Dharmadarsana ! | Shanti-Parva-Section-264 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 91)
பதிவின் சுருக்கம் : ஜாஜலி உண்மையை அறிந்து கொள்ள, அவர் வளர்த்த பறவைகளை அழைக்குமாறு அவரிடம் சொன்ன துலாதாரன்; கொல்லாமையின் முக்கியத்துவம் குறித்து ஜாஜலியிடம் பறவைகள் பேசிய நீதிமொழி; தர்மதர்சனர் உரைத்த நீதிகள் என பறவைகள் சொன்னது; ஜாஜலியும், துலாதாரனும் சொர்க்கத்தை அடைந்தது...
துலாதாரன், "ஓ! ஜாஜலி, நான் சொன்ன கடமையின் பாதையைப் பின்பற்றிய நல்லோரும், அல்லோரும் யாவர் என்பதை உமது கண்களாலேயே காண்பீராக. அப்போதுதான் உண்மையின் நிலை என்ன என்பதை நீர் முறையாகப் புரிந்து கொள்வீர்.(1) வானத்தில் வட்டமிடும் பறவைகள் பலவற்றைக் காண்பீராக. அவற்றுக்கு மத்தியில் உமது தலையில் வளர்ந்த பறவைகளும், பருந்துகள் பலவும், பிற இனங்களைச் சேர்ந்தவை பலவும் இருக்கின்றன.(2) ஓ! பிராமணரே, அந்தப் பறவைகள் தங்கள் தங்களுக்குரிய கூடுகளில் நுழைய தங்கள் சிறகுகளையும், கால்களையும் சுருக்குவதைப் பாரும். ஓ! மறுபிறப்பாளரே, அவற்றை அழைப்பீராக.(3) உம்மால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்தப் பறவைகள் தங்கள் தந்தையான உம்மீது தாங்கள் கொண்ட அன்பை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓ! ஜாஜலி, நீரே அவற்றின் தந்தை என்பதில் ஐயமில்லை. உமது பிள்ளைகளை அழைப்பீராக" என்றான்".(4)