The prayer of Gandhari! | Asramavasika-Parva-Section-29 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுடைய ஆசிரமத்தில் ஒரு மாதம் வசித்த பாண்டவர்கள்; மகன்களை நேரில் காண திருதராஷ்டிரனுக்கு விருப்பமிருப்பதை வியாசரிடம் சொன்ன காந்தாரி; குந்தியின் விருப்பத்தைக் கேட்ட வியாசர்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! கல்விமானான பிராமணரே, குரு குலத்தில் முதன்மையானவனும், பூமியின் தலைவனுமான திருதராஷ்டிரன், தன் மனைவியுடனும் {காந்தாரியுடனும்}, தன் மருமகளான குந்தியுடனும் காட்டில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, உண்மையில் விதுரன் தன் உடலைவிட்டு யுதிஷ்டிரனுக்குள் நுழைந்த பிறகு, தவம் செய்யும் ஆசிரமத்தில் பாண்டவர்கள் அனைவரும் வசித்து வந்தபோது, உயர்ந்த சக்தியைக் கொண்ட பெருமுனிவர் வியாசர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு உறுதிமொழி அளித்த பிறகு, அவர் {வியாசர்} சாதித்த அருஞ்செயலென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1-3) மங்கா மகிமை கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் தன் மக்களுக்களுடன் அந்தக் காட்டில் எத்தனை நாட்கள் தங்கினான்?(4) ஓ! பலமிக்கவரே, தங்கள் மக்கள் மற்றும் மனைவியருடன் கூடிய உயர் ஆன்மப் பாண்டவர்கள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தபோது எந்த உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தனர்? ஓ! பாவமற்றவரே இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான் {ஜனமேஜயன்}".(5)