Fit and unfit! | Shanti-Parva-Section-309 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 136)
பதிவின் சுருக்கம் : பிரம்மம், சாங்கியம், யோகம் குறித்த அறிவுரையைப் பெறத்தக்கவர், தகாதவர் ஆகியோரைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, "புத்தம் (பரமாத்மா) மற்றும் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களின் வகைமுறையான அபுத்தம் (ஜீவன்) ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்பாயாக. (மாயையின் ஆதிக்கத்தில்) பல வடிவங்களை ஏற்கும் பரமாத்மா, ஜீவனாகி அந்த வடிவங்கள் அனைத்தையும் உண்மையாகக் கருதுகிறான்[1].(1) அத்தகைய மாறுபாடுகளின் (அவற்றைத் தானாகவே கருதும்) விளைவால், (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களைக் கொள்ளும் ஜீவனானவன், படைப்பவனும், தான் படைத்தவற்றைத் தனக்குள்ளேயே ஈர்த்துக் கொள்பவனுமான பரமாத்மாவைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) ஓ! ஏகாதிபதி {கராளா}, இடைவிடாமல் விளையாட்டாக மாறுதலடையும் ஜீவன், புலப்படாததன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளவல்லவனாக இருக்கும் காரணத்தால், புத்யமானன் (புரிந்து கொள்பவன்) என்றழைக்கப்படுகிறான்[2].(3) குணங்களுடன் வெளிப்படும் பிரம்மமானது உண்மையில் குணங்களற்றது என்பதைப் புலப்படாததால் அல்லது பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. எனவே பிரகிருதியானது புத்தியற்றதாகச் சொல்லப்படுகிறது[3].(4) எப்போதாவது பிரகிருதியால் இருபத்தைந்தாவதை (ஜீவனை) அறியமுடியுமென்றால், அப்போது அந்தப் பிரகிருதியானது (ஜீவனிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அறியப்படாமல்) அதனோடு கலந்திருக்கும் ஜீவனாகவே அடையாளம் காணப்படும் என்று ஸ்ருதிகளில் ஒரு தீர்மானம் இருக்கிறது. (எனினும், கலப்படமில்லாததும், தொடர்பற்றதும், இருபத்தைந்தாவதைக் கடந்திருப்பதுமான பரமாத்மாவைப் பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது). இதன் விளைவால் புலப்படாதவனும், உண்மையான இயல்பின்படி மாற்றமில்லாதவனுமான ஜீவன், அல்லது புருஷனானவன், விழிப்பற்றவன் அல்லது அறியாமை கொண்டவன் என்று அழைக்கப்படுகிறான்.(5)






