Santanu met Ganga! | Adi Parva - Section 97 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் :
கங்கைக்கும் பிரதீபனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சந்தனுவின் பிறப்பு, சந்தனுவிடம் பழைய கதையைச் சொன்ன பிரதீபன்; தன் மனைவியாகும்படி கங்கையை வேண்டிய சந்தனு...
வைசம்பாயனர் சொன்னார், "அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுபவனாகப் பிரதீபன் என்றொரு மன்னன் இருந்தான். அவன், பல வருடங்களாகத் தனது தவத்துறவுகளைக் கங்கையின் பிறப்பிடத்தில் செய்து வந்தான்.(1) ஒரு நாள், அழகும், திறமையும் நிறைந்த கங்கை, சொக்கவைக்கும் வடிவில் பெண்ணுருக் கொண்டு, நீரிலிருந்து எழுந்து அந்த மன்னனை {பிரதீபனை} அணுகினாள்.(2) கவர்ச்சிமிக்க அழகைக் கொண்ட அந்தத் தெய்வீக மங்கை, தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனான அந்த அரசமுனியை {பிரதீபனை} அணுகி, அண்மையிலும், பலத்திலும் முழுமையான சால மரத்தைப் போன்ற அவனது வலது தொடையில் அமர்ந்தாள்.(3) அழகிய முகம் கொண்ட அந்த மங்கை தன் தொடையில் அமர்ந்ததும், அந்த ஏகாதிபதி அவளிடம், "ஓ இனிமையானவளே! நீ என்ன விரும்புகிறாய்? நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(4) அதற்கு அந்தக் காரிகை, "ஓ மன்னா! நீர் என் கணவராக வேண்டும் என விரும்புகிறேன். ஓ குருக்களில் முதன்மையானவரே! நீ என்னவராவீராக. தன்விருப்பத்துடன் வரும் ஒரு பெண்ணை மறுப்பதை ஞானியர் ஒருபோதும் மெச்சுவதில்லை" என்று சொன்னாள்[1].(5)

