Vena's son Prithu! | Shanti-Parva-Section-59b | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 59)
பதிவின் சுருக்கம் : சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)