Showing posts with label உலூகன். Show all posts
Showing posts with label உலூகன். Show all posts

Tuesday, August 15, 2017

சகுனியையும், உலூகனையும் கொன்ற சகாதேவன்! - சல்லிய பர்வம் பகுதி – 28

Sahadeva killed Sakuni and Uluka! | Shalya-Parva-Section-28 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 28)


பதிவின் சுருக்கம் : சகாதேவனை எதிர்த்து வந்த சகுனி; பீமனோடு மோதிய சகுனியும், உலூகனும்; போர்க்களத்தின் கோரநிலை; சகாதேவனைத் தாக்கிய உலூகன்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; உலூகனின் தலையைக் கொய்த சகாதேவன்; சகுனி ஏவிய ஆயுதங்களைக் கலங்கடித்த சகாதேவன்; சகுனியைக் கொன்ற சகாதேவன்; காண்டீவத்தின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடிய வீரர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவைத் தந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகனான சகுனி, சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) வீரச் சகாதேவனோ, சகுனி தன்னை நோக்கி வேகமாக விரைந்தபோது, பூச்சிக்கூட்டங்களைப் போன்ற எண்ணற்ற வேகமான கணைமாரியை அந்தப் போர்வீரனின் {சகுனியின்} மீது ஏவினான்.(2) அந்த நேரத்தில் உலூகனும் பீமனோடு மோதி, பத்து கணைகளால் அவனைத் துளைத்தான். அதேவேளையில் மூன்று கணைகளால் பீமனைத் துளைத்த சகுனி, ஓ! ஏகாதிபதி, தொண்ணூறால் சகாதேவனை மறைத்தான்.(3) உண்மையில், போரில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள், கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தாலான சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கள் காதுவரை இழுக்கப்பட்ட நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கூரிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(4) அவர்களின் விற்களில் இருந்தும், கரங்களில் இருந்தும் ஏவப்பட்ட அந்தக் கணைமாரிகள், ஓ! ஏகாதிபதி, மேகத்தில் இருந்து பொழியும் அடர்த்தியான மழைப்பொழிவைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(5)

Monday, February 06, 2017

சகுனி மற்றும் உலூகனின் வெற்றி! - கர்ண பர்வம் பகுதி – 25

The Victory of Shakuni and Uluka! | Karna-Parva-Section-25 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுயுத்சுவுக்கும் உலூகனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுயுத்சுவை வென்ற உலூகன்; சுருதகர்மனுக்கும், நகுலனின் மகனான சதானீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனிக்கும் பீமனின் மகனான சுதசோமனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனியின் ஆற்றல்; வாளின் ஆற்றலை வெளிப்படுத்திய சுதசோமன்; தரையில் நின்று போரிட்ட சுதசோமனை வியந்த தேவர்கள்; சுதசோமனின் வாளை வெட்டிய சகுனி; அர்ஜுனன் மகனான சுருதகீர்த்தியின் தேரில் ஏறிக்கொண்ட சுதசோமன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படையை முறியடித்துக் கொண்டிருந்த யுயுத்சுவை எதிர்த்து, “நில், நில்” என்று சொன்னபடியே உலூகன் வேகமாகச் சென்றான்.(1) அப்போது யுயுத்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இந்திரனே} வஜ்ர்த்தால் ஒரு மலையைத் தாக்குவதைப் போல, பெரும் சக்தியுடன் சிறகு படைத்த கூர்முனைக் கணையொன்றால் உலூகனைத் தாக்கினான்.(2) இதனால் சினத்தில் நிறைந்த உலூகன், அந்தப் போரில் உமது மகனின் {யுயுத்சுவின்}[1] வில்லைக் கத்தித்தலை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி, முள்பதித்த கணையொன்றால் {கர்ணியால்} உமது மகனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான்.(3) உடைந்த அந்த வில்லை வீசியெறிந்த யுயுத்சு, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் வேகத்தைக் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்த இளவரசன், அறுபது கணைகளால் உலூகனைத் துளைத்தான். அடுத்ததாக உலூகனின் சாரதியைத் துளைத்த யுயுத்சு, மீண்டும் உலூகனையும் தாகினான்.(5)


[1] திருதராஷ்டிரனுக்கு ஒரு வைசியப் பெண்மணியிடம் மகனாகப் பிறந்தவனாவான். இவன் திருதராஷ்டிரனின் 100 மகன்கள் பட்டியலில் இடம்பெறுபவன் அல்லன். பாண்டவர்கள் இறுதி நெடும்பயணத்தை மேற்கொண்ட போது பரீக்ஷித்தை இந்த யுயுத்சுவின் பாதுகாப்பின் கீழேயே விட்டுச் சென்றனர்.

அப்போது சினத்தால் நிறைந்த உலூகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருபது கணைகளால் யுயுத்சுவைத் துளைத்து, பிறகு தங்கத்தால் ஆன அவனது {யுயுத்சுவின்} கொடிமரத்தையும் வெட்டினான்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்ததும், அழகானதும், தங்கத்தாலானதுமான அந்தக் கொடிமரம் (உலூகனால்) வெட்டப்பட்டு, யுயுத்சுவின் தேருக்கு முன்பாகக் கீழே விழுந்தது.(7) தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்ட யுயுத்சு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து, ஐந்து கணைகளால் உலூகனின் நடுமார்பைத் துளைத்தான்.(8) பிறகு அந்தப் போரில் உலூகன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களிற்சிறந்தவரே, எண்ணெயில் நனைக்கப்பட்ட அகன்ற தலைக் கணை {பல்லம்} ஒன்றால் தன் எதிராளியுடைய சாரதியின் தலையை அறுத்தான்.(9) அடுத்ததாக யுயுத்சுவின் நான்கு குதிரைகளையும் கொன்ற அவன் {உலூகன்}, ஐந்து கணைகளால் அவனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான். பலமிக்க உலூகனால் ஆழமாகத் தாக்கப்பட்ட யுயுத்சு, மற்றொரு தேரில் ஏறினான்.(10) அவனை {யுயுத்சுவைப்} போரில் வென்ற உலாகன், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி வேகமாக முன்னேறி, கூரிய கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(11)

அப்போது உமது மகன் சுருதகர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனைக் கண்கள் இமைப்பதற்காகும் அரைப்பொழுதிற்குள் அச்சமற்ற வகையில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(12) எனினும், ஓ! ஐயா, வலிமைமிக்கத் தேர்வீரனான சதானீகன், குதிரைகளற்ற தன் தேரில் நின்றபடியே சினத்தால் நிறைந்து உமது மகனின் {சுருதகர்மனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(13) அந்தக் கதாயுதமானது, உமது மகனின் தேரை அதன் குதிரைகள் மற்றும் சாரதியுடன் துண்டுகளாகக் குறைத்து, பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்து, அதைத் துளைத்துச் சென்றது.(14) பிறகு, குருக்களின் புகழை அதிகரிப்பவர்களும், தங்கள் தேர்களை இழந்தவர்களும், மோதலில் இருந்து விலகியவர்களுமான அவ்விரு வீரர்களும், ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.(15) அப்போது அச்சத்துக்கு ஆட்பட்ட உமது மகன் விவிம்சுவின் தேரில் ஏறிக் கொண்டான், அதே வேளையில், சதானீகனோ, {யுதிஷ்டிரனின் மகனானப்} பிரதிவிந்தியனின் தேரில் ஏறிக் கொண்டான்.(16)

சினத்தால் நிறைந்த சகுனி, {பீமசேனனின் மகனான} சுதசோமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தாலும், நீர்த்தாரையானது ஒரு மலையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த தவறியதைப் போலப் பின்னவனை {சுதசோமனை} நடுங்கச் செய்வதில் தவறினான்.(17) தன் தந்தையின் {பீமனின்} பெரும் எதிரியைக் கண்ட சுதசோமன், ஓ! பாரதரே, பல்லாயிரம் கணைகாளல் அந்தச் சகுனியை மறைத்தான்.(18) எனினும், துல்லிய இலக்கைக் கொண்ட போர்வீரனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான அந்தச் சகுனி, போரிடும் விருப்பத்தால் இயக்கப்பட்டு, சிறகுகள் படைத்த தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக வெட்டினான்.(19) போரில் தன் கணைகளால் அந்தக் கணைகளைத் தடுத்த சகுனி, சினத்தால் நிறைந்து மூன்று கணைகளால் சுதசோமனைத் தாக்கினான்.(20) அப்போது உமது மைத்துனன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம் மற்றும் சாரதியைத் தன் கணைகளால் நுண்ணியத் துண்டுகளாக வெட்டியதால் பார்வையாளர்கள் உரத்த கூச்சலிட்டனர்.(21) குதிரைகளையும், தேரையும் இழந்தவனும், கொடிமரம் வெட்டப்பட்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி (சுதசோமன்), ஒரு நல்ல வில்லை எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்றான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளை ஏவி அந்தப் போரில் உமது மைத்துனனின் {சகுனியின்} தேரை மறைத்தான்.(23) எனினும் அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்துக்கு ஒப்பான அந்தக் கணைமாரி தன் தேரை நோக்கி வருவதைக் கண்டும் நடுங்காதிருந்தான். மறுபுறம், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் தன் கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் நொறுக்கினான்.(24)

தன் தேரில் இருந்த சகுனியுடன், காலாளாக நின்று போராடும் சுதசோமனின் நம்புதற்கரிய அருஞ்சலைக் கண்டவர்களான அங்கே இருந்த போர்வீரர்களும், ஆகாயத்தில் இருந்த சித்தர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.(25) அப்போது சகுனி, பெரும் வேகத்தைக் கொண்டவையும், கூரியவையும், முற்றிலும் நேரானவையுமான எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} சுதசோமனின் வில்லையும், அவனது {சுதசோமனது} அம்பறாத்தூணிகள் அனைத்தையும் வெட்டினான்.(26) வில்லற்றவனாகத் தேரற்றவனாக ஆன சுதசோமன் கருநெய்தலின் வண்ணம் கொண்டதும், தந்தக் கைப்பிடி கொண்டதுமான வாள் ஒன்றை உருவியுயர்த்தி உரத்த முழக்கம் செய்தான்.(27) தெளிந்த வானின் வண்ணத்தைக் கொண்ட புத்திசாலி சுதசோமனின் அந்த வாள் சுழற்றப்பட்ட போது, அது யமதண்டத்தைப் போல மிக ஆபத்தானதாகச் சகுனியால் கருதப்பட்டது.(28) அந்த வாளைத் தரித்தவனும், திறனும், வலிமையும் கொண்டவனுமான அவன் {சுதசோமன்}, பதினான்கு {14} வகையான உத்திகளை வெளிக்காட்டியபடியே திடீரென அந்த அரங்கில் வட்டமாக {மண்டலகரமாகத்} திரியத் தொடங்கினான்[2].(29) உண்மையில் அவன் {பீமன் மகன் சுதசோமன்} அந்தப் போரில் உயரமாகச் சுழன்றும், பக்கங்களில் உந்தித் தள்ளியும், முன்னோக்கிக் குதித்தும், உயரமாக எம்பிக் குதித்தும், வேகமாக ஓடியும், முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் என இப்படித் திரிந்து கொண்டே அந்த அசைவுகள் {உத்திகள்} அனைத்தையும் வெளிக்காட்டினான்.(30) அப்போது, சுபலனின் அந்த வீரமகன் {சகுனி} தன் எதிரியின் மீது எண்ணற்ற கணைகளை ஏவினாலும், அவை அனைத்தும் தன்னை நோக்கி வந்த போதே அவற்றை அந்தச் சிறந்த வாளால் பின்னவன் {எதிரி சுதசோமன்} வெட்டினான்.(31)

[2] வேறுபதிப்பில் இந்த நிலைகள் பின்வருமாறு சொல்லப்படுகிறது: வட்டமாகச் சுழல்தல் {பிராந்தம்}, நாற்புறத்திலும் வீசுதல் {ஆவித்தம்}, மேலாகச் சுழல்தல் {உத்பிராந்தம்}, நாற்புறத்திலும் மேலாகச் சுழல்தல் {ஆப்லுதம்}, நேராக நீட்டல் {பிரஸ்ருதம்}, துள்ளுதல் {பிலுதம்}, இலக்குகளை அடித்தால் {சம்பாதம்}, நேராக வீசுதல் {சமுதீர்ணம்}, விப்லுதம், ஸ்ருதம் எனப் பல்வேறு விதமான வாள்வீச்சுகளை வெளிப்படுத்தினான் என்று இருக்கிறது.

(இதனால்) சினத்தால் நிறந்த சுபலனின் மகன் {சகுனி}, ஓ! மன்னா, கடும் நஞ்சுகொண்ட பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளை மீண்டும் சுதசோமன் மீது ஏவினான்.(32) கருடனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவனும், தனது திறன் மற்றும் வலிமையின் துணை கொண்டவனுமான சுதசோமன், பெரும் சுறுசுறுப்பை வெளிக்காட்டியபடியே இவற்றையும் வெட்டினான்.(33) அப்போது சகுனி, தன் முன் மண்டலகாரமாகத் திரிந்து கொண்டிருந்தவனும், தன் எதிராளியுமான பின்னவனின் {சுதசோமனின்} அந்தப் பிரகாசமான வாளைப் பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் வெட்டினான்.(34) இவ்வாறு வெட்டப்பட்ட அந்தப் பெரிய வாளானது (அதன் பாதித் துண்டு) பூமியில் விழுந்தது, அதே வேளையில், ஓ! பாரதரே, பாதிவாளானது சுதசோமனின் பிடியிலேயே இருந்தது.(35)

தன் வாள் வெட்டப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதசோமன் ஆறு எட்டுகள் {நடையடிகள்} பின்வாங்கித் தன் பிடியில் இருந்த பாதி வாளைத் தன் எதிரியின் {சகுனியின்} மீது வீசினான்.(36) தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் துண்டு, நாண்கயிற்றுடன் கூடிய சிறப்புமிக்கச் சகுனியின் வில்லை வெட்டி, விரைவாகப் பூமியில் விழுந்தது. அப்போது சுதசோமன் சுருதகீர்த்தியின் பெரிய தேருக்குச் சென்றான். (37,38) உறுதிமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, (வழியில்) பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொன்றபடியே பாண்டவப் படையை நோக்கிச் சென்றான்.(39) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி} அச்சமற்ற வகையில் அந்தப் போரில் திரிவதைக் கண்டு, பாண்டவர்கள் படையின் அந்தப் பகுதியில் உரத்த ஆரவாரம் எழுந்தது.(40) பெரியதும், மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியதும், ஆயுதங்களுடன் கூடியதுமான அந்தப் படைப்பிரிவுகள், சிறப்புமிக்கச் சுபலன் மகனால் {சகுனியால்} முறியடிக்கப்படுவதை மக்கள் கண்டனர்.(41) தேவர்களின் தலைவன் {இந்திரன்} தைத்திய படையை நசுக்குவதைப் போலவே சுபலனின் மகனும் {சகுனியும்} அந்தப் பாண்டவப் படையை அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(42)
---------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 25-ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

Tuesday, July 14, 2015

துரியோதனன் பெற்ற பதில்! - உத்யோக பர்வம் பகுதி 164

The answer received by Duryodhana! | Udyoga Parva - Section 164 | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் சொன்ன வார்த்தைகள்; இறுதியாக மீண்டும் ஒருமுறை யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட உலூகன், யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுத் துரியோதனனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்வது; துச்சாசனன், கர்ணன், சகுனி ஆகியோரை அழைத்த துரியோதனன் படைகளை அணிவகுக்கும்படி ஏவியது; கர்ணனின் கட்டளையின் பேரில் படை அணிவகுக்கப்படுவது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துரியோதனனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, மிகச் சிவந்த கண்களுடன் அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனைக் {உலூகனைக்} கண்டான். மேலும் கேசவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்து, தனது பெரும் கரங்களை உயரத்தூக்கி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "எவன் தனது சொந்த பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைத்து, அவர்களுடன் அச்சமற்றறு போரிடுவானோ அவனே ஆண்மகனாகச் சொல்லப்படுகிறான். எனினும், பிறரின் பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைக்கும் புகழற்ற ஒரு க்ஷத்திரியன், தனது இயலாமையின் விளைவாக, மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான். பிறரின் பலத்தை நம்பி இருக்கும் நீ (ஓ! துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ! மூடா, உனது எதிரிகளை நிந்திக்கிறாய்.


எது நன்மையோ, அதையே இதயப் பூர்வமாகச் செய்பவரும், தனது ஆசைகள் அனைத்ததையும் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரும் அறிவுடையவருமான க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதிர்ந்தவரை (பீஷ்மரை) உனது துருப்புகளின் தலைவராக நிறுவி கொண்டு, நிச்சய மரணத்திற்கு அவரை {பீஷ்மரை} ஆட்படுத்தி, தற்புகழ்ச்சியில் {பிதற்றலில்} நீ ஈடுபடுகிறாய்! ஓ! தீய புரிதல் கொண்டவனே, (இதைச் செய்வதில் இருக்கும்) உனது நோக்கத்தை, ஓ! உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ! திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக!" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக.}

ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, (இங்கிருந்து) பாரதர்களிடம் சென்று, திருதராஷ்டிரர் மகனான துரியோதனனை அணுகி, அர்ஜுனன் சொன்னான் என்று அவனிடம் {துரியோதனனிடம்}, "அப்படியே ஆகட்டும். இந்த இரவு கடந்ததும், கடும் ஆயுத மோதல் ஏற்படப்போகிறது. உண்மையில், தோற்காத வலிமை கொண்டவரும், உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மர், "சிருஞ்சயர்கள் மற்றும் சால்வேயர்களின் படையை நான் கொல்வேன். இதுவே எனது பணியாகட்டும். துரோணரைத் தவிர்த்து இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனவே, பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தை ஊக்குவிக்காதிருப்பாயாக!" என்ற இவ்வார்த்தைகளைக் குருக்களுக்கு மத்தியில் வைத்து {துரியோதனனான} உன்னிடம் சொல்லியிருக்கிறார்!

இதன்காரணமாக, ஓ! துரியோதனா, நீ பாண்டவர்கள் துயரில் மூழ்கிவிட்டார்கள், நாடு நமதே என்று கருதுகிறாய். இதனால் நீ செருக்கால் நிறைந்திருக்கிறாய். எனினும், உன்னிடமே இருக்கும் ஆபத்தை நீ காணவில்லை. எனவே, முதலில் நான் குருக்களில் மூத்தவரான பீஷ்மரை உனது கண்களுக்கு முன்பாகவே கொல்வேன்! (நாளை) சூரியன் முளைக்கையில், தேர்களுடனும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய துருப்புகளின் தலைமையில் நின்று, தனது உறுதிமொழிகளில் உறுதியாய் இருக்கும் உனது படைகளின் தலைவரைக் காப்பாயாக. உனது புகலிடமாக இருக்கும் அவரை {பீஷ்மரை}, உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே, எனது கணைகளால் கீழே வீழ்த்துவேன். நாளை விடிந்ததும், எனது கணைகளால் மூடப்பட்டிருக்கும் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்டு, பிதற்றலில் {தற்புகழ்ச்சியில்} ஈடுபடுவதால் என்ன நடக்கும் என்பதைச் சுயோதனன் {நீ} அறிவான்{ய்}.

ஓ! சுயோதனா {துரியோதனா}, குறுகிய பார்வை கொண்டவனும், அநீதிமிக்கவனும், எப்போதும் விதண்டாவாதம் செய்பவனும், தீய புரிதல் கொண்டவனும், நடத்தையில் கொடூரனுமான உனது தம்பி துச்சாசனனைக் குறித்து, சபைக்கு மத்தியில், கோபத்தில் பீமசேனர் சொன்னது நிறைவேறுவதை வெகுவிரைவில் நீ காண்பாய். மாயை, செருக்கு, கோபம், திமிர்த்தனம், பிதற்றல், இரக்கமற்றத்தனம், சுடு சொற்கள் மற்றும் செயல்கள், நீதியில் ஏற்படும் வெறுப்புணர்வு, பாவம் நிறைந்த தன்மை, அடுத்தவரைத் தவறாகப் பேசுதல், வயதில் முதிர்ந்தோரின் ஆலோசனைகளை மீறுதல், சாய்ந்த பார்வை மற்றும் அனைத்து வகைத் தீமைகளின் பயங்கர விளைவுகளை நீ விரைவில் காண்பாய்.

ஓ! மனிதருள் இழிந்தவனே, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டிருக்கும் நான் கோபப்பட்டால், ஓ! மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும்? பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ! சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, இரண்டாம் முறை நான் சூளுரைக்கமாட்டேன் என்றும் அவனிடம் சொல்வாயாக. இவை யாவும் நடைந்தேறும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்", என்றான் {அர்ஜுனன்}

{பிறகு, யுதிஷ்டிரன் உலூகனிடம்} [1], "ஓ! உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ! ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக! பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல? ஓ! ஐயா, அதற்காகவே நான் உன்னிடம் வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கேட்டேன்! ஓ! தீய புரிதல் கொண்டவனே {துரியோதனா}, உன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய பேரிடரை நீ ஏன் காணாமல் இருக்கிறாய்? காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக!" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனக்குத் தீங்கானதையே எப்போதும் செய்யும் அந்தக் குரு இளவரசனிடம் {துரியோதனனிடம்}, "உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன; அவற்றின் பொருளும் புரிந்து கொள்ளப்பட்டது. உன் விருப்பப்படியே {அனைத்தும்} நடக்கட்டும்" என்று (இந்த வார்த்தைகளையும்) சொல்வாயாக" {என்று [உலூகனிடம்] சொன்னான் [யுதிஷ்டிரன்]}.

[1] கங்குலியில் இங்கே அர்ஜுனன் தனது பேச்சைத் தொடர்ந்து செல்வதாகக் காணப்படுகிறது. ஆனால் வேறு பதிப்புகளில் யுதிஷ்டிரன் பேசுவதாக வருகிறது. கங்குலியில் கூட அடுத்து தொடர்ந்து வரும் சொற்கள் யுதிஷ்டிரனுக்கே மிகவும் பொருந்துகின்றன. எனவே, இங்கே கங்குலியில் இருந்து நாம் மாறுபட்டு யுதிஷ்டிரன் பேசுவதாகவே கொள்கிறோம். அதுவே சரியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! மன்னனின் மகனே {திருதராஷ்டிரரே}, பிறகு, பீமசேனன் மீண்டுமொருமுறை இவ்வார்த்தைகளைச் சொன்னான். பீமன் {உலூகனிடம்}, "ஓ! உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக.  {பீமன் துரியோதனனிடம்}, "ஓ! மனித வகையில் இழிந்தவனே {துரியோதனா}, கழுகின் வயிற்றிலோ {கழுகுக்கு இரையாகவோ}, ஹஸ்தினாபுரத்திலோ நீ வசிக்க வேண்டியிருக்கும். சபைக்கு மத்தியில் ஏற்ற உறுதி மொழியை நான் நிறைவேற்றப்போவது நிச்சயம்.

போரில் துச்சாசனனைக் கொன்று, அவனது ஆக்கை இரத்தத்தைக் குடிப்பேன் என்று நான் உண்மையின் {சத்தியத்தின்} பேரில் உறுதியேற்கிறேன். உனது (மற்ற) தம்பிகளையும் கொல்லும் நான், உனது தொடைகளையும் நொறுக்குவேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன்!! மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ! சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன்!" என்று {உலூகனிடம்} சொன்னான் {பீமசேனன்}.

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {நகுலன் உலூகனிடம்} "ஓ உலூகா, திருதராஷ்டிரர் மகனும், குரு குலத்தோனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும், அவற்றின் பொருளும் கேட்கப்பட்டன என்றும், {நகுலன் துரியோதனனிடம்} "ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீ எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நான் செய்வேன்" என்றும் சொல்வாயாக" என்றான் {நகுலன்}.

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகாதேவனும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான். {சகாதேவன் > உலூகனிடம்/துரியோதனனிடம்} "ஓ! சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும்! ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, எங்கள் துன்பங்களைக் கண்டு நீ எப்படி இப்போது இன்பத்தில் பிதற்றுகிறாயோ {தற்புகழ்ச்சி பேசுகிறாயோ}, அப்படியே உனது பிள்ளைகள், சொந்தங்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றான் {சகாதேவன்}.

வயதால் மதிக்கத்தக்க விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும் உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். "அறம் சார்ந்த ஒரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதும் எங்கள் விருப்பமே! எனினும், நாங்கள் அடிமைகளா, எஜமானர்களா என்பதும், யார் ஆண்மை உள்ளவன் என்பதும் நாளை தெரிந்துவிடும்" என்றனர்.

அவர்களுக்குப் பின் சிகண்டி இந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். {சிகண்டி > உலூகனிடம்/ துரியோதனனிடம்}, "பாவ நிறைவுக்கு எப்போதும் அடிமையாக இருக்கும் மன்னன் துரியோதனனிடம் நீ இவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். "ஓ! மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக! போரில் வெற்றி உறுதி என்று யாரை நம்பி நீ நினைக்கிறாயோ, அந்த உனது பாட்டனை {பீஷ்மரை}, அவரது தேரில் வைத்தே நான் கொல்வேன். பீஷ்மரின் அழிவுக்காகவே உயர் ஆன்ம படைப்பாளனால் {பிரம்மனால்} நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் பீஷ்மரை உறுதியாகக் கொல்வேன்" என்றான் {சிகண்டி}.

இதன் பிறகு, திருஷ்டத்யும்னனும், சூதாடி மகனான உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {திருஷ்டத்யும்னன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} "இளவரசன் சுயோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. "துரோணரை, அவரது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு சேர்த்து நான் கொல்வேன். எவனும் எப்போதும் செய்யாத செயலை நான் செய்வேன்" என்று {உலூகனிடம்} சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.

மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் ஒருமுறை கருணை நிறைந்த இந்த உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னான், {யுதிஷ்டிரன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} "ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ! உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ! ஐயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. நாங்களும் உனது உறவினர்களே" என்றான் {யுதிஷ்டிரன்}.

பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட உலூகன், அங்கிருந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகன், தான் கேட்டதனைத்தையும் கவனமாக மனதில் தாங்கி, அவன் {உலூகன்} எங்கிருந்து வந்தானோ, அந்த இடத்திற்கே திரும்பினான். அங்கே வந்த அவன் {உலூகன்}, அர்ஜுனன் குற்றஞ்சாட்டிய அனைத்தையும் பழிவுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் முழுமையாகச் சொன்னான். ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, அவன் {உலூகன்},  மாறாப்பற்றுடன் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், விராடன், துருபதன், ஆகியோரது வார்த்தைகளையும், சகாதேவன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரது வார்த்தைகளையும், (அதன் தொடர்ச்சியாக) கேசவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பேசப்பட்ட வார்த்தைகளையும் சொன்னான்.

அந்தச் சூதாடி மகனின் {சகுனி மகன் உலூகனின்} வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான துரியோதனன், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோரை அழைத்து, அவர்களது துருப்புகளையும், அவர்களது கூட்டாளிகளின் துருப்புகளையும், (கூடியிருக்கும்) மன்னர்கள் அனைவரையும், பிரிவுகளாக அணிவகுத்து, சூரிய உதயத்துக்கு முன் {அடுத்த நாள்} போருக்குத் தயாராக இருக்கும்படி செய்யக் கட்டளையிட்டான். பிறகு கர்ணனால் அறிவுறுத்தப்பட்ட தூதர்கள், தங்கள் தேர்களிலும், ஒட்டகங்களிலும், பெண் குதிரைகளிலும், பெரும் வேகம் கொண்ட நல்ல குதிரைகளிலும் விரைந்து ஏறி, முகாம்களின் ஊடாக விரைந்து சவாரி செய்தனர். "நாளை சூரிய உதயத்திற்கு முன் (உங்களை) அணிவகுத்துக் கொள்ளுங்கள்" என்ற கர்ணனின் கட்டளையால் அவர்கள் {துருப்புகளும் மன்னர்களும்} வரிசையாக அணிவகுத்தனர்." என்றான் {சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.


Monday, July 13, 2015

சகுனியின் மகன் உலூகன்! - உத்யோக பர்வம் பகுதி 163

Uluka, the son of Sakuni! | Udyoga Parva - Section 163 | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்னனதைத் திரும்பத் திரும்பச் சொன்ன உலூகன் பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டியது; பீமசேனனன் தனது உறுதிமொழிகளையும் ஆணைகளையும் நினைவூட்டி துரியோதனனுக்கு உலூகன் மூலம் மறுமொழி கூறியது; உலூகனையும், உலூகனின் தந்தை சகுனியையும் தானே கொல்வதாகச் சகாதேவன் சூளுரைப்பது; அர்ஜுனன், யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் உலூகன் மூலம் துரியோதனனுக்கு மறுமொழி சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போல இருந்த அர்ஜுனனை தனது சொல்லடிகளால் மேலும் தூண்டும்வகையில், தான் பேசியதை மீண்டும் பேசினான் உலூகன். இதுபோன்று திரும்பத் திரும்பச் சொல்லி போதுமான அளவுக்குச் சினமூட்டப்பட்டிருந்த பாண்டவர்கள், இவ்வார்த்தைகளை (இரண்டாம் முறையாகக்) கேட்டாலும், அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனுடைய [1] {உலூகனுடைய} நிந்தனைகளைக் கேட்டு, தங்கள் பொறுமையை மீறும் வகையில் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் {தங்கள் இருக்கைகளில் இருந்து} எழுந்து, தங்கள் கரங்களை நீட்டினார்கள் {உதறினார்கள்}. கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல இருந்த அவர்கள், தங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் பார்வையை வீசத் தொடங்கினர்.

[1] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.

கீழ்நோக்கித் தனது முகத்தை வைத்திருந்த பீமசேனன், ஒரு பாம்பைப் போல கடுமையாக மூச்சுவிட்டபடி, இரத்தச் சிவப்புடைய தனது கடைவிழிகளால் கேசவனை {கிருஷ்ணனை} நோக்கி, அவனைச் {கிருஷ்ணனைச்} சாய்வாகப் பார்க்க ஆரம்பித்தான். அந்த வாயுத் தேவனின் மகன் {பீமன்} பெரிதும் பாதிக்கப்பட்டு, கோபத்தால் மிகவும் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "நொடியும் தாமதிக்காமல் இங்கிருந்து சென்றுவிடு. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, "உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன. அதன் பொருளும் உணரப்பட்டது. நீ விரும்பியது நடைபெறட்டும்" என்ற இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.

ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பெரும் அறிவுடைய யுதிஷ்டிரனை மீண்டும் ஒருமுறை பார்த்தான். பிறகு, சிருஞ்சயர்கள், பெரும்புகழுடைய கிருஷ்ணன், தனது மகன்களுடன் கூடிய துருபதன், விராடன் மற்றும் (அங்குக் கூடியிருந்த) மன்னர்கள் அனைவருக்கும் மத்தியிலும், முன்னிலையிலும், கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்பைக் குச்சியால் எரிச்சலூட்டுவது போல, அர்ஜுனனிடம் அதே வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சொன்ன உலூகன், மீண்டும் அவனை {அர்ஜுனனைத்} தூண்டினான். பிறகு அவன் {உலூகன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் அனைவரிடமும் துரியோதனன் தனக்கு அறிவுறுத்தியபடியே சொன்னான். உலூகனால் உச்சரிக்கப்பட்ட அந்தக் கடுமையான மற்றும் ஏற்கத்தகாத வார்த்தைகளைக் கேட்ட பார்த்தன் {அர்ஜுனன்} மிகவும் கலங்கி, தனது நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} இந்நிலையில் கண்ட அந்த ஏகாதிபதிகளின் சபையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனுக்கும், உயர் ஆன்ம பார்த்தனும் {அர்ஜுனனுக்கும்} நேர்ந்த அவமதிப்பைக் கண்ட பாண்டவர்களின் தேர் வீரர்கள் அனைவரும் பெரிதும் கலங்கினர். அவர்கள் பெரும் மனோ உறுதி கொண்டவர்களாக இருப்பினும், அந்த மனிதர்களில் புலிகள் கோபத்தில் எரியத் {எரிச்சலடையத்} தொடங்கினர். திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, மன்னன் திருஷ்டகேது, பெரும் ஆற்றல் கொண்ட பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து குதித்தெழுந்தனர். கோபத்தால் அவர்களது கண்கள் சிவந்திருந்தன. சிவந்த சந்தனக் குழம்பாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அழகிய கரங்களை அவர்கள் உதறிக் கொண்டார்கள்.

பிறகு, குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்}, அவர்களது உடல் அசைவுகளையும், இதயங்களையும் புரிந்து கொண்டு, தனது இருக்கையில் இருந்து எழும்பினான். தனது பற்களைக் கடித்து, தனது கடைவாயை நாவால் நக்கி, கோபத்தால் எரிந்து, தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, தனது கண்களைக் கடும் சிவப்பாக்கி,  {பீமன்} உலூகனிடம், "அறியா மூடா {உலூகா}, நாங்கள் ஏதோ அறிவாற்றலற்ற பேதையர் கூட்டம் என்று நினைத்து எங்களைத் தூண்டும் நோக்கோடு துரியோதனனால் சொல்லப்பட்ட உனது வார்த்தைகள் அனைத்தும் {எங்களால்} கேட்கப்பட்டன! இப்போது நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, {கௌரவர்களிடம் சென்று}, சூதனின் மகனும் {கர்ணனும்}, தீய இதயம் படைத்த சகுனியும் கேட்டுக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் மத்தியில் அணுக முடியாதபடி இருக்கும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} திரும்பச் {இவ்வார்த்தைகளைச்} சொல்வாயாக.

{பீமன், துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம்} "நாங்கள் எப்போதும் எங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனை} மனநிறைவு கொள்ளச் செய்யவே முயல்கிறோம்! ஓ! தீய நடத்தை கொண்டவனே {துரியோதனா}, இதற்காகவே நாங்கள் உனது செயல்களைப் பொறுத்தோம். இதை உனக்குக் கிடைத்த உயர்ந்த நற்பேறாக நீ கருதவில்லையா? பெரும் புத்திக்கூர்மையுடையவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரர், நமது குலத்தின் நன்மைக்காக மட்டுமே, சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ரிஷிகேசனை {கிருஷ்ணனை} குருக்களிடம் அனுப்பி வைத்தார். விதியால் உந்தப்பட்ட நீயோ யமனுலகு செல்ல விரும்புகிறாய் என்பதில் ஐயமில்லை. வா, எங்களிடம் போரிடுவாயாக. எப்படியிருப்பினும், நாளை அது நிச்சயம் நடக்கும்!

உண்மையில், நான் உனது சகோதரர்களுடன் சேர்த்து உன்னைக் கொல்வதாகவே உறுதியேற்றிருக்கிறேன். ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும்! வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது! யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி! கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன்! க்ஷத்திரிய சபைக்கு மத்தியில் நான் சொன்னவை நிச்சயம் உண்மையாகும். இஃது என் ஆன்மா மீது ஆணை" என்றான் {பீமன்}.

பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த சகாதேவனும், கோபத்தால் கண்கள் சிவந்து, (கூடியிருந்த) துருப்புகளுக்கு மத்தியில் பெருமை மிக்க வீரனொருவனுக்கு உரித்தான வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {சகாதேவன் உலூகனிடம்}, "ஓ! பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக! {உனது தந்தையிடம்}, "உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது! பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்" என்று சொல்வாயாக. ஓ! உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன்!" என்றான் {சகாதேவன்}.

பீமன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரின் சொற்களைக் கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, புன்னகைத்துக் கொண்டே பீமனிடம், "ஓ! பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது! அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள்! ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீமரே}, உமது கடுமொழிகளுக்கு உலூகன் தகுந்தவனல்ல. தூதர்களிடம் என்ன தவறு இருக்கிறது? (சொல்ல வேண்டும்) என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்" என்றான் {அர்ஜுனன்}.

பயங்கர ஆற்றல் கொண்ட பீமனிடம் இப்படிப் பேசிய அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பிறகு, வீரமிக்கத் தனது கூட்டாளிகளிடமும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான நலன்விரும்பிகளிடமும், "வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, குறிப்பாக என்னையும் பழித்துத் திருதராஷ்டிரரின் பாவம் நிறைந்த மகன் {துரியோதனன்} சொன்ன வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்! அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள்! ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை! உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} "நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன்! ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள்!" என்றான் {அர்ஜுனன்}.

இதைக்கேட்ட மன்னர்களில் சிறந்தோர் அனைவரும் அந்த மறுமொழியில் உள்ள புத்திக்கூர்மையால் ஆச்சரியப்பட்டுத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பாராட்டினார்கள். பிறகு, அந்த மன்னர்கள் அனைவரிடமும் அவர்களது வயதுக்கும், தகுதிக்கும் ஏற்றபடி மென்மையாகப் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இறுதியாக, துரியோதனனிடம் கொண்டு செல்ல வேண்டிய வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். மேலும் யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, "நல்ல மன்னன் எவனும் அவமதிப்பைப் பொறுக்கலாகாது. இவ்வளவு நீண்ட நேரம் நீ சொன்னதைக் கேட்ட நான், இப்போது எனது மறுமொழி என்ன என்று உன்னிடம் சொல்லப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம், "ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான யுதிஷ்டிரன், கோபத்தால் கண்கள் மிகச் சிவந்து, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, தனது நாவால் தன் கடைவாயை நக்கி, கோபம் பெருகி, தனது கண்களை ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீதும், தனது தம்பிகள் மீதும் செலுத்தியபடி, மென்மை, ஆவேசம் ஆகிய இரண்டும் நிறைந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான்.

தனது பெரும் கரங்களை வீசி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "ஓ! உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. "ஓ! பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய்! ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில், எவன் தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி, தனது ஆற்றலை வெளிப்படுத்தி, தனது எதிரிகளை (போருக்கு) அழைத்து, தனது வார்த்தைகளை நிறைவேற்றுகிறானோ, அவனே ஆண்மையுள்ளவன்! ஓ! பாவம்நிறைந்த இழிந்தவனே, க்ஷத்திரியனாக இருப்பாயாக. எங்களைப் போருக்கு அழைப்பாயாக!

ஓ! உனது குலத்தில் புகழற்றவனே, நாங்கள் மரியாதை வைத்திருக்கும் பிறரை உனக்கு முன்னே விட்டு, போர் செய்யாதே. ஓ! கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக! அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக! பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான்! எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய்! பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய்? {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}" என்று {உலூகனிடம்} சொன்னான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {உலூகனிடம்}, "ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனது வார்த்தைகளையும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொல்வாயாக. "நாளை விடிந்ததும் போர் நடக்கப் போகிறது. ஓ! தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக! ஓ! மூடா, பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக மட்டுமே செயல்படத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} போரிட மாட்டான் என்று நினைத்து நீ அச்சமற்று இருக்கிறாய். எனினும், அஃது ஒருக்கணம் கூட நிலைக்காது. எனது கோபம் தூண்டப்பட்டால், வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல, நான் (உன்னால் கூட்டப்பட்டிருக்கும்) மன்னர்கள் அனைவரையும் எரித்துவிடுவேன்.

எனினும், யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில், புலன்களை முழுமையாக அடக்கியவனும், தனியாகப் போரிடப் போகிறவனுமான உயர் ஆன்ம பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக மட்டும் எனது பணிகளைச் செய்வேன். மூவுலகங்களின் எல்லைகளுக்கு அப்பால் நீ பறந்து சென்றாலும், பூமியின் ஆழங்களுக்குள் நீ மூழ்கிப் போனாலும், அந்த இடங்களில் எல்லாம் நீ அர்ஜுனனின் தேரை நாளை காலையில் காண்பாய். பீமனின் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டது என்று நீ நினைக்கிறாய். ஆனால் துச்சாசனனின் இரத்தம் ஏற்கனவே குடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவாயாக. என்னதான் நீ குறுக்கான, மாறுபாடான வார்த்தைகளைப் பேசினாலும், பார்த்தனோ {அர்ஜுனனோ}, மன்னன் யுதிஷ்டிரரோ, பீமசேனனோ, இரட்டையர்களோ உன்னைத் துரும்பாகவும் மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}" என்று {உலூகனிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}."


Sunday, July 12, 2015

உலூகன் தூது! - உத்யோக பர்வம் பகுதி 162

Uluka's emissary! | Udyoga Parva - Section 162 | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் தூது சென்ற உலூகன்; துரியோதனனின் பேச்சுச் சொல்லப் போகும் தன்னிடம் கோபமடைய வேண்டாம் என்று யுதிஷ்டிரனிடம் உலூகன் வேண்டுவது; யுதிஷ்டிரன் உலூகனுக்குத் துணிவூட்டுவது; துரியோதனன் சொன்ன யாவையும் உலூகன் யுதிஷ்டிரனிடமும், அர்ஜுனனிடமும் சொல்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டவ முகாமை அடைந்த அந்தச் சூதாடியின் மகன் (உலூகன்), பாண்டவர்கள் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டு, யுதிஷ்டிரனிடம், "தூதர்கள் சொல்வதை நீர் அறிவீர்! எனவே, நான் என்ன சொல்ல வேண்டும் என்று துரியோதனர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறாரோ, அவ்வார்த்தைகளை மீண்டும் நான் சொல்லும்போது என்னிடம் கோபம் கொள்வது உமக்குத் தகாது" என்றான்.

இதைக் கேட்ட யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, "ஓ! உலூகா அஞ்சாதே! வரையறுக்கப்பட்ட {தொலைநோக்கற்ற} பார்வை கொண்டவனும், பேராசைக்காரனுமான துரியோதனனின் கருத்துகள் என்ன என்பதை எந்தக் கவலையும் இல்லாமல் எங்களுக்குச் சொல்வாயாக!" என்றான். பிறகு, ஒப்பற்றவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், பெரும்புகழ் கொண்ட கிருஷ்ணன், தனது மகன்களோடு இருந்த துருபதன், விராடன் மற்றும் ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் உலூகன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.


உலூகன் {யுதிஷ்டிரனிடம்}, "குரு வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், உயர் ஆன்மா கொண்ட மன்னர் துரியோதனர் உங்களுக்குச் சொல்லி அனுப்பியது இதுவே. ஓ! யுதிஷ்டிரரே அந்த வார்த்தைகளைக் கேளும்!"

"{துரியோதனர் சொன்னார்}, பகடையில் நீ வீழ்த்தப்பட்டாய். கிருஷ்ணையும் சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவன் இதற்குக் கோபப்படுவதே நியாயம். பனிரெண்டு {12} வருடங்களாக நீங்கள் வீட்டைவிட்டுக் காட்டுக்குத் துரத்தப்பட்டிருந்தீர்கள். முழுமையாக ஒரு வருடம் விராடனுக்குச் சேவை செய்தே நீங்கள் வாழ்ந்தீர்கள். கோபத்துக்குக் காரணமாக இருக்கும் வனவாசம் மற்றும் கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகியவற்றை நினைவுகூர்ந்து, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஆண்மையுடன் இருப்பாயாக!

ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பலவீனனாக இருப்பினும் பீமன் ஒரு உறுதிமொழியை ஏற்றான்! அவனால் {பீமனால்} முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கட்டும்! உனது ஆயுதங்கள் முறையாக வழிபடப்பட்டு, அதன் தலைமை தெய்வங்கள் {மானசீகமாக} எழுப்பப்பட்டுவிட்டன! குருக்ஷேத்திரக் களமோ புழுதியற்று இருக்கிறது. சாலைகள் சமமாக இருக்கின்றன. உனது குதிரைகள் நன்கு ஊட்டப்பட்டிருக்கின்றன. எனவே, கேசவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்டு நாளை போரில் ஈடுபடுவாயாக!

பீஷ்மரைப் போரில் இன்னும் அணுகாமல், தற்புகழ்ச்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? கந்தமாதன மலைகளில் தான் ஏறப்போவதைக் குறித்துத் தற்புகழ்ச்சி பேசும் ஒரு மூடனைப் போல, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஒப்பற்றவனான சூத மகனையோ (கர்ணனையோ), வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} இணையாக இருப்பவரையோ {துரோணரையோ} போரில் வீழ்த்தாமல், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஆட்சியை ஏன் நீ விரும்புகிறாய்?

வேதங்கள், வில், ஆகிய இரண்டிலும் ஆசானாக இருப்பவர் {துரோணர்}, கல்வியில் அந்த இரு கிளைகளின் எல்லைகளை அடைந்தவராவார். படைகளின் தலைவரும், கலங்கடிக்கப்பட முடியாதவரும், படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், பலத்தில் எந்தக் குறைவையும் அடையாதவருமான ஒப்பற்ற துரோணரை வீழ்த்த நீ வீணாக விரும்புகிறாய்.

காற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை! எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையில் நடைபெற்றால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தலைகீழாகும். உயிரை விரும்பும் எவனும், யானையின் முதுகிலோ, குதிரையிலோ, தேரிலோ இருந்து அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவரிடம் {துரோணரிடம்} போரிட்டால் (பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும்) அவன் {எதிர்ப்பவன்} வீடு திரும்ப முடியுமா? தன் கால்களால் பூமியில் நடக்கும் எந்த உயிரினம்தான் தான், துரோணர் மற்றும் பீஷ்மரால் தாக்கப்பட்டும், அவர்களின் கணைகளால் துளைக்கப்பட்டும், போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்?

தேவர்களின் படைகளைப் போன்று இருப்பதும், தேவர்களால் காக்கப்படும் சொர்க்கத்தைப் போல, இந்த மன்னர்களால் காக்கப்படுவதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களால் காக்கப்படுவதும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்}, மற்றும் உண்மையில் போருக்குத் தயாராக இருக்கும் பல நாட்டவரால் நிரம்பியிருப்பதும், பெருகி வரும் அலை நிறைந்த கங்கையைப் போலக் கடக்க முடியாததும், கூடியிருக்கும் ஏகாதிபதிகளுக்குச் சொந்தமானதுமான இந்தப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்? ஓ! சிறுமதி படைத்த மூடா {யுதிஷ்டிரா}, எனது யானைப் படைக்கு மத்தியில் நிலைத்திருக்கும் என்னிடம் நீ எப்படிப் போரிடப் போகிறாய்?" என்று {துரியோதனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம்} சொன்னான் {உலூகன்}.

தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன உலூகன், ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நோக்கித் தனது முகத்தைத் திருப்பி, அவனிடம் {உலூகன் அர்ஜுனனிடம்}, "ஓ! அர்ஜுனா, தற்பெருமை பேசாமால் {பிதற்றாமல்} போரிடுவாயாக! நீ ஏன் இவ்வளவு தற்பெருமை பேசுகிறாய்? செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமே வெற்றி விளையும். பிதற்றலால் ஒரு போர் வெல்லப்படுவதில்லை. கொக்கரிப்புகளின் விளைவால், இவ்வுலகில் செயல்கள் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான்? நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதையும் நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.

பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும். இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பகடையில் வெல்லப்பட்டு நீ அடிமையானபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று? ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று?

கதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால் விடுதலை} அடைந்தீர்கள். அடிமைத்தழையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் நான் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே. ஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போது பார்த்தன் (சில காலத்திற்கு) {கூந்தலில்} பின்னலைத் தரிக்கவில்லையா? விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே)!

பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைப் பின்னலாகக் கட்டிக் கொண்ட நீ {அர்ஜுனா} பெண்களுக்கு ஆடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா? க்ஷத்திரியர்கள் எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனையை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னிடம் அச்சங்கொண்டோ, ஓ! பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன்.

கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக! வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.வீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் துளைப்பதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.

என் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனைப் {கிருபரைப்} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் சிறு மீனாகவும், பிருகத்பலனை அதன் அலைகளாகவும், சோமதத்தனை அதன் திமிங்கலமாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட பலமாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், ஜெயத்ரதனை (நீருக்கடியில் உள்ள) அதன் பாறையாகவும் {மலையாகவும்}, புருமித்ரனை அதன் ஆழமாகவும், துர்மார்ஷணனை அதன் நீராகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.

ஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கப் போகும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, உனது இதயத்தை வருத்தம் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது" என்றான் {என்று துரியோதனன் சொன்னதாக அர்ஜுனனிடம் உலூகன் சொன்னான்}.


Friday, July 10, 2015

துரியோதனன் சொன்ன பூனைக்கதை! - உத்யோக பர்வம் பகுதி 161அ

A cat story told by Duryodhana! | Udyoga Parva - Section 161a | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோருடன் ஆலோசித்த துரியோதனன், சூதாடியின் மகனான உலூகனை வரவழைத்து, பாண்டவர்களிடம் செல்லுமாறு அவனைப் பணித்தது; யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியசவற்றை உலூகனிடம் துரியோதனன் சொன்னது; யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு ஒரு பூனைக் கதையை உலூகனிடம் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹிரண்யவதியின் {ஆற்றின்} அருகில் உயர் ஆன்ம பாண்டவர்கள் முகாமிட்டதும், கௌரவர்களும் தங்கள் முகாம்களை நிறுவிக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், தனது துருப்புகளைப் பலமாக நிறுத்தினான். (தன் தரப்பில் இருந்த) மன்னர்கள் அனைவருக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்தினான். போர் வீரர்களின் பாதுகாப்புக்காகக் காவல் படைகளையும், சோதனைச் சாவடிகளையும் அமைத்தான். பிறகு, மனிதர்களின் ஆட்சியாளர்களான கர்ணன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோரை அங்கே வரவழைத்து, அவர்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (முதலில்) கர்ணனிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (அடுத்ததாக) கர்ணனுடன் சேர்த்து, தனது தம்பி துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடனும் கூட்டாக ஆலோசித்தான். பிறகு, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உலூகனைத் தனது முன்னிலையில் தனிமையில் அழைத்து அவனிடம் {உலூகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன் உலூகனிடம்}, "ஓ! உலூகா, சூதாடியின் மகனே {கைதவ்யா} {உலூகா}, பாண்டவர்களிடமும், சோமகர்களிடமும் நீ செல்வாயாக. அங்கே சென்று, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், (யுதிஷ்டிரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக.

{யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன்} "குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பயங்கரப் போர், இறுதியில் வந்தேவிட்டது. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உனது தம்பிகளுடன் கூடிய நீ ஆழ்ந்த கர்ஜனையுடன் உச்சரித்தவையும் {சொன்னவையும்}, குருக்களுக்கு மத்தியில் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தவையுமான அந்தச் செருக்கு நிறைந்த வார்த்தைகளுக்கு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நல்லது செய்யும் நேரம் இறுதியாக வந்தேவிட்டது. எனவே, நீங்கள் அனைவரும் சாதிக்கப்போவதாக உறுதியேற்ற அனைத்தையும் சாதிப்பீராக", என்று சொல்.

குந்தியின் மூத்த மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, எனது வார்த்தைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வாயாக. "அறம்சார்ந்தவனான நீ, உனது தம்பிகளுடனும், சோமகர்களுடனும், கேகயர்களுடனும் சேர்ந்து எப்படி உனது இதயத்தை அநீதியில் நிலைநிறுத்தலாம்? அனைத்து உயிர்களின் அச்சங்களையும் விலக்கவல்லவனாக நீ இருக்க வேண்டும் என நான் நினைக்கையில், அண்டத்தையே அழிக்க நீ எப்படி விரும்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், தேவர்கள் பிரகலாதனின் அரசை அவனிடம் {பிரகலாதனிடம்} இருந்து பறித்த போது, அவன் {பிரகலாதன் தேவர்களிடம்}, "தேவர்களே, எவனுடைய நீதியின் கொடிக்கம்பம் {தர்மத்துவஜம்} எப்போதும் {வெளிப்படையாக} உயர்ந்து, அவனது பாவங்கள் எப்போதும் மறைந்திருக்கிறதோ, அவன், (கதைகளில் சொல்லப்படும்) பூனையின் நடத்தையைக் கொண்டவனாவான்", என்ற {பொருள்படும்} செய்யுளைப் {சுலோகத்தைப்} பாடியதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எனது தந்தைக்கு {திருதராஷ்டிரருக்கு} நாரதர் உரைத்த இந்த அற்புதக் கதையை நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் "நான் இப்போது அறம் பயில்கிறேன்" என்று சொன்னது {சொல்லி வந்தது அந்தப் பூனை}.ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் அதனிடம் {பூனையிடம்} நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை {பறவைகள்}, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அது {அந்தப் பூனை}, அவை {பறவைகள்} அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவேறியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் {எலிகளனைத்தும்} அதைக் {பூனையைக்} கண்டன.

அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த அவை {எலிகள்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, "நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இவர் {இந்தப் பூனை} நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்" என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற அவை {எலிகள்} அனைத்தும், "உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் {இந்திரனைப்} போல எங்களைப் பாதுகாப்பீராக" என்றன {எலிகள்}.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைத்து எலிகளாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பூனை, அவற்றிடம் {அந்த எலிகளிடம்}, "துறவை தொடர்வது, (நான் அருள வேண்டும் என்று அழைக்கப்பட்டு) பாதுகாப்பு தருவது ஆகிய இவை இரண்டும் ஒன்றாக நிலைத்திருப்பதை நான் காணவில்லை. எனினும், உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்புடைய வகையில் உங்களுக்கு நன்மை செய்வதை என்னால் தவிர்க்க முடியாது. அதே வேளையில், நீங்கள் அனைவரும் எப்போதும் எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கடும் நோன்மை நோற்பதில் நிலைத்திருக்கும் நான், எனது தவப்பயிற்சிகளால் பலவீனமாக இருக்கிறேன். எனவே, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் வழியை என்னால் காண முடியவில்லை. எனவே, நீங்கள் அனைவரும் தினமும் என்னை ஆற்றங்கரைக்குச் சுமந்து செல்ல வேண்டும்" என்றது {பூனை}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன எலிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தங்களில் முதியவை மற்றும் இளையவை ஆகியவற்றை அந்தப் பூனையிடம் ஒப்புவித்தன.

தீய ஆன்மா கொண்டதும், பாவியுமான அது {அந்தப் பூனை}, எலிகளை உண்டு, படிப்படியாகப் பருக்கவும், நல்ல நிறம் அடையவும், வலுவான உடல் உறுப்புகளைப் பெறவும் செய்தது. இப்படியே, எலிகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்த வேளையில், அந்தப்பூனை, ஆற்றலிலும் பலத்திலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. பிறகு, எலிகளனைத்தும் கூடி, தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும், "நமது மாமன் {பூனையார்}, தினமும் தடித்து வளர்கிறார். நாமோ தினமும் (எண்ணிக்கையில்) குறைந்து வருகிறோம்" என்று பேசிக்கொண்டன.

பிறகு, டிண்டிகன் என்ற பெயருடைய ஒரு குறிப்பிட்ட புத்திசாலி எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கூடியிருந்த எலிகளின் பெரும் கூட்டத்திற்கிடையே இந்த வார்த்தைகளைச் சொன்னது. அது {டிண்டிகன் என்ற எலி} "நீங்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு ஒன்றாகச் செல்லுங்கள். நான் நமது மாமனுடன் {பூனையாருடன்} உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன்" என்றது. அதற்கு அவை {அந்த எலிக்கூட்டம்}, "அற்புதம், அற்புதம்" என்று சொல்லி, தங்கள் எண்ணிக்கையில் ஒன்றை {டிண்டிகனைப்} பாராட்டின. டிண்டிகன் குறிப்பிட்டுப் பேசிய பயனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் அவை {அந்த எலிகள்} அப்படியே செய்தன. எனினும், இதை அறியாத அந்தப் பூனை டிண்டிகனை அன்று உண்டது. அதிக நேரத்தைக் கடத்தாத அந்த எலிகள் அனைத்தும், தங்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்று ஆலோசிக்கத் தொடங்கின.

பிறகு, கிலிகன் {கோலிகன்} என்ற பெயர் கொண்ட ஒரு மிக முதிர்ந்த எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தனது இரத்த உறவுகளின் முன்னிலையில், நீதிமிக்க இவ்வார்த்தைகளைச் சொன்னது. அது {கிலிகன் எலிக் கூட்டத்திடம்}, "நமது அம்மான் {தாய்மாமன்}, அறம் ஈட்டுவதை உண்மையில் விரும்பவில்லை. உண்மையில் அவன் {அந்தப் பூனை} நமது எதிரியாக இருந்தாலும், கபடக்காரனைப் போல நமது நண்பனாக மாறியிருக்கிறான். உண்மையில், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழும் ஓர் உயிரினத்தின் மலம், மயிருடன் {எலிகளின் முடிகளுடன்} இருக்காது. மேலும், அவனது {பூனையாரின்} உறுப்புகள் வளர்கின்றன. நாமோ எண்ணிக்கையில் நசிந்து வருகிறோம். அது தவிர, இந்த எட்டு நாட்களாக டிண்டிகன் காணப்படவில்லை" என்றது {கிலிகன் என்ற அந்த முதிர்ந்த எலி}. இவ்வார்த்தைகளைக் கேட்ட எலிகள் அனைத்தும் திசைகள் அனைத்திலும் சிதறி ஓடின. தீய ஆன்மா கொண்ட அந்தப் பூனையும், தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றது" {என்றான் துரியோதனன்}.
*****************************************************************************
நைமிசாரண்யத்தில் சூதரான சௌதி > சௌனகரின் 12 வருட யாகத்தில் பங்கு கொண்ட ஆன்மீகவாதிகளின் முன்னிலையில் இந்த மகாபாரதக் கதையைச் சொல்கிறார்.

சூதரான சௌதி இந்த மகாபாரதக் கதையினை இதற்கு முன் மன்னன் ஜனமேஜயன் நடத்திய நாகவேள்வியின் இடையில் வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் மன்னன் ஜனமேஜயனிடம் சொல்லும் போது தான் கேட்டதாகச் சொல்கிறார். {ஜனமேஜயன் அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் பேரனும் பரிட்க்ஷித்தின் மகனும் ஆவார்.} {அர்ஜுனன் > அபிமன்யு > பரீட்க்ஷித் > ஜனமேஜயன்}

வைசம்பாயனர் > ஜனமேஜயனிடம் சொல்லும் கதையில்
சஞ்சயன் > திருதராஷ்டிரனிடம் சொல்லும் கதைக்குள்
துரியோதனன் > உலூகனிடம் சொல்லும் கதைக்குள்
நாரதர் > திருதராஷ்டிரனிடம் சொல்லிய பூனைகதைக்குள்
பூனை > எலி கூட்டத்திடம் சொன்ன சொல்தான், “ நான் இப்போது அறம் பயில்கிறேன் ” என்பதாகும்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்