சீலதாரி} நீயே. (அறநடத்தையின் விளைவால்) பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே. (ஆற்றல் மற்றும் துணிவின் வடிவமாக நீயே இருப்பதால்) படைகளின் ரத்தினம் {ஸேநாகல்பன்} நீயே. தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {மஹாகல்பன்} நீயே. யோகம் நீயே. யுகங்கள் மற்றும் கல்பங்களால் அளக்கப்படும் நித்திய காலத்தை உண்டாக்குபவன் {யுகசரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்புபவன் {ஹரி} நீயே.(124-95)

(அடுத்தடுத்த யுகங்களில் வெளிப்படும் {யுகரூபத்தில்} அறம், மறம் மற்றும் அவற்றின் கலவைகளின் வடிவம்) {மஹாரூபன்} நீயே. பெரியவனும், வடிவமற்றவனும் {மஹாநாகஹநன்} நீயே. மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரனைக் கொன்றவன் {வதன்} நீயே. காலனின் வடிவம் {ந்யாயநிர்வபணன்} நீயே. உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் {பாதன்} நீயே. {பண்டிதன்} நீயே. அணுகப்படக்கூடியவன் {அசலோபமன்} நீயே.(125-96) புலன்களின் உணர்வைக் கடந்த அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் {பஹுமாலன்} நீயே. தத்துவங்களை அறிந்தவன் (என்பதால் முற்றிலும் நிலையாக இருப்பவன்) {மஹாமாலன்} நீயே. இடைவிடாமல் அழகில் ஒளிர்பவன் {சுசீஹரஸுலோசநன்} நீயே. கழுத்தில் இருந்து பாதம் வரை நீளும் மாலைகளை அணிபவன் {விஸ்தாரன்} நீயே. சந்திரனைத் தன் அழகிய கண்களாகக் கொண்ட ஹரன் {லவணன்} நீயே. பரந்து விரிந்த உப்புப் பெருங்கடல் {கூபன்} நீயே. (கிருதம், திரேதம், துவாபரம் என்ற) மூன்று யுகங்கள் {த்ரியுகன்} நீயே. பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன் {ஸபலோதயன்} நீயே.(126-97) (சாத்திரங்கள், ஆசான் மற்றும் தியான வடிவங்களில்) மூன்று கண்களைக் கொண்டவன் {த்ரிலோசநன்} நீயே. (ஆதி பூதங்களின் நுண்வடிவங்களாக இருப்பதால்) மிக நுட்பமான வடிவங்களைக் கொண்டவன் {விஷண்ணாங்கன்} நீயே. குண்டலங்கள் அணிந்த காதுகளைக் கொண்டவன் {மணிவித்தன்} நீயே. சடாமுடி தரித்தவன் {ஜடாதரன்} நீயே. மூக்கொலியைக் குறிக்கும் (எழுத்தில்) புள்ளியாக இருப்பவன் {பிந்து} நீயே. ஹ என்ற மூச்சொலியைக் குறிக்கும் (எழுத்தில்) இரு புள்ளிகளாக இருப்பவன் {படைப்பவன்} {விஸர்க்கன்} நீயே. சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்} நீயே. பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணை {சரன்} நீயே. போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் {ஸர்வாயுதன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கவல்ல பொறுமையுடன் கூடியவன் {ஸஹன்} நீயே.(127-98) அக மற்றும் புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதால் எழும் ஞானம் கொண்டவன் {நிவேதநன்} நீயே. இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்துவதன் விளைவால் வெளிப்படும் உண்மை {ஸுகாஜாதன்} நீயே. காந்தாரம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருந்து எழும் காதுக்கு மிக இனிய சுரம் {ஸுகந்தாரன்} நீயே. (பிநாகம்) என்றழைக்கப்படும் பெரும் வில்லைத் தரிப்பவன் {மஹாதநு} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கும் தலைமையானவனாக இருப்பதல்லாமல் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஆசைகளும் புத்தியும் {அண்ட அழிவு வரை செயல்மணத்தைக் காக்கும் தலைவன்} {கந்தபாலீபகவாந்} நீயே. செயல்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஸர்வகர்மணாம்உத்தாநன்} நீயே.(128-99) அண்ட அழிவுக்காலத்தில் எழுவதும், பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல மொத்த அண்டத்தையும் கடையவல்லவனுமான காற்று {மந்தாநோபஹுலோவாயு} நீயே. முழுமையாக இருப்பவன் {ஸகலன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் காண்பவன் {ஸர்வலோசநன்} நீயே. உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலி {தலஸ்தாலன்} நீயே. உணவிருக்கும் பாத்திரமாக, அல்லது உணவாகப் பயன்படும் உள்ளங்கையைக் கொண்டவன் {கரஸ்தாலி} நீயே. கடினமான உடல் படைத்தவன் {ஊர்த்வஸம்ஹநநன்} நீயே. மிகப் பெரியவன் {மஹாந்} நீயே.(129-100)

குடையின் வடிவில் இருப்பவன் {சத்ரன்} நீயே. சிறந்த குடையைக் கொண்டவன் {ஸுச்சத்ரன்} நீயே. அனைத்து உயிரினங்களுடனும் அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன் {விக்யாதோலோகன்} நீயே. இரண்டு அடியால் அண்டத்தை மறைத்து, மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டவன் {ஸர்வாச்ரயக்ரமன்} நீயே. மொட்டைத்தலை கொண்டவன் {முண்டன்} நீயே. மிகக் கோர வடிவம் கொண்டவன் {விரூபன்} நீயே. முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமானவன் {விக்ருதன்} நீயே. சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட தண்டத்தைக் கொண்டவன் {தண்டி} நீயே. குண்டத்தைக் கொண்டவன் {குண்டி} நீயே. செயல் வழிமுறைகளின் மூலம் அடையப்பட இயலாதவன் {விகுர்வணன்} நீயே.(130-101) பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு (சிங்கத்தோடு) அடையாளம் காணப்படுபவன் {ஹர்யக்ஷன்} நீயே. திசைகள் அனைத்தின் வடிவம் {ககுபன்} நீயே. வஜ்ரதாரி {வஜ்ரி} நீயே. நூறு நாவுகளைக் கொண்டவன் {சதஜிஹ்வன்} நீயே. ஆயிரம் கால்களையும் {ஸஹஸ்ரபாத்}, ஆயிரம் தலைகளையும் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவேந்த்ரன்} நீயே. தேவர்கள் அனைவருமாக அமைந்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. பேராசான் {குரு} நீயே.(131-102) ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாஹு} நீயே. அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்பவன் {ஸர்வாங்கன்} நீயே. அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு {சரண்யன்} நீயே. அனைத்து உலகங்களையும் படைத்தவன் {ஸர்வலோகக்ருத்} நீயே. புனிதத்தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் என்ற விடவங்களில் பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் {பவித்ரன்} நீயே. மூன்று உயர்ந்த மந்திரங்களைக் கொண்டவன் {த்ரிக்குந்மந்த்ரன்} நீயே. (அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த) இளையவன் {கநிஷ்டன்} நீயே. (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் {கருஞ்சிவப்பு நிறமாக இருப்பவன்} {க்ருஷ்ணபிங்களன்} நீயே.(132-103) பிராமணர்களின் தண்டத்தை அமைப்பவன் {ப்ரம்மதண்டவிநிர்மாதா} நீயே. நூற்றுவக்கொல்லி {சதக்னி}, பாயக்கயிறு, ஈட்டி {சக்தி} ஆகியவற்றைத் தரித்தவன் {சதக்நீபாசசக்திமாந்} நீயே. ஆதித் தாமரையில் பிறந்தவன் {பத்மகர்ப்பன்} நீயே. பெரும் கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. வேதங்களைத் தன் கருவறையில் கொண்டவன் {ப்ரம்மகர்ப்பன்} நீயே. அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் எழுபவன் {ஜலோத்பவன்} நீயே.(133-104) பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் {கபஸ்தி} நீயே. வேதங்களைப் படைத்தவன் {ப்ரம்மக்ருத்} நீயே. வேத கல்வி {ப்ரம்மி} நீயே. வேதங்களின் பொருள் அறிந்தவன் {பிரம்மவித்} பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன் {ப்ராம்மணன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடம் {கதி} நீயே. அளவற்ற வடிவு கொண்டவன் {அநந்தரூபன்} நீயே. எண்ணற்ற உடல்களைச் சுமப்பவன் {நைகாத்மா} நீயே. தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவன் {திக்மதேஜாஸ்வயம்புவன்} நீயே.(134-105)

(சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் {ஊர்த்வகாத்மா} நீயே. ஜீவன்கள் அனைத்தின் தலைவன் {பசுபதி} நீயே. காற்று வேகம் கொண்டவன் {வாதரம்ஹஸ்} நீயே. மனோவேகம் கொண்டவன் {மநோஜவன்} நீயே. சந்தனக் குழம்பை எப்போதும் பூசிக் கொள்பவன் {சந்தநி} நீயே. ஆதி தாமரையின் நுனி {பத்மநாளாக்ரன்} நீயே. தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன் {ஸுரப்யுத்தரணன்} நீயே. உன் எல்லையைக் காண முடியாத பிரம்மன் {நரன்} நீயே.(135-106) பெரும் கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் {கர்நிகாரமஹாஸ்ரக்வி} நீயே. நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் கொண்டவன் {நீலமௌலி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவன் {பிநாகத்ருத்} நீயே. இமயத்தின் மகளான உமையின் கணவன் {உமாபதி} நீயே. {உமாகாந்தன்}, தலையில் கங்கையைத் தாங்குபவன் {ஜாஹ்நவீத்ருக்} நீயே.  {உமாதவன் நீயே}.(136-107) (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் {வரோவராஹன்} நீயே. பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் {வரதன்} நீயே. துதிக்கத்தகுந்தவன் {வரேண்யன்} நீயே. இடிபோன்ற குரலில் வேதங்களை உரைத்த குதிரைத்தலையுடன் கூடிய ஆதி இருப்பு {ஸுமஹரஸ்வநன்} நீயே. பேரருளாளன் {மஹாப்ரஸாதன்} நீயே. பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் {தமநன்} நீயே. (ஆசைகளின் வடிவில் இருக்கும்) பகைவர்கள் அனைவரையும் கொல்பவன் {சத்ருஹன்} நீயே. (ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால்) வெள்ளையும், பழுப்புமாக இருப்பவன் {ச்வேதபிங்களன்} நீயே.(137-108) தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் {பீதாத்மா} நீயே. (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட) ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம் {பரமாத்மா} நீயே. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவைக் கொண்டவன் {ப்ரயதாதத்மா} நீயே. பிரதானம் என்றழைக்கப்படும் அறியமை சார்ந்திருப்பதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதும், அண்டம் உண்டாகக் காரணமானதுமான அடித்தளம் {ப்ரதாநத்ருத்} நீயே. அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் {ஸர்வபார்ச்வமுகன்} நீயே. (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முக்கண்களைக் கொண்டவன் {த்ரியக்ஷன்} நீயே. (பேரளவில் அறத்தைக் கொண்டிருக்கும் விளைவால்) உயிரினங்கள் அனைத்திலும் மேன்மையானவன் {தர்மஸாதாரணவரன்} நீயே.(138-109) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மா {சராசராத்மா} நீயே. (புலப்படமுடியாத) நுட்பமான ஆத்மாவின் வடிவம் {ஸூக்ஷ்மாத்மா} நீயே. கனிகளில் ஆசையற்று உயிரினங்களால் அடையப்படும் அறச்செயல்கள் அனைத்தின் கனியாக விடுதலை {முக்தி} என்ற வடிவில் இறவாமையை அருள்பவன் {அம்ருதகோவ்ருஷேச்வரன்} நீயே. தேவர்களின் தேவர்களுக்கும் ஆசான் {ஸாத்யரிஷி} நீயே. அதிதியின் மகனான வசு {ஆதித்யவஸு} நீயே. எண்ணற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டவனும் {விவஸ்வாந்}, அண்டத்தை உண்டாக்குபவனும் {ஸவிதா}, வேள்விகளில் பருகப்படும் சோமத்தின் வடிவமும் {அம்ருதன்} நீயே.(139-110)

புராணங்கள் மற்றும் புனித வரலாறுகள் பிறவற்றின் ஆசானான வ்யாஸன் நீயே. (புராணங்கள் மற்றும் பிற புனித வரலாறுகளோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) வியாசரின் மூளையில் உதித்த சுருக்கப்பட்ட மற்றும் சுருக்கப்படாத படைப்புகள் {ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன்} நீயே. ஜீவன்களின் மொத்த தொகை {பர்யயோநரன்} நீயே. பருவகாலம் {ருது} நீயே. வருடம் {ஸம்வத்ஸரம்} நீயே. மாதம் {மாஸம்} நீயே. அரைத்திங்கள் {பக்ஷம்} நீயே. இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் {ஸங்க்யாஸமாபநன்} நீயே.(140-111) கலை நீயே. காஷ்டை நீயே. லவம் நீயே. மாத்திரை நீயே. முஹூர்த்தம் நீயே. அஹஸ் {பகலாய் இருப்பவன்} நீயே. க்ஷபம் நீயே. க்ஷணம் நீயே. அண்டமெனும் மரம் நிற்கும் மண் {விச்வக்ஷேத்ரம்} நீயே. (எங்கே உயிரினங்கள் அனைத்தும் எழுமோ அந்த மாயையுடன் கூடிய புலப்படாத சைதன்யத்தின் வடிவமாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் வித்து {ப்ரஜாபீஜம்} நீயே. மஹத்தத்துவம் {லிங்கம்} நீயே. (மஹத் தத்துவத்தை உண்டாக்கும் நனவுநிலையின் வடிவமாக இருப்பதால்) ஜீவனின் அரும்பு {ஆத்யநிர்க்கமம்} நீயே.(141-112) ஸத் அல்லது விளைவு {காரியம்} நீயே. அஸத் அல்லது காரணம் நீயே. (புலன்களுக்குப் பிடிபடும் வகையில்) புலப்படுபவன் {வ்யக்தம்} நீயே. (புலன்களுக்குப் பிடிபடாத வகையில்) புலப்படாமல் இருப்பவன் {அவ்யக்தம்} நீயே. தந்தை {பிதா} நீயே. தாயும் {மாதா} நீயே. பாட்டன் {பிதாமஹன்} நீயே. (தவங்களோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) சொர்க்கத்தின் வாயில் {ஸ்வர்க்கத்வாரம்} நீயே. (ஆசையோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் உற்பத்தி வாயில் {ப்ரஜாத்வாரம்} நீயே. (எதனால் மட்டுமே பிரம்மத்தோடு கலக்கும் நிலைக்கு வழிநடத்த முடியுமோ அந்த ஆசையின்மையோடு அடையாளம் காணப்படுபவனாக இருக்கும் காரணத்தால்) விடுதலையின் {முக்தியின்} வாயில் {மோக்ஷத்வாரம்} நீயே. சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் {த்ரிவிஷ்டபம்} நீயே.(142-113) நிர்வாணம் (அல்லது தனிப்பட்ட இருப்பைத் தவிர்த்த விடுதலை {முக்தி} நிலை) நீயே. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் {ஹ்லாதநன்} நீயே. (அறவோரில் முதன்மையானோர் அடையும்) வாய்மையின் உலகம் {ப்ரம்மலோகன்} நீயே. (அறவோரால் அடையப்படும்) வாய்மையின் உலகத்தைக் காட்டிலும் மேன்மையான நிலை {பரகதி} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் {தேவாஸுரவிநிர்மாதா} நீயே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரபராயணன்} நீயே.(143-114) (பிருஹஸ்பதி மற்றும் சுக்ரனின் வடிவில் இருப்பதால்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் {தேவாஸுரகுரு} நீயே. எப்போதும் வெற்றியடைபவன் {தேவன்} நீயே. தேவர்களாலும், அசுரர்களாலும் எப்போதும் வழிபடப்படுபவன் {தேவாஸுரநமஸ்க்ருதன்} நீயே. யானையை வழிநடத்தும் மஹாமாத்ரத்தைப் போலத் தேவர்களையும், அசுரர்களையும் வழிநடத்துபவன் {தேவாஸுரமஹாமாத்ரன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம் {தேவாஸுரகணாச்ரயன்} நீயே.(144-115)

(இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் {தேவாஸுரகணாத்யக்ஷன்} நீயே. (தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் {தேவாஸுரகணாக்ரணி} நீயே. புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் {தேவாதிதேவன்} நீயே. (நாரதர் மற்றும் பிறரைப் போன்ற) தெய்வீக முனிவர்களின் வடிவில் இருப்பவன் {தேவரிஷி} நீயே. (பிரம்மன் மற்றும் ருத்திரனின் வடிவில் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வரங்களை அளிப்பவன் {தேவாஸுரவரப்ரதன்} நீயே.(145-116) தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் {தேவாஸுரேச்வரன்} நீயே. (அண்டம் அழியும்போது) அண்டம் நுழையப் போகும் இடம் {விச்வன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதங்களை ஆள்பவனுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரமஹேச்வரன்} நீயே. தேவர்கள் அனைவராலுமான உடல்படைத்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாதவன் {அசிந்த்யன்} நீயே. தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் {தேவதாத்மா} நீயே. சுயத்தில் பிறந்தவன் {ஆத்மஸம்பவன்} நீயே.(146-117) அசைவற்ற பொருட்களின் வடிவம் {மாயையைப் பிளந்து வெளிப்படுபவன்} {உத்பித்} நீயே. மூன்று அடிகளில் உலகை மறைத்தவன் {த்ரிவிக்ரமன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வைத்யன்} நீயே. களங்கமற்றவன் {விரஜன்} நீயே. ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவன் {நீரஜன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {அமரன்} நீயே. புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் {ஈட்யன்} நீயே. காலத்தைப் பிரதிபலிக்கும் தடுக்கப்பட முடியாத யானையின் ஆசான் {ஹஸ்தீச்வரன்} நீயே. கலிங்கர்களின் நாட்டில் வழிபடப்படும் புலிகளின் தலைவனுடைய வடிவம் {வ்யாக்ரன்} {வியாக்ரேஸ்வரன்} நீயே. (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்) தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் {தேவஸிம்மன்} நீயே. மனிதர்களில் முதன்மையானவன் {நரர்ஷபன்} நீயே.(147-118) பெரும் ஞானம் கொண்டவன் {விபுதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்பவன் {அக்ரவரன்} நீயே. உணரப்பட முடியாதவன் {ஸூக்ஷ்மன்} நீயே. தேவர்கள் அனைவரின் மொத்தத் தொகை {ஸர்வதேவன்} நீயே. தவங்களால் மேம்பட்டிருப்பவன் {தபோமயன்} நீயே. எப்போதும் சிறந்த யோகத்தில் இருப்பவன் {ஸுயுக்தன்} நீயே. மங்கலமானவன் {சோபநன்} நீயே. வஜ்ரம் தரித்தவன் {வஜ்ரி} நீயே. பிராசங்கள் என்றழைக்கப்படும் பிறக்கும் தோற்றுவாய் {ப்ராஸாநாம்ப்ரபவன்} நீயே. பக்தர்களால் பல்வேறு வழிகளில் அடையப்படுபவன் {அவ்யயன்} நீயே.(148-119) (தேவர்ப்படைத்தலைவனான) குஹன் நீயே. இன்பநிலையின் உயர்ந்த எல்லை {காந்தன்} நீயே. படைப்போடு அடையாளம் காணப்படுபவன் {நிஜஸர்க்கன்} நீயே. (விடுதலையை {முக்தியை} அருளி) உயிரினங்களை மரணத்தில் இருந்து காப்பவன் {பவித்ரன்} நீயே. பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன் {ஸர்வபாவநன்} நீயே. காளைகள் மற்றும் கொம்பு படைத்த பிற விலங்குகளின் வடிவில் இருப்பவன் {ஸ்ருங்கி} நீயே. மலைச்சிகரங்களை விரும்புபவன் {ஸ்ருங்கப்ரியன்} நீயே. சனிக்கோள் {பப்ரு} நீயே. யக்ஷர்களின் தலைவனான குபேரன் {ராஜராஜன்} நீயே. முற்றான களங்கமற்ற நிலை {நிராமயன்} நீயே.(149-120)

மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் {அபிராமன்} நீயே. தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தவன் {ஸுரகணன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் இடை நிறுத்துபவன் {தவிர்ப்பவன்} {விராமன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளின் தொடர்புடைய கடமைகள் அனைத்தும் {ஸர்வஸாதநன்} நீயே. நெற்றியிலும் ஒரு கண் கொண்டவன் {லலாடாக்ஷன்} நீயே. பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் {விச்வதேவன்} நீயே. மானின் வடிவைக் கொண்டவன் {ஹரிணன்} நீயே. ஞானம் மற்றும் தவத்தின் வடிவிலான சக்தியுடன் கூடியவன் {ப்ரம்மவர்ச்சஸன்} நீயே.(150-121)(இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அடையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் {ஸ்தாவராணாம்பதி} நீயே. பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன் {நியமேந்த்ரியவர்த்தநன்} நீயே. நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்தவன் {ஸித்தார்த்தன்} நீயே. விடுதலையுடன் {முக்தியுடன்} அடையாளம் காணப்படுபவன் {ஸித்தபூதார்த்தன்} நீயே. நாங்கள் வழிபடுபவனிடத்தில் இருந்து வேறுபட்டவன் {அசிந்த்யன்} நீயே. வாய்மையையே தவமாகக் கொண்டவன் {ஸத்யவ்ரதன்} நீயே. தூய இதயம் கொண்டவன் {சுசி} நீயே.(151-122) (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் {வ்ரதாதிபன்} நீயே. (துரியத்தின் வடிவில் இருக்கும்) உயர்ந்தவன் {பரம்} நீயே, ப்ரம்மம் நீயே. பக்தர்களின் உயர்ந்த புகலிடம் {பக்தாநாம்பரமாகதி} நீயே. (விடுதலை கொண்டவனாக {முக்தனாக} இருப்பதால்) பந்தங்கள் அனைத்தையும் கடந்தவன் {விமுக்தன்} நீயே. லிங்க உடலில் இருந்து விடுபட்டவன் {முக்ததேஜஸ்} நீயே. அனைத்து வகைச் செழிப்புடன் கூடியவன் {ஸ்ரீமாந்} நீயே. பக்தர்களின் செழிப்பை அதிகரிப்பவன் {ஸ்ரீவர்த்தநன்} நீயே. இடையறாத மாற்றங்களுக்கு உட்படுபவன் {ஜகத்} நீயே[9].(152-123)

[9] இந்தப் பகுதியின் 30ம் ஸ்லோகத்தில் தொடங்கிய சிவசஹஸ்ரநாமம் இந்த 152ம் ஸ்லோகத்துடன் நிறைவடைகிறது. இதற்குப் பின் வருவது உபமன்யு கிருஷ்ணனிடம் பேசும் உரையாகும். மேலே ( ) அடைப்புக்குறிக்குள் வரும் எண்கள் (30-1) அநுசாஸன பர்வம் பகுதி-17ல் 30வது ஸ்லோகம் என்றும், சிவஸகஸ்ரநாமத் துதியில் 1வது ஸ்லோகம் என்றும், (152-123) என்று இருந்தால், அநுசாஸன பர்வம் பகுதி-17ல் 152வது ஸ்லோகம் என்றும், சிவஸகஸ்ரநாமத் துதியில் 123வது ஸ்லோகம் என்றும் கொள்க. 1008 என்று சொல்லப்பட்டாலும் மொத்தம் 1025 பெயர்கள் இப்பட்டியலில் இருக்கின்றன. Sanskrit Documents வலைத்தளம், கங்குலி, கும்பகோணம் என்ற மூன்று பதிப்புகளை ஒப்புநோக்கியதில் ஒன்றில் இருந்து வேறு இரண்டில் இல்லாத 11 பெயர்கள் இப்பட்டியலில். அவற்றைத் தவிர்த்தாலும் 1014 பெயர்கள் வருகின்றன. அதாவது சொல்லப்பட்டதில் 6 பெயர்கள் அப்போதும் அதிகமாக இருக்கும்.

ஓ! கிருஷ்ணா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்கத் தேவனுடைய பெயர்களை அவற்றின் முக்கியத்துவத்தின் வரிசையில் புகழ்ந்து பாடினேன். நமது துதிகள், வழிபாடு மற்றும் மதிப்புக்குத் தகுந்தவனும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் புகழப்பட முடியாதவனும், முனிவர்களாலும் துதிக்கப்பட முடியாதவனும், அனைவரின் பெருந்தேவனுமான அந்த அண்டத் தலைவனின் புகழை வேறு எவனால் துதிக்க முடியும்?(153) எனினும், உயர்ந்த பலத்தைக் கொண்ட தேவனும், நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த வேள்விகளின் தலைவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால், அவனிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனைப் புகழ்ந்தேன்.(154) ஒருவனிடம் மங்கலத்தைப் பெருக்கும் இந்தப் பெயர்களால் அருள்நிலையின் பெருந்தேவனைப் புகழ்வதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆன்மா மற்றும் தூய இதயத்துடன் கூடிய ஒரு வழிபாட்டாளன் தன்னை {சுயத்தை} அடைவதில் வெல்கிறான்.(155)

பிரம்மத்தை அடையும் சிறந்த வழிமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு துதியாக இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் துதியின் துணையுடன் நிச்சயம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வான். முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் இந்தத் துதியைத் துதிப்பதன் மூலம் அந்த உயர்ந்த தேவனைப் புகழ்கின்றனர் {துதிக்கின்றனர்}.(156) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவரால் துதிக்கப்படும்போது, இவ்வாறு தன் புகழைப் பாடுவோரிடம் மஹாதேவன் நிறைவை அடைகிறான். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் பக்தர்களிடம் எப்போதும் கருணை நிறைந்தவனாவான். எல்லாம் வல்லவனான அவன் தன்னை வழிபடுவோருக்கு விடுதலையை {முக்தியை} அளிக்கிறான்.(157) நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் {பக்தியும்} கொண்ட மனிதர்களில் முதன்மையானோர், உயர்ந்தவனும், நித்திய தேவனுமான ஈசானனின் {இந்தத்} துதியைக் கேட்டாலும், பிறருக்காக மதிப்புடன் உரைத்தாலும், அவர்கள் தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கிடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நடக்கும் போதும், விழித்திருக்கும்போதும், கண் இமைகளைத் திறக்கும்போதும், அவற்றை மூடும்போதும் என அனைத்து நேரங்களிலும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவனை இவ்வாறே துதித்து, அவனைக் குறித்தே மீண்டும் மீண்டும் நினைத்து, தங்கள் சக மனிதர்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவர்களாகி பெரும் நிறைவையும், பேரின்பத்தையும் அடைவார்கள்.(158-161)

பல்வேறு வகைகளில் பல கோடி பிறவிகளின் போக்கில் ஓர் உயிரினம் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ளும்போதே, அவனது இதயத்தில் மஹாதேவனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} உண்டாகும்.(162) (அண்டத்தின்) மூலக்காரணனான பவனை வழிபடும் ஒவ்வொரு வழிமுறையையும் அறிந்த ஒருவனுடைய இதயத்தில் நற்பேற்றால் மட்டுமே அந்தப் பெருந்தேவனிடம் சிதறாத அர்ப்பணிப்பானது {பக்தியானது} முழுமையாக எழும்.(163) ஒரே நோக்கத்தைக் கொண்டதும், நடைமுறையில் ஒருபோதும் தடுக்கப்பட முடியாததுமான ருத்திரனிடம் கொள்ளும் களங்கமற்ற தூய அர்ப்பணிப்பானது தேவர்களிடம் அரிதாகக் காணப்பட்டாலும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படவில்லை.(164) ருத்திரனின் அருளின் மூலமே மனிதர்களின் இதயங்களில் இத்தகைய அர்ப்பணிப்பு எழுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால், மஹாதேவனுடன் முழுமையாகத் தங்களை அடையாளம் காணும் மனிதர்கள், உயர்ந்த வெற்றியை அடைவதில் வெல்கிறார்கள்.(165)

தன்னை நாடுவோருக்கு அருளை எப்போதும் வழங்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், முழு ஆன்மாவைத் தன்னிடம் செலுத்துவோரைப் பணிவன்புடன் இவ்வுலகத்தில் இருந்து மீட்கிறான்.(166) மறுபிறவியிலிருந்து உயிரினங்களைக் காக்கும் அந்தப் பெருந்தேவனைத் தவிர, பிற தேவர்கள் அனைவரும், மனிதர்களுக்குத் தவங்களைப் போல வேறு ஏதும் பலத்தின் ஊற்றுக்கண் இல்லாததால் அவற்றைத் தொடர்ந்து வீணாக்கச் செய்கின்றனர்.(167) ஆன்ம அமைதியைக் கொண்டவரும், காந்தியில் இந்திரனுக்கு ஒப்பானவருமான தண்டி, விலங்குத் தோல்களை உடுத்தியிருந்தவனும், இருப்பில் உள்ள மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தின் தலைவனுமான அந்தப் பெருந்தேவனை இவ்வாறே துதித்தார்.(168) இந்தத் துதியை பிரம்மனே சுமந்திருந்தான் (தனக்குள் வைத்திருந்தான்). உண்மையில் பிரம்மன் சங்கரன் முன்னிலையிலேயே இதைத் துதித்தான். (பிரம்மத்தை அறிந்தவனாகவும், பிரம்மத்தை அறிந்தோரிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் இருப்பதால்) பிராமணன் நீயே. எனவே, உன்னால் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.(169) இது பாவங்கள் அனைத்தையும் கழுவி தூய்மைப்படுத்தும். இது யோகத்தையும், விடுதலையையும் {முக்தியையும்}, சொர்க்கத்தையும், மனநிறைவையும் கொடுக்கும்.(170)

இந்தத் துதியைக் கொண்டு சிதறாத அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சங்கரனைத் துதிப்பவன், சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளில் அர்ப்பணிப்புள்ளோரின் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(171) ஒரே அர்ப்பணிப்புடன் இந்தத் துதியைக் கொண்டு தினமும் ஒரு வருடம் துதிக்கும் வழிபாட்டாளன் தான் விரும்பும் கதியை அடைவதில் வெல்கிறான்.(172) இந்தத் துதி பெரும் புதிரைக் கொண்டதாகும். இது தொடக்கத்தில் படைப்பாளனான பிரம்மனின் நெஞ்சத்தில் வசித்தது. பிரம்மன் இதைச் சக்ரனுக்குச் சொன்னான். சக்ரன் இதை மிருத்யுவுக்குச் சொன்னான்.(173) மிருத்யு இதை ருத்திரர்களுக்குச் சொன்னான். தண்டி ருத்திரர்களிடம் இருந்தே இதைப் பெற்றார். உண்மையில், தண்டி தமது கடுந்தவங்களுக்கு வெகுமதியாகப் பிரம்மலோகத்தில் இதைப் பெற்றார்.(174) தண்டி இதைச் சுக்கிரனுக்குச் சொன்னார், பிருகு குலச் சுக்கிரன் இதைக் கௌதமருக்குச் சொன்னார். ஓ! மதுவின் வழித்தோன்றலே, கௌதமர் தம் பங்குக்கு இதை வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார்.(175)

மனு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாராயணனுக்கு இதைச் சொன்னான். சாத்தியர்களில் ஒருவனாக எண்ணப்படுபவனும், குறைவில்லா மகிமை கொண்டவனும், சிறப்பு மிக்கவனுமான நாராயணன் இதை யமனுக்குச் சொன்னான்.(176) வைவஸ்வத யமன் இதை நசிகேதனுக்குச் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தவனே, நசிகேதன் இதை மார்க்கண்டேயருக்குச் சொன்னான்.(177) ஓ! ஜனார்த்தனா, என் நோன்புகள் மற்றும் நியமங்களுக்கு வெகுமதியாக நான் இதை மார்க்கண்டேயரிடம் இருந்து பெற்றேன். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, பிறரால் கேட்கப்படாத இந்தத் துதியை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(178) இத்துதி சொர்க்கத்திற்கு வழிவகுக்கும். இது நோய்களை விலக்கி, நீண்ட வாழ்நாளை அளிக்கும். இது {இந்தத் துதி} வேதங்களுக்கு இணக்கமானதும், உயர்ந்த புகழுக்குத் தகுந்ததுமாகும்" {என்றார் உபமன்யு}"[10].

[10] சாந்தி பர்வம் பகுதி 285ல் தக்ஷன் சிவனை ஆயிரத்தெட்டு பெயர்களால் துதித்ததும் சிவ சஹஸ்ர நாமாவளி என்று அழைக்கப்படுகிறது. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் வரும் சிவ சஹஸ்ர நாமாவளி அதனுடன் ஒத்துப் போகிறது. முனிவர் உபமன்யு சொன்ன துதியை யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் நினைவுகூர்கிறான். இதுவும் சிவஸஹஸ்ரநாமாவளி என்றே அழைக்கப்படுகிறது. லிங்க புராணத்திலும் சிவஸஹஸ்ரநாமாவளி இடம்பெற்றிருக்கிறது. அஃது இந்தச் சிவஸஹஸ்ரநாமாவளியோடு ஒத்துப் போகிறது. மஹாபாரத அனுசாசன பர்வம் 17ம் பகுதியில் வரும் இத்துதியே உண்மையில் சிவஸஹஸ்ரநாமாவளியாக அங்கீகரிக்கப்படுகிறது.

கிருஷ்ணன் தொடர்ந்தான், "ஓ! பார்த்தரே, பிரம்மச்சரிய நோன்பை நூற்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, தூய இதயத்துடன் முழுமையாக ஒரு வருடத்திற்கு இந்தத் துதியைத் துதிப்பவன், ஒரு குதிரை வேள்வியின் கனிகளை அடைவதில் வெல்கிறான். தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள் மற்றும் பாம்புகளால் அவனுக்கு {இத்துதியைத் துதிப்பவனுக்கு} எத்தீங்கையும் செய்ய முடியாது" {என்றான் கிருஷ்ணன்}.(179-180)

அநுசாஸனபர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 180

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்