Thursday, May 26, 2016

மரணத்திற்கு வருந்தாதே! - துரோண பர்வம் பகுதி – 053, 054, 055

Don’t grieve for death! | Drona-Parva-Section-053, 054, 055 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 23, 24, 25)

பதிவின் சுருக்கம் : மரண தேவியின் கதையைக் கேட்டு திருப்தியடையாத யுதிஷ்டிரனுக்கு வியாசர் மேலும் ஒரு நிகழ்வைச் சொல்வது; மன்னன் சிருஞ்சயனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற கள்வர்கள்; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன், சிருஞ்சயனுக்கு மன்னன் மருத்தனின் கதையைச் சொன்ன நாரதர்; மரணத்தைக் குறித்து ஏன் வருந்தக்கூடாது என்பதற்குச் சிருஞ்சயனிடம் நாரதர் சொன்ன விளக்கம்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மரணத்தின் {மரணதேவியின்} பிறப்பையும், அவளது விசித்திரமான செயல்பாடுகளையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் வியாசரிடம் பணிவுடன் இந்த வார்த்தைகளைப் பேசினான்.


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “நற்பேறுபெற்ற நாடுகளில், நீதிமிக்கச் செயல்களைச் செய்பவர்களும், ஆற்றலில் இந்திரனுக்கே நிகரானவர்களுமாகப் பல மன்னர்கள் இருந்திருக்கின்றனர். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, வியாசரே}, அரசமுனிகளான அவர்கள் பாவமற்றவர்களாகவும், உண்மையைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். பழங்காலத்தின் அந்த அரச முனிகளால் செய்யப்பட்ட சாதனைகளைக் கனமான வார்த்தைகளால் சொல்லி என்னை ஆறுதலடையச் செய்வீராக. அவர்களால் அளிக்கப்பட்ட வேள்விக் கொடைகள் என்ன? அதைச் செய்தவர்களான அறம்செய்யும் உயர் ஆன்ம அரச முனிகள் யாவர்? ஓ! சிறப்புமிக்கவரே {வியாசரே}, இவையாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்} [1].


[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “பிராம்மணரே! கௌரவம் உள்ளவர்களும், பரிசுத்தமான செய்கையை உடையவர்களும், இந்திரனுக்குச் சமமான பராக்ரமத்தை உடையவர்களுமான எத்தனை ராஜரிஷிகள் முன்பு மிருத்யுவினால் கொல்லப்பட்டனர்? மறுபடியும் என்னை நீர் உண்மையான வார்த்தைகளால் விருத்தியடையும்படி செய்யும். முற்காலத்தில் இருந்த ராஜரிஷிகளுடைய செய்கைகளாலே என்னை ஆறுதலடையும்படி செய்ய வேண்டும். மகாத்மாக்களும், புண்ணியத்தைச் செய்தவர்களுமான ராஜரிஷிகளாலே எவ்வளவு தக்ஷிணைகள் கொடுக்கப்பட்டன? எவைகள் கொடுக்கப்பட்டன? அவற்றை எனக்கு நீ சொல்லவேண்டும்” என்று இருக்கிறது.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சுவித்யன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குச் சிருஞ்சயன் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். முனிவர்களான நாரதரும், பர்வதரும் அவனது நண்பர்களாக இருந்தனர். ஒருநாள், அந்தத் துறவிகள் இருவரும், சிருஞ்சயனைச் சந்திப்பதர்காக அவனது அரண்மனைக்கு வந்தனர். சிருஞ்சயனால் முறையாக வழிபடப்பட்ட அவர்கள் அவனிடம் {சிருஞ்சயனிடம்} மனம்நிறைந்து அவனுடனேயே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம், அந்த இரு துறவிகளுடனும் சிருஞ்சயன் சுகமாக அமர்ந்திருந்த போது, இனிய புன்னகை கொண்ட அவனது அழகிய மகள் அவனிடம் வந்தாள். தன் மகளால் மரியாதையுடன் வணங்கப்பட்ட சிருஞ்சயன், அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டு அவள் விரும்பிய வகையிலேயே முறையான வாழ்த்துகளைச் சொன்னான். அந்தக் கன்னிகையைக் கண்ட பர்வதர் புன்னகையுடன் சிருஞ்சயனிடம், “துருதுரு பார்வையையும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்ட இந்தக் கன்னிகை யாருடைய மகள்? இவள் சூரியனின் ஒளியா? அல்லது அக்னியின் தழலா? அல்லது ஸ்ரீதேவி, ஹ்ரீதேவி, கீர்த்தி, த்ருதி, புஷ்டி, சித்தி ஆகியோரா? அல்லது சோமனின் ஒளியா?” என்று கேட்டார்.

அந்தத் தெய்வீக முனிவர் (பர்வதர்) இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மன்னன் சிருஞ்சயன் {பர்வத முனிவரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே {பர்வதரே}, இந்தப் பெண் எனது மகளாவாள். இவள் என் ஆசிகளை இரந்து கேட்கிறாள்” என்று பதிலுரைத்தான். அப்போது நாரதர் மன்னன் சிருஞ்சயனிடம், “ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, (உனக்கு) பெரும் நன்மையை நீ விரும்பினால், இந்த உன் மகளை மனைவியாக எனக்கு அளிப்பாயாக” என்றார். (முனிவரின் முன்மொழிவால்) மகிழ்ந்த சிருஞ்சயன், நாரதரிடம், “நான் உமக்கு அவளை அளிக்கிறேன்” என்றான்.

இதற்கு, மற்றொரு முனிவரான பர்வதர், நாரதரிடம் கோபத்துடன், “என் இதயத்துக்குள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் காரிகையை, உமது மனைவியாக நீர் கொள்கிறீர். ஓ! பிராமணரே, இதை நீர் செய்ததால், உம் விருப்பப்படி உம்மால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார். இப்படி அவரால் {பர்வதரால்} சொல்லப்பட்ட நாரதர், “கணவனின் {மணமகனின்} இதயம் {மனம்}, (அது சம்பந்தமான) பேச்சு, (கொடுப்பவரின்) சம்மதம், (இருவரின்) பேச்சுகள், நீர் தெளித்துக் கொடுக்கப்படும் உண்மையான தானம், (மணமகளின் கைப்) பற்றுவதற்கு விதிக்கப்பட்டவை (மந்திரங்களை உரைத்தல்) – ஆகிய இந்த அறிகுறிகளே ஒரு கணவனை அமைக்கின்றன என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சடங்கே கூட முழுமையாகாது. ஏழு எட்டுகள் {அடிகள்} வைத்து (ஒரு மணமகள், மணமகனை வலம் வருதல்) இவற்றில் (இவை அனைத்திற்கும் மேலாக) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையில்லாமல் (திருமணம் குறித்த) உமது காரியம் அடையப்பட்டதாகாது. {இவற்றை அறிந்தும்} நீர் சபித்திருக்கிறீர். எனவே, நீரும் என்னைவிட்டுவிட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது [2] என்று பதிலுக்குச் சபித்தார் {நாரதர்}. இப்படி ஒருவரையொருவர் சபித்துக் கொண்ட அந்த முனிவர்கள் இருவரும் தொடர்ந்து அங்கேயே வாழ்ந்தனர்.

[2] வேறொரு பதிப்பில் இது, “மனம், வாக்கும், புத்தி, சம்பாஷணம், சத்தியம், ஜலம், அக்னிகள், பாணிக்ரஹணம், மந்திரங்கள் இவைகளல்லவோ பிரசித்தமான தாரத்தின் லட்சணம்; இந்தத் தாரலட்சணங்களில் பூர்த்தி ஏற்படவில்லை; மனத்தினாலே மாத்திரம் உம்மால் அவள் பார்யையாக எண்ணப்பட்டாள். நீர் அறிந்திருந்தும் என்னை இவ்வாறு சபித்ததனால் நீரும் என்னைவிட்டு ஸ்வர்க்கம் போகக்கூடாது” என்று பிரதி சாபத்தைக் கூறினார்” என்று இருக்கிறது.

அதே வேளையில், ஒரு மகனை (அடைய) விரும்பிய மன்னன் சிருஞ்சயன், சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், தன் சக்தியால் முடிந்தவரை,  உணவும், ஆடைகளும் கவனத்துடன் வழங்கி பிராமணர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வேதங்களைப் படிப்பதில் அர்ப்பணிப்புடையவர்களும், சாத்திரங்களை அவற்றின் பிரிவுகளுடன் முழுவதும் அறிந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், மகனை அடைய விரும்பிய அந்த ஏகாதிபதியிடம் {சிருஞ்சயனிடம்} மனம் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக நாரதரிடம் வந்து, அவரிடம், “இந்த மன்னன் விரும்பியவாறு அவனுக்கு ஒரு மகனைக் கொடுப்பீராக” என்றனர். இப்படி அந்தப் பிராமணர்களால் சொல்லப்பட்ட நாரதர், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். பிறகு, அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்} சிருஞ்சயனிடம், “ஓ! அரசமுனியே {சிருஞ்சயா}, பிராமணர்கள் மனம் நிறைந்து உனக்கு ஒரு மகனை விரும்புகிறார்கள். நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வகையிலான மகனை வரமாகக் கேட்பாயாக” என்றார்.

இப்படி அவரால் சொல்லப்பட்ட அந்த மன்னன், கூப்பிய கரங்களுடன், அனைத்தையும் சாதிப்பவனும், புகழ்பெற்றவனும், மகிமைநிறைந்த சாதனைகளைச் செய்பவனும், பெரும் சக்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் தண்டிக்க இயன்றவனுமான ஒரு மகனைக் கேட்டான். மேலும், அவன் {சிருஞ்சயன்}, அந்தக் குழந்தையின் சிறுநீர், மலம், சளி, வியர்வை ஆகியவை தங்கமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டான். சரியான காலத்தில் அந்த மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் சுவர்ணஷ்டீவின் என்று பூமியில் பெயரிடப்பட்டான் {அழைக்கப்பட்டான்}. மேலும் அந்த வரத்தின் விளைவாக அந்தக் குழந்தை (தன் தந்தையின்) எல்லைகள் அனைத்தையும் மீறி செல்வத்தைப் பெருக்கத் தொடங்கினான். மன்னன் சிருஞ்சயன் தனக்கு விருப்பப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்கத்திலேயே செய்தான். அவனது வீடுகள், சுவர்கள், கோட்டைகள், (அவனது ஆட்சிப்பகுதிக்குள் உள்ள) பிராமணர்கள் அனைவரின் வீடுகள், அவனது படுக்கைகள், வாகனங்கள், தட்டுகள், குடங்கள், குடுவைகள், அவனுக்குச் சொந்தமான இடங்கள், மேலும் அவனது கருவிகள் அனைத்தும், அரண்மனைக்கு உள்ளும் புறமும் இருந்த பாத்திரங்கள் ஆகிய அனைத்தும் தங்கத்தாலேயே செய்யப்பட்டன. அந்த நேரத்தில் அவனது {தங்க} கையிருப்பும் அதிகரித்தது.

இளவரசனைக் குறித்துக் கேள்விப்பட்ட சில கள்வர்கள் ஒன்றுகூடி, அவன் அப்படி {செழிப்பாக} இருப்பதைக் கண்டு, அந்த மன்னனுக்குத் தீங்கிழைக்க முனைந்தனர். அவர்களில் சிலர், “நாம் மன்னனின் மகனையே கைப்பற்றுவோம். அவனே அவனது தந்தையின் தங்கச்சுரங்கமாவான். எனவே, அதை {அவனை} நோக்கிய நாம் முயல்வோம்.“ என்றனர். பிறகு, பேராசையால் தூண்டப்பட்ட அந்தக் கள்வர்கள் மன்னனின் அரண்மனைக்குள் ஊடுருவி, இளவரசன் சுவர்ணஷ்டீவினைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர்.

இப்படி அவனைக் கைப்பற்றிய பிறகு காட்டுக்குத் தூக்கிச் சென்ற அந்த அறிவற்ற மூடர்கள், பேராசையால் உந்தப்பட்டு, அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை அறியாமல், அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அவனை {சுவர்ணஷ்டீவினை} அங்கேயே கொன்றனர். எனினும், அவனிடம் தங்கம் எதையும் அவர்கள் காணவில்லை. இளவரசன் கொல்லப்பட்ட பிறகு, முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தங்கம் அனைத்தும் மறைந்தன. அறியாமை கொண்டவர்களும், அறிவற்றவர்களுமான அந்தக் கள்வர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அவர்கள் அழிந்தனர், அவர்களோடு சேர்ந்து பூமியில் இருந்த அந்த அற்புத இளவரசனும் அழிந்தான். தீச்செயல்களைச் செய்த அம்மனிதர்கள் கற்பனைக்கெட்டாத பயங்கர நரகத்தில் மூழ்கினர்.

முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் துறவியான மன்னன் சிருஞ்சயன், கவலையால் ஆழப் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமான குரலில் அழுது புலம்பத் தொடங்கினான். தன் மகனின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்ட மன்னன் {சிருஞ்சயன்}, இப்படி அழுவதைக் கண்ட தெய்வீக முனிவரான நாரதர், அவன் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஓ! யுதிஷ்டிரா, துயரத்தால் பீடிக்கப்பட்டு, புலன்களை இழந்து இப்படிப்பட்ட பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனை {சிருஞ்சயனை} அணுகி, அந்தச் சிருஞ்சயனிடம் நாரதர் என்ன சொன்னார் என்பதைக் கேட்பாயாக.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “சிருஞ்சயா, பிரம்மத்தை உச்சரிப்பவர்களான நாங்கள் உன் இல்லத்தில் வாழ்ந்தும், உன் விருப்பங்கள் ஈடேறாமல் இறக்கப் போகிறாய். ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகன் மருத்தனும் இறக்க வேண்டியிருந்தது என்று நாம் கேள்வி படுகிறோம். பிருஹஸ்பதியிடம் கோபம்   கொண்ட அவன் {மருத்தன்} சம்வர்த்தரைக் கொண்டு தன் பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த அரசமுனியிடம் {மருத்தனிடம்}, சிறப்பு மிக்கத் தலைவனே (மகாதேவனே), இமயத்தின் தங்கப் பீடபூமியின் வடிவில் செல்வத்தைக் கொடுத்தான். (அந்தச் செல்வத்தைக் கொண்டு) மன்னன் மருத்தன் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

இந்திரனின் துணையுடனும், பிருஹஸ்பதியின் தலைமையிலும் தேவர்களில் பல்வேறு இனங்களான அந்த அண்டப் படைப்பாளர்கள், தன் வேள்விகளை முடித்த அவனிடம் வழக்கமாக வந்து கொண்டிருந்தனர். அவனது வேள்வி மண்டபத்தில் இருந்த விரிப்புகள் மற்றும் அறைகலன்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. உணவை விரும்பிய மறுபிறப்பாள {பிராமண} வர்க்கங்கள் அனைவரும், தங்கள் விருப்பத்துக்கு உகந்த சுத்தமான உணவை மனநிறைவுடன் அவனது வேள்விகளில் உண்டனர். அவனது வேள்விகள் அனைத்திலும், பால், தயிர், தெளிந்த நெய், தேன், பிறவகைகளிலான உணவுகள், உண்ணக்கூடியவை அனைத்திலும் சிறந்தவை, ஆடைகள், விலைமதிப்பின் காரணமாக {தவறாக} விரும்பப்படும் ஆபரணங்கள் ஆகியவை வேதங்களை முழுமையாக அறிந்த பிராமணர்களை மனம்நிறையச் செய்தன. மன்னன் மருத்தனின் அரண்மனையில் தேவர்களே உணவைப் பரிமாறுபவர்களாக இருந்தனர். அவிக்ஷித்தின் மகனான அந்த அரசமுனிக்கு {மருத்தனுக்கு}, விஸ்வதேவர்களே சேவகர்களாக இருந்தனர். தெளிந்த நெய்யால் காணிக்கையளிக்கப்பட்ட சொர்க்கவாசிகள் அவனிடம் மனநிறைவு கொண்டனர். (அதனால்) மனம் நிறைந்த அவர்கள், தங்கள் பங்குக்கு, அந்தப் பலமிக்க ஆட்சியாளனின் {மருத்தனின்} பயிர் செல்வத்தை அபரிமிதமான மழைப்பொழிவால் அதிகரித்தனர்.

அவன் {மருத்தன்} எப்போதும், முனிவர்கள், பிதுர்கள், தேவர்கள் ஆகியோர் நிறைவடையும் வகையில் காணிக்கைகளை அளித்தும், பிரம்மச்சரியம், வேத கல்வி, ஈமக்கடன் சடங்குகள் ஆகியவற்றை நோற்றும் அனைத்து விதமான தானங்களை அளித்தும் அவர்களை மகிழ்வூட்டினான். அவனது படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், கொடுப்பதற்குக் கடினமான அவனது பரந்த தங்கக் கிடங்குகள் ஆகியவையும், உண்மையில் சொல்லப்படாத அவனது செல்வங்களும் தன்னார்வத்துடன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டாதல் சக்ரனே {இந்திரனே} அவனுக்கு நன்மையை விரும்பினான். அவனது குடிகள் {குடிமக்கள்} (அவனால்) மகிழ்ச்சிப்படுத்தப்பட்டனர். எப்போதும் அர்ப்பணிப்போடு {பக்தியோடு} செயல்பட்ட அவன் {மருத்தன்}, (இறுதியில்) தான் அடைந்த அறத் தகுதிகளின் மூலம் அழியாமல் நிலைக்கும் அருள் உலகங்களை அடைந்தான். மன்னன் மருத்தன், தன் பிள்ளைகள், அமைச்சர்கள், மனைவியர், வழித்தோன்றல்கள், சொந்தங்கள் ஆகியோருடனும், இளமையுடனும் ஆயிரம் வருடங்களுக்குத் தன் நாட்டை ஆண்டான். ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களால் (தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றில்) உனக்கும் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீக்கும்} மிக மேன்மையான அத்தகு மன்னனே {மருத்தனே} இறந்தான் எனும்போது, ஓ! சுவைத்யா {சுவித்யனின் மகனே சிருஞ்சயா}, எந்த வேள்வியோ, எந்த வேள்விக் கொடையோ செய்யாத உன் மகனைக் குறித்து வருந்தாதே” என்றார் {நாரதர்}.


“பகுதிகள் 54 மற்றும் 55 ஆகியவை மூலப்பதிப்பில் காணப்படவில்லை. ஒருவேளை இந்தப் பகுதிகளின் உரைகள், வெளியீட்டாளரால் பகுதி 53ல் இணைக்கப்பட்டிருக்கலாம். எனவே இந்தப் பகுதிக்குப் பிறகு, நமது பகுதிஎண் வரிசையானது, பகுதி 56க்குச் செல்கிறது” என Sacredtexts வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நாமும் அடுத்ததாகப் பகுதி 56க்குச் செல்கிறோம்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்