Showing posts with label ருக்மரதன். Show all posts
Showing posts with label ருக்மரதன். Show all posts

Wednesday, May 18, 2016

அபிமன்யுவிடம் புறமுதுகிட்ட துரியோதனன்! - துரோண பர்வம் பகுதி – 043

Duryodhana turned back from fighting Abhimanyu! | Drona-Parva-Section-043 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : சத்தியசிரசைப் பீடித்த அபிமன்யு; அபிமன்யுவை நோக்கி விரைந்த ருக்மரதன்; அபிமன்யுவைப் பீடித்த ருக்மரதனின் நண்பர்கள்; நூற்றுக்கணக்கான இளவரசர்களைக் கொன்ற அபிமன்யு; அச்சத்தால் நிறைந்து அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன் புறமுதுகிட வேண்டிவந்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துணிவுமிக்க வீரர்களின் உயிரை எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அண்ட அழிவின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களின் உயிரையும் எடுக்கும் யமனுக்கு ஒப்பானவனாக இருந்தான். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்ட சக்ரனின் மகனுக்கு மகனான அந்த வலிமைமிக்க அபிமன்யு, கௌரவப் படையைக் கலங்கடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவப் படைக்குள் ஊடுருவியவனும், யமனுக்கு ஒப்பானவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை அழிப்பவனுமான அவன் {அபிமன்யு}, சீற்றமிக்கப் புலியொன்று மானொன்றைப் பிடிப்பதைப் போலச் சத்தியசிரவசைப் பிடித்தான். சத்தியசிரவஸ் [1] அவனால் {அபிமன்யுவால்} பிடிக்கப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.


[1] இவன் யார் என்பது தெரியவில்லை. இவன் இங்கே அபிமன்யுவால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

உண்மையில், க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள், பகையுணர்வின் காரணமாக, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, “நான் முதலில் செல்கிறேன், நான் முதலில் செல்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவனை நோக்கி விரைந்தனர். கடலில் உள்ள திமிங்கலம் ஒன்று சிறுமீன்களின் கூட்டத்தை மிக எளிமையாகப் பிடிப்பதைப் போலவே, அபிமன்யுவும் விரைந்துவரும் அந்த க்ஷத்திரியர்களின் மொத்த படையணியையும் வரவேற்றான் {எதிர்த்தான்}. கடலை அடையும் நதிகள் திரும்பாததைப் போலவே, பின்வாங்காத அந்த க்ஷத்திரியர்களில் எவரும் அபிமன்யுவை அடைந்த பிறகு திரும்பவில்லை. வலிமைமிக்கச் சூறாவளியில் அகப்பட்டு, பலமான காற்றால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் தூக்கி வீசப்படும் (படகு குழுவினருடன்) படகைப் போல அந்தப் படை சுழன்றது.

அப்போது, மத்ரர்கள் ஆட்சியாளனுடைய {சல்லியனின்} மகனான வலிமைமிக்க ருக்மரதன், பீதியடைந்த துருப்புகளுக்கு நம்பிக்கையளிப்பதற்காக அச்சமற்ற வகையில், “வீரர்களே, அஞ்சாதீர்! நான் இங்கிருக்கும்போது, அபிமன்யுவினால் என்ன {செய்ய முடியும்}? இவனை நான் உயிருடன் பிடிப்பேன் என்பதில் ஐயங்கொள்ளாதீர்” என்றான். இவ்வார்த்தைகளைக் சொன்ன அந்த வீர இளவரசன் {ருக்மரதன்}, நன்கு தயாரிக்கப்பட்ட தன் அழகான தேரால் சுமக்கப்பட்டு அபிமன்யுவை நோக்கி விரைந்தான். மூன்று கணைகளால் அபிமன்யுவின் மார்பையும், மூன்றால் வலது கரத்தையும், மேலும் மூன்றால் இடது கரத்தையும் துளைத்த அவன் பெருமுழக்கம் முழங்கினான். எனினும் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ}, அவனது {ருக்மரதனின்} வில்லையும், அவனது வலது மற்றும் இடது கரங்களையும், அழகான கண்களும், புருவங்களும் கூடிய அவனது {ருக்மரதனது} தலையையும் விரைவாகப் பூமியில் வீழ்த்தினான்.

தன் எதிரியை {அபிமன்யுவை} எரிக்கவோ, உயிருடன் பிடிக்கவோ சபதம் செய்திருந்தவனும், சல்லியனின் மதிப்பு மிக்க மகனுமான அந்த ருக்மரதன், சுபத்திரையின் சிறப்புமிக்க மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டதைக் கண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களும் போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களும், சல்லியன் மகனின் {ருக்மரதனின்} நண்பர்களுமான இளவரசர்கள் பலர் {அபிமன்யுவை எதிர்த்துப்} போரிட வந்தனர். முழுதாக ஆறு முழம் நீளமுள்ள தங்கள் விற்களை வளைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்த படி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

தனியாக இருப்பவனும், துணிவுமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்}, இளமையும், பலமும், பயிற்சியால் அடையப்பட்ட திறனும், வீரமும் கொண்ட அந்தக் கோபக்கார இளவரசர்கள் அனைவரும் மோதி கணைகளின் மழையால் அவனை மறைப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற ஒரு விருந்தினன் என்றே அபிமன்யுவைக் கருதினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகவே, அந்த இளவரசர்கள், பல்வேறு வடிவங்களும், பெரும் வேகமும், தங்கச் சிறகுகளும் கொண்ட தங்கள் கணைகளின் மூலம் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} காண முடியாதபடி செய்தனர் {மறைத்தனர்}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனையும் {அபிமன்யுவையும்}, அவனது கொடிமரத்தையும், அவனது தேரையும் வெட்டுக்கிளிகள் நிறைந்த மரங்களைப் போலக் கண்டோம் [2].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அம்புகளால் நான்கு பக்கங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கிற அந்த அபிமன்யுவை, முட்களாலே நான்கு பக்கங்களிலும் வியாபிக்கப்பட்டிருக்கிற காட்டுப் பன்றியைப் போலக் கண்டோம்” என்று இருக்கிறது.

ஆழத்துளைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, அங்குசத்தால் தாக்கப்பட்ட யானை ஒன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு அவன் {அபிமன்யு}, காந்தர்வ ஆயுதத்தையும், அதன் தொடர்ச்சியான மாயையையும் {காந்தர்வாஸ்திரத்தையும், ரதம் சம்பந்தமான மாயையையும்} பயன்படுத்தினான். தவத்துறவுகள் பயின்ற அர்ஜுனன், அந்த ஆயுதத்தைக் கந்தர்வனான தும்புருவிடம் இருந்தும், {கந்தர்வர்கள்} பிறரிடம் இருந்தும் {தும்புரு முதலான கந்தர்வர்களிடம் இருந்து} அடைந்திருந்தான். அபிமன்யு, இப்போது அந்த ஆயுதத்தைக் கொண்டே தன் எதிரிகளைக் குழப்பினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களை விரைவாக வெளிப்படுத்திய அவன் {அபிமன்யு}, அந்தப் போரில் நெருப்பு வளையம் போலச் சுழன்று, சில நேரங்களில் தனி நபராகவும், சில நேரங்களில் நூற்றுக்கணக்கானோராகவும், சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோராகவும் காட்சியளித்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களுடைய விளைவின் மூலம் உண்டான மாயைக் கொண்டு வழிநடத்தப்பட்ட தன் தேரின் திறமையால் தன் எதிரிகளைக் குழப்பிய அவன் {அபிமன்யு}, (தன்னை எதிர்த்த) மன்னர்களின் உடல்களை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனது {அபிமன்யுவனது} கூரிய கணைகளின் விளைவால், உயிரினங்களின் உயிர்கள் வாங்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் உடல்கள் கீழே பூமியில் விழுகையில், அவை {உயிர்கள்} மறு உலகத்தை அடைந்தன.

அவர்களின் விற்கள், குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், தலைகள் ஆகியவற்றைப் பல்குனன் மகன் {அபிமன்யு} தன் கூரிய கணைகளால் அறுத்தான். ஐந்து வயதான மாமரங்களைக் கொண்ட {மாமரத்} தோப்பு ஒன்று, சரியாகக் கனி தாங்கும் சமயத்தில் (புயலால்) வீழ்த்தப்படுவதைப் போல, அந்த நூறு இளவரசர்களும் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொன்று வீழ்த்தப்பட்டனர்.

அனைத்து ஆடம்பரங்களுடன் வளர்க்கப்பட்டவர்களும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவர்களும் இளமைநிறைந்தவர்களுமான அவ்விளவரசர்கள் அனைவரும் தனி ஒருவனான அபிமன்யுவால் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன் அச்சத்தால் நிறைந்தான். (தன்) தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் நொறுக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்துடன் அபிமன்யுவை எதிர்த்து வேகமாகச் சென்றான். அவர்களுக்கிடையில் குறுகிய காலமே நீடித்த அந்த முடிக்கப்படாத போர் மிக உக்கிரமடைந்தது. பிறகு, அபிமன்யுவின் கணைகளால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} போரில் இருந்து புறமுதுகிட வேண்டியிருந்தது” {என்றான் சஞ்சயன்} [3].

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி "அவ்விருவருக்கும் க்ஷண காலமே அபூர்வமான யுத்தம் நேர்ந்தது. பிறகு, உம்முடைய மகன் அபிமன்யுவின் அநேக அம்புகளால் அடிக்கப்பட்டுப் புறங்காட்டியோடினான்" என்று இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

Wednesday, October 21, 2015

உத்தரனின் மரணமும்! ஸ்வேதனின் வெஞ்சினமும்!! - பீஷ்ம பர்வம் பகுதி - 047ஆ

The death of Uttara and the wrath of Sweta! | Bhishma-Parva-Section-047b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைக் காக்க யானையில் வந்த உத்தரன், சல்லியனை எதிர்த்துப் போரிட்டது; சல்லியனின் குதிரைகளை உத்தரனின் யானை கொன்றது; சல்லியன் ஒரே கணையால் உத்தரனைக் கொன்றது; இதனால் கோபம் கொண்ட உத்தரனின் தம்பி ஸ்வேதன் சல்லியனைக் கொல்ல அவனிடம் விரைந்தது; ஆபத்தில் இருந்த சல்லியனைக் காக்க கௌரவப்படையின் ஏழு பேர் விரைந்தது; அந்த எழுவரையும் திக்கு முக்காட வைத்த ஸ்வேதன்; ஸ்வேதன் சல்லியனின் மகனான ருக்மரதனைக் காயப்படுத்தி மயங்கச் செய்தது; ஸ்வேதனிடம் ஆபத்திலிருந்த சல்லியனைத் துரியோதனன் காத்தது...

விராடனின் மகனான உத்தரனும், துதிக்கை உயர்த்திய நிலையில் தந்தத்தோடு கூடிய யானையில் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான். எனினும், சல்லியன் தன் தேரை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த யானைகளின் இளவசரனை {உத்தரனின் யானையை} இணையற்ற வேகத்துடன் தடுப்பதில் வென்றான். பெரும் கோபம் கொண்ட அந்த யானைகளின் இளவரசன் {யானை}, (சல்லியனின்) தேருடைய நுகத்தில் தனது காலை வைத்து, அற்புத வேகம் கொண்டவையும், பெரியவையுமான அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளைக் கொன்றான் {அந்த யானை கொன்றது}. குதிரைகள் கொல்லப்பட்ட தேரில் நின்ற மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முழுவதும் இரும்பால் செய்யப்பட்டதும், பாம்பு போன்றதுமான ஒரு கணையை எடுத்து, ஒரே அடியாக உத்தரனைக் கொல்வதற்காக அடித்தான். அந்தக் கணையால் கவசம் பிளப்பட்ட அவன் {உத்தரன்}, முற்றிலும் புலன் உணர்வை இழந்து, தனது பிடியில் இருந்து அங்குசத்தையும் ஈட்டியையும் விட்டு, தன் யானையின் கழுத்தில் இருந்து கீழே விழுந்தான்.


பிறகு தன் வாளை எடுத்துக் கொண்ட சல்லியன், தனது அற்புதத் தேரில் இருந்து கீழே குதித்து, தனது ஆற்றல் அனைத்தையும் செலுத்தி, அந்த யானைகளின் இளவரசனுடைய {உத்தரனின் யானையுடைய} பெரிய துதிக்கையைத் துண்டித்தான். கணைமாரியால் தனது கவசமெங்கும் துளைப்பட்டும், தனது துதிக்கை துண்டிக்கப்பட்டும் இருந்த அந்த யானை உரக்க அலறி கீழே விழுந்து இறந்தது. இத்தகு சாதனையை அடைந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனின் அற்புதத் தேரில் ஏறினான்.


தனது சகோதரனான {அண்ணனான} உத்தரன் கொல்லப்பட்டதையும், கிருதவர்மனோடு இருந்த சல்லியனையும் கண்ட விராடனின் மகன் ஸ்வேதன், தெளிந்த நெய்யின் {நெய்யினால் எரியும்) நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை நீட்டி வளைத்து, மத்ர ஆட்சியாளன் சல்லியனைக் கொல்லும் விருப்பத்துடன் விரைந்தான். வலிமைமிக்கத் தேர்களின் படைப்பிரிவுகள் அனைத்துப் புறங்களிலும் சூழ முன்னேறிய அவன் {ஸ்வேதன்}, சல்லியனின் தேர் மீது கணைமாரியைப் பொழிந்தான்.

மதங்கொண்ட யானையின் ஆற்றலுக்கு இணையாகப் போரிட விரைந்த அவனை {ஸ்வேதனைக்} கண்டவர்களும், உமது தரப்பைச் சேர்ந்தவர்களுமான ஏழு {7} தேர்வீரர்கள், ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்குள் இருந்த மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கோசலகர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன், மகதத்தின் ஜயத்சேனன், சல்லியனின் வீரமிக்க மகனான ருக்மரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன், பிருஹத்க்ஷத்ரனின் [1] இரத்தஉறவும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான ஜெயத்ரதன் ஆகியோரே அந்த ஏழு {7} போர்வீரர்களாவர்.

[1] பீஷ்ம பர்வம் பகுதி 45ஆவில் இந்தப் பிருஹத்க்ஷத்திரன் பாண்டவத் தரப்பில் போரிட்ட கைகேய மன்னன் என்றே குறிப்பிடப்படுகிறான். ஜெயத்ரதனின் தந்தை பெயர் விருத்தக்ஷத்ரன் Vriddhakshatra என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேறு பதிப்பில் இந்த இடத்தில் பிருஹத்க்ஷத்திரனின் மகன் ஜெயத்ரதன் என்றே இருக்கிறது. ஆனால் கங்குலி, son of Vrihadkshatra என்று இடாமல் Kinsman of Vrihadkshatra என்று சொல்வதுதான் இங்கே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இங்கே குறிப்பிடப்படுவது யார் என்பதைச் சம்ஸ்க்ருத மூலத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

பல்வேறு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த உயர் ஆன்ம போர்வீரர்களின் நீட்டி வளைக்கப்பட்ட விற்கள், மேகங்களில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. அவர்கள் அனைவரும், கோடை காலம் முடிந்ததும் காற்றால் புரட்டப்படும் மேகங்கள் எப்படி மலையின் மார்பில் மழையைப் பொழியுமோ, அப்படி, ஸ்வேதனின் தலையில் தொடர்ச்சியான கணைமாரியைப் பொழிந்தனர். படைகளின் தலைவனான அந்த வலிமைமிக்க வில்லாளி {ஸ்வேதன்}, இதனால் கோபமடைந்து, அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளைத் தனது வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் அடித்து, தொடர்ச்சியாக அவர்களைக் கலங்கடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களின் {அந்த எழுவரின்} விற்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதை நாம் கண்டோம். அதன் பேரில், கண் இமைப்பதில் பாதி நேரத்திலேயே வேறு விற்களை அவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பிறகு அவர்கள் ஸ்வேதனின் மீது ஏழு கணைகளை அடித்தார்கள். அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {ஸ்வேதன்}, மிக வேகமான ஏழு கணைகளைக் கொண்டு, மீண்டும் அந்த வில்லாளிகளின் (வேறு) விற்களை{யும்} துண்டித்தான்.

தங்கள் பெரும் விற்கள் துண்டிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஏழு ரதசக்திகளை {ஈட்டி போன்ற ஆயுதம்} எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினர். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஏழு ரதசக்திகளைச் ஸ்வேதனின் தேர் மீது அவர்கள் எறிந்தனர். பெரும் விண்கற்களைப் போல, இடியின் ஒலியுடன் (காற்றில்) சென்ற அந்தச் சுடர்மிகும் ரதசக்திகள், அவனைச் {ஸ்வேதனைச்} சென்றடையும் முன்பே, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {ஸ்வேதன்}, ஏழு பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளால்} அவற்றை அறுத்தான்.

பிறகு, உடலின் அனைத்துப் பகுதியையும் துளைக்கவல்ல கணையொன்றை எடுத்த அவன் {ஸ்வேதன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதை ருக்மரதன் {சல்லியனின் மகன்} மீது எறிந்தான். வஜ்ரத்தின் சக்தியை விஞ்சிய அந்த வலிமைமிக்கக் கணை பின்னவனின் {ருக்மரதனின்} உடலைத் துளைத்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் பலமாகத் தாக்கப்பட்ட ருக்மரதன், தனது தேரில் கீழே அமர்ந்தபடி மரண மயக்கத்தில் விழுந்தான். பிறகு அவனுடைய {ருக்மரதனின்} தேரோட்டி, உணர்வற்று மயக்கத்தில் இருந்த அவனை அனைவரின் பார்வையிலேயே அச்சத்துடன் தூக்கிச் சென்றான்.

பிறகு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேறு ஆறு கணைகளைக் கொண்டு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஸ்வேதன், தனது ஆறு எதிரிகளின் கொடிக்கம்பங்களையும் வெட்டினான். அவர்களது குதிரைகளையும், தேரோட்டிகளையும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {ஸ்வேதன்}, தடையற்ற கணைகளால் அந்த ஆறு வீரர்களையும் மூழ்கடித்து, சல்லியனின் தேரை நோக்கி முன்னேறினான். சல்லியனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறிய அந்தப் (பாண்டவப்) படைகளின் தலைவனை {ஸ்வேதனைக்} கண்ட உமது படையினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, "ஓ!" என்றும் "ஐயா!" என்றும் உரக்க ஒலி எழுப்பினர்.

அங்கே, பீஷ்மரின் தலைமையில் வந்த உமது மகன் {துரியோதனன்}, துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள் மற்றும் பல துருப்புகளின் ஆதரவுடன், ஸ்வேதனின் தேரை நோக்கி முன்னேறினான். ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் நுழைந்திருந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} (இப்படியே) அவன் {துரியோதனன்} மீட்டான். அதன் பிறகு, உமது துருப்புகளுக்கும், எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதும், பயங்கரமானதும், தேர்களும் யானைகளும் கலந்து குழம்பிப் போனதுமான ஒரு போர் தொடங்கியது.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகய ஆட்சியாளன் {பிருஹத்க்ஷத்திரன்}, விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி துருப்புகள் ஆகியோர் மீது குருக்களின் முதிர்ந்த பாட்டன் {பீஷ்மர்} கணைமாரியைப் பொழிந்தார் [2]" {என்றான் சஞ்சயன்}.

[2] "சம்ஸ்க்ருத மூலத்தில் 43வது வரியில் இருந்து 52வது வரை உள்ள (மேற்கண்ட கருத்துகள்) வங்க உரைகளில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. எனினும், அவை அவற்றில் 46வது பகுதியில் சொல்லப்பட்டுள்ளன. உண்மை என்னவென்றால், மேற்குறிப்பிட்ட முழு வரிகளும், வரப்போகும் பகுதியில் {48வது பகுதியில்} 116 வரிகளும், பகுதி 49ல் வரப்போகும் முதல் 24 வரிகளும் இடைச்செருகல் என்று கருதப்படுகிறது. ரதர்கள் மற்றும் அதிரதர்கள் என்று பீஷ்மரால் எண்ணப்பட்ட உத்யோக பர்வப் பகுதிகளில், ஸ்வேதன் என்ற பெயரில் எந்தப் போர்வீரனும் குறிப்பிடப்படவில்லை. பர்த்துவான் பண்டிதர்களும் இந்தப் பத்திகளை முழுவதுமாகத் தவிர்க்கின்றனர். நானே கூட இதை இடைச் செருகலாகத் தான் பார்க்கிறேன். எனினும், வங்க உரைகளிலும், பம்பாய் உரைகளிலும் ஏதோ ஒரு வகையில் இவை இருப்பதால் எனது ஆங்கில உரையில் இதை என்னால் தவிர்க்க முடியாது. எனவேதான் அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்