The encounter between Arjuna and Aswaththaman! | Shalya-Parva-Section-14 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : பதினெட்டாம் நாள் போரில் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஸ்வத்தாமனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன்; பாஞ்சாலத்தின் சுரதனைக் கொன்று அவனது தேரில் ஏறிக் கொண்ட அஸ்வத்தாமன்; தனியொருவனாகப் பலரிடம் போரிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதேவேளையில் அந்தப் போரில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அவனைப் பின் தொடர்ந்து வந்தோரும், வீரமிக்கோருமான திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோரின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்ட அர்ஜுனன்,(1) துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மூன்று கணைகளாலும், பிற வீரர்களில் ஒவ்வொருவரையும் இரண்டு கணைகளாலும் பதிலுக்குத் துளைத்தான்.(2) கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, அந்தக் கணைகள் தங்கள் அங்கங்களின் தைத்திருந்ததன் விளைவால் முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தாலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது துருப்பினர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடாமலிருந்தனர்.(3) துரோணர் மகனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு அவனோடு போரிட்டனர்.(4) ஓ! மன்னா, அவர்களால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகள், விரைவில் அர்ஜுனனின் தேர்த்தட்டை நிறைத்தன.(5)
