The old maiden and Sringavat! | Shalya-Parva-Section-52 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : குணிகர்க்கர் உண்டாக்கிய மகள்; திருமணத்தில் விருப்பமில்லாமல் கடுந்தவம் செய்து முதிர் கன்னியாகியது; திருமணம் செய்யாததால் அருள் உலகங்கள் கிடைக்காது என்று அவளிடம் சொன்ன நாரதர்; ஓர் ஒப்பந்தத்தின் பேரில் அவளைத் திருமணம் செய்து கொண்ட சிருங்கவான்; விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்திற்குண்டான பலன்; சல்லியனின் மறைவை அறிந்த பலராமன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, பழங்காலத்தில் அந்தக் கன்னிகை ஏன் தவத்தில் ஈடுபட்டாள். என்ன காரணத்திற்காக அவள் தவத்தில் ஈடுபட்டாள்? அவளது நியமம் என்ன?(1) நான் ஏற்கனவே உம்மிடம் கேட்ட உரையானது ஒப்பற்றதாகவும், புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது. (இப்போது) அந்தக் கன்னிகை எவ்வாறு தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள் என்ற விபரங்கள் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குணி-கர்க்கர் என்ற பெயரில் பெரும் சக்தியையும், பெரும் புகழையும் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அந்தத் தவசிகளில் முதன்மையானவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்து, தம் விருப்பத்தின் ஆணையால் அழகிய புருவங்களைக் கொண்ட ஒரு மகளை[1] உண்டாக்கினார். கொண்டாடப்பட்ட தவசியான அந்தக் குணிகர்க்கர் அவளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார். பிறகு அவர், ஓ! மன்னா, தன் உடலைக் கைவிட்டு, சொர்க்கத்திற்குச் சென்றார்.(3,4) களங்கமற்றவளும், இனிமையானவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகிய புருவங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, தொடர்ந்து மிகக் கடுமையான தவங்களைச் செய்துவந்தாள். அவள் தன் உண்ணாநோன்புகளால் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டாள்.(5)
