Kripa killed Suketu! | Karna-Parva-Section-54 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)