Gandiva felldown! | Aswamedha-Parva-Section-74 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 59)
பதிவின் சுருக்கம் : திரிகர்த்தர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் மூண்ட போர்; இளைஞனான திருதவர்மனின் போர்த்திறனைக் கண்டு வியந்த அர்ஜுனன்; காண்டீவம் நுழுவியது; மூர்க்கத்துடன் போரிட்ட அர்ஜுனன்; அடிபணிந்த திரிகர்த்தர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஏற்கனவே பாண்டவர்களுடன் பகை பூண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாக நன்கறியப்பட்டவர்களுமான திரிகர்த்தர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்தவனுக்கும் (அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு போர் நடந்தது.(1) வேள்விக்காக அனுப்பப்பட்ட முதன்மையான குதிரை தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் வந்ததை அறிந்த அவ்வீரர்கள் {திரிகர்த்தர்கள்}, கவசம்பூண்டவர்களாக அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! மன்னா, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் ஏறி, தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணியுடன் கூடிய அவர்கள் அந்தக் குதிரையைச் சூழ்ந்து கொண்டு, அதைக் கைப்பற்ற முயற்சித்தனர்.(3) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், அவர்களுடைய முயற்சிகளை எண்ணிப் பார்த்து, சமாதானப் பேச்சுகளின் மூலம் அந்த வீரர்களைத் தடுத்தான்.(4) அர்ஜுனனின் செய்தியை அலட்சியம் செய்த அவர்கள் தங்கள் கணைகளைக் கொண்டு அவனைத் தாக்கினர். கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், இருள் மற்றும் ஆசையின் {தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களின்) ஆதிக்கத்தில் இருந்த அந்தப் போர்வீரர்களைத் தடுத்தான்.(5)
