The Palace was constructed in fourteen months! | Sabha Parva - Section 3 | Mahabharata In Tamil
(சபா கிரியா பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் :அர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது…
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு மய தானவன், வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனிடம், "நான் இப்போது உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு, விரைவில் திரும்பி வருகிறேன்.(1) கைலாச மலைக்கு வடக்கில் மைநாகம் என்ற மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் {பிந்துசரஸின்} கரையில், தானவர்கள் வேள்வி செய்தார்கள். அப்போது நான், காண்பதற்கினிய பல வண்ண ரத்னங்களாலும், தங்கத்தாலும் ஆன பண்டா[1] என்ற பொருளை அங்கே பெரும் அளவில் சேகரித்து வைத்தேன். அவை எப்போதும் தன்னை உண்மைக்கு அர்ப்பணித்திருந்த விருஷபர்வனின் மாளிகையில் வைக்கப்பட்டது.(2,3) அவை இப்போதும் அங்கே இருக்குமானால், ஓ பாரதா {அர்ஜுனா}, நான் அவற்றுடன் திரும்பி வருகிறேன். அதன் பிறகு, நான் அனைத்து வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உலகத்தால் கொண்டாடப்படப் போவதுமான பாண்டவர்களின் அரண்மனையை கட்டத் தொடங்குவேன். ஓ குரு குலத்தில் வந்தவனே, (தானவ} மன்னனால் எதிரிகளைக் கொல்லப் பயன்படுத்துப்பட்ட ஒரு கொடும் கதாயுதமும் அந்த நதியில் இருப்பதாக நினைக்கிறேன். வலுவும் எடையும் நிறைந்ததான அது, பல வண்ணங்களிலான தங்கக் குமிழ் கொண்டிருந்தது. அது பெரும் எடையைத் தாங்க வல்லதாகவும், எதிரிகளைக் கொல்ல வல்லதாகவும், நூறு கதாயுதங்களுக்கு சமமானதாகவும் இருந்தது. உனக்கு காண்டீபம் பொருந்தியிருப்பதைப் போல, அந்த ஆயுதம் பீமனுக்குப் பொருந்துவதாக இருக்கும்.(4-7) அங்கு, வருணனிடம் இருந்து வந்ததும், தேவதத்தம் {Devadatta} என்ற பெயரைக் கொண்டதும், பெருத்த ஒலியை எழுப்பவல்லதுமான பெரிய சங்கு ஒன்றும் இருக்கிறது. நான் இவை அனைத்தையும் உனக்குத் தருவேன் என்பதில் ஐயமில்லை" என்றான்.(8)


