Trita muni's Mental Sacrifice - Chandramas and Rohini! | Shalya-Parva-Section-36 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்".(4)