Sata-rudriya! | Anusasana-Parva-Section-161 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 161)
பதிவின் சுருக்கம் : சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)


















