Parasara's Rakshasa sacrifice | Adi Parva - Section 183 | Mahabharata In Tamil
(சைத்ரரத பர்வத் தொடர்ச்சி)
வசிஷ்டரின் சொல் மதித்து உலகத்தை அழிப்பதைக் கைவிட்ட பராசரர், ராட்சசர் அழிவுக்கான வேள்வியைச் செய்து பல ராட்சசர்களை அழிப்பதும், பிறகு அத்ரி, புலஸ்தியர், புலஹர் கிரது ஆகியோரின் சொல் கேட்டு அவ்வேள்வியை நிறுத்தியதும்.
கந்தர்வன் தொடர்ந்தான், "சிறப்புமிகுந்த வசிஷ்டரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த அந்தண முனிவர் {பராசரர்} உலகத்தை அழிக்கத் தன்னைத் தூண்டிய கோபத்தை அடக்கிக் கொண்டார். ஆனால், வேதமறிந்தவர்களில் முதன்மையான சக்திரியின் மகனும், பெரும் சக்தி கொண்ட முனிவருமான பராசரர், ஒரு பெரும் ராட்சச வேள்வியை நடத்தினார். (தனது தந்தையான) சக்திரியின் படுகொலையை நினைத்துப் பார்த்த அந்த முனிவர் முதிர்ந்த மற்றும் இளமையான ராட்சசர்களை தான் நடத்திய வேள்வியின் மூலமாக எரித்தார். (தனது பேரனின்) இரண்டாவது சபதத்தில் குறிக்கிடக்கூடாது என்று உறுதியேற்ற வசிஷ்டர், ராட்சசர்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை. பராசர முனிவர் அவ்வேள்வியில் சுடர்விட்டெரியும் மூன்று நெருப்புகளுக்கு எதிரில் நான்காவது நெருப்பாக அமர்ந்திருந்தார்.
அந்த சக்திரியின் மைந்தன் {பராசரர்} மேகத்தை விட்டு வெளியே வரும் சூரியனைப் போல, பெருமளவு சுத்திகரிக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்ட கறையற்ற தனது வேள்வியின் மூலம் முழு வானமண்டலத்தையும் ஒளிமயமாக்கினார். பிறகு வசிஷ்டரும் மற்ற முனிவர்களும், தன் சக்தியின் மூலமே ஒளிரும் இந்த முனிவரை {பராசரரை} இரண்டாவது சூரியன் போல மதித்தனர். பிறகு சுதந்திர ஆன்மா கொண்ட அத்ரி முனிவர், மற்றவர்களால் செய்ய முடியாத மிகக்கடுமையான சாதனையான அவ்வேள்வியை முடித்து வைக்க எண்ணி, அவ்விடத்திற்கு வந்தார். ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனனே}, மேலும் ராட்சசர்களைக் காக்க விரும்பிய புலஸ்தியர், புலஹர், பல பெரும் வேள்விகளை நடத்திய கிரது ஆகியோரும் அங்கே வந்தனர். ஏற்கனவே பல ராட்சசர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்கள், எதிரிகளை ஒடுக்கும் பராசரரிடம் இவ்வார்த்தைகளை சொல்லினர்.
"ஓ குழந்தாய், இந்த உனது வேள்விக்கு எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறோம். உனது தந்தையின் மரணத்தைப் பற்றி அறியாத அப்பாவி ராட்சசர்களையும் கொன்ற இந்தப் படுகொலையை நினைத்து நீ மகிழ்ச்சி கொள்கிறாய். ஓ குழந்தாய், ஆன்மிகத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அந்தணனின் தொழில் இது இல்லை. அமைதியே உயர்ந்த அறம். ஆகையால், ஓ பராசரா, நீ அமைதியை நிலைநிறுத்து. ஓ பராசரா, இவ்வளவு உயர்ந்தவனாக இருந்தும், நீ இப்படிப்பட்ட பாவகர காரியத்தை எப்படிச் செய்தாய்? அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்த சக்திரியை {பராசரரின் தந்தை; வசிஷ்டரின் மூத்த மகன்} மீறி நடப்பது, உனக்குத் தகாது. எந்த உயிரினத்தையும் வேறோடு அழிப்பது உனக்குத் தகாது. ஓ வசிஷ்ட குலத்தில் வந்தவனே, உனது தந்தை முன்னர் தான் பெற்ற சாபத்தாலேயே அப்படி இறந்தான். சக்திரியின் சொந்த தவறின் காரணமாகவே அவன் வானுலகம் சென்றான். ஓ முனியே, சக்திரியை விழுங்கும் அளவுக்கு எந்த ராட்சசனுக்கும் சக்தி கிடையாது; அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான். ஓ பராசரா, விசுவாமித்ரரும் இவ்விஷயத்தில் ஒரு குருட்டுத்தனமான கருவியே. சக்திரி, கல்மாஷபாதன் ஆகிய இருவரும் வானுலகத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். சக்திரிக்கு இளையவர்களான, வசிஷ்டரின் மற்ற மகன்களுடன் தேவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஓ குழந்தாய், வசிஷ்ட மைந்தனின் வாரிசே, அப்பாவி ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கிய வேள்வியை நடத்திய நீயும் இது விஷயத்தில் வெறும் கருவியே. குழந்தாய் நீ அருளப்பட்டிரு! இவ்வேள்வியைக் கைவிடு. அது ஒரு முடிவுக்கு வரட்டும்."
கந்தர்வன் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், "புலஸ்தியராலும் புத்திசாலியான வசிஷ்டராலும் இப்படிச் சொல்லப்பட்ட சக்திரியின் மைந்தனான பெரும் பலம்வாய்ந்த முனிவர் {பராசரர்}, அவ்வேளவியை முடிவுக்குக் கொண்டு வந்தார். ராட்சசர்கள் அழிவுக்கான வேள்வியில் மூட்டப்பட்ட அந்த நெருப்பை, அம்முனிவர் இமயத்துக்கு வடக்கில் ஆழ்ந்த கானகத்தில் விட்டார். அந்த நெருப்பு ராட்சசர்களையும், மரங்களையும், கற்களையும் அனைத்து காலங்களிலும் அழித்து வருவதை இன்றும் காணலாம்.
![]() |
![]() |
![]() |