Showing posts with label வசுதேவர். Show all posts
Showing posts with label வசுதேவர். Show all posts

Thursday, January 09, 2020

கிருஷ்ணனின் சொற்கள்! - மௌஸலபர்வம் பகுதி – 6

The words of Krishna! | Mausala-Parva-Section-6 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)

துவாரகையில் அர்ஜுனன்! - மௌஸலபர்வம் பகுதி – 5

Arjuna in Dwaraka! | Mausala-Parva-Section-5 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)

பரமெய்திய நாயகன்! - மௌஸலபர்வம் பகுதி – 4

Krishna ascended to heaven! | Mausala-Parva-Section-4 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பலராமனைக் கண்டடைந்த கிருஷ்ணன்; தாருகனைப் பாண்டவரிடம் அனுப்பியது; சேஷனாகிக் கடலிற் சென்ற பலராமன்; உடலைக் கைவிட யோகத்தில் கிடந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனின் பாதங்களைத் தாக்கிய ஜரன்; அவனுக்கு முக்தியளித்துப் பரம்பதமெய்திய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தாருகன், கேசவன், பப்ரு ஆகியோர் அந்த இடத்தைவிட்டு அகன்று, ராமன் {பலராமன்} இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றனர். அளவற்ற சக்தி கொண்ட அந்த வீரன், பூமியில் தனிமையான ஓர் இடத்தில் மரமொன்றில் சாய்ந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.(1) பேரான்மா கொண்ட ராமனைக் கொண்ட கிருஷ்ணன், தாருகனுக்கு ஆணையிடும் வகையில், "குருக்களிடம் சென்று யாதவர்களுடைய படுகொலையைப் பார்த்தனுக்கு அறிவிப்பாயாக. பிராமணர்களின் சாபத்தின் மூலம் யாதவர்களுக்கு நேர்ந்த இந்த முடிவைக் கேட்டு அர்ஜுனன் இங்கே விரைவாக வரட்டும்" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், துயரில் புலனுணர்வை இழந்தவனாகக் குருக்களின் (தலைநகரை நோக்கி) தேரில் சென்றான்.(3)

Wednesday, December 04, 2019

அஸ்வமேதயாகம் செய்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 62

Do thou Aswamedha sacrifice! | Aswamedha-Parva-Section-62 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 47)


பதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்கு ஸ்ராத்தஞ்செய்த வசுதேவர்; ஹஸ்தினாபுரம் வந்து உத்தரையைத் தேற்றிய வியாசர்; யுதிஷ்டிரனை அஸ்வமேத வேள்வி செய்யத் தூண்டியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தம்மகன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்டவரும், நீதிமிக்க ஆன்மா கொண்டவருமான அந்தச் சூர குல வழித்தோன்றல் {வசுதேவர்}, தமது துயரத்தைக் கைவிட்டு (அபிமன்யுவுக்குச்) சிறந்த ஈமக் காணிக்கைகளை அளித்தார் {ஸ்ராத்தஞ்செய்தார்}.(1) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தன் தந்தையின் அன்புக்குரியவனும், தன் மருமகனுமான அவன் {அபிமன்யு} (சொர்க்கத்திற்கு) உயர்வதற்கான அந்தச் சடங்குகளைச் செய்தான்.(2) பெருஞ்சக்தி கொண்டவனான அவன் {கிருஷ்ணன்}, அறுபது லட்சம் பிராமணர்களுக்கு ஏற்புடைய அனைத்துக் குணங்களுடன் கூடிய உணவைப் படைத்தான்.(3) அவர்களுக்குத் துணிமணிகள் பலவற்றைக் கொடுத்த கிருஷ்ணன், அந்தப் பிராமணர்களின் செல்வ தாகத்தைத் தணித்தான். கொடையளிக்கப்பட்ட பொற்குவியல்களும், பசுக்கள், படுக்கைகள், துணிமணிகளின் எண்ணிக்கையும் ஆச்சரியகரமானவையாக இருந்தன. அந்தப் பிராமணர்கள், "(கிருஷ்ணனின் செல்வம்) பெருகட்டும்" என்று உரக்க அறிவித்தார்கள்.(4,5)

Tuesday, December 03, 2019

சுபத்திரையின் ஒப்பாரி! - அஸ்வமேதபர்வம் பகுதி – 61

The lamentation of Subhadra! | Aswamedha-Parva-Section-61 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 46)


பதிவின் சுருக்கம் : அபிமன்யு கொல்லப்பட்டதைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட சுபத்திரை; அபிமன்யு வதத்தைக் கேட்டு மயக்கமடைந்த வசுதேவர்; வசுதேவரைத் தேற்றிய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பேராற்றல் கொண்ட உயர் ஆன்மாவான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தந்தையின் {வசுதேவரின்} முன்னிலையில் பாரதர்களின் பெரும்போரைச் சொல்லி முடித்த பிறகு, அபிமன்யு கொல்லப்பட்டதை அந்த வீரன் {கிருஷ்ணன்} சொல்லாமல் கடந்து செல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமையற்ற எதையும் தன் தந்தை கேட்க வேண்டாம் என்பதே அந்த உயர் ஆன்மாவின் நோக்கமாக இருந்தது.(1,2) உண்மையில், தன் தந்தையான வசுதேவர், தமது மகளின் {சுபத்திரையின்} மகனுடைய மரணத்தைச் சொல்லும் பயங்கரச் செய்தியைக் கேட்டு கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்படுவதை நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன் விரும்பவில்லை.(3)

Monday, December 02, 2019

போர்ச்சுருக்கம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 60

Brief account of the war! | Aswamedha-Parva-Section-60 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 45)


பதிவின் சுருக்கம் : போர் குறித்த விபரம் கேட்ட வசுதேவர்; பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரை மிகச் சுருக்கமாகச் சொன்ன கிருஷ்ணன்; வருத்தமடைந்த விருஷ்ணிகள்...


வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, (குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற) அற்புதம் நிறைந்த போரைக் குறித்து மனிதர்கள் பேசுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.(1) எனினும், ஓ! வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனே, நீ உன் கண்களாலேயே அதைக் கண்டிருக்கிறாய். எனவே, ஓ! பாவமற்றவனே, அந்தப் போரைக் குறித்து விரிவாக நீ விளக்குவாயாக.(2) உண்மையில், (ஒரு தரப்பில் இருந்த) உயர் ஆன்ம பாண்டவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர், சல்லியன் மற்றும் பிறர் ஆகியோருக்கிடையிலும்,(3) உண்மையில் முகத்தோற்றம் மற்றும் ஆடைகளில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற வெவ்வேறு க்ஷத்திரியர்களுக்கிடையிலும் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார் {வசுதேவர்}".(4)

Tuesday, December 03, 2013

வசுதேவரைக் கொன்றான் சால்வன் - வனபர்வம் பகுதி 21

Salwa killed Vasudeva | Vana Parva - Section 21 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; வசுதேவர் மாண்டார் என்று ஆஹூகர் கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்புவது; வானில் இருந்த சால்வன் தேரில் இருந்து வசுதேவர் விழுவது; இதைக் கண்ட கிருஷ்ணன் மயக்கமடைவது...

வாசுதேவன் சொன்னான், "மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, எனது பெரும் எதிரியான மன்னன் சால்வன், இப்படிப் போர்க்களத்தில் என்னிடம் போரிட்டு, மீண்டும் வானத்தில் எழும்பினான். வலிமைவாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, வெற்றியின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தத் தீயவன் என்மீது சதாக்னிகளையும், பெரும் கதாயுதங்களையும், எரியும் ஈட்டிகளையும், கனத்த தண்டங்களையும் வீசினான். அந்த ஆயுதங்கள் வானத்தில் வரும்போதே, நான் எனது வேகமான கணைகளால் தடுத்து, அவை என்னிடம் வரும் முன்பே அவற்றை இரண்டு மூன்று துண்டுகளாக்கினேன். அதனால் வானத்தில் பெரும் சத்தம் இருந்தது. சால்வன், தாருகனையும், எனது குதிரைகள் மற்றும் தேரையும் நூற்றுக்கணக்கான நேர்க்கணைகளால் மூடினான்.


வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, தாருகன் {தேரோட்டி} மயங்கும் முன்பு என்னிடம் தெளிவாக, "சால்வனின் கணைகளால் தாக்குண்ட பிறகும் நான் களத்தில் நிற்கிறேன் என்றால், அது எனது கடமை என்பதால் தான். ஆனால், {மேலும்} அப்படிச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். எனது உடல் பலவீனமடைந்துவிட்டது" என்றான். எனது தேரோட்டியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டு, நான் அவனைப் பார்த்தேன். அவன் {தேரோட்டி தாருகன்} கணைகளால் புண்ணாகியிருந்தான். பாண்டுவின் மகன்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவனது மார்புகளோ, தலையோ, உடலோ, கரங்களோ, அம்புகளால் மறைக்கப்படாமல் இல்லை. அந்தக் கணைகளால் உண்டான புண்களில் இருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. மழையில் முழுக்க நனைந்த சிவந்த சுண்ணாம்பு மலை எப்படி இருக்குமோ அப்படி அவன் இருந்தான். வலிமைமிக்க கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இப்படிப் போர்க்களத்தில் சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்டு, கைகளில் கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த எனது சாரதிக்கு நான் உற்சாகமூட்டினேன்.

பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில், துவாரகையில் தனது வீட்டை வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதன் எனது தேருக்கு வேகமாக வந்து, ஒரு நண்பனைப்போல், ஆஹுகர் சொல்லியனுப்பிய செய்தியைச் சொன்னான். அவன் ஆஹுகரின் பணியாட்களில் ஒருவன் போலத் தெரிந்தான். சோகத்துடன், துயரால் உடைந்த குரலுடன் அவன் "வீரரே {கிருஷ்ணரே}, துவாரகையின் தலைவர் ஆஹுகன் உமக்கு சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பியிருக்கிறார். கேசவரே {கிருஷ்ணரே}, உமது தந்தையின் நண்பர் என்ன சொல்லியனுப்பியிருக்கிறார் என்பதைக் கேளும், "விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணனே}, கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, நீ இல்லாத போது, இன்று சால்வன் துவாரகைக்கு வந்து, பலாத்காரமாக வசுதேவரைக் கொன்றான். ஆகையால், மேலும் போர் செய்யத் தேவையில்லை. போரை நிறுத்து, ஓ ஜனார்த்தனா, இங்கே வந்து துவாரகையைக் காப்பாற்று! அதுவே உனது முதற்கடமை!" என்று ஆஹுகர் சொன்னதாக செய்தியாளன் சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் கனத்தது. நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை என்னால் உறுதிசெய்ய முடியவில்லை.

வீரரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும் துரதிர்ஷ்டத்தைக் கேட்டு, சாத்யகியையும், பலதேவரையும் {பலராமரையும்}, வலிமைவாய்ந்த பிரத்யும்னனையும் மனதால் நிந்தித்தேன். குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, துவாரகை மற்றும் வசுதேவரைக் காப்பதை அவர்களுக்கு அடிப்படைக் கடமையாக வைத்தே, நான் சால்வனின் நகரத்தை அழிக்கச் சென்றேன். துயர் நிறைந்த இதயத்துடன் நான் என்னிடமே, "அந்த எதிரிகளை அழிக்கும், வலிமைவாய்ந்த கரங்களுக்கு சொந்தக்காரரான பலதேவர் உயிருடன் இருக்கிறாரா, சாத்யகி, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, சாருதேஷ்ணன், சாம்பன் ஆகியோர் உயிருடன்தான் இருக்கின்றனரா?" என்று கேட்டுக் கொண்டேன். மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உயிருடன் இருந்தால், இடியைத் தாங்குபவனால் {இந்திரனால்} கூட சூதரின் மகனை (வசுதேவரை) எவ்வழியிலும் அழிக்க முடியாது. வசுதேவர் இறந்து விட்டார் என்றால் பலதேவர் {பலராமன்} உள்ளிட்ட அனைவரும் உயிரை இழந்திருப்பார்கள் என்பதே எனது உறுதியான தீர்மானமாக இருந்தது.

வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்களே என்று நினைத்துப் பார்த்த நான் துயரத்தில் மூழ்கினேன்! இந்த மனநிலையுடன் நான் சால்வனை எதிர்கொண்டேன். ஓ பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அப்போது நான் அந்த விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரில் இருந்து வசுதேவர் விழுவதைக் கண்டேன். இதைக் கண்ட நான் மயக்கமடைந்தேன். அனைத்துத் தகுதிகளையும் இழந்து வானில் இருந்து *பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார். அழுக்கடைந்த தலைப்பாகையுடன், தலைமுடி கலைந்து, ஆடைகள் கலைந்து விழும் எனது தந்தை, தகுதிகளை இழந்து வானில் இருந்து விழும் ஒரு கோள் {கிரகம்} போலத் தெரிந்தார். பிறகு எனது வில்லான சாரங்கம் எனது கைகளில் இருந்து விழுந்தது. குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எனக்கு மயக்கம் வந்தது! நான் தேரின் பக்கவாட்டில் அமர்ந்தேன்.

பாரத குலத்தின் வழித்தோன்றலே, நான் தேரில் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு, நான் இறந்து விட்டேன் என்று நினைத்த எனது முழு படையும் "ஓ", "ஐயோ" என்று கதறின. தனது கரங்களையும் கீழ் முட்டிகளையும் நீட்டியபடி புரண்டு கொண்டு வந்த எனது தந்தை, வானத்தில் இருந்து விழும் பறவையைப் போலத் தெரிந்தார். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட வீரரே {யுதிஷ்டிரரே}, கைகளில் ஈட்டிகளையும் போர்க்கோடரிகளையும் வைத்திருந்த எதிரி வீரர்கள் பயங்கரமாகத் தாக்கினர்! (இவற்றைக் கண்டு) எனது இதயம் நடுங்கியது. நான் விரைவில் உணர்வடைந்தேன். ஓ வீரரே, அப்போது அந்தக் களத்தில் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையோ, எதிரியான சால்வனையோ, அல்லது முதிர்ந்த எனது தந்தையையோ நான் காணவில்லை! பிறகு நான் கண்டதெல்லாம் மாயை என்பதை என் மனதில் நிச்சயித்துக் கொண்டேன். உணர்வுகள் மீண்ட நான், மறுபடியும் நூற்றுக்கணக்கான கணைகளை அடிக்க ஆரம்பித்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------------
*பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார்.


மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
இந்திரன் யயாதி பேச்சு | ஆதிபர்வம் - பகுதி 87
அஷ்டகனை அடைந்த யயாதி | ஆதிபர்வம் - பகுதி 88
யயாதி கண்ட உலகங்கள்| ஆதிபர்வம் - பகுதி 89
மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது? ஆதிபர்வம் - பகுதி 90





இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்