Tuesday, September 20, 2016

யுதிஷ்டிரனின் ஆனந்தக் கண்ணீர்! - துரோண பர்வம் பகுதி – 148

Yudhishthira in tears of joy! | Drona-Parva-Section-148 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 63)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் திரும்பி வந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும்; யுதிஷ்டிரனின் வெற்றிக்காக வாழ்த்திய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் அருளால் வெற்றி கிட்டியதாகக் கூறிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் கிருஷ்ணத் துதி; பீமனையும், சாத்யகியையும் ஆரத்தழுவி, வாழ்த்தி, ஆனந்தக் கண்ணீரை வடித்த யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட பிறகு, கிருஷ்ணன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்று, மகிழ்ச்சியான இதயத்துடன் பின்னவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டான்.(1) மேலும் அவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது வளம் அதிகரிப்பது நற்பேறாலேயே. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது எதிரி {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டான். உமது தம்பி {அர்ஜுனன்} அவனது சபத்தை நிறைவேற்றியது நற்பேறாலேயே” என்றான்.(2)


பகை நகரங்களை அடக்குபவனான கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(3) ஆனந்தக் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனனையும்} தழுவி கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, பிரகாசமானதும், தாமரை போன்றதுமான தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு,(4) வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பணியை நிறைவேற்றிய உங்கள் இருவரையும் நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(5) பாவம் நிறைந்த இழிந்தவனான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. கிருஷ்ணர்களே, பெரும் மகிழ்ச்சியால் என்னை நிறைய வைக்கும் செயலை நற்பேறாலேயே நீங்கள் செய்தீர்கள்.(6) 

நம் எதிரிகள் துன்பக்கடலில் மூழ்கியிருப்பது நற்பேறாலேயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அனைத்து உலகங்களின் தலைவன் {இறைவன்} நீயே. உன்னைத் தங்கள் பாதுகாவலராகக் கொண்டோரால் இந்த மூவுலகிலும் அடைய முடியாத சாதனை எதுவும் இல்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பழங்காலத்தில் தானவர்களை வென்ற இந்திரனைப் போல, உன் அருளால் நாங்கள் எங்கள் எதிரிகளை வெல்வோம்.(7, 8) 

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீ எவரிடம் மனநிறைவு கொள்கிறாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் உலகத்தை வெல்வதோ, மூவுலகங்களை வெல்வதோ நிச்சயம் சாத்தியமே.(9) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ யாரிடம் மனநிறைவு கொண்டுள்ளாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் போரில் தோல்வியையோ எந்தப் பாவத்தையோ அடைய மாட்டார்கள்.(10)

ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனானது உன் அருளாலேயே.(11) அந்த அருளப்பட்டவன் {இந்திரன்}, போர்க்களத்தில் மூவுலகங்களின் அரசுரிமையையும் அடைந்தது உன் அருளாலேயே. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, பின்னவன் {இந்திரன்} இறவா நிலையை அடைந்ததும், ஓ! கிருஷ்ணா, நித்தியமான (அருள்) உலகங்களை அனுபவிப்பதும் உன் அருளாலேயே (12) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் அருளால் உண்டான ஆற்றலைக் கொண்டு ஆயிரக்கணக்கான தைத்தியர்களைக் கொன்ற சக்ரன் {இந்திரன்}, தேவர்களின் தலைமைப் பொறுப்பை அடைந்தான்.(13) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம், ஓ! வீரா {கிருஷ்ணா} அதன் பாதையில் இருந்து நழுவாமல் வேண்டுதல்களிலும், ஹோமங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பது உன் அருளாலேயே.(14) தொடக்கத்தில் இருளில் முழ்கியிருந்த இந்த அண்டம் முழுவதும ஒரே நீர்ப்பரப்பே இருந்தது.(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்த அண்டம் உன் அருளாலேயே வெளிப்பட்டது.

உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே, பரமாத்மா நீயே, மாற்றமில்லாதவன் நீயே.(16) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன்னைக் கண்டவர் எவரும் ஒருபோதும் குழம்புவதில்லை. பரம்பொருள் நீயே, தேவர்களின் தேவன் நீயே, அழிவற்றவன் நீயே.(17) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, உன்னைப் புகலிடமாகக் கொண்டோர் ஒரு போதும் குழம்புவதில்லை. அனைத்து உலகங்களையும் படைப்பவனும், மாற்றமில்லாதவனும், ஆதி அந்தம் இல்லாதவனுமான தெய்வீகமானவன் நீயே.(18) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் அனைத்துச் சிரமங்களையும் கடப்பார்கள். பரமனும் {ஆதி முதல்வனும்}, பழமையானவனும், தெய்வீகமானவனும் {தெய்வீகப் புருஷனும்}, உயர்ந்தவையனைத்திலும் உயர்ந்தவனும் நீயே.(19) பரமனான உன்னை அடைந்தவன் எவனோ, அவன் உயர்ந்த வளத்தை அடைய விதிக்கப்பட்டிருக்கிறான். நான்கு வேதங்களிலும் பாடப்படுபவன் நீயே. நான்கு வேதங்களும் உன்னையே பாடுகின்றன.(20)

சிறகு படைத்த பறவகளின் தலைவன் கருடன்
ஓ! உயர் ஆன்மா கொண்டோனே {கிருஷ்ணா}, உன் உறைவிடத்தை நாடி ஒப்பற்ற வளத்தை நான் அடைவேன். பரம்பொருள் நீயே, உயர்ந்த தேவர்களின் தேவன் நீயே, சிறகு படைத்த உயிரினங்களின் தலைவன் நீயே, மனிதர்கள் அனைவரின் தலைவன் நீயே.(21) 

அனைத்தினுக்கும் உயர்ந்த தலைவன் நீயே. ஓ! இருப்போரில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, தலைவனும், தலைவர்களுக்குத் தலைவன் நீயே. ஓ! மாதவா {கிருஷ்ணா}, வளமே உனதாகட்டும்.(22) 

ஓ! அகன்ற கண்களை உடையவனே, ஓ! அண்ட ஆன்மாவே, அனைத்துப் பொருட்களின் தொடக்கம் நீயே. எவன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நண்பனோ, எவன் தனஞ்சயனின் நன்மையில் ஈடுபடுபவனோ அவன், தனஞ்சயனின் பாதுகாவலனான உன்னையே அடைந்து மகிழ்ச்சியை அடைவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.(23)

இப்படி அவனால் சொல்லப்பட்டவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், பூமியின் தலைவனான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மகிழ்ச்சியாக,(24) “பாவம் நிறைந்த மன்னனான ஜெயத்ரதன், உமது கோபம் எனும் நெருப்பாலேயே எரிக்கப்பட்டான்.(25) ஓ! பலமிக்கவரே, தார்தராஷ்டிரப் படையானது பெரியதாகவும், செருக்கு நிறைந்ததாகவும் இருப்பினும், ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தாக்குதலுக்குள்ளாகியும், கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டு வருகிறது.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உமது கோபத்தின் விளைவாலேயே கௌரவர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். ஓ! வீரரே, கண்களால் மட்டுமே கொன்றுவிடக்கூடியவரான உம்மைக் கோபமூட்டிய தீய மனம் கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, தன் நண்பர்களுடனும், தன் சொந்தங்களுடனும் சேர்ந்து போரில் உயிரை விடப் போகிறான்.

அம்புப் படுக்கையில் பீஷ்மர்
உமது கோபத்தின் விளைவால் முன்பே கொல்லப்பட்டவரும், தேவர்களலேயே தாக்கப்பட்டவரும், குருக்களின் பாட்டனுமான வெல்லப்பட முடியாத பீஷ்மர், இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(27, 28) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உம்மை எதிரியாகக் கொண்டோரால் போரில் வெற்றியடையமுடியாது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, மரணமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.(29) ஓ! எதிரிகளை எரிப்பவரே {யுதிஷ்டிரரே}, எவனிடம் நீர் கோபம் கொள்கிறீரோ, அவன் தன் உயிர், அன்புக்குரியோர், பிள்ளைகள், பல்வேறு வகையான அருள்நிலைகள் ஆகியவற்றை விரைவில் இழப்பான்.(30) ஓ! எதிரிகளை எரிப்பவரே, மன்னர்களின் கடமைகளை நோற்பவரான நீர் கௌரவர்களிடம் கோபம் கொண்டிருக்கிறீர் எனும்போது, அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் மகன்கள், விலங்குகள் மற்றும் சொந்தங்களோடு ஏற்கனவே வீழ்ந்து விட்டனர் என்றே நான் கருதுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(31)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் சிதைக்கப்பட்டவர்களான பீமன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகிய இருவரும் தங்களுக்கு மூத்தவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். வலிமைமிக்க வில்லாளிகளான அவ்விருவரும், பாஞ்சாலர்கள் சூழ கீழே தரையில் அமர்ந்தனர்.(32, 33) அவ்விரு வீரர்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும், வந்திருந்து கூப்பிய கரங்களுடன் இருப்பதையும் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்கள் இருவரையும் வாழ்த்தி,(34) “வீரர்களே, துரோணரே வெல்லப்பட முடியாத முதலையாகவும், ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே} கடும் சுறாவாகவும் உள்ள கடலெனும் (பகைவரின்) துருப்புகளில் இருந்து நீங்கள் இருவரும் உயிரோடு தப்பி வந்தது நற்பேறாலேயே. பூமியின் மன்னர்கள் அனைவரும் (உங்கள் இருவராலும்) வெல்லப்பட்டது நற்பேறாலேயே.(35) வெற்றிகரமானவர்களாக உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே. துரோணரும், வலிமைமிக்கத் தேர்வீரனான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} போரில் வெல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(36)

விகர்ணிகளால் {முள் பதிக்கப்பட்ட கணைகளால்} போரில் கர்ணன் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. மனிதர்களில் காளையரே, உங்கள் இருவராலும் போரில் இருந்து சல்லியன் புறமுதுகிடச் செய்யப்பட்டது நற்பேறாலேயே. (37) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், போரில் நல்ல திறம் கொண்டவர்களுமான நீங்கள் இருவரும், போரில் இருந்து பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வந்ததை நான் காண்பது நற்பேறாலேயே.(38) வீரர்களே, என்னைக் கௌரவிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, போருக்குச் சென்றவர்களான நீங்கள், என் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, கடலெனும் துருப்புகளைக் கடந்து வந்திருப்பதை நான் காண்பது நற்பேறாலேயே.(39) போரில் மகிழ்பவர்கள் நீங்கள். போரில் புறமுதுகிடாதவர்கள் நீங்கள். எனக்கு உயிரைப் போன்றவர்கள் நீங்கள். உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே” என்றான் {யுதிஷ்டிரன்}.(40)

இதைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் புலிகளான அந்த யுயுதானன் {சாத்யகி}, மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் ஆரத் தழுவி கொண்டு ஆனந்தக் கண்ணீரை உதிர்த்தான்.(41) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த பாண்டவப் படையும் உற்சாகமடைந்து மகிழ்ச்சியில் நிறைந்தன. மேலும் அவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்” {என்றான் சஞ்சயன்}.(42)
--------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 148ல்  வரும் மொத்த சுலோகங்கள் 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்