Showing posts with label சஞ்சயன் 1. Show all posts
Showing posts with label சஞ்சயன் 1. Show all posts

Wednesday, June 17, 2015

ஜெயம் எனும் வரலாறு! - உத்யோக பர்வம் பகுதி 136

The history called Jaya! | Udyoga Parva - Section 136 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 65) {விதுலோபாக்யானம் - 4}

பதிவின் சுருக்கம் : நண்பர்களின் துணையால் கிட்டும் நன்மையை விதுலை சொல்வது; சஞ்சயன் அறியாத பல பொக்கிஷ அறைகள் உண்டென்றும், அதைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும் விதுலை சொன்னது; தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது துயரில் இருந்து விடுபடுவது; விதுலை சஞ்சயன் உரையாடல் அடங்கிய வரலாற்றைக் கேட்பதனால் உண்டாகும் பலனைக் குந்தி சொன்னது...

தாய் விதுலை - மகன் சஞ்சயன்
அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "ஒரு மன்னன் எந்தவிதமான ஆபத்தில் தோல்வியுற்றாலும், அவன் அதைக் காட்டிக் கொள்ளக்கூடாது {அதற்கு அஞ்சக்கூடாது}. அச்சத்தால் பாதிக்கப்படும் மன்னனைக் கண்டு, படை, ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் முழு நாடும் அச்சம் அடைந்து, குடிமக்கள் அனைவரும் {கருத்தில்} ஒற்றுமையற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் சென்று எதிரியின் தரப்பை அரவணைப்பார்கள்; பிறரோ எளிதாக மன்னனைக் கைவிட்டுவிடுவார்கள்; ஏற்கனவே {மன்னனிடம்} அவமானத்தை அடைந்த மேலும் பிறர், தாக்குவதற்கே கூட முயல்வார்கள்.


எனினும், நெருக்கமான நண்பர்கள், அவனது தரப்பில் எப்போதும் காத்திருக்கிறார்கள். அவனது நன்மையை அவர்கள் விரும்பினாலும், எதையும் செய்ய இயலாமல், கட்டி வைக்கப்பட்டுள்ள கன்றுக்காகக் காத்திருக்கும் மாட்டைப் போல ஆதரவற்ற நிலையில் காத்திருக்கிறார்கள். துயரத்தில் மூழ்கியிருக்கும் நண்பர்களுக்காக வருந்தும் நண்பர்களைப் போல, துயரத்தில் மூழ்கி இருக்கும் தங்கள் தலைவனைக் கண்டு நலன்விரும்பிகளும் வருந்துவார்கள்.

முன்பு நீயும், உன்னால் வழிபடப்பட்ட பல நண்பர்களை கொண்டிருந்தாய். உனது நாட்டுக்காக உனது இதயத்தை உணர்பவர்களும், உனது துன்பங்களைத் தங்கள் துன்பமாகவே எடுத்துக் கொள்பவர்களுமான பல நண்பர்களை நீயும் கொண்டிருக்கிறாய். அந்த நண்பர்களை நீ அச்சுறுத்தாதே. நீ அச்சத்திலிருப்பதைக் கண்டு அவர்கள் உன்னைக் கைவிடும் நிலையை அனுபவிக்காதே.

உனது பலம், ஆண்மை, புரிதல் {புத்தி} ஆகியவற்றைச் சோதிப்பதற்காகவும், உனக்கு உற்சாகமூட்ட விரும்பியும், உனது சக்தியை அதிகரிக்கவுமே நான் இவை அனைத்தையும் உன்னிடம் சொல்கிறேன். நான் சொன்னது உனக்குப் புரிந்தால், நான் சொன்னது முறையானதாகவும், போதுமானதாகவும் உனக்குத் தோன்றினால், ஓ! சஞ்சயா, உனது பொறுமையைத் திரட்டி, வெற்றிக்காக உனது இடுப்புக் கச்சையை இறுகக் கட்டுவாயாக.

நீ அறியாதவையும், பெரும் எண்ணிக்கையும் கொண்ட, பல கருவூல வீடுகள் {பொக்கிஷ அறைகள்} நமக்குண்டு. அதன் இருப்பை வேறு யாரும் அறியமாட்டார்கள்; நான் மட்டுமே அறிவேன். அவை அனைத்தையும் நான் உனக்கு அளிக்கிறேன்.

ஓ! சஞ்சயா, உன் மகிழ்ச்சி மற்றும் துயரங்களில் உனக்கு ஆதரவாக இருப்பவர்களும், ஓ! வீரா {சஞ்சயா}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உனக்கு உண்டு. ஓ! எதிரிகளை வாட்டுபவனே, இது போன்ற கூட்டாளிகள், தனது நன்மையை விரும்பி, தனக்கு ஏற்புடையதைச் செய்யும் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாகத் தங்கள் பங்கை எப்போதும் சரியாகச் செய்வார்கள்" என்றாள் {விதுலை}."

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "அற்புதமான வார்த்தைகளும், அறிவும் நிரம்பிய தனது தாயின் {தாய் விதுலையின்} பேச்சைக் கேட்டதும், அந்த இளவரசன் சஞ்சயன், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனாக இல்லாவிடினும், அவனது இதயத்தில் இருந்த துயரம் உடனே விலகியது. அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "என் எதிர்கால நலனை கவனிக்கும் உன்னை எனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் நான், நிச்சயம் எனது தந்தைவழி நாட்டை மீட்பேன், அல்லது அந்த முயற்சியில் அழிந்து போவேன். உனது சொற்பொழிவின் போது நான் கிட்டத்தட்ட அமைதியாகக் கேட்பவனாகவே இருந்தேன். அக்காரியம் குறித்து நான் அதிகம் கேட்க வேண்டும் என்பதற்காகவும், {அது குறித்து} உன்னை மேலும் விரிவாகப் பேச வைப்பதற்காகவுமே அப்போதைக்கப்போது ஒரு வார்த்தையை இடையிடையில் நான் கேட்டேன் {பேசினேன்}. அமுதத்தைக் குடிப்பவன் போதும் என்று சொல்லாதது போல, உனது வார்த்தைகளும் எனக்குப் போதுமெனத் தோன்றவில்லை. எந்தக் கூட்டாளிகளிடமிருந்தாவது ஆதரவைப் பெற்று, எனது இடைக்கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, எதிரிகளை ஒடுக்கி நான் வெற்றியடைவதைப் பார்" என்றான் {சஞ்சயன்}."

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தை அம்புகளால் துளைக்கப்பட்ட மகன், பெருமைமிக்க இனத்தைச் சேர்ந்த குதிரையைப் போல எழுந்து, தனது தாய் சுட்டிக்காட்டியவை அனைத்தையும் சாதித்தான்.

சக்தியை மேம்படுத்தி, பலத்தை ஈர்க்கும் இந்த அற்புத வரலாற்றை, எதிரிகளால் பாதிப்படைந்து, துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது மன்னனை, அவனது அமைச்சர் ஒருவர் கேட்கச் செய்ய வேண்டும். உண்மையில், இந்த வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. இது வெற்றி விரும்பும் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்.

உண்மையில், இதைக் கேட்கும் ஒருவன், தனது எதிரிகளைக் கலக்கி இந்த முழு உலகையும் விரைவில் அடக்கி விடுவான். இந்த வரலாறு ஒரு பெண் வீரமகனை ஈன்றெடுக்கச் செய்யும். இதைத் திரும்பத் திரும்பக் கேட்ட ஒரு பெண், நிச்சயமாக ஒரு வீரனையே ஈன்றெடுப்பாள்.

இதைக் கேட்கும் {இந்த வரலாற்றைக் கேட்கும்} ஒரு க்ஷத்திரியப் பெண், தடுக்கமுடியா ஆற்றல் கொண்டவனாக, கல்வியில் முதன்மையானவனாக, தவத்துறவுகளில் முதன்மையானவனாக, தயாளத்தில் முதன்மையானவனாக, தவத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பவனாக, பிரம்ம அழகுடன் சுடர்விடுபவனாக, எண்ணற்ற நன்மைகள் கொண்டவனாக, பிரகாசத்தில் ஒளிர்பவனாக, பெரும் பலம் கொண்டவனாக, அருளப்பட்டவனாக, (போரில்) தாங்கிக்கொள்ளப்பட முடியாதவனாக, எப்போதும் வெல்பவனாக, ஒற்றப்பற்றவனாக, தீயவர்களைத் தண்டிப்பவனாக, அறம் பயில்வோர் அனைவரையும் பாதுகாப்பவனாக ஒரு மகனை ஈன்றெடுப்பாள்" என்றாள் {குந்தி}".


எதிரியின் எதிரிகளை ஒன்று சேர்! - உத்யோக பர்வம் பகுதி 135

Unite your enemy's foes! | Udyoga Parva - Section 135 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 64) {விதுலோபாக்யானம் - 3}

பதிவின் சுருக்கம் : சஞ்சயன் தன் தாய் விதுலையிடம்,  மகனென்றும் பாராமல் தன்னிடம் இப்படிப் பேசுவது முறையா என வருந்துவது; இழிநிலையை அடையும் மகனைப் பாசத்தால் கண்டிக்காமல் இருத்தல், அந்தப் பாசத்துக்கே இழுக்கு என விதுலை சொன்னது; வெற்றியடையும் வழிமுறைகள் தெரிந்தால் தனக்குச் சொல்லுமாறு சஞ்சயன் விதுலையிடம் கேட்டது; எதிரியை வெல்லும் வழிமுறைகளை விதுலை சொன்னது...

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் விதுலையிடம்}, "ஓ! இரக்கமற்றவளும், கோபம் நிறைந்தவளுமான தாயே, ஓ! உலகியல் வீரத்தை உயர்வாக நினைப்பவளே, உனது இதயம் உருக்காலாகி {இரும்பாலாகி} வடிவம் பெற்றது என்பது உறுதி. க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ; அதன் காரணமாகத்தானே என்னை அந்நியனைப் போலக் கருதி, என்னை நீ போரிடத் தூண்டுகிறாய். அதன்காரணமாகத் தானே உனது ஒரே மகனான என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பேசுகிறாய். உனது மகனான என்னைக் காணாமல், என்னிடம் இருந்து நீ பிரிந்துவிட்டால், இந்த முழு உலகத்தாலும் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்கள் அனைத்தாலும், மகிழ்ச்சிக்கான வழிகள் அனைத்தாலும் இந்த வாழ்வில் உனக்கு என்னதான் பயன் இருக்கும்?" என்று கேட்டான் {சஞ்சயன்}.


அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே {சஞ்சயா}, அறிவுடையோர், தாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் அறம் மற்றும் பொருள் ஆகியவற்றின் காரணமாகவே செய்கின்றனர். அறம் மற்றும் பொருள் ஆகியவற்றை மட்டுமே கண்டு, ஓ! சஞ்சயா நான் உன்னைப் போரிடத் தூண்டுகிறேன். உனது ஆற்றலை வெளிப்படுத்தத் தக்க தருணம் வந்துவிட்டது. இத்தகு நேரத்தில் நீ செயல்படவில்லையெனில், மக்களால் அவமதிக்கப்பட்டு, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையே நீ செய்பவனாவாய்.

ஓ! சஞ்சயா, புகழ்க்கேட்டால் கறைபடப்போகும் உன்னிடம் (பாசத்தால்) நான் எதையும் சொல்லவில்லையென்றால், பிறகு அந்தப் பாசம், பெண்கழுதை தன் குட்டியிடம் கொண்டதைப் போல மதிப்பற்றத்தாகவும், காரணமற்றதாகவும் ஆகும். அறிவுடையோரால் அங்கீகரிக்கப்படாததும், மூடர்களால் பின்பற்றப்படுவதுமான பாதையில் நீ நடக்காதே. இங்கே {மனிதர்களிடம்} இருக்கும் அறியாமை பெரியதாக இருக்கிறது. உலகின் எண்ணற்ற உயிரினங்கள் அதையே {அறியாமையையே} புகலிடமாகக் கொண்டிருக்கின்றன.

எது எப்படியிருப்பினும், நீ அறிவுடையோரின் நடத்தையைப் பின்பற்றினால், எனது அன்புக்குரியவனாக இருப்பாய். உண்மையில், அறம் மற்றும் பொருளை அறிந்து, கடவுளை மேலானவனாகக் கொண்டு, மனித உழைப்பை நம்பியவனாக, நல்லோரின் நடத்தையை பின்பற்றுபவனாக நீ இருந்தால், அதன் காரணமாகவே நீ எனது அன்புக்குரியவனாவாய்; மற்ற எந்த வழிகளிலும் அப்படி ஆக மாட்டாய். எவன் நன்கு அறிவுறுத்தப்பட்ட பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்கிறானோ அவனே உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். மறுபுறம், எவன் முயற்சியற்ற, அடக்கமில்லாத, தீய மனம் கொண்ட மகனைக் கண்டு மகிழ்கிறானோ, அவன் ஒரு மகனால் எது அடையப்பட வேண்டும் என்று விரும்புவானோ, அந்த நோக்கத்தை அடையமாட்டான். சரியானதை எப்போதும் செய்யாமல், கண்டிக்கத்தக்கதையே எப்போதும் செய்பவன் இங்கேயும், இதன் பிறகும் {மறு உலகிலும்} இன்பத்தை அடைவதில்லை.

ஓ! சஞ்சயா, ஒரு க்ஷத்திரியன் போருக்காகவும், வெற்றிக்காகவுமே படைக்கப்பட்டிருக்கிறான். {போரில்} வென்றாலும், அழிந்தாலும் அவன் இந்திரலோகத்தை அடைகிறான். அடிபணியச் செய்து எதிரிகளைக் குறைக்கும் ஒரு க்ஷத்திரியன் அடையும் இன்பம், புனிதமான இந்திரலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் கூட இருக்காது. கோபத்தில் எரிந்து கொண்டிருப்பவனும், பெரும் சக்தி படைத்தவனுமான ஒரு க்ஷத்திரியன், பல முறை தோல்வியுற்றாலும், தனது எதிரிகளை வீழ்த்த விரும்பி அவன் காத்திருக்க வேண்டும். உயிரையும் விடாமல், எதிரிகளையும் கொல்லாமல் இருக்கும் ஒருவனால் எவ்வழியில்தான் மன அமைதியை அடைய முடியும்?

அறிவுடையவன் எவனும், சிறியது எதையும் ஏற்பில்லாதவையாகவே கருதுவான். சிறியது எதையும் ஏற்கும் ஒருவனுக்கு, அந்தச் சிறிய விவகாரமே வலியின் ஊற்றுக்கண்ணாக (முழுமையாக) ஆகும். விரும்பியதை அடையாத ஒருவன் விரைவில் இழிந்தவனாகிறான். உண்மையில், அவன் அனைத்துத் தேவைகளையும் உணர்ந்து கடலுக்குள் நுழையும் கங்கையாகக் காணாமல் போகிறான்" என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "ஓ! தாயே, நீ உனது மகனின் முன்பு, இத்தகு கருத்துகளை வெளியிடக்கூடாது. அமைதியான ஊமை ஒருத்திபோல, அவனது பக்கத்தில் இருந்து, இப்போது அவனுக்குக் கருணை காட்டுவாயாக" என்றான்.

அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, "நீ இப்படிச் சொல்வதால் நான் பெரும் மனநிறைவு கொள்கிறேன். (எனது கடமை என்ன என்று உன்னால்) உந்தப்பட்டதால் தானோ என்னவோ, நான் உன்னை இப்படித் தூண்டுகிறேன். எனவே, (நீ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய) நான் இன்னும் அதிகமாக உன்னைத் தூண்டுவேன். சைந்தவர்கள் {சிந்துக்கள்} அனைவரும் கொல்லப்பட்டு, முழுமையான வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உன்னைக் கண்ட பிறகே உண்மையில் நான் உன்னை மதிப்பேன்", என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "செல்வம் இல்லாமல், கூட்டாளிகள் இல்லாமல், வெற்றி எப்படி எனதாகும்? மிகப் பரிதாபகரமான எனது நிலையை உணர்ந்தறிந்தே, சொர்க்கத்தின் மேல் உள்ள ஆசையைத் திருப்பிக் கொள்ளும் தீயவன் போல, நாட்டின் மீது கொண்ட எனது ஆசையை நானே திருப்பிக்கொண்டேன். எனவே, ஓ! முதிர்ந்த அறிவு கொண்டவளே, (இவை அனைத்தையும் இது நேர் செய்யும் என) எந்த வழிகளையாவது நீ கண்டால், அது குறித்து முழுமையாகச் சொல்வாயாக என நான் கேட்கிறேன். ஏனெனில், நீ எனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் நான் செய்வேன்" என்றான் {சஞ்சயன்}.

அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே, தோல்வியை எதிர்பார்த்து, நீ உனது ஆன்மாவை அவமதிக்காதே {உன்னையே அவமதித்துக் கொள்ளாதே}. அடையப்படாத பொருட்கள் அடையப்பட்டிருக்கின்றன; அடையப்பட்டனவோ தொலைக்கப்பட்டுள்ளன. கோபத்தாலோ, மூடத்தனத்தாலோ பொருட்களின் சாதனையை முயற்சிக்கக்கூடாது. ஓ! மகனே {சஞ்சயா}, அனைத்து செயல்களிலும் வெற்றியை அடைவது என்பது உறுதியில்லாதது. வெற்றி உறுதியற்றது; சில வேளைகளில் வெல்லலாம், சில வேளைகளில் அது முடியாமல் போகலாம் என்று அறிந்தும் மக்கள் செயல்படுகிறார்கள். எனினும், செயலில் இருந்து விலகும் ஒருவன் வெற்றியை அடைவதே இல்லை. உழைப்பு {முயற்சி} இல்லை என்றால் ஒரே முடிவுதான், அது வெற்றி இல்லை என்பதாகும். எனினும், உழைப்பின் {முயற்சியின்} போது வெற்றியை அடைவது, அல்லது அதை அடையாதது என்ற இரு நிலைகள் எப்போதுமே உண்டு.

ஓ! இளவரசே {சஞ்சயா}, விளைவுகளைப் பொறுத்தவரை அனைத்துச் செயல்களிலும் அவை உறுதியற்றவைதான் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்பவன், வெற்றி மற்றும் செழிப்பு ஆகிய இரண்டையும் தான் அடையும்படி செய்கிறான். அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் ஒருவன், சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, முயற்சியுடன் எழுந்து, ஒவ்வொரு செயலையும் செய்கிறான். ஓ! மகனே {சஞ்சயா}, செயல்களில் ஈடுபடும் {கர்மாவைச் செய்யும்} அறிவுள்ள மன்னன் ஒருவன், தேவர்களையும், அந்தணர்களையும் தன் பக்கத்ததில் வைத்துக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்து, விரைவில் வெற்றியை அடைகிறான். கிழக்கை வாரியணைக்கும் சூரியனைப் போல, செழிப்பின் தேவதை அவனை {செயல்படுபவனை} அரவணைப்பாள். {சுற்றிக் கொண்டு சூரியன் மீண்டும் கிழக்கு திசைக்கு வருவதைப் போல, சுற்றிக் கொண்டு லட்சுமி அவனை நோக்கி வருகிறாள்}.

நான் உனக்கு உரைத்த பல்வேறு பரிந்துரைகளுக்கும், வழிகளுக்கும், ஊக்கமூட்டும் உரைகளுக்கும் தகுந்தவனாகவே உன்னை நான் காண்கிறேன். (இப்போது) உனது ஆற்றலை வெளிப்படுத்து. அனைத்து முயற்சிகளையும் செய்து, உனது கருத்தில் கொண்டுள்ள பொருளை வெல்வதே உனக்குத் தகும். (உனது எதிரிகளிடம்) கோபத்தில் இருப்போரையும், பேராசை கொண்டோரையும், (உனது எதிரியால்) பலவீனமாக்கப்பட்டவர்களையும், (உனது எதிரிகளிடம்) பொறாமை கொண்டோரையும், (உனது எதிரிகளால்) அவமதிப்புக்கு உள்ளானவர்களையும், அதீத செருக்கின் காரணமாக (உனது எதிரிகளால்) எப்போதும் அறைகூவி அழைக்கப்படுபவர்களையும், இந்த வகைகளைச் சார்ந்த {எதிரியின் எதிரிகளான} அத்தனை பேரையும் உன் பக்கத்தில் ஒன்றாகச் சேர்ப்பாயாக.

இவ்வழிகளில் நீ மேகங்களைச் சிதறடிக்கும் வகையில், மூர்க்கமாகவும், கடுமையாகவும் எழும் சூறாவளியைப் போன்று, (உனது எதிரியின்) பலமிக்கப் படையை உன்னால் உடைக்க முடியும். அவர்களுக்கு (உனது கூட்டாளிகளாக இருப்போருக்கு), உரிய காலத்திற்கு முன்பே செல்வத்தையும் உணவையும் அளித்து, எப்போதும் அவர்களுக்காகச் செயல்பட்டு, அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேசுவாயாக. பிறகு அவர்கள் உனக்கு நன்மையைச் செய்து, உன்னைத் தங்கள் தலையில் {முன்பு} வைப்பார்கள்.

தன் எதிரி உயிரைத் துச்சமாக நினைக்கிறான், என எப்போது உனது எதிரி அறிவானோ, அப்போது அவன் {அந்த எதிரி} தன் அறையிலேயே வாழும் பாம்பைப் போல அவனை {உன்னை} எண்ணி நடுங்குவானல்லவா? ஒருவனைப் பலம் நிறைந்தவனாக அறிந்து கொள்ளும் அவனது எதிரி, அவனை அடக்க முயற்சிக்க மாட்டான். சமரசக் கலைகள், கொடை மற்றும் விருப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை {தன் எதிரியை} நண்பனாக்கவே முயற்சிப்பான். அதுவும் அவன் அடக்கப்பட்டதுக்கு ஒப்பானதே ஆகும்.

சமரசக் கலை மூலம் நிவாரணம் பெறுவதால், ஒருவன் தனது செல்வத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒருவனது செல்வம் அதிகரித்தால், அவன் வழிபடப்பட்டு, தஞ்சமளிப்பவனாக அவனது நண்பர்களால் அவன் வேண்டப்படுவான். ஒருவன் செல்வத்தை இழந்தாலோ, அவன் நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, அதைவிட அதிகமாக அவநம்பிக்கையடைந்து, அவர்களால் வெறுக்கப்படும் நிலையும் உண்டாகும். தனது எதிரியிடமே சேர்ந்து நம்பிக்கையுடன் வாழ்பவனால், தனது நாட்டை மீண்டும் மீட்பது முற்றிலும் முடியாததாகும்" என்றாள் {விதுலை}."


Tuesday, June 16, 2015

"உழைப்பே ஆண்மை" என்ற விதுலை! - உத்யோக பர்வம் பகுதி 134

"Exertion is Manliness" said Vidula! | Udyoga Parva - Section 134 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 63) {விதுலோபாக்யானம் - 2}

பதிவின் சுருக்கம் : விதுலை தன் மகன் தனது வார்த்தைகளக் கேட்கவில்லையே என  வருந்தியது; ஒரு க்ஷத்திரியன் எப்போது திருடனாகக் கருதப்படுகிறான்? அந்தணர் ஒருவர் தன் மகன் குறித்து முன்னறிவித்தது; சம்பரன் சொன்ன நிலை; தான் இருந்த உன்னத நிலை; எந்த நிலைகளை விட மரணமே மேல்? எதைக் கைவிட்டால் எதிரிகளை வெல்லலாம்? இந்திரன் அடைந்த நிலை; எவனை எதிரிகள் வணங்குவார்கள்? கோழைகளால் ஏற்படும் நிலை? க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறுகள்; உழைப்பே ஆண்மை என்பன போன்றவற்றைத் தன் மகனுக்கு விதுலை சொன்னது...

விதுலை {தன் மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "இத்தகு துயரில் விழுந்து உனது ஆண்மையைக் கைவிட நீ விரும்புகிறாயெனில், தாழ்ந்தோரும், இழிந்தோரும் நடக்கும் பாதையில் நீ மிக விரைவில் நடப்பாய். உயிரின் மீது கொண்ட ஆசையால் தனது பலத்திலும், ஆற்றலிலும் சிறந்ததைப் பயன்படுத்தித் தனது சக்தியை வெளிப்படுத்தாத ஒரு க்ஷத்திரியன் திருடனாகக் கருதப்படுகிறான். ஐயோ, பயன் நிறைந்ததும், சரியானதும், காரணங்கள் கொண்டதுமான எனது வார்த்தைகள், சாகப் போகும் மனிதனுக்கு மருந்தைப் போல, உன்னில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லையே.


சிந்துக்களின் மன்னன் பல தொண்டர்களைக் கொண்டிருக்கிறான், என்பது உண்மையே! எனினும் அவர்கள் {அத்தொண்டர்கள்} அனைவரும் மகிழ்ச்சியை அடையாமல் தள்ளப்பட்டார்கள். {சிந்து மன்னனிடம் அவர்கள் அதனால் பகைமை கொண்டார்கள்}. பலவீனத்தாலும், முறையான வழிகளை அறியாததாலும், (தங்கள் முயற்சிகளால் விடுபடாத) அவர்கள் தனது தலைவனின் {சிந்துமன்னனின் அழிவிற்காக} துயருக்காகக் காத்திருக்கிறார்கள். பிறரைப் (அவனது {சிந்து மன்னனின்} வெளிப்படையான எதிரிகளைப்} பொறுத்தவரை, நீ உனது ஆற்றலை வெளிப்படுத்துவதை அவர்கள் கண்டால் தங்கள் உடைமைகளுடன் அவர்கள் உன்னைச் சேர்வார்கள். அவர்களுடன் சேர்ந்து, மலைகளையும், காடுகளையும் தஞ்சமாக அடைந்து, நீ எதிரியை வீழ்த்த தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாயாக. ஏனெனில், அவனும் நோய் மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவன் அல்ல.

உனது பெயரால் நீ சஞ்சயனாவாய் {வெற்றியாளனாவாய்}. எனினும், அதற்கான குறிப்புகள் எதையும் நான் உன்னிடத்தில் காணவில்லை. உனது பெயருக்கு உண்மையுள்ளவனாக இருப்பாயாக. {உண்மையில்} எனது மகனாவாயாக. ஓ! உனது பெயர் பொய்யாகாதிருக்கட்டும். சிறுவனாக இருக்கும் உன்னைக் கண்டவரும், பெரும் முன்னறிதிறனும், ஞானமும் கொண்டவருமான அந்தணர் ஒருவர், "பெரும் துயரில் விழும் இவன், மீண்டும் பெரும் புகழை வெல்வான்" என்று சொன்னார். அவரது வார்த்தைகளை நினைவுகூரும் நான், உனது வெற்றியை நம்புகிறேன். அதன் காரணமாகவே, ஓ! மகனே {சஞ்சயா}, நான் உன்னிடம் இப்படிச் சொல்கிறேன். மேலும் மேலும் நான் உன்னிடம் அப்படியே சொல்வேன்.

கொள்கை வழிகளின்படி {நீதியின்படி} தனது நோக்கங்கள் கனியும் {பலிக்கும்} தருணத்தைத் தொடரும் {எதிர்நோக்கியிருக்கும்} ஒரு மனிதன், தனது நோக்கங்களுக்காக தன்னுடன் உழைக்கும் மக்களைப் பெற்றிருந்தால், அவன் வெற்றி அடைவது எப்போதும் நிச்சயமே. ஓ! சஞ்சயா, ஓ! கல்விமானே, போரில் இருந்து உன்னை விலக்கிக் கொள்ளாமல், 'நான் அடைந்திருப்பது வெற்றியோ, தோல்வியோ, நான் பின்வாங்க மாட்டேன்' என்ற தீர்மானத்துடன் போரிடுவாயாக.

"தினம் தினம் தனது உணவுக்காக ஒருவன் ஆவலாக இருக்கும் நிலையைவிடப் பரிதாபகரமான நிலை வேறு எதுவும் இல்லை" என்று சம்பரன் சொல்லியிருக்கிறான். ஒருத்தியின் கணவனும், மகன்களும் இறந்ததைவிட, அது போன்று இருப்பதே {உணவை எதிர்பார்த்து இருப்பதே} பெரும் துன்பமான நிலை எனச் சொல்லப்படுகிறது. ஏழ்மை என்று அழைக்கப்படும் நிலை மரணத்தின் வடிவமே ஆகும்.

என்னைப் பொறுத்தவரை, நான், உயர்ந்த ஒரு குலத்தில் பிறந்து, மற்றொரு உயர்ந்த குலத்தில் குடியேறியவள் ஆவேன். அனைத்து மங்கலப் பொருட்களையும் அடைந்து, எனது கணவனால் வழிபடப்பட்டு இருந்த எனது சக்தி அனைவர் மீதும் பரவியிருந்தது. நண்பர்களுக்கு மத்தியில் இருந்த என்னை, விலையுயர்ந்த மாலைகளோடும், ஆபரணங்களோடும், சுத்தமான உடலோடும், அற்புதமான ஆடைகளோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாகவும்தான் எப்போதும் நமது நண்பர்கள் கண்டிருக்கிறார்கள். (உணவில்லாமல்) நானும், உனது மனைவியும் பலவீனமாவதைக் காணும் நீ, ஓ! சஞ்சயா, உயிருடன் வாழ விரும்பமாட்டாய்.

நம்மிடம் பணி செய்த பணியாட்கள் அனைவரும், நமது ஆசான்களும், நமது இயல்பான {சாதாரண} மற்றும் இயல்புக்குமிக்க {அசாதாரண} புரோகிதர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்மைவிட்டுச் செல்வதைக் காணும் உனக்கு வாழ்வதனால் என்ன பயன் ஏற்படும்? முன்பு போலவே மெச்சத்தகுந்த, புகழ்மிக்க உனது சாதனைகளில் நீ ஈடுபடுவதை இப்போது நான் காணவில்லை எனும் போது, எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?

அந்தணர் ஒருவருக்கு, "ஒன்றுமில்லை" என்று நான் சொல்ல வேண்டியிருந்தால், எனது இதயமே வெடித்துவிடும். இதற்கு முன் எனது கணவர் எந்த அந்தணருக்கும், "இல்லை" என்று சொன்னதே இல்லை. நாமே பிறரின் புகலிடம், நாம் என்றும் பிறரிடம் தஞ்சமடைந்ததில்லை. இப்படியிருக்கையில், அடுத்தவரைச் சார்ந்து எனது வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு இருந்தால், நிச்சயம் எனது உயிரை நான் விட்டுவிடுவேன். கடக்க முடியாத கடலைக் கடக்கும் வழிகளாக எங்களுக்கு நீ இருப்பாயாக. படகுகள் இல்லாத நிலையில், நீயே எங்களது படகாவாய். இடமில்லாத போது, நீயே எங்களுக்கு இடமாவாயாக. மாண்டு போன எங்களை மீட்டெடுப்பாயாக.

நீ உயிர் மீது கொண்டிருக்கும் ஆசையை விட்டாயானால், உனது எதிரிகள் அனைவரிடமும் போட்டியிடத் தகுந்தவனாவாய். ஆனால், அலிகளுக்குத் தகுந்த வாழ்முறையை நீ நோற்பாயானால், ஆன்மா நொந்து, துயர் நிறைந்த இதயத்துடன் அப்படி வாழ்வதைக் காட்டிலும், நீ உனது உயிரைத் தியாகம் செய்வதே சிறந்ததாகும். ஒரே எதிரியைக் கொன்றால் கூட ஒரு வீரமிக்க மனிதன் புகழை வெல்கிறான். விருத்திரனைக் கொன்ற இந்திரன் பெரும் இந்திரனாகி {மஹேந்திரன் ஆகி}, தேவர்களின் அரசுரிமையையும், சோமச்சாற்று குவளையையும் {மாஹேந்திரம் என்கிற சோமக்கிரகத்தையும்}, உலகங்கள் அனைத்தின் தலைமையையும் அடைந்தான். போர்க்களத்தில் தனது பெயரைச் சொல்லி, உருக்குக் கவசங்கள் அணிந்த தனது எதிரிகளை அறைகூவி அழைத்து, பகையணி வீரர்களில் முதன்மையானவர்களைக் கொன்றும் அடித்தும், நல்ல போரினால் எப்போது ஒரு வீரன் பரந்து விரிந்த புகழை அடைகிறானோ, அப்போது அவனது எதிரிகள் வலியை உணர்ந்து அவனை வணங்குவார்கள் {அடிபணிவார்கள்}.

கோழைகளோ தங்கள் சொந்த நடத்தையின் விளைவால் ஆதரவற்றவர்களாகி, திறன்மிக்கவர்களும், வீரர்களும், உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடுபவர்களுமாக இருப்பவர்களகுக்குத் தனது ஆசைப் பொருட்கள் அத்தனையும் தாரைவார்ப்பார்கள். நாடுகள் பெரும் அழிவை அடைந்தாலோ, உயிரே போய்விடக் கூடிய சூழ்நிலை இருந்தாலோ கூட, உன்னதமானவர்கள், தங்கள் அருகே இருக்கும் எதிரிகளைக் கொல்லாமல் ஓடிப் போவதில்லை. அரசுரிமை என்பது சொர்க்கத்தின் வாயிலோ, அமிர்தமோதான். இவற்றில் ஒன்றாக அதைக் {அரசுரிமையைக்} கருதி, நீ அறியாத அதையே மனதில் கொண்டு, எதிரிகளுக்கு மத்தியில் எரியும் கொள்ளியென விழுவாயாக.

ஓ! மன்னா {சஞ்சயா}, போரில் உனது எதிரிகளைக் கொல்வாயாக. உனது {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை நோற்பாயாக. ஓ! எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனே {சஞ்சயா}, உற்சாகமிழந்தவனாக நான் உன்னைக் காணாதிருப்பேனாக. துயர் நிறைந்த நம்மவர்களால் சூழப்பட்டு, எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து, துயரத்தில் நிற்கும் உன்னை நான் காணாதிருப்பேனாக. ஓ! மகனே {சஞ்சயா}, செல்வத்தை அடைந்து, சௌவீரர்களின் மகள்களின் துணையோடு உன்னை நீ மகிழ்வித்துக் கொள்வாயாக. இதயத்தின் பலவீனத்தால் நீ சைந்தவர்களின் {சிந்துக்களின்} மகள்களால் ஆளப்படும் நிலையில் இருக்காதே.

`அழகிய மேனியும், கல்வியும், நற்குடி பிறப்பும், உலகம் பரந்த புகழும் கொண்ட உன்னைப் போன்ற இளைஞன் ஒருவன், சுமையைத் தாங்க வேண்டிய விஷயத்தில், அடங்காமல் இருக்கும் காளையைப் போலத் தகாத நிலையை அடைவது மரணத்துக்கு இணையானது’ என்றே நான் நினைக்கிறேன். பிறரைப் புகழ்ந்தோ, அவர்களுக்குப் பின் (பணிவாக) நடந்தோ செல்லும் உன்னைக் காணும் எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?

ஓ...! இன்னொருவனுக்குப் பின்னால் நடந்து செல்லும் ஒருவன் நமது குலத்தில் பிறந்ததே இல்லையே. ஓ! மகனே {சஞ்சயா}, அடுத்தவனை நம்பி வாழும் வாழ்வு உனக்குத் தகாது. முன்னோர்களாலும், முன்னோர்களுக்கு முன்னோர்களாலும், அவர்களுக்குப் பின்வந்தவர்களாலும், அப்படிப் பின்வந்தவர்களுக்கும் பின் வந்தவர்களாலும் சொல்லப்பட்ட க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறு என்ன என்பதை நான் அறிவேன். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான அது படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} விதிக்கப்பட்டதாகும். இவ்வுலகில் எந்த உயர்ந்த குலத்திலாவது க்ஷத்திரியனாகப் பிறந்து, அந்த வகையின் கடமைகளின் அறிவை அடைந்த ஒருவன், பயத்தாலோ, வாழ்வாதாரத்திற்காகவோ பூமியில் உள்ள எவனுக்கும் தலைவணங்க மாட்டான்.

உழைப்பே {முயற்சியே} ஆண்மை என்பதால், ஒருவன் வீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; தலைவணங்கி நிற்கக்கூடாது. யாருக்கும் வளைந்து போவதைக் காட்டிலும் ஒருவன் கணுக்களில் உடைந்து போகலாம். உயர் ஆன்ம க்ஷத்திரியன் ஒருவன், எப்போதும் ஒரு மதங்கொண்ட யானை போல நடக்க வேண்டும். ஓ! சஞ்சயா, அறத்தின் நிமித்தமாக அந்தணர்களை மட்டுமே ஒருவன் வணங்க வேண்டும். தீமை செய்வோர் அனைவரையும் அழித்து, அனைத்துப் பிற வகைகளையும் அவன் ஆள வேண்டும். கூட்டாளிகளைக் கொண்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, தான் வாழும் வரை ஒருவன் அப்படியே இருக்க வேண்டும்" என்றாள் {விதுலை}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்