Rama reached Lanka! | Vana Parva - Section 281 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.